Wednesday 17 March 2021

தமிழாற்றுப்படை

தமிழாற்றுப்படை 


வைரமுத்து


ஒரே வருடத்தில் 5 பதிப்புகளைக் கண்டுள்ள இந்த நூலில் அப்படி என்னதான் இருக்கும் எனப் பார்த்தால் நமது தமிழ் மொழியின் சிறப்புகளை நிலைநிறுத்த , சமூக மாற்றத்தை விதைத்த,  நினைவு படுத்த காலம் காலமாகத் தோன்றி புகழ் பெற்ற மனிதர்களைக் குறித்து மிக அழகான ஒரு தொகுப்பாகத் தெரிகிறது. 


தமிழ் மொழியின் ஆதி இலக்கணம் என்று அறியப்படும்  தொல்காப்பியம் தந்த தொல்காப்பியர் பற்றி தான் முதல் கட்டுரை . பூமியின் தோற்றம் குறித்து மறுதலிக்கப்பட்ட அனுமானங்களை மதங்கள் உருவாக்கியிருந்த போது என்றும் ஏற்றுக் கொள்ளத்தக்க முதல் கருத்தை முன்னிறுத்தியவர் தொல்காப்பியர் என்றும் .


"நிலம் தீ நீர் வளி விசும்பொடு

ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்"

என்று  தொல்காப்பியம் வரையறுக்கும்   முரண்பாடில்லாத கருத்தை வாசிப்பதிலிருந்து தொல்காப்பியர் சிறப்பை உணர முடிகிறது.மொழி , இலக்கணக் கோட்டுக்கள் இயங்கவும் , அதன் ஒலி தடம் புரளாமல் பயணிக்கவும் , தமிழன் ஆதிகுடி என்பதற்கு அடையாளம் காட்டவும் , மொழிக்கு அறிவியலையும் வாழ்வுக்கு அறவியலையும் அடிப்படையாகக் கொண்டது தமிழ்ப் பழங்குடி என்பதற்குச் சான்று சொல்லவும் தமிழர்க்கு உச்சமாகவும் எச்சமாகவும் உள்ள தொல் ஆவணமே தொல்காப்பியம் என்று மதிப்பிடலாம் என்கிறார் நூலாசிரியர். 


இதே போல கபிலர் , அவ்வையார் ,திருவள்ளுவர் , இளங்கோவடிகள் , அப்பர் , ஆண்டாள் , செயங்கொண்டார் , கம்பர் , திருமூலர் , கால்டுவெல் , வள்ளலார் , உ.வே.சாமிநாதையர் , மறைமலையடிகள் , பாரதியார் , பெரியார் , பாரதிதாசன் , புதுமைப்பித்தன் , அண்ணா , கலைஞர் , கண்ணதாசன் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , ஜெயகாந்தன் , அப்துல் ரகுமான் ஆகிய அனைத்து ஆளுமைகள் பற்றியும் கட்டுரைகள எழுதப்பட்டு தமிழை செங்கரும்புச் சுவையாக தித்திக்குமாறு எழுதப்பட்ட தமிழாற்றுப்படை சமகாலத்தில் இளைய சமுதாயம் வாசிக்க வேண்டிய மிக அருமையான நூல் . வைரமுத்து அவர்களின் எழுத்து  நடை குறித்து அறிவோம் . எங்கும் தடையின்றி வாசிக்க வாசிக்க,  தமிழின் பழம் பெருமையையும் தமிழ் ஏன் இன்றும் எல்லோருக்கும் விருப்பமான மொழியாக வாழ்கிறது என்பதும் நமக்குப் புரிய ஆரம்பிக்கிறது. தமிழாற்றுப்படை தமிழ் மக்களை ஆற்றுப்படுத்தும் விருப்ப நூல் .

தமிழர்களும் பிற மொழியாளர்களும் ஏன் தமிழ் பயில வேண்டுமென்பதற்குச் சான்றாகவும் இப்புத்தகம் திகழ்கிறது.





No comments:

Post a Comment