Friday 5 November 2021

ஜெய் பீம் :

ஜெய் பீம் :

திரைப்படமாக நினைக்க முடியாமல் நகரும் உண்மைச் சம்பவம். பாராட்டுவதாக ஆரம்பித்தால் .... சின்னச் சின்ன பாத்திரத்தில் வரும் நடிகர்கள் முதல் திரைக்கதை , இயக்குநர் , துணை இயக்குநர்கள் இப்படி யாரையும் விட்டு விடாமல் பாராட்ட வேண்டும் . வழக்கறிஞராக தன்னைப் பொருத்திக் கொண்டு  படம் முழுவதும்  இயங்கும் சந்துரு இப்படத்தின் மிகப் பெரிய பலம் என்றால் மற்றொரு பலம் செங்கனி .  திரைப்படத்தைப் பார்த்து விட்டு எவராலும் குறைந்தது இரண்டு நாட்களாவது அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாதுதான். 

திரைக்கதையில் மிகையே இல்லாமல் உண்மைச் சம்பவங்களைக் கோர்த்து மிக அழகியலாகத் தந்திருக்கும் இயக்குநர் Gnana Vel  தா.செ. ஞானவேல் ,தனது  #அருஞ்சொல் பேட்டியில் இப்படம் உருவான வரலாற்றைக் குறித்துப் பதிவு செய்துள்ளார். மூன்று வருட உழைப்பால் உருவான இத்திரைப்படத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக. அம்மக்களுடன்  , தான் பெற்றிருந்த கள  அனுபவத்தையும் சேர்த்து தான் பார்க்கவேண்டும் என்கிறார்.  திரைப்படத்தை ஆழமாக கவனித்தால் இது நமக்கு நன்கு புலப்படும். 

காவல் நிலையத்தில் பயங்கர சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்ட ராஜாக் கண்ணுவின் கண்ணுக்குள் மிளகாய்ப் பொடித் தூவிப் பார்த்து உயிர் இருக்கிறதா ? இல்லை இறந்து விட்டாரா எனப் பார்க்கும் காவல் துறை நண்பர்களது செயல்  காட்சியாக இடம் பெற்றிருக்கும் . படம் பார்ப்பவர்கள் இது திரைப்படத்திற்கான புனைவாக இருக்கலாம் என்று எண்ணக் கூடும். ஆனால் உண்மையாகவே பத்து பைசாவுக்கு மிளகாய்ப் பொடி வாங்கி வந்து கண்ணில் விட்டுப் பார்த்த காவலர்கள் பற்றி நீதியரசர் சந்துரு தனது அருஞ்சொல் நேர்காணலில் கூறியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

இச்சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட  இனமான இருளர் மக்கள் , வீடு வாசல் , பட்டா , ஓட்டு , சாதிச் சான்றிதழ் எதுவும் இல்லாததால் , கேட்பதற்கு நாதியற்று இருப்பவர் என்ற ஒரே காரணத்திற்காக அதிகார பலமிக்க பதவியில் இருக்கும் ஒரு பிரிவினரால் நடத்தப்படும் வன்கொடுமைகளை இதைவிடக் காட்சிப் பதிவு செய்திட முடியாது தான். ஆனாலும் இது ஒரு சின்ன மாதிரி (Sample) தான். இதைப் போல ஆயிரம் மடங்கு கொடுமைகள் காவல் நிலையங்களில் அதிகார மையங்களில் நடக்கின்றன , நமது கவனத்திற்கு வருவதில்லை என்கிறார் நீதியரசர் சந்துரு .

எந்த வித கதாநாயக  பிம்பமும் இல்லாமல் நியாயத்தின் பக்கம் நின்று இறுதி வரைப் போராடும் சூர்யாவின் மீதான மதிப்பு கூடுகிறது. மற்றொரு கோணத்தில் இத்தகு சமூகப் பிரச்சனையைக் கதையாக அவரிடம் இயக்குநர் பகிர்ந்த போது தயாரிப்புக்காகத் தான் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் வழக்கறிஞராக  வரும் சந்துரு ரோலை நானே செய்கிறேன் என முன் வந்திருப்பதும் அவரது நடிப்பு அனுபவத்தில் ஒரு மைல்கல் ..நாயகியும் காதல் காட்சிகளும் இல்லாமலேயே படம் இத்தனை அளவுக்கு மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறது என்றால் படத்தின் மொத்தக் கதையும், களமும் உண்மையைப் பிரதிபலிப்பது தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. 

திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்து சிலாகித்து , நெகிழ்வது மட்டும் தானா ?
உண்மையாகவே படத்தின் வெற்றி என்பது குறித்தும் பேசுகிறார் இயக்குநர். திரைப்படத்தைப்  பார்க்கும் ஒவ்வொருவரும் குற்ற உணர்வை உணர்வது  என்கிறார். 

இதோடு சேர்ந்து நாம் உணர்வது , குற்ற உணர்வு தோன்றுவது மட்டுமல்ல எங்கெல்லாம் இப்படியான அநீதிகள் நிகழ்கிறதோ அங்கு குரல் எழுப்பவும் , அந்த மக்களுக்காகத் துணை நிற்கும் தைரியமும் தான் பொதுச் சமூகத்திற்கு வர வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறது சந்துரு பாத்திரம். 

லட்சக்கணக்கில் பணம் தந்து சமரசம் பேச வரும் அதிகாரியை துட்சமாகப் புறந்தள்ளி நீதி வேண்டும் என்கிற செங்கனியின் பாத்திரத்தை உள் வாங்கி மனப்பான்மையில் மாற்றம் வர தங்களைத் தயார்படுத்திக் கொள்வது இன்றைய நமது சமூகத்தின் பிரஜைகளுக்கு  மிக அவசியமான பாடமாகிறது. 

இப்படியான பெயரளவில் இயங்கும்  ஜனநாயக சமூக அமைப்பில் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டாலும் காவல்துறையினரது மூளையிலிருந்து அதைத் துடைத்து எறிதல் இயலாத காரியமாக இருக்கிறது என்கிறார் நீதியரசர் .  ஆகவே தான் எந்தக் குற்றங்கள் நடந்தாலும் இவர்களைக் குறி வைக்கிறது அராஜக அதிகாரம் . 

விளிம்பு நிலை மக்கள் , அடித்தட்டு மக்கள் என்று நாம் அடிக்கடி நாம் பேசுகிறோம். ஆனால் அவர்களைக் கடந்து திக்கற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பிரிவினரும் இருக்கின்றனர் என்பதை பொதுச் சமூகத்திற்கு இடித்துரைக்கும் திரைப்படமாக ஜெய் பீம் ❤️❤️

இந்த  நிகழ்கால வரலாற்று ஆவணத்தில் பணிபுரிந்துள்ள அத்தனை பேருக்கும் பாராட்டுகளை நாம் தெரிவித்துக் கொள்வதோடு தம்பி செந்தில் ஜெகநாதனுக்கு  Senthil Jagannathan  .... திரையில் உனது பெயரைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி கண்ணு❤️. .

பிரபா கல்விமணி ஐயாவின் களப்பணியும் இங்கு  இணையாக நாம் பார்க்க வேண்டியுள்ளது. 

கீழே த.செ. ஞானவேல் , நீதியரசர் சந்துரு இருவரும்  அருஞ்சொல் இணையத்தில் இப்படம் குறித்து அளித்துள்ள நேர்காணல்களை இணைக்கிறேன். அவசியம் பாருங்கள் . அவை இப்படத்தை வேறொரு வகையில் புரிந்து கொள்ள உதவும்.

(கூடுதலாக ....
இருளர்கள் மட்டுமல்ல , தாழ்த்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து தரப்பிலும் சாதிச் சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கும் மக்களையும் இங்கு நாம் பதிவு செய்கிறோம். பள்ளிக் குழந்தைகள் வழியாக அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்காக சேவை செய்ய வந்தவர்கள் என்ற நினைப்பை ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு உணர்த்த வேண்டும் )

உமா❤️

https://www.arunchol.com/director-gnanavel-interview-04-11-2021-arunchol-jaibhim

அநீதிக்கு எதிராக மக்கள் விழித்தெழ வேண்டும்: சந்துரு பேட்டி https://www.arunchol.com/justice-chandru-interview-on-suriya-jai-bhim-arunchol