Thursday 26 December 2019

வாசிப்பு -சுதந்திரத்தின் நிறம்

சுதந்திரத்தின் நிறம் 

இது ஒரு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் . குக்கூ காட்டுப் பள்ளியின் தன்னறம் நூல்வெளி, கடந்த அக்டோபர் மாதம் தான் இந்நூலை வெளியிட்டுள்ளது . 2019 ,அக்டோபர் 18 அன்று வெளியிடப்பட்ட இப்புத்தகம் இந்த சமூகத்திற்கு ஒரு மிகச் சிறந்த சாட்சியாக அமைந்துள்ளது.  இந்த நூலின் இறுதி வரை நம்மோடு

சாட்சிகளாகப் பிரயாணம் செய்பவர்கள்  கிருஷ்ணம்மாள் மற்றும் ஜெகந்நாதன் . இருவரோடும் பல நாட்கள் தங்கி , உரையாடி அவர்கள் இருவரின் வாழ்க்கை அனுபவங்களை ஆங்கிலத்தில் பதிவு செய்து , முதன் முதலில்  இத்தாலி மொழில் நூலாக்கியவர் லாரா கோப்பாதான். காந்தியச் சிந்தனை குறித்து ஆய்வு செய்து வரும் இத்தாலிக்காரர் இவர்.

அதை ஆங்கிலத்தில்  மொழியாக்கம் செய்தவர் டேவிட் ஹெச். ஆல்பர்ட் , வாஷிங்டனில் வசித்து வருபவர். 

இவர்களைப் பற்றிய அறிமுகத்தைக் கடந்து நூலின் அணிந்துரை வழங்கிய சுற்றுச்சூழல் ஆர்வலரும் சிப்கோ இயக்கத்தின் தலைவருமான சுந்தர்லால் பகுகுணா , இவர்களின் சமூக செயல்பாடுகளை செயல் நோன்பு எனக் குறிப்பிடுகிறார். அதோடு வாழ்க்கையை நேர்மறையாகவும் நேர்மையாகவும் அணுகும் வலிமையைத் தரும் இப்புத்தகம் , கல்விப் புத்தகமாக எதிர்காலத்தில் வரலாம் என்கிறார்.இந்த ஆங்கிலப் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் B. R .மகாதேவன் .

காந்தியக் கரங்களின் தொண்டூழியம் என்ற அணிந்துரையில் , தன் வாழ்வில் சிறு வயதிலிருந்து சந்தித்த  மூன்று மனிதர்களுக்குள் அடிப்படை ஒற்றுமை காந்தீய வழியே என்பதை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் குக்கூ தம்பி சிவராஜ் .அதே ஒற்றுமையுடன் கூடிய இரு பெரும் ஆளுமைகளான கிருஷ்ணம்மாள் , ஜெகந்நாதன் தம்பதி குறித்தும் மிக ஆழமானக் கருத்துடன்  நம்மை அணுகி சிந்திக்க வைக்கிறார் சிவராஜ் .

அதைத் தொடர்ந்து இந்நூலினை ஆங்கில மொழி பெயர்த்த டேவிட் ஹெச். ஆல்பர்ட் எழுதியுள்ள அணிந்துரை இடம் பெற்றுள்ளது.

அதை வாசிக்கும் போதே புத்தகம் குறித்த ஆழ்ந்த எதிர்பார்ப்பு நம்மைத் துரத்துகிறது. அப்படி என்னதான்  செய்தனர் இவர்களிருவரும் என வாசிக்க ஆரம்பித்தால் நம்மை முழுமையாக ஆட்கொள்கிறது இந்த அற நூல் .

இருபது தலைப்புகளை உள்ளடக்கமாகக் கொண்ட இந்நூலில் கிருஷ்ணம்மாள் , ஜெகந்நாதன் இருவருடைய இளமைக் காலத்தில் ஆரம்பிக்கிறது.  அவர்களது சமூக வாழ்வு எவ்வாறு தொடங்குகிறது என்பதை வாசிக்கும் போது ஏதோ ஒரு இனம் தெரியாத பற்று அவர்கள் மீது நமக்கு ஏற்படுகிறது. இருவருக்குமான திருமணம் இந்த சமூகத்தில் வாழும் லட்சக்கணக்கான சமூக செயல்பாட்டாளர்கள்  தங்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பகுதி. 

 வினோபா பாவே யின் பூமிதான இயக்கம் தமிழகத்தில் வேரூன்றவும் இவர்களே காரணமாக இருந்திருக்கின்றனர் என்பது தான் இவர்களது வாழ்வின் அசைக்க முடியாத வேர்களின் முக்கியமான தருணம். அதன் நீட்சியாக பூமிதானப் போர் தொடர்ந்து இவர்கள் இருவரும் இந்தியா முழுவதும் வட , தென் திசைகளில் இலட்சக்கணக்கான மைல்களுக்கு தங்கள் பாதங்களைப் பதித்து விரிவாக்குகின்றனர். 

இருவரும் மாறி மாறி தலித்துகளுக்காகவும் அடித்தட்டு மக்களுக்காகவும் காந்திய வழியில் போராடுவதை நூலின் ஒவ்வொரு பக்க வரிகளும் நமக்கு விவரிக்கின்றன. வத்தல குண்டு போராட்டத்தில் நடக்கும் மேல்சாதியிரைின் வக்கிர உணர்வும் காவல்துறையின் அதீத உதாசீனமும் ஏழை மக்களின் மனிதாபிமானத்தால் எவ்வாறு சுக்கு நூறாக உடைகிறது , அதற்கு கிருஷ்ணம்மாள் அவர்களது அயராத சகிப்புத்தன்மை , காந்திய சிந்தனை இவை இன்றைய காலத்தின் தேவையாகவும் இருக்கிறது. 

தாழ்த்தப்பட்டவர் மத்தியில் மட்டும் பணியாற்றிடாமல் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பயனாகப் பணியாற்ற வேண்டுமென இவர்கள் உருவாக்கிய கிராமசபை தான், இராமநாதபுரம் அமைதி முயற்சி என்ற அத்யாயத்தின் சாரம். (ASSEFA ) அசோசியேஷன் ஆஃப் சர்வோதயா ஃபார்ம்ஸ்  அப்போது தான் உருவாக்கப்பட்டுள்

ளது. இன்று இந்தியாவிலேயே மிகப்பெரிய அரசு சாரா நிறுவனமாக வளர்ந்துள்ளது எனில் அதற்கு இவர்கள் இருவரும் தான் முக்கியக் காரணமாக இருந்திருக்கின்றனர். ஜெகந்நாதன் 1993 வரை அதன் தலைவராக இருந்ததும் அதன் பலன் கிராம வளர்ச்சிக்குமானதாக மாற்றியதெல்லாம்  மிகப் பெரிய வரலாறாகப் பார்க்க வேண்டும். 

1968 இல் கீழ் வெண்மணி படுகொலைக்குக் காரணமான அரைப் படி நெல் . நம்மை நடுங்க வைக்கும் சம்பவம் , 44 பெண்களும் சிறுவர்களும் உயிரோடு எரிக்கப்பட்டது என விரிகிறது. ஆனால் மக்களை ஆற்றுப்படுத்தி , காந்திய போதனைகளை ஒரு வருட காலம் மக்களிடம் பிரச்சாரம் செய்து  நக்சலைட்டாக இருந்த ஒருவனை காந்தியவாதியாக மாற்றியதும் , மூன்றே வருடங்களில் உயிரிழந்த 74 குடும்பங்களுக்கு 74 ஏக்கரை அகிம்சை முறையில் வாங்கிக் கொடுத்த சம்பவங்கள் தான் இவர்கள் மீது மேலும் மேலும் நம்மை அன்பும் நம்பிக்கையும் கொள்ள வைக்கிறது. இதே வெண்மணியில் இவர்களைத் தூற்றிய கம்யூனிஸ்டுகள் குறித்தும்,  அவர்களது செயல்பாடுகளில் , கொன்றவர்களைப் பழிவாங்கும் மனோபாவமும் பதிவு செய்யப்பட்டுள்ளது கீழ் வெண்மணி படுகொலை என்ற அத்தியாயத்தில் . 

டிசம்பர் 24 இரவு தான் இந்தப் படுகொலை நடந்துள்ளது. 51 ஆண்டுகள் முடிவடைந்த இந்திலையில் இது குறித்து சற்று விளக்கமாக அறிந்து கொள்ள வைக்கின்றன  இவற்றின் பக்கங்கள். அரைப் படி நெல் அதிகம் கேட்டவர்களுக்கு இன்று அந்த நிலம் சொந்தம் .இன்று அவர்களது குழந்தைகள் பள்ளிக்குப் போகின்றனர். மேல்சாதியினரோடு சமமாக அமர்ந்து கோவிலில் பூஜைகள் செய்கின்றனர். பொருளாதார நிலையில் சமூக நிலையில் பெரும் மாற்றம் உருவாகி இருக்கிறது. என்றால் அதற்கு அடிப்படைக் காரணமாக கிருஷ்ணம்மாள் மற்றும்  ஜெகந்நாதனே இருந்திருக்கின்றனர் என்பது நமக்கான வாழ்க்கைப் பாடம். வெற்றுக் கோஷமல்ல , மக்களோடு மக்களாக நின்று மக்களுக்காக அஹிம்சை வழியில் தங்கள் போராட்டத்தைத் திரும்பத் திரும்ப பதிவு செய்கின்றனர். 

அடுத்த போராட்டமாக வலிவலம் சத்தியாகிரகமும் மடாலயங்களிலிருந்து  ஏழை கிராமங்கள் காப்பாற்றப்பட்டு மக்கள் தங்களுக்கான நிலங்களைப் பெற இவர்கள் இருவரும் எவ்வாறு முன்னின்றனர் என்பது நமக்கான வழிகாட்டல்கள். 

ஒரு சதுர அடி நிலத்துக்கு அடிதடித் தகராறு ஏற்பட்டு பிரச்சனைகள் உருவாகும் இதே மண்ணில் ,உழுபவர்க்கே நிலம் என்ற அமைப்பை உருவாக்கி  (Land for Tillers - LAFTI), பத்தாயிரம் ஏக்கர் நிலம் பிரித்துக் கொடுத்ததெல்லாம் எப்படி

சாத்தியமாகியிருக்கும் என்று நம்மால் நம்பத்தான் முடியவில்லை. ஆனால் அனைத்திற்கும் சாட்சிகள் இருக்கின்றனவே இந்த லாப்டி அத்தியாயத்தில்  .

இவர்களைப் போலவே ஏழைகளுக்காக சட்டத்தைக் கையில் எடுத்த வழக்கறிஞர் மாரியப்பன். இறால் பண்ணைகள் போராட்டத்திற்காக இவர்களுக்கு உதவிய வழிகளும் இறால் பண்ணைகள் மண்ணை விஷமாக்கி வரும் வேதனைகளும் அடுத்தடுத்த அத்யாயங்களில் எழுதப்பட்டுள்ளன. நமக்கு இந்த நாட்டின் பொருளாதாரம் புரையோடிய அரசியல் , வெளிநாட்டு செலாவணிக்காக இங்கு இறக்க வைக்கும் நிலங்கள் என பலவற்றையும் உணர்த்துகிறது. 

இறுதி அத்யாயங்களில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியின் மகன் பூமி குமாரும் மகள் சத்யாவும் தங்கள் பெற்றோர் எப்படிப்பட்ட வாழ்க்கையை தங்களுக்காகக் கொடுத்துள்ளனர்  என்பதை உணர்வு பூர்வ சாட்சியமாக நம்மோடு பகிர்கின்றனர். பூமிதான இயக்கத்தில் பிறந்த இவர்களது மகனுக்கு வினோபா வைத்த பெயர் தான் பூமி குமார்.

தொட்டில் கட்டும் குழந்தைகளாக இருக்கும் போதே அம்மாவுடன் போராட்டங்களில் இணைந்து கொண்டு தங்கள் குழந்தைப் பருவத்தையும் மக்களுக்காக வாழ்ந்துள்ளனர் என்கிற போதே நாம் புரிந்து கொள்ள வேண்டும். பூமி கல்வி கற்றது எல்லாமே பள்ளிகளில் அல்ல , போராட்டக் களங்களிலும் பேரணி , நடை பயணங்களிலும் தான். கிருஷ்ணம்மாள் தான் ஆசிரியராக பூமிக்கு கற்பித்திருக்கிறார்  . 

தற்போது இருவருமே மருத்துவராகப் பணியாற்றுகின்றனர். தங்களது தாய் தந்தை குடும்ப வாழ்க்கையில் குழந்தைகள் மீதும்  , சமூக வாழ்க்கையில் மக்களின் மீதும் அன்பு செலுத்தி சீரானதொரு வாழ்க்கையை வாழ்ந்ததைப் பதிவு செய்துள்ளனர்.

இவர்களது வாழ்க்கை வரலாறு நமக்குக் கற்றுத் தருவது அனைத்தும் காந்திய வழி ,மன உறுதி , அசையா நம்பிக்கை , செயல்பாடு , வெற்றி , சமூக மாற்றம் .ஒவ்வொரு ஊரிலும் மாற்றம் நிகழ்கிறது. காந்தியை ஜெகந்நாதன் சந்தித்த தருணம் , டாக்டர் சவுந்தரம் அம்மாளிடம்

 பழகிய ,காந்திக்கு மருத்துவராக வந்தவருடன் உதவியாளராக தமிழகம் முழுக்க பயணித்த கிருஷ்ணம்மாள் அனுபவம் இவை ஒரு வேளை ஆரம்பப் புள்ளியாக இருக்கலாம் இவர்களது அகிம்சை வழிக்கு. ஆனால் கெய்தான் உடனான சேவை தான் ஜெகந்நாதனுக்கு ஆரம்பமாக நான் கருதுகிறேன். 

இன்றுள்ள எத்தனையோ குடிகாரக் கணவர்களது அபலை மனைவிகளைப் போலத்தான் கிருஷ்ணம்மாள் அவரது அம்மாவின் வாழ்வும் இருந்தது . 32 வயதில் விதவையாக மாறியவரின் துன்பங்களைக் கண்ட இவர் தன் வாழ்க்கையை 

அவல நிலையில் அல்லல்படும் பெண்களை மீட்டெடுக்கவே அர்ப்பணிக்கிறார். 70 ஆண்டுகள் அதாவது முக்கால்  நூற்றாண்டுக்கு முன்னரே கலப்புத் திருமணம் செய்த புரட்சிப் பெண்மணி எனலாம்.தமிழகத்தின் முதல் ஹரிஜனப் பட்டதாரியாக இருக்கும் கிருஷ்ணம்மாள்

ஆசிரியர் பயிற்சி முடித்தும் அந்தப் பணி வேண்டாம் என முடிவெடுக்கிறார் , காரணம் இவ்வளவு மக்கள் துன்பத்தில் உழல்கின்றனர் , அவர்களுக்கு சமூகப் பணி செய்வதே என் கடமை என உறுதி எடுப்பதற்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும்.  

திருமணம் ஆகி இரண்டே நாளில் சமூக அக்கறையால் பிரிவது ,காந்தி அமைதி மையங்களை ஆரம்பித்து , மக்களிடம் செல்வது பேசுவது , தனது 3 மாதக் குழந்தையைப் பாத யாத்திரையில் கலந்து கொள்ள வைப்பது என இவர்களின் வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுப்பது ஏராளம். 

குமரப்பா ,கெய்தான் , ஜெயப்பிரகாஷ் , காமராசர் , வினோபா , நேரு என நாட்டின் மிகப் பெரும் ஆளுமைகள் அனைவரது நம்பிக்கைக்கும் பாத்திரமாகியுள்ளனர். காந்தீய சிந்தனைகளை தமிழகத்தில் மட்டுமல்லாமல் பீஹார் , உத்திரப்பிரதேசம் , இமயமலை என இந்தியா முழுவதும் எடுத்துச் சென்ற இவர்களது பயணம் நமக்கு  நம்பிக்கை அளிக்கும் நிகழ்வுகள் . லட்சக்கணக்கான தூரம் பாதயாத்திரை செய்தே லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்குப் பெற்றுத் தந்துள்ளனர். 

வினோபாவுக்கும்  ஜெகந்நாதனுக்கும் இடையில் போராடுவதிலும் நிலத்தைப் பிரித்துக் கொடுப்பதிலும் முரண்பாடுகள்  இருந்திருக்கின்றன . விஞ்ஞானப் பார்வையோடு அணுகிய குமரப்பா பிரித்துக் கொடுக்கும் நிலத்தை நீர்ப்பாசன  வசதி செய்து தர வலியுறுத்துகிறார். ஆனால் ஒத்துழைக்காத வினோபா மீது குமரப்பாவிற்கும் அதிருப்தி . இத்தகைய முரண்பாடுகளால் குமரப்பா இவர்களை விட்டுப் பிரிகிறார். இந்த நிகழ்வுகள் எல்லாம் நமக்குப் பாடமாகின்றன. ஆம் வினோபாவின் ஆன்மிக பலமும் குமரப்பாவின் நடைமுறை சார்ந்த  விஞ்ஞான அறிவும் இணைந்திருந்தால் இவ்வியக்கம் மிகப் பெரும் வெற்றியாக அமைந்திருக்கும் . வினோபா இடத்தில் காந்தி இருந்திருந்தால் குமரப்பாவின் யோசனையை ஏற்றிருப்பார். இந்நிகழ்வுகளைக் காணும் போது , எப்பேர்ப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் பொது நோக்கம் சார்ந்து பயணிக்காமல் விட்டால் இயக்கங்கள் வலுப்பெறாது என்பதே புரிகிறது. 

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் இருவரும்  வருடக் கணக்கில் சிறையில் இருந்து அனுபவித்த இன்னல்கள் , நம்மை என்னவோ செய்கிறது. விடுதலைப் போராட்டம் சிறை சென்றவர் குறித்து வரலாற்றில் படித்திருப்போம். ஆனால் நம்முடன் வாழும் ஒருவர் இப்படியான அனுபவங்களைப் பெற்று இந்த சமூக விடுதலைக்குக் காரணமாக இருக்கிறார் என்பது தான் நமக்கு வியப்பாக இருப்பதுடன் நம்மையும் இயங்க வைக்க ஊக்கம் தருகிறது.

 அவசர நிலைப் பிரகடனத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் சிறை நடவடிக்கைகள் நம்மை அதிர்ச்சியூட்டுகின்றன . ஜெகந்நாதன்

ஜெயப்பிரகாஷ் நாராயணன் இருவருக்கு  சிறையில் நடந்த கொடுமைகள் கண்களில் நீரை வரவழைக்கின்றன. 

காந்தி ஆஸ்ரமங்களை நிறுவி ,

பூமி தான இயக்கத்தை கிராமிய சுயராஜ்யமாக மாற்றி தொழில் முனைவோராக கிராம மக்களை மாற்றி,  அரசின் நிலச் சீர்திருத்த முறைகளை மக்களின் கைகளில் கொண்டு சேர்த்த இவர்களின் உழைப்பு மகத்தானது. நாமெல்லாம் சிறு வயதில் அழுக்கு சோப்பு கூட காந்தி பார் என்றுதான் பார்த்திருப்போம் , ஆனால் இந்த 30 வருடங்களில் இவையெல்லாம் எங்கு போயின என்ற கேள்வியும் நம்முள் எழுகிறது. 

மனம் பதைக்கிறது. இவர்களது உழைப்பும் அஹிம்சை வழிப் போராட்டமும் இன்று தமிழக மக்களுக்கு ஏன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியாமல் போயிற்று ?  பூமி குமார் கூறுவது போல இன்று ஏனோ ஒரு சிறு கல் ஏற்படுத்தும் எண்ணற்ற அலையைப் போல் வன்முறை வட்டம் பெருகிக் கொண்டே போகிறது .

இதை எனக்கான நூலாகப் பார்க்கிறேன் , சரியான நேரத்தில் எனது கையில் கிடைத்த இந்நூல் எனக்குள் பல புரிதல்களைக் கொடுத்துள்ளது. எது இயக்கம் , எது ஊழியம் , எது செயல் , எது நோக்கம் ,எது சமூக மாற்றம் , அதற்கான பாதை எது என எனக்குள் ஒரு ஒட்டுமொத்த புரிதலைத் தருகிறது. 

இந் நூலை  தன்னை சமூகத்துக்கு ஒப்புக் கொடுக்கும் அனைவரும் ஆழமாக வாசிக்க வேண்டும். 

கிருஷ்ணம்மாள் அவர்கள் கையெழுத்திட்ட முதல் புத்தகம் வெளியீட்டிற்கு ஒரு வாரம் முன்பே எனது வீட்டிற்கு வந்து சிவராஜ் தம்பி வழங்கியது எனது பெரும் பாக்கியம். அம்மாவை விரைவில் சந்திக்க வேண்டும் .

உமா




வாசிப்பு - தூயகண்ணீர்

தூய கண்ணீர் 

சிறார் கதைப் புத்தகம்  , யூமா வாசுகி எழுதிய இப்புத்தகத்தை தன்னறம் நூல் வெளி தனது முதல் பதிப்பாக  2019 இல் வெளியிட்டுள்ளது. 10 நாட்கள் முன்பாக வீடு தேடி வந்த இந்தப் புத்தகத்தை நம்மிடம் வழங்கிய சிவ ராஜ் தம்பிக்கு எனது பள்ளிக் குழந்தைகள் சார்பாக முதலில் பேரன்பு .

நான் இந்தப் புத்தகத்தை வாசித்த போது , இன்றைய ஆசிரியர்களது பலரின் கூட்டு செயல்பாடுகளை இணைத்து ஒரு ஆசிரியரைப் படைத்ததாக முனியய்யா என்ற  பாத்திரம் இப்புத்தகத்தில் வாழ்கிறதை உணர முடிகிறது. 

ஒரு ஆசிரியர் எப்படியெல்லாம் பள்ளிக்குள் மாணவர் மனதில் மிக இடம் பிடிப்பவராக  வாழ்கிறார் எனக் காட்டும் அதே சமயத்தில் , சமூகப் பிரச்சனைக்காகவும் குரல் கொடுத்து தனது உயிரையே தியாகம் செய்து தன்னை நிரூபித்து ... இறந்த பின்னும் ஊர் மக்களுடைய மனதில் வாழ்ந்து நிலைக்கிறார் என்பதை ஆசிரியர்களுக்கும் சமுதாயத்திற்கும் உணர்த்துகிறது இக் கதை. 

 மாணவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவுவதில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வெற்றி கண்டு அன்பு செலுத்துகிறார்கள்  என்பதை மாணவர் மனதிலும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ள இந்தப் புத்தகம் அனைவரும் வாசிக்க வேண்டியது. 

தூய கண்ணீர் என்ற இந்தக்  கதை முழுவதும் அன்பை மையப்படுத்தியே பின்னப்பட்டிருக்கும்  அழகான சிலந்தி வலை போல ... ஆசிரியர் மாணவர் மீதும் சமூகத்தின் மீதும் வைத்துள்ள அன்பு  , மாணவர்கள் அந்த ஆசிரியர் மீது வைத்துள்ள அன்பும் நம்பிக்கையும் , பெற்றோர்கள் மீது ஆசிரியருக்கான அன்பு  , மாணவர்களுக்குள் நட்பால் பலம் பெறும் அன்பு , ஊர் மக்களுக்கு ஆசிரியர் மீது ஏற்படும் அன்பு, அதன் நீட்சியாக நடக்கும் அத்துணை நிகழ்வுகளும்   நமக்குள்ளும் தூய கண்ணீர் வரவழைக்கும் படைப்பு .

இதனை எம் பள்ளி மாணவியரிடம் ஒப்படைத்ததன் பலன் …. பல குழந்தைகள் அழகான பின்னூட்டங்களைப் பகிர்ந்துள்ளனர். அதையும் உங்களுக்குப் பகிர்கிறேன். 

உமா