Saturday 12 September 2020

இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள் 

ஆர்.சூடாமணி. .

சாகித்திய அகாதெமி வெளியிட்ட இந்த நூல் 2017 இல் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. 

ஆசிரியர் : முனைவர்  கே.பாரதி . சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் .எழுத்தாளர் சூடாமணியின் உயிலைச் செயல்படுத்தியவர். ஆர்.சூடாமணி நினைவு அறங் கட்டளையின் அறங்காவலர். சிறுகதை , கட்டுரை , குறுநாவல் போன்ற படைப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ள இவர் , இலக்கிய வீதியின் 'அன்னம் விருது' பெற்றவர். 

இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் எழுத்தாளர் ஆர். சூடாமணி அவர்கள் குறிப்பிடத் தக்கவர் . சுமார் ஐம்பது ஆண்டுகள் 1954 முதல் 2004 வரை தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கியவர் .உளவியல் நுட்பங்களை எழுதும் ஆற்றல் பெற்றவராக வாழ்ந்துள்ளார். இந்த நூலை வாசிக்கும் போது ஒரு ஆதர்ஸ பெண்மணியின் வாழ்வு சிந்தனை , கருத்தாக்கம் , மதிப்பீடுகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

அர்ப்பணமாக ஒரு வாழ்வு , மானுட மேன்மைகள் , உளவியல் நுட்பங்கள் , பெண்ணிலைப் பார்வை , நாவல்கள் குறுநாவல்கள் என்ற ஐந்து தலைப்புகளால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 

திருமணம் செய்து கொள்ளாமலேயே தனித்து வாழும் ஒரு பெண் அவரது குடும்ப உறவுகளுடன் கொண்ட அபரிதமான பிணைப்பு, அவர்களுக்குப்  பின் தன் எழுத்துப் பணியில் கடந்த பயணங்களின் செறிவு படிப்பவரை நெகிழ வைக்கிறது. சூடாமணியின் அத்தனை பரிமாணங்களும் அவரது தாய் தந்த சீதனமாகவே வெளிப்படுகிறது.

சாதரணமாக மற்றவர்கள் செய்யக் கூடிய எந்த வேலையுமே சூடாமணிக்கு மிகப் பெரிய சவாலாக இருந்துள்ளது. அந்த சவாலை அவர் ஏற்றுக் கொண்ட விதமும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து இயங்கியதும் எங்ஙனம் என்பதை விரிவாக விளக்குகிறது நூல். இத்தனைக்கும் ஆதாரம் அவரது தாய் கனகவல்லியாக இருந்துள்ளார். அம்மா கனகவல்லி பற்றி வாசிக்கும் போது நமக்கு இப்படி ஒரு தாய் அமையவில்லையே என ஏக்கம் வருகிறது. 

சூடாமணி முழு நேர எழுத்தாளராக அறியப்பட்டு கலைமகள் , சௌராஷ்டிரமணி , தீபம் , கல்கி , ஆனந்த விகிடன் ஆகிய பத்திரிகைகளில் அவரது சராசரியாக மாதம் ஒரு சிறுகதை பிரசுரமாகியுள்ளது அறியப்படுகிறது. இவை தவிர நாடகம் , நாவல் , குறுநாவல் என்ற பல முயற்சிகளும் வெற்றி அடைந்துள்ளன. 

1959 இல் மனத்துக்கினியவள் என்ற இவரது நாவலுக்கு கலைமகள் நாராயணசாமி ஐயர் பரிசு கிடைத்துள்ளது. ஆனந்த விகடன் நடத்திய நாடகப் போட்டியில் சூடாமணி எழுதிய இருவர் கண்டனர் நாடகம் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. ஆங்கிலத்திலும் இவரது  200 க்கும் மேற்பட்ட ஆங்கிலச் சிறுகதைகள் பிரசுரமாகியிருக்கின்றன.

சூடாமணியின் நண்பர்கள் மிகச் சிலரே எனத் தெரிய வருகிறது. ராஜம் கிருஷ்ணன் , மகரம் , அம்பை ஆகியோர் சிலர். 

தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களுக்கே உரிய தனிமைப் படுத்தப்பட்ட வாழ்வை (lonely life) சூடாமணி வாழவில்லை. Solitude என்று ஆங்கிலத்தில் சொல்லக் கூடிய மேன்மையான ஒரு தனிமை வாழ்வை சூடாமணி அம்மையார் தேர்வு செய்திருந்த வாழ்க்கையை நூல் அழகாக விவரிக்கிறது. 

எளிய தோற்றம் ,எளிய உடை ,எளிய உணவு ,எளிய வாழ்க்கை என்று வாழ்த்து , காந்தியச் சிந்தனையின் தாக்கத்தாலும் வாக்கு வேறு வாழ்க்கை வேறு என்று இல்லாத ஒரு மனுஷியாக அவர் வாழ்ந்திருக்கிறார் சூடாமணி. 

தன்னைத்தானே மேம்படுத்திக் கொண்டு முழுமை அடையும் குறிக்கோளுடன் இயங்கியவர் சூடாமணி , அதற்கான சுயமுயற்சியும் அவரது எழுத்து பிரதிபலிக்கிறது. தன்னையும் உயர்த்திக் கொண்டு வாசகர்களையும் உயர்த்திய அறம் சார்ந்த எழுத்து அவருடைய தாக இருந்து வருகிறது. 

சூடாமணியின் படைப்புலகம் குறித்து மானுட மேன்மைகள் என்று விரிவாக தொகுத்துள்ளார் நூலாசிரியர். மானுடத்தின் மேன்மைகள் எந்த தருணங்களிலெல்லாம் வெளிப்படக் கூடும் ? எப்போது எவ்விதம் வெளிப்பட்டால் அது சராசரிகளை விஞ்சி நிற்கும் ? இது போன்ற கேள்விகளுக்கு சூடாமணியின் சில கதைகளில் ஆழமான விளக்கங்கள் பொதிந்திருக்கின்றது என புத்தகம் குறிப்பிடுகிறது. மனித இயல்பின் மேன்மையை மட்டுமே மீட்டியெடுக்கும் வீணை போன்ற இலக்கியம் அவருடையது.

சுலபமாக அளந்துவிட முடியாத மனித மனத்தின் சில கூறுகளை தன்னால் முடிந்த அளவுக்கு அடையாளம் காட்டியிருக்கிறார் சூடாமணி .

தமிழ் இலக்கியத்தில் உளவியல் கதைகள் என்ற ஒரு பிரிவு இருக்குமேயானால்  சூடாமணியின் கதைகளை அந்தப் பிரிவில் அடக்கி விட முடியும் என்கிறார் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன்.

கூச்சலோ கூக்குரலோ இல்லாமல் எந்தவிதப் பிரகடனங்களும் இல்லாமல் மெல்ல தனக்காக இலக்கியத்தில் ஓர் இடத்தை ஏற்படுத்திக் கொண்டாள் சூடாமணி. பெண்கள்  குறித்தான தமது பார்வையில் இலக்கியம் படைப்புகள் குறித்து எழுதியதை பெண்ணிலப் பார்வையில் தொகுத்துள்ளார் பாரதி.பெண்களின் அக வுலகம் குறித்த சூடாமணியின் கதைகள் மிக அழுத்தமானவை என்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் .

இறுதிப் பகுதி இவரது நாவல்கள் குறுநாவல்கள் குறித்து பதிவு செய்கிறது. புன்னகைப் பூங்கொத்து (1964) , தீயினில் தூசு (1967) , தந்தை வடிவம் (1967) மானிட அம்சம் (1974) , கண்ணம்மா என்  சகோதரி (1980) ஆகியவை நாவல்கள் .குறு நாவல்கள் குறித்து விடிவை நோக்கி (1959) , உயர்வு உள்ளத்திலே (1967), வாழ்த்துவோம் (1971) , மங்கை பி.ஏ (1971) , உள்ளடக்கம் (1972) முக்கோணம் ( 1978 ), களங்கமில்லை (1980) ஆகியவை பற்றி விவரிக்கப் பட்டுள்ளது .

இலக்கியம் குறித்து அறியப் பட வேண்டியவர்களில் முக்கியமான பெண்மணி குறித்த இப்புத்தகம் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும். 





.

Wednesday 2 September 2020

ஆதிவாசிகளின்  நிலத்தில் போன்சாய் 

இது ஒரு கவிதை நூல் , நமது குழுவில் சில மாதங்களுக்கு முன்பு முதல் ஆசிரியர் என்ற புத்தக விமர்சனம் எழுதியிருந்தேன் .சில பதிவுகளில் ஒன்றாக அதுவும்  தேர்வு செய்யப்பட்டதால் அன்புப் பரிசாக அனுப்பியிருந்தார் எழுத்தாளர் கயல் அவர்கள் .அவருக்கும் குழுவிற்கும் அன்பும் நன்றியும். 

இக் கவிதை நூலின் ஆசிரியர் முனைவர் கயல் , வேலூரில் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்தவர். தற்போது வேலூர் அரசு கலைக்  கல்லூரியில் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் மூன்று துறைகளில் முதுகலைப் பட்டமும் இரு துறைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.  இவரது மற்ற படைப்புகள் கல்லூஞ்சல் , மழைக் குருவி , ஆரண்யம் ஆகிய கவிதை நூல்கள் .இவற்றுள் மழைக் குருவி என்ற நூல் , பயணம் சிற்றிதழ் நடத்திய போட்டியில் சிறந்த கவிதை நூல் பரிசை வென்றுள்ளது .தற்போது இவர் இரு மொழிகளிலும் கவிதை , கட்டுரைகள் எழுதுவதும் மொழிபெயர்ப்பு செய்த கட்டுரை , கவிதைகளைத் தருவதும் அடிக்கடி முகநூலில் காண முடிகிறது .

ஆதிவாசிகளின் போன்சாய் என்ற இந்நூலின் பெயரே நமக்கு பலவற்றையும் பொருள் கொள்ள வைக்கிறது . ஆதிவாசிகளுக்கு  என்று ஒரு பொருள் உள்ளது. போன்சாயின் இயல்பும் நாமறிவோம் . இரண்டையும் இணைத்து அழுத்தமான பல செய்திகளை இக்கவிதை நூல் நமக்குத் தருகிறது. 

அன்றாடம் நாம் கடந்து போகும் பல்வேறுபட்ட நிகழ்வுகளின் அடிப்படை உயிர் முடிச்சுகளைத் தொட்டு உணர வைக்கிறார் கயல்.

தீராக் காதலுடன் 

முத்தமிடப்படாத உதடுகளுக்கே விதிக்கப்படுகிறது 

இன்னொரு பிறவி ..

இந்த மூன்று வரிகள் ஏழு சீர்கள்  மட்டுமே கொண்ட வரிகள் எவற்றையெல்லாம் நமக்கு  உணர்த்திவிடும் என்பதை நான் சொல்ல வேண்டியதே இல்லை. 

ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு வித ரசனையைத் தருவதோடு நமக்குள் ஏதோ ஒரு ரசவாத உணர்வு , அழகியல் உணர்வு , பொருத்திப் பார்க்கும் உணர்வு இவற்றையெல்லாம் தருகின்றது. 

சொற்களை அழகாகக் கோர்த்து பல வண்ண ஓவியம் போல படர விட்டிருக்கிறார். ஏதோ கவிதைகள் என்றால் ரசனைக்கு மட்டுமல்ல , வலி , சமூகத் துயரங்கள் அது வன் கொடுமை என்பதான கருவரை   , பெண்களின் நிலை , போராட்டம் , காதல் , மரணம் , அகதியின் மனத் துயரம் இப்படி நிறைய படைப்புகள் . ரசிக்கவும் பற்களை நெரித்து கோபம் கொள்ளவும் , மனதுக்குள் அழ வைக்கவும் , விருப்பமான நேசங்களை மகிழ்வுடன் அசை போடவும் வைக்கின்றன பல கவிதைகள் ….

எனக்குப் பிடித்த பலவற்றுள் இன்னும் சில …

  திரும்புவதற்குக்  கூடற்ற துயரத்தை 

  அறிவோம் எனப் 

  பறவைகள் மட்டுமே சொல்ல முடியும் 

  திரும்புவதற்கு நாடற்ற 

  நாடிருந்தும் வீடற்ற 

  அகதியின் துயரை ….

……………..

  நீங்கள் 

  அரசுப் பள்ளியில் படித்த 

  விவசாய மகளின் ஆங்கிலத்தில் 

  பிழை தேடினீர் ..

 இணையத்தில் என் பிறப்பின் வேரெது என

 சாதி தேடினீர் ..

……………..

 வறுமை துரத்தி வந்து எத்த 

 புன்னகை தேடினேன் என்று ஆரம்பிக்கும் கவிதை முழுவதும் அற்புதமான வரிகள் .

சிறு குடிசை வீடிருந்து 

 அரசியாகும் கனவு தேடினேன் என்ற வரிகளை எனக்கான வரிகளாகப் பார்க்கிறேன் ….

……………..

துரோகங்களால் மறுபடி மறுபடி வீழ்கையில்

அன்பின் சிறகுலர்த்தி நம்பிக்கையாதல் 

எப்படிச் சாத்தியமாகிறதென்  அன்பே 

உனக்கு என்கிறேன் 

ஒற்றைச் சொல்லில் 

உயிராழம் தொடுகிறாய் 

"காதல்"

……………………………..

எதை அழித்தாலும் நிறம் 

திரியா தழல் நான் ...

……………………………….

பணி மீளும் தாதியொருத்தி விடை பெறுகையில் நோயாளிக்குப் 

பரிசளிக்கிற அன்றைய இரவை வெல்லும் 

நம்பிக்கையூட்டும் புன்னகையாக ... 

எனத் தொடங்கும் கவிதை அவ்வளவு நம்பிக்கையான கவிதை ….

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் .

அழகான அட்டைப்படம் அதைவிட அழகான தலைப்பு இவற்றை விட அழகான கவிதைகள் .

உமா

இனி விதைகளே பேராயுதம் 

கோ .நம்மாழ்வார். 

குக்கூ காட்டுப்பள்ளியால் வெளியிடப்பட்டிருக்கும் இப்புத்தகம் 2012 இல் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது .

ஆசிரியரின் பயணத்தடங்கள் , வாழ்வாதாரம் சிதைத்த பச்சைப் புரட்சி , கேடு செய்யும் வணிக முறை உழவாண்மை ,நவீன வேளாண்மை ஒரு வணிகம் அறிவியல் அல்ல , விஞ்ஞானிகள் தடம் மாறினார்கள் , இயற்கையும் உழவாண்மையும் , அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் , சில விளக்கங்கள் , இனி விதைகளே பேராயுதம் , முடிவுரை என்ற 10 தலைப்புகளில் நம்மாழ்வாரின் உரைகள் நம்முடன்  உரையாடல்களாக நீள்கின்றன. 

இப்புத்தகம் வெளிவந்து ஏறத்தாழ 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் , நம்மைச் சுற்றி நூற்றுக் கணக்கான இளைஞர்கள் நடைமுறையில் விதைகளை ஆயுதமாக்கி வருவதைக் காண்கிறோம் என்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இயற்கைக்கு விரோதமானவைகளே 

இன்று நம் நிலத்தை ஆள்கின்றன. 

எமது வானத்தின் கூக்குரலைக் கூட

கேட்க முடியாதவாறு

பசித்தவர்களின் அழுகையை 

விநோத பிணிகளின் விசும்பலை 

செத்துக் கொண்டிருக்கும் பூமியின் குரலை 

கேட்க முடியாதவாறு செவிடுகளாக

இரத்தம் பீறிடக் காயம் பட்ட யூ மி 

பாலை நிலங்களை பிரசவிக்கிறது

நாம் இயற்கைக்கு விரோதமான காலத்தில் வாழ்கிறோம். 

மறுபடியும் இதை நாம் இயற்கையானதாக்க வேண்டும் 

நமது பாடல்களின் மூலம் 

நமது அறிவார்ந்த சீற்றத்தின் மூலம் ....

என்ற சூழலியலாளர் கென் ஸரோ விவா வின் வார்த்தைகளைக் கொடுத்துள்ளது புத்தகம் . இங்கு நாம் அனைவரும் இதை  உள்வாங்க வேண்டும் என எண்ணுகிறேன். 

இந்தப் புத்தகம் வேளாண் தொழில் நுட்பத்தை விளக்கும் தொகுப்பல்ல , மாறாக மண்ணோடு அன்பை விதைத்தெடுக்கும் வாழ்வியலைத் தரும் பக்கங்களையே உள்ளடக்கியதாக இருப்பதால் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் , அதற்கு முதலில் இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும் .

நம்மாழ்வாரின் அனுபவங்கள்  முதல் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது . ஆய்வுப் பண்ணை அனுபவங்கள் வழியாக , ஆய்வுகள் எதுவும்  உழவர்களுக்குப் பயனளிக்கவில்லை என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார் - அதில் ஒரு வரி ... தேவையான அறிவுரைகள் டெல்லியிலிருந்து தான் வந்தன .இங்குள்ள நம்ம ஊர்  விவசாயிகளுக்கு எந்தவிதத்திலும் அது பயன்படவில்லை என்கிறார். அதை தற்போதைய தேசியக் கல்விக் கொள்கை 2020க்குப் பொருத்திப் பார்க்கலாம். டெல்லியில் தயாரித்த கொள்கையால் நம்ம ஊர்க் குழந்தைகளுக்கு எந்த நல்லதும் நடக்கப் போவதில்லை என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிகிறது. அரசுப் பணியைத் துறந்து இவரது அனுபவம் நிலம் நோக்கி பண்ணைகள் , காடுகள் உற்பத்தி , உழவு , பல மாவட்டங்களைச் சென்றடைந்து உழவர்களுடன் வாழ்க்கை என விரிகிறது. 

தஞ்சை , புதுக்கோட்டை மாவட்டங்களில் மேய்ச்சல்  தரிசு நிலங்களைக் காடாக்கிய திட்டம் செயல்பட்டது பற்றி அறிந்து கொள்ள முடிகிறது புதுச்சேரியில் இருந்த உழவு - மனிதன் - சூழல் என்ற அமைப்புடன் இணைந்து செய்த பலவற்றையும் அறிய முடிகிறது.  கொழுஞ் சி ஆராய்ச்சிப் பண்ணை உருவான விதம் குறித்தும் , தமிழ்நாடு முழுவதும் இயற்கை உழவர் ண்மையில் ஆர்வமுடைய தனி நபர்களையும் தொண்டு நிறுவனங்களையும் இணைத்து லீஸா என்ற வலைப் பின்னல் உருவானதையும் புரிந்து கொள்ள முடிகிறது. இறுதியாக 2009 இல் கரூர் மாவட்டத்தில் உருவான  நம்மாழ்வாரின் உயிர்ச் சூழிய நிறுவனம் , வானகம் உருவாவை குறித்தும் புரிந்து கொள்ள முடிகிறது. 

நாம் பாடப்புத்தகத்தில் படிக்கும் பசுமைப் புரட்சியின் முகத்திற்கும் இங்கு அறிந்து கொண்ட பசுமைப் புரட்சிக்கும் உள்ள நீண்ட இடைவெளியைப் புரிந்து கொள்வதோடு எத்தனைத் தவறாகக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறோம் பல ஆண்டுகளாக என்ற வேதனையும் நம்மை வதைக்கிறது. 10% உழவர்கள் மட்டுமே பயனடைந்த ஒரு திட்டத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு இணைத்து பெருமை பேசி மார்தட்டிக் கொள்ளும் ஒரு அரசியல் அவலத்தைத் தோலுரிக்கிறது இந்தப் புத்தகம் . 

உழவிலும் உணவிலும் பன்மயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதும் ஆறாயிரம் ஆண்டு கால வளர்ச்சி  கடந்த ஐம்பது ஆண்டுகளில் பின்னோக்கித் தள்ளப் பட்டுள்ள அநீதிமுறைகள் , ஏமாற்று வேலைகள் உட்பட அனைத்தும் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது  .

பொன்னு விளையற பூமி என நமது விவசாயிகள் தங்கள் நிலங்களைப் பற்றிக் கூறுவதன் அர்த்தம் புரிகிறது. விவசாயம் ,உழவு , உழவாண்மை , கால்நடைகள் இவற்றின் தொடர்பையும்  நமது நாட்டின் அடிப்படைப் பெயரான இந்தியா ஒரு விவசாய நாடு என்பதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. 

சுற்றுச் சூழல் குறித்த புரிதல்களை , உணவுப் பயிர்கள் , விளைச்சல் , நிலத்தின் தன்மை ,உரமிடுதல் , உணவுச் சங்கிலி என இவற்றின் வரிசையில் புரிந்து கொள்ளக் கூடிய பகுதிகள் நம்மை ஏராளமாக சிந்திக்க வைக்கின்றன. கல்வி அரசியல் என்று கூறிக்கொண்டு பதட்டப்படும் நமக்கு விவசாய அழிவு அரசியலை கல்விக்குள் நேர்மறையாகக் கொண்டு வந்துள்ள விபரீதங்கள் புரிகின்றன. 

உரத்திற்கும் எருவிற்கும் வேறுபாடு தெரியாத மாணவரைத்தான் பாடப் புத்தகங்கள் உருவாக்கி வருகின்றன .அறிவியல் பாடத்தில் நாம் படிக்கும் காற்றில் 78% நைட்ரஜன் என்பது உண்மை என்றால் நைட்ஜனை உப்பு உரமாக ஏன் மண்ணிற்குப் போட வேண்டும் என்ற கேள்வியைக் கேட்கும் மாணவர்களை நாம் உருவாக்கவில்லையே .

யாரோ சொன்னதைக் கிளிப்பிள்ளை மாதிரி இங்கு சொல்லி , மக்களை நம்ப வைத்ததன் விளைவு பெரும் சீரழிவைத் தந்து வருவதை நாம் எப்போது உணரப் போகிறோம்  ?

உயிரினப் பன்மை குறித்து இன்று உலகம் முழுவதும் பேசப்பட்டாலும் இங்கு அது அழிக்கப்படுகிறது என்பதே உண்மை . 2000 ஆண்டுகளுக்கு முன்பு 2000 வகை உணவுப் பொருட்களை உண்டு வந்த மக்கள் இன்று 20 வகை உணவுகளை மட்டுமே உண்பதன் காரணம் என்ன ?உயிரினப் பன்மை அழிக்கப்பட்டது தானே. 

குள்ள ரகப் பயிர் வெள்ளத்தில் மூழ்கிப் போகிறதே.. ஏன்?எப்போதெல்லாம் ஒட்டு ரக விதைகள்  பயன்படுத்தப்பட்டனவோ அப்போதெல்லாம் ரசாயன உரம் அதிகமாக விற்பனையாகியுள்ளது. பூச்சிக் கொல்லிகளும் அதிகம் விற்பனையாகியுள்ளது. விதை - உரம் - பூச்சிக்கொல்லி மூன்றுக்கும் ஒரு தொடர்பை வளர்த்து வாணிக அரசியல் நடப்பதை உணர முடிகிறது. 

மரபு முறை உழவர்களின் அனுபவங்கள் புறந்தள்ளப்பட்டு வீரிய விதைகளை மட்டும்  திணித்ததன் விளைவு தான் வெள்ளம் , பஞ்சம் எல்லாமும் . பருவக்கால மழை மாறிவிட்டது , பருவ நிலை மாற்றத்தால் சுற்றுச் சூழல் கெட்டுவிட்டது. அதற்கு ஒவ்வாத பயிரிடல் முறைகளைக் கைக் கொள்வதன் விளைவு தான் தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகங்களில் நாம் காணும் வெள்ளத்தில் பயிர் மூழ்கி லட்சக்  கணக்கான ரூபாய் விவசாயிகளுக்கு நட்டம் என்பது. 

உணவுச் சங்கிலியில் கால்நடை கழற்றி விடப்பட்டு சிதைத்த டிராக்டர் கதைகள் விவசாயிகளின் சோக வரலாறைத் தாங்கி வலம் வருகின்றன. இந்திய உழவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நம்மிடம் எதுவுமில்லை என 1885 இல் இங்கிலாந்திலிருந்து வந்த உழவியல் நிபுணர் கடிதம் எழுதினாராம் .12 மாதங்கள் இந்தியாவைச் சுற்றி வந்த பின்பு அவர் இப்படி எழுதியதை வரலாறு பதிவு செய்கிறது. 

வியாபாரிகள் லாபம் ஈட்டவே பச்சைப் புரட்சி வந்துள்ளது .இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த காலத்தில் வெடி உப்பு தொழிற்சாலைகள் எல்லாம் உர உற்பத்தியில் ஈடுபட்டன , வெடி உப்பு வியாபாரிகளின் லாபத்திற்காக புகுத்தப்பட்ட உத்திதான் இந்தப் பசுமைப் என்ற பச்சைப் புரட்சி என்பது நம்மை திடுக்கிட வைக்கிறது. 

நவீன பண்ணை முறை விவசாய நிலத்துடன் சேர்ந்து சுற்றுச் சூழலையும் நாசமாக்கி வருவதை ஒவ்வொரு பக்கமும் நமக்கு பளிச் பளிச் என்று விளக்குகிறது .. விவசாயம் என்பது நமது  வாழ்க்கை முறை , ஆனால் அதை தொழில் முறையாக மாற்றி அமைத்து எல்லா வளங்களையும் இழக்க வைத்திருக்கின்றது இந்த வணிக முறை உழவாண்மை . ஒரு ரூபாய் போட்டால் ஒன்றே கால் ரூபாய் கிடைக்க வேண்டும் என்று தான் பசுமைப் புரட்சியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர் ..

உணவுச் சங்கிலியைச் சிதைக்கும் இரசாயனமும் மண்ணின் உயிரோட்டத்தைச் சிதைக்கும் பாடங்கள் தான் கல்லூரிப் பாடங்களாக இருந்து வருகின்றன . விஞ்ஞானிகள் விவசாயிகளுக்குத் தவறான திசையைக் காண்பித்த வரலாறுகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

மசானோபு ஃபுகோகோ ஆய்வு செய்த Uயிர் முறைகள் குறித்து விளக்கம் தரும் பகுதிகள் விவசாயத்தைப் புரிய வைக்கின்றன. உணவுச் சங்கிலிக்கு உயிரூட்டும் நமது ஊர் விவசாயிகளின் உழவாண்மையும் , இயற்கையும் இடத்திற்கேற்ற பயிரிடுதல் முறைகளும் எவ்வாறு நிலத்தை வளமாக்கி விடுவதைப் புரிந்து கொள்ள இயலுகிறது .

உயிர் இயங்கியலைப் புரிந்து வியக்க முடிகிறது. 

ஒரு விடுகதை ..

அடி காட்டி வே

நடு மாட்டிலே 

நுனி வீட்டிலே …. நமது அன்றாட விவசாய முறையை மிக எளிதாகப் புரிய வைக்கும் விடுகதை இது. 

நாம் சிறுவயதில் பீக் காடுகளில்  வண்டுகள் கூட்டத்தைப் பார்த்திருப்போம் .மண்னைக் கிளறி மண் துகள்களைக் காற்றினால் சுவாசிக்க வைக்கும் வல்லமை அந்த வண்டுகளுக்கு  இருப்பதை நினைவு படுத்திப் பார்க்கலாம் .இன்று வீட்டுக்குள்ளேயே கழிப்பறை வந்தது. பீக்காடுகள் மறைந்தன . வண்டினமும் அற்றுப் போய்விட்டது. 

அப்போதெல்லாம் மழைக் காலங்களில் மண்புழுவும் பூச்சி , வண்டுகள் என மண்ணைக் கிளறி கிளறி உயிர்ப்பூட்டும் . இப்போது உங்களைப் போட்டு போட்டு மண்ணின் நுண் உயிர்களை சாகடித்து செத்த மண்ணாக்கி விட்டோம் . கொழிஞ்சி செடிய  நெல்லங்காட்டுக்கு எருவாப் போடுவதையும் பார்த்திருப்போம் . கொழிஞ்சிக்கு மாற்றாக உப்பு உரம் போட்டு நெல் வயலை மலடாக்கிய காலம் தான் உணவுச் சத்துப் பற்றாக்குறையால் பல நோய்களுக்கான காலமாக மாறியுள்ளது. 

எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வர நமக்கான உணவை நாமே விளைவிக்க , நமது ஆதியைப் புரிந்து கொள்ளவே இந்தப் புத்தகம் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஒன்றுமில்லாத நிலத்தை எப்படி விளைச்சல் பூமியாக மாற்றுவது என்பதை செயல்முறையில் வெற்றி பெற்ற விவசாய மனிதர்கள் வழியே விளக்குகிறார் நம்மாழ்வர். மாணவர்களிடத்தில்  பள்ளி வயதில் இவற்றை விதைக்க வேண்டும் .எத்தனையோ பள்ளிகளில் காய்கறித் தோட்டம் , மூலிகைத் தோட்டம் , அடர்வனம் என விவசாயப் பணிகளைப் பயிற்சியாக மேற்கொள்கின்றனர். இதை ஒரு பயிற்சியாக அறிமுகப்படுத்த , நம்பிக்கையைத்  தர , வழிகாட்ட ,சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க இந்தப் புத்தகம் உதவும் . சூழலையும் இயற்கையையும் மீட்டெடுத்து மனிதன் ஆரோக்கியமாக வாழ இப்புத்தகத்தை வாசிப்பது ஒரு வழி முறையாகும் .

சு. உமாமகேஸ்வரி 

ஆசிரியர் 

பருவநிலை மாற்றம் 


உலகெங்கிலும் பருவநிலை மாறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

கோடையில் வெயில் வழக்கத்தை விடக் கடுமையாக இருக்கிறது. புயல்கள் அதிகரித்திருக்கின்றன. சில இடங்களில் அளவுக்கு மீறி மழை பொழிகிறது. அல்லது வறட்சி தலை காட்டுகிறது. இவையெல்லாம் ஏன் நிகழ்கின்றன என்பதை இந்த நூல் நமக்குத் தெளிவாக விளக்குகிறது.

நூலாசிரியர் :

அறிவியல் எழுத்தாளர் என்ற வகையில் தேசிய விருது பெற்றவரான என். ராமதுரை , கடந்த 30 ஆண்டுகளாகப் பத்திரிகைகளிலும் வார , மாத இதழ்களிலும் எண்ணற்ற அறிவியல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தொலைக்காட்சி, அகில இந்திய வானொலி ஆகியவற்றில் அளித்த பேட்டிகள் மூலம் நன்கு அறியப்பட்டவர். இவருடைய நூல்கள் விண்வெளி , அணுசக்தி , சூரிய மண்டலம் எனப் பல தலைப்புகளில் வெளியாகியிருக்கின்றன. 

என்.ராமதுரை எழுதிய நூல்களில் ஒன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் விருது பெற்றுள்ளது. இன்னொரு நூல் தமிழக அரசின் விருது பெற்றுள்ளது.

அட்டைப் படமே நம்முடன் மிக அழகாகப் பேசுகிறது . பூமியின் மீது மரத்தை வெட்டி தொழிற்சாலைகள் உருவாக்கமே,  புகையின் வழியே கரியமில வாயு தான் இந்த பருவ நிலை மாற்றத்தின் அடிப்படைக் காரணம் என்பதை முகப்பு ஓவியத்தின் வழியே நமக்குப் பதிவு செய்துள்ளார் சி.பி. கிருஷ்ணப்பிரியா . 

க்ரியா பதிப்பக வெளியீடான இப்புத்தகம் 2016 இல் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது - 

இருபது கட்டுரைகளின் வழியே எளிமையாக அறிவியல் விளக்கங்களுடன்  வரலாற்றுத் தரவுகளுடன் புவியின் பரிதாப நிலையைத் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர் .

பருவ நிலை மாறும் போது நோய்கள் அதிகரிக்கும் , எதிர்காலத்தில் இப்படியான நிலைமைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என நிபுணர்கள் அன்றே கூறியதை நாம் இன்றைய கோவிட் - 19 பாதிப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் .சரி செய்ய முடியாத அளவிற்கு காற்றில் கரியமிலவாயு அதிகரித்து தான் பூமியின் சராசரி வெப்பம் அதிகரித்துள்ளது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் ராமதுரை .

இவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளாக காற்றாலைகள் , சூரிய மின் பலகைகளைக் கூறினாலும் இயல்பில் மாற்றங்கள் முழுமையாக வரவில்லை என்பதை நாம் நன்கு உணர்வோம் ..

2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச உடன்படிக்கையில் புதைபடிவ எரிபொருட்களைக் கைவிடுவதில் ,உலகில் யார் எந்த அளவுக்குப் பங்களிப்பது என்பதில் சிக்கல் வந்தது .முன்னேறிய நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையே இயல்பாகக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பணக்கார நாடுகள் கட்டாய அடிப்படையில் அதிகப் பங்களிக்க வேண்டும் என்று கூறும் உடன்பாட்டை அமல்படுத்த முயன்ற போது தோல்வி கண்டுள்ளது. இறுதியில் கரியமிலவாயு வெளிப்பாட்டை எந்த அளவுக்குக் குறைத்துக் கொள்வது என்பது அந்தந்த நாடுகளின் விருப்பத்துக்கு விடப்பட்டதால் பல வருடங்கள் கழித்து இன்றும் மாற்றம் வரவில்லை என்பது கண்கூடு .

இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போது நமக்கு உண்மையாகவே இந்த பருவநிலை மாற்றங்கள் எப்படியான விளைவுகளை எந்தெந்த பகுதிகளில் உருவாக்குகின்றன என்பதைப்  புரிந்து கொள்ள முடிகின்றது. 

கிரிபாட்டி என்கிற தீவு நாடு   பசிபிக் கடலில் இருக்கக்கூடியது . இந்த நாட்டின்  பிரச்சனை என்ன ?அங்கு 33 தீவுகள் இருக்கின்றன கடல் மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. இது ஏன் உயர்ந்து வருகிறது ?  இந்த பருவ நிலை மாற்றத்தினால் பூமியின் வெப்பநிலை உயர்ந்து வருவதனால் என்ன விளைவுகள் என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது இந்நூல்  . 

மாலத்தீவுக்கு என்ன விளைவு ஏற்படும் உலகத்தில் உள்ள கடல் பகுதியில் வாழக்கூடிய அனைத்து கண்டங்களிலும் இருக்கக்கூடிய நகரங்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படும் என அறிய வைக்கும் கட்டுரை . இதற்கு ஒரு முன்னேற்பாடாக கிரிபாட்டி தீவுகளில் அரசு என்ன மாதிரியான முயற்சிகள் எடுத்துள்ளது ,  உலகத்துக்கே ஒரு எடுத்துக்காட்டாக வெளியில நிலம் வாங்கிப் போட்டு இருப்பது என பல தகவல்களைத் தருகிறது.நாடுகளின் பருவநிலை விபரீதமானால் அந்த நாடுகளின் மொத்த வருமானமே பாதிக்கப்படும் என்பதையும் அறிய முடிகிறது. 

நமது புவியியல் , அறிவியல் பாடங்களில் படிக்கும் செய்திகளை யதார்த்தமாக்குகிறது. பூமியின் சராசரி வெப்பநிலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது , காற்றின் வெப்பநிலை அளக்கப்படுதல் எனத் தெளிவு படுத்தும் விதமாக மிக எளிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

20 கட்டுரைகளின் தலைப்புகள் ..

பூமிக்கு ஜுரம் கண்டுள்ளதா ? , மிரட்டும் கடல் , மூழ்கும் தீவுகள் , பூமிக்கு ஆயிரம் வெப்பமானிகள் , வானிலை வேறு ; பருவநிலை வேறு , கோடையில் வாட்டிய குளிர் , ஸ்வீடன் விஞ்ஞானிக்கு ஏற்பட்ட கவலை , கரியமிலவாயு நச்சு வாயுவா ? அதென்ன பசுமைக் குடில் ? நிலக்கரியின் ஆக்கிரமிப்பு , எண்ணெயால் வந்த வினை , கீலிங் கிழித்த கோடு , டொராண்டோ முதல் கிரியோட்டா வரை , அமெரிக்காவில் எதிர்ப்பு இயக்கம் , இந்தியா எப்படிப் பாதிக்கப்படும் ? சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் , காற்றின் மூலம் மின்சாரம் , அணுசக்தி ஒரு தீர்வாக இருக்க முடியுமா ? பூமி மீது கைவைக்க விசித்திரத் திட்டங்கள், பாரிஸில் ஒரு புரட்சி , நாம் என்ன செய்ய முடியும் ? 

ஆகிய அனைத்து கட்டுரைகளிலும் பருவநிலை மாற்றம் குறித்தான உண்மை நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

பருவ நிலை மாற்றத்திற்கான காரணிகள் , உலக நாடுகள் அனைத்திற்குமான பங்கு என்ன என்பது மிகத் தெளிவாகக் கொடுக்கப் பட்டுள்ளது.  தனி நபரது கரியமில வாயு பயன்பாடு நாட்டிற்கு நாடு எவ்வகையில் வேறுபடுகிறது ? ஏன் வேறுபடுகிறது என்பதையும் சரியான தரவுகளுடன் முன் வைக்கிறார் ஆசிரியர் . 

மழை பொய்த்துப் போயிற்று , விவசாயம் செழிக்க வில்லை , உணவுப் பஞ்சம் , வெள்ளப் பிரச்சனை , சுனாமியின் தாக்கம் , நில நடுக்கம் , தனி மனித பொருளாதாரப் பிரச்சனை , நாட்டின் பண வீக்கம் என அனைத்து வகையான பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இந்தப் பருவநிலை மாற்றம் இருப்பதை உணர முடிகிறது . செர்னோபில் கதிரியக்க விபத்துக்கும் ஃபுகுஷிமா மக்களின் பரிதாபத்திற்கும் பருவ நிலை மாற்றத்தின் ஆதிக்கம் என்ன என்பதை மிக கவனமாக விளக்குகிறது இந்யில் . சுமார் 300 வருடங்களாக பருவநிலையில் எவையெல்லாம் மாறுபாடடைந்து இன்றுள்ள பூமி துன்பப்படுகிறது என்பதை விளக்க வரைபடங்கள் வழியாகத் தெளிவாக்குகிறது நூல். 

கண்டங்கள் , கடல்கள் , பனிப் பிரதேசங்கள் , எரிமலை வெடிப்புகள் உலகளவில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருவதும் விளைவுகளும் கண் முன்னே காட்டுகிறது நூல். மனிதர்களால் அவர்களின் தேவைகளைக் குறைத்துக் கொள்ளாததால் இயற்கையின் தோற்றம் எப்படியெல்லாம்  சீர்குலைந்து மனிதனுக்கே ஆபத்தாக உருவெடுத்துள்ளது என்பதைப் பதிவு செய்வதோடு இவற்றிலிருந்து மீள்வதற்கான வழிகளையும் பல நாடுகள் எடுத்து வரும் முயற்சியையும் படம் பிடித்துக் காட்டுகிறது. வல்லரசு நாடுகள் இங்கேயும் தங்கள் அதிகாரத்தை கோலோச்சுகின்றன என்பதையும் சமகால அரசியல் சூழலுடன் கட்டுரைகள் உரையாடுகின்றன. 

எளிமையான அறிவியல் பூர்வமான விளக்கங்கள் வழியே பருவநிலை மாற்றம் எவ்வளவு ஆபத்துகளைத் தந்து வருகிறது என்பதை நமக்கு விரிவாக விளக்கும் என். ராமதுரை அவர்களது எழுத்து நடையும் நமக்கு எளிதாக வசப்படுகிறது. 

// இந்த புத்தகத்தின் விபரீதங்களை இங்கு பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.//நீக்கி விட்டால் நல்லது. /இது சம்பந்தமாகப் புரிதலை தரும் புதக்கம் என்று சொல்லலாம்/ என்பது போல வரியைச் சேர்த்து மீண்டும் பதிவிட முடியுமா!

பள்ளிகளில் அறிவியல் , புவியியல் பாடங்களில் இக்கட்டுரைகளை இணைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வையும் சூழல் சார்ந்த அறிவையும் தரலாம். பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் . 

சு .உமாமகேஸ்வரி 

ஆசிரியர்