Wednesday 13 April 2022

என் பெயர் ரங்கநாயகி"


ஒலி வடிவில், நான் கேட்ட முதல் நூல் இது. ஆசிரியர் இந்திரா செளந்தர்ராஜன் . பரவலாக மக்களிடையே மிகவும் அறியப்பட்ட எழுத்தாளர். 

 "என் பெயர் ரங்கநாயகி" எனும்  இந்த நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறது.

 என்  பெயர் ரங்கநாயகி என்கின்ற இந்த நூலை , சாதாரண ஒரு நாவல்  என்று தான் படிக்க ஆரம்பித்தேன் அதாவது கேட்க ஆரம்பித்தேன் .ஆனால் கதை நகர நகர  முக்கியமான புத்தகமாக ,  இதில் வரக்கூடிய ஒவ்வொரு கதாபாத்திரமும் , குறிப்பாகப் பெண் கதாபாத்திரங்கள் மிகவும் அழுத்தம் திருத்தமாக படைக்கப்பட்டதாகவும்  ஆழமாக அவர்கள்  பங்காற்றியதாகவும் தோன்றியது.

 பெண்கள் காலம் காலமாக எந்தெந்த வழிகளிலெல்லாம் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள் என்றும் சமூகத்தில், திருமணம் என்பதற்கான அடையாளம் என்ன , பெண்கள் எவ்வாறெல்லாம்  திருமணம் என்ற பெயரில் 
ஆண்களால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் மையமாக வைத்து கதை எழுதப்பட்டுள்ளது. 

  பெண்களின் பிரச்சனைகள் குறித்து,  அவள் தோன்றிய பொழுதிலிருந்து இன்று வரை ஏராளமான வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட்டும்  ஆவணப்படுத்தப் படாமலும்  இருக்கின்றன . ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் , தன்னைச் சுற்றி வாழக்கூடிய அக்கா, தங்கை ,, அத்தை, சித்தி, பாட்டி ,  தோழி. என்று ஒவ்வொரு வகையான உறவுப் பெண்களுக்குள்ளும் இதே போன்ற பாதிப்புகளைத் தொடர்ந்து கண்டு வருவது தான் சமூகத்தின்  கள எதார்த்தம். 

  இந்த சமூகம் பெண்களின் மீது வைத்திருக்கக்கூடிய கற்பிதங்களை ஒருபக்கம்  சுட்டிக்காட்டி அவற்றை எப்படி எல்லாம் உடைப்பது என்பதையும் இந்த நூல் கதாபாத்திரங்களின் வழியே தொடர்ந்து
பேசுகிறது. 

 அக்ரஹாரத்துப் பெண்களை மையமாக வைத்து,  அவர்கள் இப்படித்தான்   இருப்பார்கள் என்றும்  பெண் என்பவள் பொதுவாகவே காதல் வசப்படுகிறவள் , அவளது கணவன் பிரச்சனைக்குரியவன் என்றால் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பொதுவாக மக்களிடையே நிலவக்கூடிய பல்வேறு நடைமுறைகளை கற்பனைகளை மக்களின் மனப் போக்குகளை அங்கங்கே உடைத்து இல்லை பெண்கள் என்றால் இப்படியும் இருக்கலாம் ஆனால் பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எழுதப்படவில்லை 

 திருமணத்திற்கு இது அர்த்தமல்ல சமூகத்தில் நிலவுகின்ற ஒவ்வொன்றுக்கும்  பயப்பட்டு அர்த்தப்படுத்திக் கொண்டு அதன் போக்கில் நாம் போக வேண்டியது அவசியம் இல்லை என்றெல்லாம் கதையின் மைய நாயகியான ரங்கநாயகியின் வழியாக பெண்களுக்கு நிறைய சொல்கிறது இந்த நாவல் .

அம்முனி அம்மா வயதான பெண்மணி என்றாலும் ஐயர் வீட்டு பெண்மணி என்றாலும் அவரது வெண் உடையையும் மொட்டை அடித்துள்ள உருவத்தையும் வைத்து பிற்போக்குத்தனமாக இருப்பார் என நினைக்கும் வாசகர்களின் மனச் சித்திரத்தை அவரது உரையாடல்களால் உடைக்கிறது இந்த கதை .

அம்முனி அம்மாளின் முற்போக்கு சிந்தனை பெண்கள் குறித்து அவருக்கு இருக்கக்கூடிய எதிர்பார்ப்பு, குறித்து கவனிக்கும் போது ,சாதாரணமாக  , வயதான பெண்மணியிடம் இருக்கக்கூடிய மனப்போக்கு அல்லாமல் எவ்வாறெல்லாம் மாற்றி யோசிக்கிறார் என்று ரங்கநாயகி மீது அம்முனியம்மாள் வைத்திருக்கக்கூடிய அக்கறையின் வழியாக இந்த நாவல் பல செய்திகளை நமக்கு சொல்கிறது

 அக்ரஹாரம் முதல் பம்பாய் வரை கதாபாத்திரங்களின் வழியாக கதைக் களத்தை   வளர்த்துவிட்டு  எதிர்பார்க்காத திருப்பங்களைத் தருகிறார் கதாசிரியர் .

 ஸ்ரீகாந்தின் கதாபாத்திரமும் நமக்கு பரந்து பட்ட செய்தியைக் கொடுத்து , சமூகத்தில் ஒரு குழந்தை வளரும் போது , சூழலும்  மனிதர்களும் அக்குழந்தையின் மனப்பான்மைகளில் எவ்வாறு உளவியல் ரீதியாக மாற்றங்கள் அடையக் காரணமாக அமைந்து விடுகின்றனர் என்பதை  நாவல் ஸ்ரீகாந்த்தின் நடத்தைகளின் வழியே 
சுட்டிக் காட்டுகிறது. 

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் வரப் போராடிய நமது முத்துலட்சுமி அம்மையாரை நினைவுபடுத்துகிறார்   ரங்கநாயகி .ஆம் பம்பாயில்  ஆயிரக்கணக்கான பெண்களை வைத்து ,பாலியல் தொழில் நடத்தும் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தின் தாயான பாண்டாவை , தனது முயற்சியால் எப்படி மாற்றுகிறார்  என்பதும் , அதன் விளைவாக அத்தொழிலை விட்டு விடுதலை அடையும் பெண்களும்    அவர்களுக்கு பொருளாதார விடுதலையை சமூகத்தில் ஏற்படுத்திக் கொடுக்கும் ரங்கநாயகி கதாபாத்திரம் நம்மை நெகிழ வைக்கிறது. 

இன்றும்  கூட நாம் செய்திகளில் பார்க்கக்கூடிய பெண் குழந்தைகளின் மீதான பாலியல் அத்துமீறல் பலதாரமணம் ஏமாற்றுவேலை இணையங்களில் பெண்களுக்கான அச்சுறுத்தல்களை தருதல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் சில பத்தாண்டுகளுக்கு முன்பும் வேறு வடிவில் இங்கு இருந்துள்ளது, இன்று இருக்கக்கூடிய பிரச்சனைகளை  இந்த நாவலில் இருக்கக்கூடிய நிகழ்வுகளோடு நம்மால் மிகச்சரியாக  பொருத்திப் பார்க்க  முடிகிறது என்றால் காலம் மாறினாலும் நூற்றாண்டுகள் மாறினாலும் பெண்களுக்கான பிரச்சினைகள் குறையாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன  என்பதற்கு இந்த படைப்பு  ஒரு உதாரணம்.

அதே சமயம் அப்பிரச்சனைகளால் முடங்கிப் போகக் கூடாது என்பதைக் கூறுவதற்கும் இந்நாவலை மிகச் சிறந்த உதாரணமாகப் பார்க்கலாம். 

கதையின்  போக்கிலேயே பெண்களுக்கான பிரச்சனைகளை மிக அழகாக வடிவமைத்து இருக்கிறார் நூல் ஆசிரியர் குடும்பத்தில் இருக்கக்கூடிய வாழ்வாதார பிரச்சனை முதல் அவர்களுக்கான மானப் பிரச்சனை காமம் குறித்த பிரச்சனை திருமணம் குறித்த பிரச்சனை ஏன் அவர்கள் இந்த சமூகத்தில் வேசி என்று தங்களை மாற்றிக் கொள்கின்றனர் என்பதற்கான காரணங்கள்   திருநங்கைகளுக்கான ஒரு பகுதி அவர்களின் முக்கியத்துவம் உளவியல் சார்ந்து எவ்வாறு மனிதர்களை அணுகுவது பிரச்சனைக்குரிய ஆண்களை மனைவி என்ற இடத்தில் இருக்கக்கூடிய பெண் எவ்வாறு அணுக வேண்டும் என்றெல்லாம் ஏராளமான விஷயங்களை இந்த புத்தகம் கோடிட்டுக் காட்டுகிறது .

 எல்லாவற்றையும் தாண்டி பெண்கள் வாழ்வதற்காக தான் பிறந்திருக்கிறோம் என்ற கருத்தை சில பெண்கள் இறந்து விட்டதன் கதை கூறியும்  ரங்கநாயகியின் வழியாகவும் அறிந்து கொள்ள , இந்தக் கதை துணை செய்கிறது ஒரு ஆணால் ஏமாற்றப் பட்டாலோ அல்லது தவறு நிகழ்ந்தாலும் , தான் தான் அதற்கு காரணம் என்றும் தான் இந்த சமூகத்தில் வாழத் தகுதியற்ற ஒரு நபர் என்றும் பெண்கள் முடிவு செய்து தற்கொலை செய்துகொள்வது இன்றும் நடக்கிறது அவற்றையெல்லாம் செய்யக்கூடாது தவறு என்ற அறிவுரை சொல்லாமல் நிகழ்வுகளின் வழியாக கதைகளின் வழியாக கதாபாத்திரங்களின் வழியாக பெண்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது இந்த நூல்.

தமிழ் எழுத்துலகில் என் பெயர் ரங்கநாயகி என்ற இந்த படைப்பை மிக முக்கியமானதாகப் பார்க்கலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

குரல் வடிவில் தந்தவர் ஒவ்வொரு கதாபாத்தித்திற்கும் குரலை மாற்றி நம்மை கதையோடு ஒன்றிவிட வைப்பது ஆச்சர்யம். 
வித்யாசமான அனுபவமும் கூட

அனைவருக்கும் சர்வதேச பெண்கள் தின நல்வாழ்த்துகள் 









Saturday 9 April 2022

பூப்பு -மாதவிடாய் சந்தேகங்களும் விளக்கங்களும்


 பூப்பு -மாதவிடாய் சந்தேகங்களும் விளக்கங்களும் 

பதிப்பகம் : வாலறிவன்
விலை = ரூ 50
பக்கங்கள் : 48
ஆசிரியர் : ரேணுகாதேவி 

இதை ஒரு  விழிப்புணர்வு நூலாகப் பார்க்க முடிகிறது . இந்த உலகம் சரிபாதி பெண்களால் ஆனது எல்லா பெண்களுமே எப்போதும் பலவழிகளில் ஒடுக்கப்படுகிறார்கள்.
தொடர்ந்து எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு பல கோணங்களிலிருந்து பிரச்சனைகள்    உருவாகிக்கொண்டே
இருப்பதனை நாம் காலம் காலமாக வரலாற்றைப் படித்தாலும்  அறிந்துகொள்ளலாம் . நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தை கவனித்தாலும் புரிந்து கொள்ளலாம். 

எல்லாவற்றிலிருந்தும் மீண்டு விடுபட்டு
மீண்டும் பாதிக்கப்பட்டு   விடுபட்டு
வளர்ந்து கொண்டே இருக்கின்றனர் பெண்கள் . .அப்படிப்பட்ட பெண்களுக்கு உடல் ரீதியாக இயற்கையாகவே அமையப் பெற்றது தான் இந்த மாதவிடாய் என்ற செயல். ஆனால் அது பெரும்பாலான பெண்களுக்கு வலியாகவும் வேதனையாகவும் சொல்ல முடியாத பிரச்சினைகளைத் தருவதாகவும்  தொடர்கிறது .அது போலான நேரங்களில் பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உடல் நலத்துடனும் தங்களை கவனித்து பாதுகாத்துக்   கொள்ள வேண்டும் என்று விரிவாகப் பேசுகிறது இந்த நூல் .

பதின்பருவ குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை பெண்கள் வாசித்து தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் உள்ளன. ஆண்களும் வாசித்து தங்கள் வீட்டுக்  குழந்தைகள் , சகோதரிகள் , இணையர் , தோழிகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் வழிகாட்டலாம். 

 பொதுவாகவே மாதவிடாய் சமயங்களில் பெண் குழந்தைகளை அவரவர்  வீடுகளிலேயே பல காரணங்களைச் சொல்லி அவர்களை ஒதுங்கி இருக்க வைத்தல் , தனிமைப்படுத்துதல்  போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன .அம்மாக்களுக்கும் குழந்தைகளிடம் இது போன்ற சமயங்களில் எவ்வாறு அவர்களை வழிகாட்டுவது என்று தெரிவதில்லை .அக்காக்கள் பக்கத்து வீடு என்று வயதில் பெரியவர்கள் அவர்களை விடக்  குறைந்த வயதில் இருப்பவர்களை வழிகாட்ட தேவைப்படும் அத்தனை செய்திகளும் இதில் அடங்கியுள்ளன.

 இந்த மாதவிடாய் என்பதை , நாம் ஒரு பெரிய விஷயமாகவே பார்க்காமல் அது குறித்து பேசவும் விவாதிக்கவும் உரையாடவும் தயங்குகிறோம். மிக முக்கியமான ஒன்று , ஆனால் அலட்சியப்படுத்துகிறோம் 
இப்படியான சூழலில் மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயல்பாகவே இயற்கையாக மாதம்தோறும் நடைபெறக் கூடிய செயல் தான் , ஏன் ஏற்படுகிறது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன, அதிலிருந்து நாம் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக நம் உடலையும் மனதையும் காத்துக் கொள்ளலாம், உடல் நலமும் மனநலமும் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது எப்படி அதற்கான உபகரணங்களை பயன்படுத்துவது இதற்கான விழிப்புணர்வை எங்கிருந்து எடுத்துச் செல்வது போன்ற பல செய்திகளை உள்ளடக்கிய நூல் தான் ரேணுகா தேவி அவர்கள் எழுதிய பூப்பூ என்ற இந்த மிகச் சிறிய புத்தகம்.

 ஒரு பெண் தனது வாழ்நாளில் சராசரியாக 16800 நாப்கின்களை பயன்படுத்த வேண்டியுள்ளது இதனால்தான் இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றன என்ற பொருளாதாரம் சார்ந்த விவரம் குறிப்பையும் தருகிறார் பருவ குழந்தைகள் குறிப்பாக பள்ளி குழந்தைகளிடம் சென்று சேர வேண்டிய அருமையான புத்தகம் .

யாரும் பேசத் தயங்கும் யாரும்  பேசாத விஷயங்களைப் பேசுகிறது ஒரு கோணத்தில் அறிவியல் கையேடு போல இருந்தாலும் பல விஷயங்கள் சொல்லப்பட்டு இருப்பதனால் இதனை ஒரு விழிப்புணர்வு புத்தகமாக எடுத்துக்கொள்ளலாம் பள்ளி ஆசிரியர்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் பயிலக்கூடிய பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெண் குழந்தைகளின் அம்மாக்கள்  என அனைவரும் புத்தகத்தை வாங்கி  வாசித்து புரிதலை ஏற்படுத்த வழிவகை செய்யலாம் தொடர்ந்து இது போன்ற குழந்தைகளுக்கான  அவசியமான புத்தகங்களை எழுத   ரேணுகா தேவி ஆசிரியருக்கு  வாழ்த்துக்கள் மா.

(நேற்று எனது மாணவிகள் 50 பேருக்கு முதல் முயற்சியாக பூப்பு புத்தகத்தை வாங்கி பரிசளித்துள்ளேன். )

உமா