Wednesday 31 March 2021

தீக்கொன்றை மலரும் பருவம்


தீக்கொன்றை மலரும் பருவம் 
சர்வதேச இலக்கிய வரிசை நூல் 

பதிப்பகம் : எழுத்து 
விலை : ரூ 499
பக்கங்கள் : 404
 
எழுதியவர் : அபுபக்கர் ஆடம் இப்ராஹிம்.

இவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிக்கையாளரும் ஆவார். சிறந்த எழுத்துக்கான ஆப்பிரிக்க பிபிசி பரிசு பெற்றவர் இவர். சஹாரா துணைக் கண்ட பிரதேசங்களின் சமகாலத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார். உலக அளவில் வெளியிடப்பட்டுள்ள Season of Crimson Blossoms நாவலுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான நைஜீரியாவின் .NNLG இலக்கியத்துக்கான பரிசைப் பெற்றவர். 

தமிழில் மொழிபெயர்த்தவர் :
 லதா அ.ருணாச்சலம் ,

இவர் கவிதை , கட்டுரை , மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆங்கில முதுகலை மற்றும் ஆசிரியப் பட்டப் படிப்பை முடித்த இவர் , 14 வருடங்கள் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் வாழ்ந்தவர். சில காலம் அங்கு ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். கடந்த சில வருடங்களாக சென்னையிலும் நைஜீரியாவிலும் மாறி மாறி வாசம் செய்கிறார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு 'உடலாடும் நதி ° கடந்த வருடம் வெளியானது . தீக்கொன்றை மலரும் பருவம் இவரது முதல் மொழி பெயர்ப்பு நாவல். 

தீக்கொன்றை மலரும் பருவம் நூலைப் பற்றி ....

இந்த நூலின் தலைப்பும் அட்டைப் படமுமே நம்மை வெகுவாக ஆட்கொள்கின்றன. மொழிபெயர்ப்பு நூலாக எண்ணவே முடியாமல் இருக்கும் படி நமது தமிழ் மொழியில் எழுதப்பட்ட உணர்வுடன் ,நீண்ட நாவலாக நம்முடன் பயணிக்கிறது. நைஜீரியா நாட்டு நாவல் என்றோ உலகின் வேறொரு பகுதியின் மனிதர்கள் என்றோ இதைப் படிக்கும் போது உணர முடியவில்லை.  கதாபாத்திரங்களின் பெயர்கள் வேண்டுமானால் அந்நியமாக இருக்கலாம். ஆனால் கதைக்.களம் , கதைக்கரு , உணர்வுகள்  , கதை மாந்தர்கள் என அனைத்தும் நம்முடன் மிக நெருக்கமாக பயணிக்கின்ற வகையில் மொழிபெயர்த்துள்ளார் லதா அருணாச்சலம் .சுவாரஸ்யம் குறையாமல் ஆனால் மிக ஆழமாகப் பேசப்பட்டுள்ள கதை. மொழியாக்கம் செய்த உத்தி என இரண்டுமே நிறைவான அழகு எனலாம் .
மனிதர்களின் நிழல் வாழ்க்கையாக நாம் உருவகம் செய்யும் பல முடிச்சுகளைப் பிணைத்து புதினம் உருவாகியுள்ளது . போதை மருந்துகள் விற்பனை செய்யும் இளைஞர்களின் தலைவனாக வரும் ரெஸா நாவலின் இறுதி வரை நம்முடன் பயணிக்கிறான். பெண்களின் ஆழ்மனதின் புதையுண்ட விருப்பவெளிப்பாடாகக் காட்டப்பட்டுள்ள  காமம் , பேசப்படாத யாரும் வெளிப்படையாகப்  பேச விரும்பாத, முறையற்ற பாலின ஈர்ப்பு என்ற  பொருண்மை தான் நாவலின் அடிநாதமாக வீற்றிருக்கிறது . ஐம்பந்தைந்து வயது நிரம்பிய ஒரு பெண்ணுக்கும் அவளது மகன் வயதுள்ள இளைஞனுக்கும் இடையே உருவாகும் காதல் உணர்வு , மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதும்  அதன் நீட்சியாக நடக்கும் நிகழ்வுகளும் தான் இக்கதையின் போக்கு. அதே சமயத்தில் அந்த நாட்டின் சமூகத்தில் நிலவும் அரசியல் சூழல் , பொருளாதாரத்தில் நலிவுற்ற இனத்திற்கு கல்வி மறுக்கப்படும் சூழல், எளியோரைப் பயன்படுத்தி வலியோர் வாழுதல் என அனைத்தும் குறியீடுகளாக
நாவல் முழுவதும் அடையாளம்
காட்டப்படுகிறது. அவற்றைப் பார்க்கும் போது உலகெங்கிலும் நிகழும் குற்றங்களைப் பற்றிய பார்வையை நாம் ஆழமாக செலுத்த முடிகிறது. அதே போல எல்லா நாடுகளிலும் நிகழும் பிரச்சனைகள் , குற்றங்கள் இவற்றைப் பொதுமைப்படுத்தக் கூடியதாகத் தான் தோன்றுகிறது.  அதுவே யதார்த்தம். 
இரண்டு பாகங்களில் 32 அத்யாயங்களாக வளர்ந்துள்ளது கதை . வல்லாஹி ... கதை முழுவதும் பெண்களின் அக உலகத்தின் பயணம்  குறித்து பதிவு செய்வதாக லதா அவர்கள்
தனது முன்னுரையில் கூறியது தான் உண்மை. ஒரு பெண்ணின் நடத்தை மாற்றங்களுக்கான  
உளவியல் கூறுகளை  ஆய்வு செய்யும். பொருட்டும் இந்நூல் வழிகாட்டுகிறது.  சமூகத்தின் பார்வையை தைரியமாக உடைக்கும் விதமாக  ஹஜியா பிந்த்தா பைஜூரு என்ற , பிரதான பெண் பாத்திரத்தை உருவாக்கி வாழ வைத்துள்ள நூலாசிரியரைப் பாராட்டியே தீர வேண்டும்.  எல்லாவற்றைக் காட்டிலும் தமிழில் மிக அழகாக மொழிபெயர்ப்பு செய்த தோழி லதா அவர்களுக்கு ஒரு வாசகியாக அன்பு முத்தங்கள் . நிச்சயமாக வாழ்நாள் முழுக்க படிப்போரின் எண்ணங்களில் வாழும் இந்த தீக்கொன்றை மலரும் பருவம் .

இந்தப் புத்தகம் ,  கவிஞரும் எழுத்தாளருமான யூமா வாசுகி அவர்களது  தன்னறம் விருது விழாவில் நூலின்  மொழிபெயர்ப்பாளரான
தோழி லதா அருணாச்சலம் அவர்களது கரங்களாலேயே எனக்கு வழங்கப்பட்டது என்பதையும் மகிழ்வுடன் பதிவு செய்கிறேன். 

உமா

மகாத்மா காந்தியின் நினைவு மாலை

மகாத்மா காந்தியின் நினைவு மாலை

ஆசிரியர் : அம்புஜம்மாள்

ஆசிரியர் பற்றி:

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஸ்ரீனிவாச ஐயங்காரின் மகளான அம்புஜம்மாள் (1899-1993) அவர்கள் 1920 இல் தான் முதன்முதலாக காந்தியை சந்திக்கிறார், ஹரிஜன மக்களின் நலத்தை வேண்டி தனது வைர நகைகளை பட்டுத் துணிகளை நல நிதிக்காக தந்துவிடுகிறார். உப்புச்சத்தியாகிரத்தில் பங்கேற்று சிறை சென்றவர். பள்ளிக்கூட ஆசிரியராகவும், “சாரதா மகளிர் யூனியன்” “சுதேசிய பெண்கள் லீக்” போன்ற மகளிர் அமைப்புகளில் முக்கிய அங்கத்தினராகவும் இருந்தார். இந்தி பிரச்சார சபையின் நிர்வாகக் குழுவிலும் அங்கம் வகித்துள்ளார். நவம்பர் 1934-ஜனவரி1935 வரை வார்தா ஆசிரமத்தில் காந்தியடிகளுடன் தங்கியுள்ளார். பாலிய விவாகம், தேவதாசி முறை, பலதார மணம் பொன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நீங்கள் பாடுபட்டார். 1948 இல் ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தை தொடங்கி பெண்களின் முன்னேற்றத்திற்கு பல் முன்னெடுப்புகளை எடுத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் (1957-1962), மாநில சமூக நல வாரியத்தின் தலைவராகவும் (1957-1964) இருந்துள்ளார். வினோபா அவர்களின் பூதான இயக்கத்தின் போது தமிழக யாத்திரையில் பங்கேற்றவர்.

நூல் குறித்து 

இந்நூல், 1944-இல் தினமணி வெளியீடாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார். நூலாசிரியர், அம்புஜம்மாள் அவர்கள் காந்தியத்தால் தான்   பெற்ற அனுபவங்களைத் தொகுத்துக் கூறுவதாக இந்த நூல் அமைந்துள்ளது. மொத்தம் 13 கட்டுரைகள் கொண்ட இந்நூலில், ஒவ்வொன்றும் காந்தி மற்றும் கஸ்தூரிபா ஆகியோருடன் நூலாசிரியர் கழித்த நாட்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய நினைவுகள் குறித்து பேசுகிறார் .இறுதியில் காந்தியடிகள், கஸ்தூரிபா  நூலாசிரியருக்கு எழுதிய கடிதங்கள் சில இணைக்கப்பட்டுள்ளன.

1. முதல் சந்திப்பு  - இக்கட்டுரையில் அம்புஜம்மாள் முதன் முதலாக தனது வீட்டில் மகாத்மா, கஸ்தூரிபா இருவரையும் சந்தித்த அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார் . விசித்தரமான விருந்து என்று தனது வீட்டு விருந்தோோம்பல் நிகழ்வில் காந்தியடிகளுக்காகப் படைக்கப்பட்டிருந்தவற்றைப் பட்டியலிடுகிறார்.  வெந்த மணிலாக் கொட்டை, தேங்காய் வழுக்கை , ஆப்பிள், ஆரஞ்சு ,திராட்சை, பேரீச்சை, பாதாம் பருப்பு, நீர் மோர் ,இளநீர் ஆகியவை காந்தியின் உணவுகளாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன

  1893 இல் முதன் முதலில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிற்கு பாரிஸ்டராகவே போனார். இந்திய வியாபாரியின் தொழில்முறை ஆலோசனைக்காக அங்கு சென்றிருந்தார் .ஆனால் கூலி பாரிஸ்டர் ஆகத்தான் கருதப்பட்டார். இந்தியர்களை எல்லாம் கூலிகள் என்று கருதிய வெள்ளையர்கள் அங்கு இருந்ததை கண்டு மிகவும் வேதனைப்பட்டார். பிரிட்டோரியா வழி செல்லும் ரயிலில் இருந்து இறக்கப்பட்டார் முதல் வகுப்புப் பிரயாணம் செய்யகருப்பருக்கு உரிமை இல்லை என்ற நடைமுறை அங்கு இருந்தது அப்பொழுது காந்தியடிகளை ரயிலிலிருந்து கீழே இறக்கி விட்டது பற்றி நாம் வரலாற்றில் படித்திருப்போம். அதேபோல அங்கு ஜகன ஸ்பார்க் என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் இந்தியர்கள் தங்குவதற்கு இடம் கிடையாது என்று இவரை தங்க வைக்க மறுத்து விட்டனர் ,அது மட்டுமன்றி பிரிட்டோரியாவில் பேவ் மெண்ட் அதாவது நடைபாதையில் நடந்து போகவும் கூடாது கருப்பர்கள் என்ற கட்டுமானம் இருந்தது .காந்தி அதன் வழியாக நடந்து போனதற்கு ஒரு காவல்காரர் அவரை அடித்து இருக்கிறார். இவற்றையெல்லாம் அனுபவித்த காந்தி ,தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடினார் .காந்தி தம்பதியினர் சிறை சென்றது குறித்த வரலாறுகளை நாம் படித்திருப்போம். அவ்வாறு சிறை சென்று வந்த காந்தியடிகளை இந்திய மக்கள் வரவேற்றனர் தமிழக மக்கள் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கின்றனர் அப்பொழுது தமிழ்நாட்டில் சென்னையில் அம்புஜம்மாள் அவர்களின்   வீட்டில் , இந்த தம்பதிகளுக்காக விருந்து ஏற்பாடு செய்து இருந்தனர் அப்போது தான் இந்த விசித்திர உணவு குறித்து அம்புஜம்மாள் பதிவிட்டிருக்கிறார்.

 கஸ்தூரிபா காந்தி தூய வெள்ளைப் பாவாடையும் தாவணியும் அணிந்து மெலிந்த உருவத்துடன் உலக அனுபவத்தால் கனிந்த தாயன்பு கொண்ட முகத்துடனும் எளிமையின் வடிவமாக அந்த விருந்து சமயத்தில் தனது வீட்டில் பார்த்ததாக அம்புஜம்மாள் பதிவிடுகிறார். ஒரு ஜோடி இரும்புக் காப்பு மட்டும் அணிந்திருந்தார் .ஆனால் அம்புஜம்மாள் அந்தஸ்து அலங்காரம் படிப்பு இவைகளைப் பற்றிய பெருமிதம் இருந்த தனது பண்பினால் எளிமையைப் புரிந்துகொள்ள முடியவில்லை என குறிப்பிடுகிறார் .தன் உடல் முழுவதும் வைரம் அணிந்திருந்தது பார்த்து கஸ்தூரிபா புன்முறுவல் செய்ததாகவும் அதை எண்ணி அவற்றை எல்லாம் கழற்றி எறிய வேண்டும் எனவும் அப்போது எண்ணியதாக  அம்புஜம்மாள் குறிப்பிட்டுள்ளார் .

 சென்னை வந்திருந்த பொழுது காந்தியடிகள் ஒரு கூட்டத்தில் பேச அன்று மாலை செல்கிறார் .சென்ட்ரல் முதல் வி.பி. ஹால் வரை எள்ளுப் போட்டால் எள்ளு விழாத அளவிற்கு கூட்டமாக நிறைந்திருந்தது கஸ்தூரிபாய் அவர்களைக் கூட்டத்தில் சிக்க வைத்துவிட்டு காந்தியடிகள் தனியே சென்று உள்ளார். அதைப் பார்த்து அம்புஜம்மாள் மனதால் காந்தியை திட்டி உள்ளார் .தனியாக இப்படி விட்டு விட்டுப் போகிறார்  தனது மனைவியை என்று மிகவும் அவர் மீது கோபப் பட்டதாகவும் ஆனால் பின்னாட்களில் அது புரிய வந்தது ,பெண்கள் தனியாக ச சமாளிப்பதற்காக இவ்வாறு நடந்தது இவற்றையெல்லாம் எங்களுக்கான பயிற்சியாகவே காந்தியடிகள் அன்று செய்துள்ளார் என்று புரிந்து கொண்டதாக குறிப்பிடுகிறார் .1920 ஆம் ஆண்டு இது நிகழ்ந்தது. மற்றொரு சமயம் 1930 ஆம் ஆண்டு கஸ்தூரிபாய் சென்னையில் ஸ்திரீகளுக்கான  சுதேசி சங்கம் உருவாக்கிட அதில் தேச சேவைகள் ,சுதேச பிரச்சாரம் ,அன்னியத் துணி கடை மறியல் இவ்வாறெல்லாம் அம்புஜம்மாள் இறங்கி பணியாற்றி காவல்துறை முன்னிலையில் தைரியமாக பல போராட்டங்களிலும் கலந்து கொள்கின்றார் இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ,அன்று கஸ்தூரிபாவைத் தனியாகக் கூட்டத்தில் காந்தியடிகள் விட்டுச் சென்றதுதான் என்று பின்னால் புரிந்து கொண்டதாக பதிவுசெய்கிறார்.

 2. சென்ற மகா யுத்தத்திற்கு பிறகு என்ற இரண்டாவது கட்டுரையில், காந்தி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு தந்துள்ளார் ,அகிம்சாவாதி என்றாலும் போருக்கான ஆட்களையும் பணத்தையும் சேர்த்து உதவியுள்ளார் இதற்கு காரணம்  விரைவாக சுய ஆட்சி வரும் என்று எதிர்பார்த்து இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கமிட்டி ரவுலட் சட்டம் ஏற்படுத்தப்பட்டது பற்றி நாம் அறிவோம் வரலாற்றில் புரட்சிக்காரர்கள் என பல வாலிபர்களை சிறை வைத்தனர் சாத்வீக முறையில் காந்திஜி ரவுலட் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என முயற்சி செய்தார் ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவாக ஒத்துழையாமை இயக்கம் உருவானது அந்த காலகட்டத்தில் காந்தி குல்லாய் கதர் மையம் நாடுகளின் தகனம் இவ்வாறு பல நிகழ்வுகள் நடந்தேறின அந்த காலகட்டத்தில் காந்தி குல்லா மிகவும் அம்புஜம்மாள் குடும்பமும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்ததைப் பதிவு செய்துள்ளார் அம்புஜம். ஆகவே தாங்கள் அணிந்திருந்த வைரங்களை எல்லாம் இரும்புப் பெட்டியில் கழற்றி வைத்து விட்டனர், தங்கள் வீட்டில் டிராயிங்  அறையில் காந்தியடிகளின் பெரிய உருவப்படம் ஒன்று வைத்து வழிபடுகின்றனர், வெள்ளைக் கதர் ஆடை அணிந்து கையில் கீதையுடன் நின்றிருந்த அந்த உருவத்தைக் குறித்து அது எப்படியான ஒரு மாற்றத்தை பார்க்கும் மனிதர்களிடையே உருவாக்கி காந்தியத்தை உள்வாங்க வைத்தது, அமைதியான புரட்சிகரமான சிந்தனைகளை கொடுத்தது என்று மிகவும் நெகிழ்ந்து இந்த கட்டுரையில் அம்புஜம்மாள் பதிவு செய்துள்ளார்.

 3.வைக்கம் சென்றபோது என்ற மூன்றாவது கட்டுரை, 1925 இல் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் வைக்கம் என்ற இடம் இந்திய அளவில் பிரசித்தி பெற்றது ,ஹரிஜன மக்கள் கிருஷ்ணர் கோவிலைச் சுற்றிய ரஸ்தாவில்நடமாடக் கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர், அவர்களும் ரஸ்தாவில் நடக்க வைக்கம் சத்தியாகிரகம் உருவான நிகழ்வுகளை பதிவு செய்கிறது. அப்பொழுது காந்தியடிகள் வைக்கம் செல்லும்போது சென்னையில் வந்து அம்புஜம்மாள் வீட்டில் தங்குகிறார்  அந்த அனுபவங்களைப் பதிவு செய்கிறது இந்த கட்டுரை. முதல் முறை தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தபொழுது சென்னை பல் இவர்கள் வீட்டிற்கு வந்தபோது ஒரு சமூக ஊழியராக தான் தெரிந்தார் காந்தியடிகள் .ஆனால் இந்த முறை அவர் வரும்பொழுது மக்களிடையே தேசபக்தி சமூகப்பற்று இவற்றை விதைத்து ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருந்தார் என்று அம்புஜம்மாள் பதிவு செய்கிறார். இதில் மீராபென் பற்றியும் குறிப்புகள் உள்ளன அப்பொழுது சென்னை நகர சபைத் தலைவராக இருந்த கான்சாஹிப் அவரது தலைமையில் மகாத்மாவிற்கு வரவேற்பு பத்திரம் ஒன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெறுகிறது அதை முடித்துக்கொண்டு அம்புஜம்மாள் வீட்டில் காந்தியடிகள் பார்ப்பதற்காக பொதுமக்கள் நிறையப்பேர் வந்திருந்தனர் அப்பொழுது ஒரு குழந்தையை மகாத்மா மடியில் வைத்துக் கொண்டுள்ள அந்த குழந்தை கைகளில் தங்க வளையல்கள் நிறைய போட்டு இருக்கின்றது அந்த குழந்தைக்கு ஆறு வயது அம்புஜம்மாள் தனது கழுத்தில் முத்தாரம்  போன்ற நகைகளை அணிந்துள்ளார். அந்தக் குழந்தையின் கைகளில் இருக்கக்கூடிய வளையல்களில் எனக்கும் ஒன்றை கொடுப்பாயா கொடுப்பாயா என்று காந்தியடிகள் கேட்டுக்கொண்டிருந்தார் சுற்றியிருப்பவர்கள் விளையாட்டிற்காக தான் கேட்கிறார் என்று நினைத்து  இருந்தனர் ஆனால் அவர் நிஜமாகவே கேட்டிருக்கிறார். குழந்தையின் தந்தை யார் குழந்தையை பார்த்து தாத்தாவிற்கு ஒன்றை கற்றுக் கொடுத்து விடு என்று கூற இதுதான் சாக்கு என்று காந்தியடிகள் வளையலை  இறுக்கமாக கையை பிடித்துக் கழட்ட அது வரவே மாட்டேன் என்கிறது அப்பொழுது கழட்ட முடியவில்லை என்றதும் கத்தரிக்கோலை எடுத்து வாருங்கள் என்று கூறி அதை கத்தரித்து எடுக்கிறார் இந்த நிகழ்வு ஒரு அரை மணி நேரம் நடக்கிறது. இதை பார்த்த நான் பயந்து போய் எனது கழுத்தில் இருந்த முத்து மாலையை வீட்டிற்குள் ஒரு பெட்டியில் வைத்து விட்டு வந்தேன். ஏனெனில் அப்போது  என்னிடம் இதைக் கேட்டு விடுவாரோ என்று நினைத்தேன். ஆனால் பின்னாட்களில் என்னால் உணர முடிந்தது இதுபோன்று கிடைத்த பொருட்களை எல்லாம் மக்களுக்காக மக்கள் நல நிதிக்காக தான் சேர்த்துகிறார் என .இந்தியப்  பெண்களிடையே இருந்த நகை பைத்தியம் ஓரளவாவது குறைந்து இருக்கிறது என்றார் காந்தியடிகள் இதுபோன்ற செய்திகளால் தான் என்று அம்புஜம்மாள் பதிவு செய்திருக்கிறார்.

 மிஸ் காதரின் மேயோ என்ற ஆங்கிலேயப் பெண்மணி தேசத்துரோகிகள் போற்றக்கூடிய இந்திய மாதா என்ற
ஒரு புத்தகத்தை எழுதி இருந்தார். இந்தியர்களின் குற்றம் குறைகளை நாடெங்கும் பரப்ப வெளியிட்ட புத்தகம் தான் அது. இந்தியர்கள் சுயராஜ்யத்திற்கு தகுதியற்றவர்கள் என்பதற்காக பிரச்சாரம் செய்வதற்காகவே அது எழுதப்பட்டிருந்தது. மகாத்மா காந்தியடிகள் அதனை சாக்கடை இன்ஸ்பெக்டரின் யாதல்து என்று ஒற்றை வரியில்  விமர்சித்திருந்தார் அப்போதைய காலகட்டத்தில் இந்தியா முழுக்க மக்களிடையே இந்த புத்தகத்தினால் பெரும் மனக் கசப்பும் வருத்தமும் வேதனையும் உருவாகியிருந்தது இந்தப் புத்தகத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அம்புஜம் காந்தியடிகளிடம் கேட்க நீ முழுவதும் படித்துவிட்டு வா என்று கூறுகிறார் உடனே படித்துவிட்டு வந்திருக்கிறார் அம்புஜம்மாள் அவரிடம் காந்தியடிகள் இந்திய ஸ்திரீகள் குறித்து இந்த புத்தகத்தில் இருந்து நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்கிறார் அதற்கு அம்புஜம்மாள் புத்தகம் முழுக்க நிறைய எதிர்மறையாக இருந்தாலும் சில பகுதிகள் உண்மையை கூறுகின்றனர் இந்திய பெண்களிடையே நாட்டின் மீது பற்றோ சமூகத்திற்காக வேலை செய்யும் நோக்கமும் இல்லாமல் எப்போதும் குடும்பத்திற்காக உழைக்கின்றனர் அவர்கள் படிப்பறிவு இல்லாமல் நிறைய சகோதரிகள் இருக்கின்றனரே என்று வருத்தப்படுகிறார் அதற்கு மகாத்மா சொல்லும் ஆலோசனைகள் நமக்காக நாம் எடுத்துக் கொள்ளலாம் இந்த மாதிரியான சூழலில் ஒரு புத்தகத்தை நாடெங்கும் எதிர்மறையாக பார்க்கும்பொழுது அதிலிருந்து நம்மால் என்ன நன்மைகள் செய்ய முடியும் என்று சிந்திக்க வைக்கிறார் மகாத்மாகாந்தி எனில் அம்புஜம்மாள் பார்த்து அப்போ சமூகம் மேம்பட சமூக சேவை செய்ய இந்த புத்தகம் ஒரு தூண்டுகோலாக அமைவது போல அவரை தூண்டுகிறார் மகாத்மாவின் கேள்விதான் அம்புஜம்மாள் இன்று நாம் ஒரு ரோல் மாடலாக பார்ப்பதற்கு விதையாக இருந்தது என்று கூறலாம் ஆம் அந்த புத்தகத்தில் இருப்பது போல பெண்கள் இந்தியாவில் குடும்பத்தை மட்டும் பார்த்துக்கொண்டு கல்வி கற்காமல் உம் நாட்டிற்காக சேவை செய்யாமல் இருப்பதை மாற்றுவதற்கு உன்னைப் போன்ற பெண்மணிகள் என்ன செய்யப் போகிறீர்கள் அவற்றை முன்னெடுத்துச் செல் என்று வழிகாட்டுகிறார் ஆகவே இந்த புத்தகத்தைத் தான் அம்புஜம்மாள் தனது பின்னாலேயே சமூகப் பணிக்கான முக்கிய ஆதாரமாக இங்கு பதிவு செய்கிறார் மகாத்மா காந்தி அந்த மூன்று தினங்கள் தங்கள் வீட்டில் தங்கியிருந்து போது நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வையும் இங்கு மிக அழகாக பதிவு செய்கிறார் அம்புஜம்மாள்.

 4 .அன்னையை  அறிந்துகொண்டது என்ற நான்காவது கட்டுரை :1927இல் மகாத்மா இலங்கைக்கு பயணமாக செல்லும்பொழுது சென்னை வருகிறார் அப்பொழுது அன்னை கஸ்தூரிபாய் உடன் வருகிறார், அம்புஜம்மாவிற்கு கஸ்தூரிபா அவர்களுடன் நெருங்கிப்
பழகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. அன்னை கஸ்தூரிபாய் உடன் இருந்த நாட்களை குறித்த அனுபவித்து பகிர்வாக இக்கட்டுரை அமைந்துள்ளது .
 அன்னையின் குணாதிசயங்கள் குறித்தும் அவரது காந்தியடிகளுக்காக எப்போதும் பணி செய்வது குறித்தும் இக் கட்டுரையில் குறிப்பிட்டு அவரை போன்ற தலைசிறந்த பெண்மணி பாரத நாட்டில் இல்லை என்ற பதிவை இங்கு தந்திருக்கிறார் அம்புஜம்மாள் அவர்கள்.கல்வியறிவு குறைவாக இருந்தாலும் ஆடம்பரமற்ற வாழ்க்கையின் வழியாக  இருதய பண்பாட்டினால் மிகச் சிறந்து விளங்கும் பெண்மணி  கஸ்தூரிபா என்று மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார் இக்கட்டுரையில்.

5.  தர்மசங்கடம் என்ற  கட்டுரையில் கல்கத்தாவில் நடந்த ஸ்பெஷல் காங்கிரஸில் அம்புஜம்மாளின் தந்தை விலகி விடுகிறார் அதோடு தேசிய வாழ்விலிருந்து விலகி எவ்வித பணிகளும்  செய்யாமல் இருக்கிறார்.
ஆனால் அப்பொழுது உப்புசத்தியாகிரகம் நாடெங்கும் மிகவும் அழுத்தமாக நடந்துகொண்டிருந்தது கஸ்தூரிபாய் அன்னியத் துணி கடைகளில் மறியல் செய்து சிறை சென்றார் இவற்றையெல்லாம் கண்ணுற்ற அம்புஜம்மாள் தானும் இயக்கத்தில் ஈடுபட விழைகிறார். அவரது தந்தையோ கதர் வேலை ஹரிஜன முன்னேற்றம் இவற்றால் சிவராசன் கிடைத்துவிடுமா இவை எல்லாம் நல்லது தான் நீ செய் ஆனால் சரியான அரசியல் திட்டத்தால் தான் சுயராஜ்யம் கிடைக்கும். அரசியலுக்கு அழுக்கு பிடித்து விளையாட்டு போல மோசமாக இருக்கின்றது. ஆகவே நீ இவற்றில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுரை வழங்குகிறார் இந்த சூழ்நிலையில் தர்மசங்கடமாக தான் நாட்டிற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து வருந்தி கட்டுரையை முடித்துள்ளார் அம்புஜம்மாள்.

 6.ஹரிஜன யாத்திரையில் - ஆறாவது கட்டுரையில் ஹரிஜன மக்களுக்காக நாடெங்கும் அவர்களது சமூக மத உரிமைகளுக்காகப் பிரச்சாரம் செய்துகொண்டு தேசம் முழுக்க வரும் பொழுது, மீண்டும் மகாத்மா சென்னைக்கு வருகை புரிகிறார். அப்போது கோடம்பாக்கம் ஹரிஜன கைத்தொழில் கல்விச் சாலையில் தங்கி இருக்கிறார் அவரை அம்புஜம்மாள் சந்தித்து தனது தகப்பனார் காங்கிரஸிலிருந்து விலகியது குறித்து இருவரும் மனம் விட்டுப் பேசுகின்றனர் அப்பொழுது காந்தியடிகள் உனது தகப்பனாரை ஏதாவது உன்னால் செய்ய முடியாதா என்று அம்புஜம்மாளை கேட்கிறார். அவரோ என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூற அப்போது நானே நேரில் வருகிறேன் என்று மகாத்மா அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்து உரையாற்றுகிறார் ஆனால் அம்புஜம்மாளின் தந்தையோ பிடிவாதமாக அரசியல் வேண்டாம் என்று கூறிவிட ,இந்த சூழ்நிலையில் காந்தியடிகள் அம்மாவிற்கு போனது தகப்பனாரின் பிடிவாதம் அரசியல் வேண்டாம் என்பதால் நீயும் அரசியலுக்குள் வர வேண்டாம் கதர் துண்டு ஹரிஜன சேவை செய்து வந்தால் போதும் என்று கூறிவிட்டு வருகிறார் அந்த அனுபவத்தை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார் அம்புஜம்மாள்.
 7. ..என் ஹிந்தி யாத்திரையில் என்ற ஏழாவது கட்டுரையில் 1934 ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி ஹிந்தி யாத்திரைக்காக டெல்லி டேராடூன் ஹரித்துவார் கான்பூர் அலகாபாத் ஆகிய இடங்களுக்கு அம்புஜம்மாள் தனது தோழிகளுடன் செல்கிறார் .அங்கே ஸ்ரீ சமன்லால் பஜன் பங்களாவில் தங்கி இருந்தார் காந்தியடிகளை அங்கு சந்தித்த பிறகு கல்கத்தா செல்ல இருந்தார் அம்புஜம்மாள் .மஹாதேவ தேசாய் மீரா பென்  பன்வாரிலால் பிரபாவதி அனைவரும் உடன்இருக்க ஒரு ரயிலில்  மகாத்மா காந்தியடிகளும்  பிரயாணம்  செய்திருக்க, அதே ரயிலில் அம்புஜம்மாள் அவர்களும் சென்றார். 

 காந்தி , இறங்க வேண்டிய ரயில் நிறுத்தம் இரவு ஒன்றரை மணிக்கு வரும் படி இருந்தது , அந்த ரயில் நிலையத்தில் இவரை எதிர்த்து சனாதனிகள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தனர்.  நள்ளிரவில் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் ரயிலை விட்டு குதித்து மறைகிறார் எவ்வளவு வீரமாக வேகமாக செயல்பட வேண்டும் என்பதை காந்தியின் வழி நின்று  இக்கட்டுரையில் மிகவும் தெளிவாக அம்புஜம்மாள் பதிவு செய்துள்ளார்.
பம்பாய் காங்கிரஸ் என்ற இந்த எட்டாவது கட்டுரையில் 1934ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு அம்புஜம்மாள் சென்றது குறித்து குறிப்பிட்டுள்ளார் தேச சேவைகளான ஜமால் பாஷ்யம் அய்யங்கார் என் கடைசி மகள் கோதைநாயகி அம்மாள் ஆகியோருடன் அம்புஜம்மாள் கலந்துகொண்டார் எவ்வளவு பெரிய மனிதர்கள் வந்திருந்தாலும் காந்தி காந்தியடிகளின் இருப்பு மிகவும் தேவையாக இருந்தது என்பதனை கட்டுரை முழுக்க தனது சொந்த அனுபவங்களுடன் ஆழமான கருத்துக்களுடன் பதிவு செய்துள்ளார் இக்கட்டுரையில்.

8. பம்பாய் காங்கிரஸ் என்ற இந்த எட்டாவது கட்டுரையில் 1934ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு அம்புஜம்மாள் சென்றது குறித்து குறிப்பிட்டுள்ளார் .தேச சேவகிகளான ஜானம்மாள் (பாஷ்யம் அய்யங்கார் என் கடைசி மகள் ) கோதைநாயகி அம்மாள் ஆகியோருடன் அம்புஜம்மாள் கலந்துகொண்டார் எவ்வளவு பெரிய மனிதர்கள் வந்திருந்தாலும் , மாநாட்டிற்கு காந்தியடிகளின் இருப்பு மிகவும் தேவையாக இருந்தது என்பதனை கட்டுரை முழுக்க தனது சொந்த அனுபவங்களுடன் ஆழமான கருத்துக்களுடன் பதிவு செய்துள்ளார் அம்புஜம்மாள்

9 .வர்தா ஆசிரம நினைவுகள் 

பம்பாய் காங்கிரசுக்கு சென்று வந்த பிறகு வீட்டில் முரண்டு பிடித்து வர்தா ஆசிரிமம்  செல்கிறார் அம்புஜம்மாள். . தந்தையே நேரில் வந்து காந்தியடிகளிடம் ஆசிரமத்தில் இவரை விட்டுச் செல்கின்றார். இவரது தந்தை அழுது இவரை ஆசிரமத்தில் விடும்பொழுது காந்தி, கவலை வேண்டாம் , எனது மகளைப் போல பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதே போல மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறார். சென்னை வீட்டின் வசதியையும் ஆசரம எளிமையும் ஒப்பிட்டு , ஆனால் உள்ளார்ந்த அன்புடன் ஆசிரமத்தில் வாழ்ந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அங்கு நிலவிய உணவு முறை ,வேலைப் பகிர்வு , பிரார்த்தனை ஏற்பாடு , நூல் நூற்பு , காந்தியின் அரசியல் பணிகள் , கடிதப்பணி , நடைப் பயற்சியிலேயே ஆசிரமத்திற்கு ரோடு போட கல் பொறுக்கியது என தொடர்ந்து பல அழகான அனுபவங்களைத் தொகுத்துள்ளார். 

10. மகாத்மாவின் துணைவி 

இந்தக் கட்டுரையை ஒற்றை வரியில் கூற வேண்டுமெனில் , மகாத்மா என்ற மாபெரும் மனிதர் குறித்து நாம் பேசும் போது கஸ்தூரிபா இல்லையெனில் மகாத்மா நாட்டின் அனைத்துப் பணியிலும் தன்னை ஈடுபடுத்தி வெற்றி கண்டிருக்க முடியுமா என சிந்திக்க வைக்கிறார். 

இதே போல காந்தி பக்தர்களைச் சந்தித்தது , சேவாக் கிரம நினைவுகள் , 74 வயதில் 21 நாள் பட்டினி என தொடர்ந்த அனைத்து கட்டுரைகளிலும் காந்தியுடனான தனது நிறைய அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார். 

இன்றைய கால கட்ட சமூகப் போக்கில் மாற்றங்களைத் தந்து பல நல்ல நெறிமுறைகளை இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்ல வேண்டுமெனில் காந்தியத்தை நாம் கையில் எடுக்க வேண்டும். அப்படியான புத்தகம் இது. அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கிய நூல். 

உமா 





Thursday 18 March 2021

தோழி நர்த்தகி நடராஜ்

இன்றைய குக்கூ உரையாடலில் 


தோழி நர்த்தகி நடராஜ் 


வார்த்தைகளற்ற நீண்ட மெளன உணர்வை உங்கள் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் கடத்திய தருணங்கள் ஒரு  புதிய அனுபவம் .


யாருக்கெல்லாம் சொல்ல வேண்டும் உங்கள் வாழ்க்கையை , நிச்சயமாக என் மாணவிர்கள் எல்லோருக்குள்ளும் ஒரு ஆழமான அனுபவத்தைத் தர பள்ளி திறப்பு நாளை எதிர்நோக்குகிறேன். 


கட்டற்ற கனவுகளால் காலத்தை வென்ற அழியா நிலையை அடைந்த உங்கள் அனுபவம் உங்கள் பகிர்வில் , தமிழ் மொழியின் அழகிய சொற்களால் குற்றமில்லா உச்சரிப்பால் ஒருங்கே மனத்தாலும் அறிவாலும் உணர வைத்த நிமிடங்கள் அற்புதம். 


ஒவ்வொரு நாளும் வீட்டின் கதவைத் திறக்கும் போதும் வசவுகள் , கேலிப் பேச்சுகள் , புறக்கணிப்புகள் என எல்லாவற்றுக்கும்  தான் தயாராக இருப்பேன், எதிர்பார்ப்பேன் என்ற இடத்திலிருந்து உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுகள் ஆரம்பிப்பதாக உணர்கிறேன். 


பின்புலமில்லாத , உண்மையான உழைப்பும் எண்ணங்களும் அவரவர்க்கான இடத்தைக் கொடுத்து  நடுவில் நிற்க வைத்து  ஆராதிக்கும் என்ற உங்கள் சொற்கள் தான் எத்தனை ஆழமான உண்மை.


ஆடும் போது பறக்கும் மனநிலையை உங்கள் பாதங்கள் தரைபடாத உயரத்தில் நர்த்தனமிடுவதிலிருந்து அறிந்து கொள்கிறோம். ... உங்கள் ஒவ்வொரு சொல்லும் எங்களுக்குள் ஆழமாக ஒரு ரசாவாதம் செய்தது என்னவோ உண்மை. 


கலைஞர்கள் உருவாக்கப்படுவதில்லை , உருவாக்க முடியாது, உள்ளிருந்து உருவாகி தங்களை நிரூபித்துக் கொள்வர்  என்பதற்கு குழந்தைகளுடனான சில உரையாடல் உதாரணங்கள் வழியே உணர்த்தியதை இங்குள்ள பெற்றோர்கள் உணர வேண்டும் .


இந்த சமூகத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி கையேந்தி நிற்பதைக் காட்டிலும் ஒரு சமூகத்தையே உருவாக்குவதான் சிறந்த  செயல் என்று உருவாக்கி வைத்திருக்கும் உங்கள் தேடல்களின் களம் வருங்கால இளைய தலைமுறைக்கு நீங்கள் காட்டும் சாட்சி. 


புலம் பெயர்ந்து வரும் மக்களைக் காக்க,  குழந்தைகள் உங்களைத் தேடுவதும்  , அவர்களுக்கு ..உங்களிடமுள்ள கலையைக் கற்றுத் தருவது போராடுவதை விட மேலானது என்ற உங்கள்  பதிவும் புரட்சியின் வேறு வடிவங்களாகப் பார்க்கிறேன். 


கனவுகள் காணுங்கள் , கடவுளின் வரமாகி எல்லாம் செயல் கூடும் என்பதையே எல்லோருக்குமான பகிர்வாக எடுத்துக் கொள்கிறேன். 


பத்மஸ்ரீ நர்த்தகி என்ற முகமூடியை நீங்கள் அணியாத காரணத்தால் தான் எங்களைப் போன்ற எளிய வெகு ஜனம் உங்களை நெருங்க முடிகிறது என்பதை நீங்கள் சொல்லாமலே புரிந்து கொண்டோம். 


இறுதியாக , தாய்மொழி குறித்து உங்கள் செய்தியாக அனைவருக்கும்  தந்தது மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன். தாய் மொழியைக் கண்டடையும் போது ஒவ்வொருவரும் அவரவரைக் கண்டடைவீர்கள் என்பது இன்றைய சமூக அமைப்பு பள்ளிக் கல்விக்கும்  நீங்கள் தந்த செய்தியாகப் பார்க்கிறேன். 


இன்றைய நாளை  உங்களுடன் சாத்தியப்படுத்திய தோழி பரமு, குக்கூ உறவுகள் அனைவருக்கும் பேரன்பு💚💚💚

டாக்டர் ஜீவா ..குக்கூ உரையாடலில்

டாக்டர் ஜீவா .. 

நேற்றைய குக்கூ உரையாடலில் 


காஞ்சிக் கோவிலில் நான் வசிக்கும் போது என்னைச் சுற்றி வாழும் மக்கள், அதிகமாக  நாடும் மருத்துவமனை ஈரோடு டிரஸ்ட் ஹாஸ்பிடல் என்பதே. ஆனால் அது மட்டுமல்ல அது போன்று புற்றுநோய் மருத்துவமனை

களையும் பல மாநிலங்களில் உருவாக்கி அவற்றை மக்கள் நலனுக்காக அமைத்தவர் தான் டாக்டர் ஜீவா என்பதை சிவராஜ் வழியாக 

அறிந்த போது அவரது உரையாடலைக் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 


75 வயதாகும் இவர் கல்வி , பொருளாதாரம் , மருத்துவம் , அரசியல் , சுற்றுச்சூழல் அனைத்தையும் காந்தியத்தின் மையமாகப் பார்ப்பதோடு பார்வையாளருக்குப் புரியும்படி 

தனது வாழ்க்கையின் வழியே எப்படி இது சாத்தியப்பட்டது என்பதை தனது செயல்பாடுகள் வழியே விளக்கம் தந்தார். "புகழ் பெற்றவர்கள் எல்லோரும் செயல்களை செய்து வெற்றி பெற்றவர் எனக் கொள்ள முடியாது , செயல்பாட்டாளர் அனைவரும் புகழ் பெற்று விடுவதில்லை " என்று பதிவு செய்கிறார் 


 காந்திய வழிகளைப் பின்பற்றி தான் மருத்துமனைகளை உருவாக்கியுள்ளார். அதற்கு முன் கல்விக் கூடங்களையும் , கல்லூரிகளையும் 

காந்திய வழியில் உருவாக்கிய அனுபவம் குறித்தும் பகிர்ந்தார். 


இரண்டு மணி நேரம் முழுவதும் அவர் பேசிய ஒவ்வொன்றிலும் காந்தியத்தை இணைத்துக் காட்டினார். காந்தியும் மார்க்ஸ்சும் இணையும் புள்ளியில் தான் இந்தியாவில் மாற்றங்கள் நிகழத் தொடங்குமிடம் என்று தான் நம்புவதாகக் குறிப்பிடுகிறார். 


ஒருவர் புகழ் பெறுவதற்கு முன்பேயே  மனிதர்களைத்  தேடிச் செல்வது  தன் வாழ்நாளில் தொடர் வழக்கம் என்று பல உதாரணங்களை முன் வைக்கிறார். உலகத் தலைவர்கள் வரிசையில் நேருவும் இந்திராவும் தவிர்க்க முடியாத பெருமை வாய்ந்தவர்கள் என்பதை இன்று மறந்த கதையை நினைவூட்டுகிறார். காந்தி கூறிய தன்னிறைவு பெற்ற  கிராமங்கள் தான் மாற்றங்களுக்கு வழி என்பதுடன் ,


அதற்கான மாற்றங்களைக் கொண்டு வரும் இளைஞர்கள் தற்போது உருவாகி வருவதையும் மகிழ்ச்சியாக உணர்வதாகக் கூறுகிறார். பல்வேறு நூல்களை மொழிபெயர்த்தது குறித்தும் ,ஏன் காந்தியின் சத்திய சோதனையைக் காட்டிலும் காந்தியின் சுயராஜ் புத்தகம் தனக்கு மிகப் பிடிக்கும் எனவும் தெளிவாக்கினார்.  காந்திய வழி புரட்சியும் போராட்டமும் மீண்டும் இங்கு தேவை , குட்டி குட்டி காந்திகளாக ஏராளமானோர் உருவாகி வருவதைப் பார்க்க முடிகிறது என்று அவர் பதிவு செய்த கருத்து மிக முக்கியமானதாகப்  பார்க்கிறேன். 


அதே போல் குக்கூ வின் இளைய தலைமுறை செயல்பாட்டாளர்களை மனதாரப் பாராட்டினார் . சின்னச் சின்ன மனிதர்கள் குக்கூ வின் மனிதர்கள் , அவர்களால் உலகை மாற்ற முடியும் என்றார். 


சிவராஜ் குறித்து பேசும் போது இந்தக் கல்வி முறையின் அபத்தத்தை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறார். ஆம் , 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்ற முத்திரையை சிவராஜ் க்கு இந்தக் கல்வி முறை வழங்கியிருந்தாலும் இன்று மிகப் பெரிய நம்பிக்கையுடன் சமூக மாற்றத்தைக் கையிலெடுக்கும் சின்னச் சின்ன மனிதர்களை இணைத்து மிகப் பெரிய மாற்றத்திற்கான ரசா வாதம் செய்ய  சிவராஜால் சாத்தியமாயிருக்கிறது. கல்லூரி மாணவர்களிடம் உரையாட ஒரு முறை சிவராஜ் தயங்கிய போது டாக்டர் ஜீவா சிவராஜைத் திட்டி , உன்னால் தான் இவ்வளவும் செய்ய முடிகிறது. M.phil முதலான பல பட்டங்களையும் பெற்று அரங்கத்துக்குள் அமர்ந்திருக்கும் இவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஆகவே வந்து பேசு என சிவராஜின் தயக்கத்தை உடைத்திருக்கிறார். 


இவரது பேச்சு கேட்கும் அனைவரையும் காந்தியத்தின் மீது நம்பிக்கை கொண்டு அடுத்த அடியை பலமாக பாலமாக எடுத்து வைப்பர் என்பது நிதர்சனம். 



வகுப்பறைக்கு உள்ளே ….

வகுப்பறைக்கு உள்ளே ….


வெளியீடு : பாரதி புத்தகாலயம் 

ஆண்டு : 2018

விலை : ரூபாய் 60


நூலாசிரியர் : இரா. தட்சிணாமூர்த்தி . இவர் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் .புதுவையைச் சேர்ந்த இவர் புதுவை அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளராகவும் , ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். சூடேறும் பூமி ,யார் குற்றவாளி உள்ளிட்ட 5 நூல்களை எழுதியுள்ளார். 


வகுப்பறைக்கு உள்ளே என்ற இந்த நூல் முழுவதும் ஆசிரியரின் பணி அனுபவங்கள் தான். எட்டு உட்தலைப்புகளை உள்ளடக்கிய இந்நூலுக்கு சிறப்பானதொரு  அணிந்துரையை

நமது மூத்த கல்வியாளர் முனைவர் ச.சீ.இராஜகோபாலன் அவர்கள் நெஞ்சைத் தொடுமாறு எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து வரும் என்னுரை என்ற பகுதியில் நூலாசிரியர் இந்நூல் உருவானதற்கான தருணங்களைப் பற்றிப் பகிர்ந்திருக்கிறார். 


வகுப்பறைச் சிக்கல் , அடியும் ஹார்லிக்சும் , நான் எந்த சாதியும் இல்லே .. , அன்புடன் ரஜினிகாந்த் , லேட்டா வரலாமா சார் ? கல்விச் சுற்றுலா , நல்லாசிரியர் விருது , என்னைப் பெயிலாக்கிடுங்க சார் . இந்த எட்டுக் கட்டுரைகள் தான் நம் மனதோடு நெருங்கி உறவாடுகின்றன. தனது 34 வருட ஆசிரியர்ப் பணியில்  கடந்து வந்த மாணவர்களை , கற்பித்தல் அனுபவங்களை மிக இயல்பாக , யதார்த்த சூழலின் வெளிப்பாடாக ஆசிரியர் படைத்திருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு முன்பு நமது கல்வி முறையில் சிக்கல்கள் இருந்தாலும் ஒரு மாணவரது வாழ்க்கையில் அன்றைய ஆசிரியர் கொண்டிருந்த நேசம் ஒவ்வொரு கட்டுரையிலும் முத்தாய்ப்பாகத் தெரிகிறது. 


ஆசிரியர் மாணவர் உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை , தான் வாழ்ந்த பள்ளி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு நமக்குக் கூறியிருக்கிறார். மாணவரது வீட்டு சூழல் , பொருளாதார சூழல் , உளவியல் சூழல் என எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு மாணவர்களை அணுகிய அனுபவங்கள் குறித்து வாசிக்கும் போது நெகிழ்கிறது. முதல் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள வகுப்பறை சிக்கல் இன்று வரை சில பள்ளிகளில்  தொடர்வது தான் நமது சாபக்கேடு . 


கட்டுரைகளின் பல இடங்களில் நான் என்னையே உணர்கிறேன். அன்றாடம் எனது வகுப்பறையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் இந்தப் புத்தகத்தில் தீர்வுகளைக்  காண முடிகிறது. அடியும் ஹார்லிக் சும் கட்டுரையின் முடிவில் மட்டுமல்ல அடுத்தடுத்த மற்ற ஆறு கட்டுரைகளை வாசித்து முடிக்கும் போதும் என்னையறியாமல் கண்கள் கலங்கின . மனம் என்று நாம் நம்பும் உணர்வின் பகுதியில் ஏதோ பிசைந்தது. எனது 19 வருட ஆசிரியர் பணியில் நான் கடந்து வந்த மாணவர்களது கதைகள் என் எல்லா நினைவுகளிலும் ஆக்ரமித்தன. இன்னும் இந்த மாணவனை இப்படி நாம் அணுகியிருக்கலாமோ என்ற ஆய்வை எனக்குள் சுய பரிசோதனை செய்ய இந்தப் புத்தகம் சொல்லிக் கொடுக்கிறது. 


இந்த 72 பக்கங்களில் சத்தமில்லாமல்  ஒரு புரட்சியை செய்துள்ளார் ஆசிரியர் இரா. தட்சணாமூர்த்தி . அரசுப் பள்ளி ஆசிரியர்களில் இன்றும் இவர் போன்ற ஆசிரியர்கள் ஆங்காங்கே வாழ்ந்து வருவது உண்மை தான், ஆனால் அவர்கள் எண்ணிக்கையில்

குறைந்த சதவீதமேஇருக்கின்றனர். இந்தப் புத்தகம் ஆசிரியர் பயிற்சிப் பாடமாக வைக்க வேண்டிய நூல் .ஆம் கல்வி குறித்து ஆய்வு செய்யும் கல்வியாள்களை விட ஒரு ஆசிரியரின் வாழ்வில் உண்மையாக நிகழ்ந்த இந்த அனுபவங்கள் தான் சமூக மாற்றத்தை உருவாக்க வரும் வருங்கால ஆசிரியர்களுக்குப் பாடமாக வைக்கப்பட வேண்டியவை . இன்று பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும் தங்கள் பணியில் அர்ப்பணிப்பு சார்ந்து செயல்பட இந்த நூலை வாசிக்க வேண்டும். அற்புதமான புத்தகம் . 


உமா



கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது



நூலாசிரியர் :ஆதவன் தீட்சண்யா


2016 இல் நூல் வனம் பதிப்பகத்தால் வெளிவந்துள்ள கட்டுரைத் தொகுப்பு நூல் இது.18 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. 


சமூகத்தின் அரசியல் பார்வை ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படையாகத் தெரிகிறது. அது ஆணவக் கொலையாகட்டும் , கார்ப்பரேட் நிறுவன சுரண்டலாகட்டும் தெள்ளத் தெளிவாகப் பேசப்பட்டுள்ளது.   சாதி மதங்களின் பெயரின் நிகழும் ஒடுக்குமுறைகள் , தலித் மக்களின் பேசப் படாத உழைப்பு, சமூகத்தில் அவர்களது தொடர்ந்த போராட்டம் , இலங்கை மக்கள் என நூலாசிரியர் தனது சொந்த அனுபவங்களைப் பற்றிக் கொண்டும் பல கட்டுரைகளில் பேசியுள்ளார் . பயணங்களின் மேடை அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார். அம்பேத்கர் குறித்தான கட்டுரையும் , சாதி மறுப்பு இலக்கியத்திற்கான சாத்தியங்கள் கட்டுரையும் ஆய்வுகளாக உணர்த்தும் கருத்துகள் ஏராளம்.  


கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது என்ற  தலைப்புள்ள கட்டுரையில் மனிதர்களது பகுத்தறிவு குறித்து விரிவாக விவாதிக்கிறார். இதில்  வேதங்களின் பங்கு என்ன என்பதும் பேசப்படுகிறது. சமகாலத் தமிழ்ச் சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் அரசியல் பின்னணியும் கேள்விக்குள்ளாக்கப்பட்டும் பகடி செய்யப்பட்டும் ஏசியும் எழுதப்பட்டுள்ள கட்டுரைத் தொகுப்பு  நூல் இது. வெகு ஜனத்திடையே பகுத்தறிவை விதைக்கவும் , அவர்களுக்கான கடமை குறித்தும் எளிய மொழியில் தொடர்ந்து பேசப்பட்டுள்ளது. இறுதியில் ஒரு கட்டுரையில் நம் முன்னே கடலளவு மலையளவு பணிகள் காத்திருக்கின்றன கடுகளவேனும் செய்து கொண்டிருக்கிறோமா ? என்ற கேள்வியை முன்வைத்து முடித்துள்ளார். 

சில இடங்களில் குறிப்பாக கல்விப் பிரச்சனை குறித்து அவர் எழுதியுள்ள இடங்களில் எனக்கு நிறைய கேள்விகள் உள்ளன . சமூக சீர்திருத்தம் என பல கோணங்களில் நாம் பார்க்கப்படும் பிரச்சனைகள் முளைக்கும் இடமாக மறைந்து இருந்து உணர்த்துவது கல்வி மட்டுமே.அரசுப் பள்ளிகள் , தனியார் பள்ளிகள் குறித்த கருத்துகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன . ஆனால் சமூக மாற்றத்தினை உருவாக்க நினைக்கும் அமைப்புகளில் உள்ள மனிதர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் அரசுப் பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை என்ற கேள்வியுடன் அதிர வருவதோர் நோய் என்ற கட்டுரையைப் படித்து முடித்தேன். 


உமா

Good Bye To PKPI ( பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் )



முகநூல் நட்புகள் அனைவருக்கும் வணக்கம் .


நான் அடிப்படையில் ஒரு ஆசிரியர் என்பது நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.  கல்வி குறித்த கள செயல்பாட்டாளராக தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும்  அதிகமாகப்  பள்ளிப் பணியைத் தாண்டி , வேறு வேறு வழிவகைகளில் பல தளங்களில் பணி   செய்து கொண்டுள்ளேன். 


அதன் தொடர்ச்சியாகத் தான் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்  (A3) என்ற அமைப்பை  உருவாக்கினோம் .


இன்று தமிழகமெங்கும்  பணியாற்றி வரும் லட்சக் கணக்கான ஆசிரியர்களில் சிறப்பாக செயல்படும் சில லட்சம் இருக்கலாம். அவர்களுள் சில ஆயிரம் ஆசிரியர்கள் இணைந்து உருவானது தான் A3 அமைப்பு . 4 வருடங்கள் முன்பே 2000 ஆசிரியர்கள் என்னுடன் இணைந்து பல சிறப்பான பணிகளில் தங்களை  இணைத்துக் கொண்டனர்  , ஒட்டு மொத்தமாக இல்லாமல் சில நூறு சில நூறு என சிறு சிறு குழுக்களாக பல தளங்களில்  இணைந்திருந்தனர். தற்போதும் இணைந்துள்ளனர்.


 A3 அமைப்பின் பணி என்பது , ஆசிரியர்களின் பணித் திறனை மேம்படுத்தி,  கற்பித்தல் அனுபவங்களைப் பகிர வைத்தல் , வாய்ப்புகளைப் பரவலாக்குதல் ,  செயல்படும் ஆசிரியருக்கும் செயல்பட விரும்பும் ஆசிரியருக்கும் ஒரு பாலம் அமைப்பது என்றும் கூறலாம். இப்படியான பயணத்தில் ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளுதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


 சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, முதல் சந்திப்பிற்கு 2017 நவம்பர் மாதம் எனக்கும் அழைப்பு விடுத்தனர் .அன்றிலிருந்து நவம்பர் மாதம் 2019 வரை , ( 23.11.2019) PKPl என்று அழைக்கப்பட்ட பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டு 200 % உழைப்பையும் தந்தது குறித்து  பெரும்பாலும் அனைவரும் அறிவீர்கள். 


வயதில் மூத்த ஆளுமைகள் இயக்கத்தின் பொறுப்பில் இருப்பதாலும் உடன் இணைந்ததாலும் நான் கூடுதல் நம்பிக்கையுடன் பணியாற்றினேன். இயக்கத்தின் பெயரை மக்களிடம் , ஆசிரியர்களிடம்  எடுத்துச் செல்லும் பொருட்டே இயக்கத்தின் பெயரில் பல இதழ்களிலும் கல்வி குறித்த கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். 


அந்த 2 வருட காலத்தில் எனது முகநூல் பக்கத்தில் இயக்கத்தின் பெயரில் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பதிவாவது PKPI என்று முடித்திருப்பேன். பல்வேறு அமைப்புகளில் இணைந்து பணியாற்றுவோருக்குத் தெரியும், ஒரு அமைப்பை வளர்ப்பதில் உள்ள சவால்கள். ஆனால் இணையப் பயன்பாட்டின் வழியே தான் என்னால் பெரும்பாலான மக்களிடம் இயக்கத்தை எடுத்துச் செல்ல முடிந்தது. 


முதல் கூட்டத்தில் நான் ஒரு யோசனையை முன்வைத்தேன்  . வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி இயக்கத்தை வளர்க்கலாம் என்று , ஆனால் மூத்தோர்கள் தயங்கினார்கள் . அது ஒரு தொல்லையாக இருக்கும் என்று கூறி வேண்டாம் என மறுத்து விட்டனர். பிறகு இரண்டாம் சந்திப்புக்குப் பிறகு PKPl STATE TEAM என்ற வாட்ஸ் அப் குழு உருவாக்கத் திட்டமிட்டு ஒப்புக் கொண்டனர். 2018  ஜனவரி 6 ஆம்   தேதியன்று உருவாக்கப்பட்டது. 

6 மாதங்கள் மாநில அளவில் சில கூட்டங்கள் நடந்தன. ஒவ்வொரு நாளும் இயக்கத்துக்காக 24 மணி நேரமும் யோசித்து செயலாற்றி இருக்கிறேன். 


ஜூன் 3 , 2018 அன்று முதல் பத்திரிகையாளர் சந்திப்பு பேரா காளீஸ்வரன் அவர்களது உதவியுடன் பிரம்மாண்டமாக சென்னை லயோலா கல்லூரியில் நடந்தது. நமது A3 குழு ஆசிரியர்கள் பல மாவட்டங்களிலிருந்து இந்நிகழ்வில் வந்து கலந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாகவும் பொறுப்பேற்றனர். 


மாவட்டத்திற்கான குழு PKPI District Team நான் தான் உருவாக்கினேன். மறுபடியும் தொடர்ந்து 2 ஆண்டுகள் பல்வேறு செயல்பாடுகளால் இவ்வியக்கத்தை வலுப்படுத்தி வந்தேன். அதன் வளர்ச்சிக்கான பணியை 4 ஆகப் பிரித்தால் 2 பாகத்திற்கும் அதிகமாக  என்னுடையது. இதை அனைவரும் அறிவர். 32 மாவட்டங்களுக்கும்  மாவட்டக் குழுக்களை உருவாக்கி ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து உறுப்பினர் சேர்க்கையில் என தொடர்ந்து பணியாற்றினேன். எங்கு சென்றாலும் இந்த இயக்கம் உயிருடன் கலந்த ஒன்றாக இருந்தது. தொலைக்காட்சி நிகழ்வில் பேச வாய்ப்பு கிடைத்த போதும் இயக்கத்தின் பெயரையே உச்சரித்தேன். இயக்கத்தின் முகநூல் பக்கத்தை சிவா உருவாக்கியதோடு சரி , தினமும் அந்தக் கணக்கை உயிர்ப்பித்து active ஆக வைக்க , வாட்ஸ் அப் குழுக்களை ஆரோக்கியமான முறையில் இயக்க என வெறித்தனமா வேலை செய்துட்டு இருந்தேன். 


இந்த இயக்கத்தில் ஆர்வமான உறுப்பினர்களை முகநூல் பக்க வழியேயும் வேறு வேறு வழிகளிலும் இணைத்து அவர்களிடம் தொடர்ந்து இயக்கம் குறித்த புரிதலை விளக்கி விளக்கி எடுத்துச் சென்றேன். 


ஒவ்வொரு மாநில சந்திப்பு முடிந்த பிறகும்  நிகழ்வைத் தொகுத்து MOM தயாரித்து

அதே நாளில் பெரும்பாலும் தலைவர் , செயலருக்கு அனுப்பி , இயக்க முகநூல் பக்கத்திலும் எனது முகநூல் பக்கத்திலும் போஸ்ட் போட்டு விடுவேன். யாரும் பாராட்ட வேண்டும் என்று இவற்றைச் செய்ததில்லை. அது என்னுடைய வழக்கம் . 


இரண்டாம் வருடம் முடியும் நாளில் 2019 ,நவம்பர் 24 அன்று வரை இயக்கத்தின் மொத்த வரலாறும் எழுதித் தொகுத்து அளித்தேன். அதற்குள்ளாக தனியாகவும் இயக்க செயலருடனும் இணை்து 27 மாவட்டங்களுக்கு இயக்கத்தை வலுப்படுத்த கூட்டம் ஏற்பாடு செய்து சொந்த செலவில் சென்று வந்துள்ளேன். எங்கு சென்றாலும் அங்கு நமது A3 குழு ஆசிரியர்களை வரவழைத்து இயக்கக் கூட்டத்தில் பங்கு பெற வைப்பேன். தமிழகம் முழுக்க தொடர்பிலுள்ள அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் (A3) அனைவரையும் இயக்கத்தில் இணைக்க  தொடர் முயற்சியில் ஈடுபட்டேன். பெரும்பாலும் இணைந்தனர்.  


எனது பள்ளி நாட்களின் தற்செயல் விடுப்புகள்  80% இயக்கத்துக்காக மட்டுமே எடுத்தேன். ஏறக்குறைய உடல் , பொருள் , ஆவி அனைத்தையும் இந்த இயக்கப் பணிகளுக்காகவே முழு ஆத்ம திருப்தியுடன் செய்து வந்தேன் . ஒரு கட்டத்தில் PKPI என்பது தமிழகம் முழுக்க வேரூன்றியது. கடந்த செப்டம்பர் மாதம்  அறிவியல் இயக்கத்தை இணைந்து செயல்பட தோழர்  மோகனா அவர்களது இல்லம் பழனி சென்று கோரிக்கை ம்னு தந்துவிட்டு வந்தேன் . கஜா புயல் பணி செய்த போதும் நிவாரணப் பணியை ஒருங்கிணைத்து 15 லட்ச ரூபாய் மதிப்பில் அந்த 4 மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்றேன். தனி ஒருத்தியாகவே பணி செய்தாலும் இயக்கத்தின் பெயரில் செய்தேன். 


இவை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 


எத்தனையோ அமைப்புகள் PKPI இல் இணைந்திருந்தாலும் இந்த இயக்கத்துக்காக எவர் ஒருவரும் முழு மனதுடன் தங்கள் அமைப்பு உறுப்பினர்களை இவ்வியக்கத்தின் வளர்ச்சிக்கு உதவவில்லை. செயலர் மட்டுமே ஆசிரியர்களை தொடர் பயணத்தில் சென்று சந்தித்து வளர்த்தார் .இணைய வழி , ஊடகவழி , ஆசிரியர்கள் தொடர்பில் நான் இயக்கத்தை வளர்த்தேன். இயக்க வாட்ஸ் அப் குழுவில் இணைந்தவர் அவரவர் தூர நின்று வேடிக்கை பார்ப்பவராக பெரும்பாலான நாட்களில் Passive ஆக இருப்பர். சில ஆசிரியர்களை உள்ளே இணைத்து மாநில அளவில் பொறுப்பு தரும் போது மனதளவில் குறுகி , உரையாடல் அற்று வெளியேறிய பிரச்சனைகளும் நடந்தன. எதிர்மறையான பலரின் கருத்துகளுக்கு என்றுமே நான் வலு சேர்த்ததில்லை. கடந்து போகவும் இயக்கத்துக்காகப் பணியாற்றவும் கற்றிருந்தேன். புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்தும் நிறைய மாவட்ட மேடைகளில் பேசச் சென்ற போதும் எனது A3 இன் பெயரில் செல்லாமல் , PKPI த்தான் அடையாளமாகக் கொண்டு பேசச் செல்வேன்.


இந்து -காமதேனு வார இதழில் சம காலத்தில் பள்ளிக் கல்வியில் உள்ள சிக்கல்களைத் தொடராக எழுத ஆரம்பித்தேன். எனது பெயரில் , பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே எழுத ஆரம்பித்தேன் . அரசின் கல்விக் கொள்கை , பாடத்திட்டம் , ஆசிரியருக்கு வழங்கப்படும் பயிற்சிகள் , QR கோடு ... என்று நடைமுறைப் பிரச்சனைகளைக் குறித்து தமிழக ஆசிரியர்கள் பெரும்பான்மையோரது கருத்துகளை , ஒரு பிரதிநிதியாக இருந்து தான் எழுதி வந்தேன். கல்விப் பிரச்சனைகளில் ஒரு பிரச்சனையாக ஆசிரியர் சங்கங்கள் குறித்து 11வது கட்டுரையாக எழுதினேன். 


அந்த ஒரு கட்டுரை எழுதியது தான் பிரச்சனையாக உருவெடுத்தது. சரியாக இயக்கத்தின் 2ஆம் ஆண்டு நிறைவு விழாவை முடித்து அடுத்த நாள் நவம்பர் 25 அன்று இந்தக் கட்டுரை அச்சில் வந்தது. எந்தக் கட்டுரை என்றாலும் இயக்க முகநூல் பக்கத்திலும் பதிவிடுவேன். எனது முக நூல் பக்கத்திலும் பதிவிடுவேன். அதே போல இந்தக் கட்டுரையையும் பதிவிட்டு இருந்தேன் . 


இயக்கத்தின் பெயரில் சங்கங்களைப் பற்றி எழுதியிசூக்கக் கூடாது என்ற ஒரு கருத்து தலைவரிடம் வந்துள்ளது. செயலர் வழியே என்னிடம் அது தெரிவிக்கப்பட்டது. ஏதேச்சையாக செயலர் எனது கணவரிடம் இதைக் கூறியிருக்கிறார். எனது கணவர் சாதாரணமாகவே நிறைய கோபமடையும் இயல்பு , செயலர் கூறியதைக் கேட்டு அவரிடம் அமைதியாக இருந்து சரி எனக் கூறி விட்டு என்னிடம் வாதிடுகிறார். இயக்க முக நூல் பக்கத்தில் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் எனது கணவரும் கட்டுரையின் பதிவில் பின்னூட்டங்களில்  பேசிக் கொள்ள , இறுதியாக எனது கணவர் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தை பதுங்கு குழி இயக்கம் என வைத்துக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட , விளைவு... தலைவர்  PKPI STATE TEAM. வாட்ஸ் அப் குழுவில் அதற்கு கண்டனம் தெரிவிக்கிறார் . செயலர் என்னிடம் முகநூலில் அந்த பதிவையே நீக்கக் கூறி விட்டார். அன்று இரவு 10.30 மணி வரை தலைவரிடம் பேசுகிறேன். அவர் , நீ சொன்னதெல்லாம் சரி உமா , ஆனால் நாம் அவர்களை இணைத்து தான் பணியாற்ற வேண்டும் .ஆகவே இதை சொல்லக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். 


எங்களுக்குள் வீட்டில் மிகப் பெரிய பிரச்சனை . உனக்கென ஒரு அமைப்பு A3 ஏற்கனவே இருக்கும் போது வேறு அமைப்பில் சென்று வேலை செய்ததன் விளைவைப் பார் ...2 வருடமாக வீட்டைக் கூட கவனிக்காமல் இதில் இயங்கினாயே ... இப்போ ஒரு விமர்சனத்தைத் தாங்காமல் பதிவை எடுக்க வைத்து விட்டனர் என்கிறார் . 3 மாதமாக என்னை கடும் மன உளைச்சலுக்கு இந்த நிகழ்வு உட்படுத்தியது. 


அன்றுடன் எனது நிலை மாறி விட்டது என்னுடைய கேள்விகள் ... 


10 கட்டுரைகள் எழுதிய போது எந்த எதிர்வினையும் வரவில்லை. அதுவரை இவர்கள் யாரும் பாதிக்கப் படவில்லை. 11வது கட்டுரையால் இயக்கத்துக்கு ஒரு நெருக்கடி வந்து விட்டதால்  நம்மை இயக்கத்தின் பெயரில் எழுதக் கூடாது என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது ?


முதல் கட்டுரையிலேயே என்னைத் தடுத்து உங்கள் பெயரில் எழுதுங்க , இயக்கத்தின் பெயரில் எழுதினால் எதிர்காலத்தில் பிரச்சனை வரும் என்று கூறியிருந்தால் எனக்குப் புரிந்திருக்குமே ?


 ஆசிரியர் சங்கங்கள் சரியாக இருந்திருந்தால்  பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் என்ற ஒன்று தேவையே இல்லைதானே ? உண்மையை சொல்லாமல் முகமூடி போட்டு ஒரு இயக்கம் எதற்கு ?


ஏற்கனவே எழுதிய 10 கட்டுரைகளும் பள்ளிக்கல்வித் துறையின் 10 மையமான பிரச்சனைகள். எந்த ஒன்றையும் குழுவில் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆழமாக வாசித்து உரையாடி விவாதம் செய்யவில்லை. ஆனால் இந்த 11 வது கட்டுரை மிகப் பெரிய பிரச்சனையாகப் போய்விட்டது. 


சரி , நான் மின்னஞ்சல் அனுப்பி , சூழல் சரியில்லை எனக்கு ஒரு பிரேக் தேவை என தலைவர் , செயலரிடம் தெரிவித்து இருந்தேன். ஆனால் அதன் பிறகு இன்று 8 மாதங்கள் ஆயிற்று. வெகு சில நட்புகள் அழைத்து ஏன் இயக்கத்தில் காணோம் என விசாரிப்பர் .ஆனால் நாம் 2 ஆண்டுகள் உழைத்ததற்கான எந்த சுவடும் இல்லை. 


2 முறை செயலர் அழைத்து கூட்டங்களில்  கலந்து கொள்ளக் கூறினார் .நானும் எதுவும் கூறவில்லை .ஆனால் இந்த 8 மாதங்களில் மாநில அளவில் இது குறித்து விசாரணையோ , உரையாடலோ நிகழ வில்லை. ஒருவர் ஏதோ ஒரு சூழலால் இயக்கத்திலிருந்து விலகி இருந்தால்  அப்படியே விட்டு விடுவது தான் இயக்க நடைமுறையா எனத் தெரியவில்லை. எப்போவாச்சும்  வந்து சேர்ந்து  இயங்கலாம் என நினைத்து இருந்த தருணத்தில் ….


கடந்த 20 நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் குழுவில்  (PIKPI STATE TEAM ) என்னை அட்மின் பவரில் இருந்து நீக்கியதாக தகவல் காட்டியது. செயல்படாததால் நீக்க வேண்டும் எனில் கடந்த 2 ஆண்டுகளில் நானும் செயலரைத் தவிர மற்ற அட்மின்களது பவரைத் தூக்கியிருக்க வேண்டும் . 2 நாட்கள் கழித்து செயலரை அழைத்து இது குறித்து கேட்டேன். அவரோ தெரியவில்லை என்றார்.  மேலும் அவர் நீங்கள் என்னிடம் பிரேக் கேட்டிங்க , ரொம்ப நாள் ஆயிடுச்சு , குடும்ப சூழல் அனைத்தையும் கணக்கில் கொண்டு இணைந்து செயல்பட முடியாது எனில் தெரிவித்து விடுங்கள் என்றார். 


அப்போது  தான் எனக்கு ஒன்று புரிந்தது. இயக்கம் நம்மை மறந்து விட்டது போலும் . அட்மின் பவரை எடுக்கறாங்க எனில் இது ஏதோ ஒன்றின் வெளிப்பாடு என உணர்ந்தேன். 


எனது குடும்ப சூழலைக் காரணம் காட்டி இருந்தால் இந்த  இயக்கமே வளர்ந்திருக்காதுங்களே தோழர் என எண்ணினேன். இன்று வரை காத்திருந்தேன். யார் என்னை அட்மின் பவரில் இருந்து நீக்கினார்கள் என செயலரிடமிருந்து தகவலே இல்லை. 8 மாதமாக தலைவர் முறை கூட அழைத்து இயக்கத்தில் நான் செயல்பட வேண்டும் எனக் கேட்கக் கூட இல்லை …

 அடடா …


தோழர்கள் என அழைத்துக் கொள்ளும் அமைப்பிலேயே தோழமை உணர்வு இல்லை. பெண்களின் உழைப்பு கணக்கில் கொள்ளப்படுவதேயில்லை ..


நாம் ஏற்கனவே பள்ளிக் கல்வியை காப்பாற்றும் பல வேலைகளைத் தான் செய்து வருகிறோம் .ஆகவே அதனை நமது A3 அமைப்பின் வழியாகவேத் தொடர்வோம் என்பதால் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்திலிருந்து விலகுகிறேன். 



கீழுள்ள லிங்க் எனது முகநூல் பக்கத்தில் சங்கங்கள் குறித்து நான் எழுதிய கட்டுரைப் பதிவு. 

https://m.facebook.com/story.php?story_fbid=1293443860838664&id=100005191869415




 



அடித்தள மக்கள் வரலாறு

அடித்தள மக்கள் வரலாறு 


நூலாசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் தமிழகத்தின் நன்கு அறியப்பட்ட மார்க்சியக் கருத்து நிலையாளர், செயல்பாட்டாளர் , ஆய்வாளர் , தமிழகத்தின் மிகச் சிறந்த , புகழ் பெற்ற நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் - என பன்முகத் திறன் பெற்ற  மனிதர். இந்நூலில் எளியோர் வாழ்க்கையைப் புதிய சிந்தனை வழியே பதிவு செய்துள்ளார்.


சமூக வரலாறு என்பது புறக்கணிக்கப்பட்ட ஒன்றாக இந்தியாவில் உள்ளது என்பர். அதை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால் , இந்த நூலில்  மாற்று வரலாறாகவே இங்கு அடித்தள மக்கள் வரலாற்றைப் பார்க்க முடிகிறது.


நம்மைச் சுற்றி வாழும் மக்களில் 80% அடித்தள மக்கள் தான் , அவர்களது வாழ்க்கை எங்கெல்லாம் புறக்கணிக்கப்படுகிறது  , எங்கு அவர்களது உழைப்பு சுரண்டப்படுகிறது , ஏன் பல சடங்குகள் அவர்களை ஒரு வட்டத்திற்குள் தள்ளி அரண் போலத் தோன்றி  சிறைப்படுத்தியிருக்கிறது  இந்த சமூகம் என நமக்கு தெளிவாக இப்புத்தகம் சொல்கிறது. 


தஞ்சை பெரிய கோயில் ராஜ ராஜ சோழனைப் பற்றி பெருமிதமாக நாம் பேசும் போது , கோயிலைக் கட்டிய சாதரண கட்டிடத் தொழிலாளர்கள் நம் மனதில் கேள்விகளாகத் தேடப்படுவார்கள் .


சீனப் பெருஞ்சுவர் ,தாஜ்மகால் என எல்லா பிரம்மாண்டங்களிலும் காணாமல் போன சாதாரண மக்களின் வாழ்க்கை என்ன ?


இந்த நோயச்ச கொரோனா காலத்தில் துப்புரவுப் பணியாளர்கள் , மருத்துவ மனைகளில் உயிர்க்கு பாதுகாப்பற்ற ஏற்பாடுகளற்ற முறையில் பணியாற்றும் எத்தனையோ எளிய மனிதர்கள் குறித்து நாம் நினைத்திருப்போம். இவர்கள் அனைவரைப் பற்றியும் பேசுகிறது இப்புத்தகம் .


ஆங்கிலேயரின் வரவால் இந்தியப் பொருளாதாரத்தில்  ஏற்பட்ட முக்கிய மாற்றம் இந்திய விவசாயி , தான் விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை இழந்தது தான். இதை மிக எளிதாக நாட்டார் பாடல் ..


ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா

காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி 

காகிதம் போட்டான் வெள்ளைக்காரன் ... என்று குறிப்பிடுவது எதை ? அடித்தள மக்களிடம் நிலவிய வெள்ளையர் எதிர்ப்புணர்வை என்பன போன்ற உற்று நோக்குதலை விரிவாகப் பதிவு செய்கிறது இப்புத்தகம் . 


இந்திய வரலாற்றில் வாய்மொழி  வரலாறுகளின் வழியே அடித்தள மக்களின் வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்களை வெகுவாக நமக்குத் தருவதோடு பழ மரபுக் கதைகளும் வரலாறும் என பரவலான ஒரு அறிவையும் புரிதலையும் தருகிறது. 


ஒவ்வொரு வரலாற்றின் பின்னும் மறைந்துள்ள வரலாறுகளைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்கிறார் ஆசிரியர் . தாழ்த்தப்பட்ட ,பின் தங்கிய சாதியைச் சேர்ந்தவர்கள் ஆதிக்க சக்திகளுக்கும் அவர்கள் உருவாக்கிய சமூக மரபுகளுக்கும் எதிராகச் செயல்பட்ட வரலாறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 


ஒடுக்கப்பட்டோருக்கான வாழ்வியலை இயல்பாகப் பதிவு செய்வதோடு பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள் எவ்வாறு அடித்தள மக்கள் வாழ்க்கையை இழிவுபடுத்த உருவாக்கப்பட்டன என்பது மிக ஆழமாகப் பேசப்பட்டுள்ளது .


அரசியல் ஆதிக்கம் , பொருளியல் ஆதிக்கம் , பண்பாட்டு ஆதிக்கம் இவற்றில் வேரூன்றியுள்ள ஒடுக்குமுறைகள் காரணங்கள் , மேட்டிமைக்கும் ஒடுக்கு முறைக்குமான தொடர்பு என நம்மை வெகு ஆழமாக வேறு தளத்திற்கு அழைத்துச் சென்று  சிந்தனை செய்ய வைக்கிறது இந்நூல் .


பஞ்ச காலத்தில்  மக்களின் வாழ்க்கை  , மறைந்து வரும் தானியங்கள் , சாமியாடும் மனைவி என எல்லாத் தலைப்புகளும் அடித்தள மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் படி விரிவாகப் பேசப்பட்டுள்ளது


கட்டுரைகளுக்கு இணையான படங்கள் இணைக்கப்பட்டு வெகு நேர்த்தியான ஒரு அட்டைப் படத்துடன் 300 பக்கங்களில் அற்புதமான ஒரு புத்தகம் .


துணை நூற்பட்டியலே 8 பக்கங்களுக்குத்  தரப்பட்டுள்ளது.



இந்திய இலக்கியச் சிற்பிகள் ஆர்.சூடாமணி. .

இந்திய இலக்கியச் சிற்பிகள் 

ஆர்.சூடாமணி. .


சாகித்திய அகாதெமி வெளியிட்ட இந்த நூல் 2017 இல் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. 


ஆசிரியர் : முனைவர்  கே.பாரதி . சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் .எழுத்தாளர் சூடாமணியின் உயிலைச் செயல்படுத்தியவர். ஆர்.சூடாமணி நினைவு அறங் கட்டளையின் அறங்காவலர். சிறுகதை , கட்டுரை , குறுநாவல் போன்ற படைப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ள இவர் , இலக்கிய வீதியின் 'அன்னம் விருது' பெற்றவர். 


இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் எழுத்தாளர் ஆர். சூடாமணி அவர்கள் குறிப்பிடத் தக்கவர் . சுமார் ஐம்பது ஆண்டுகள் 1954 முதல் 2004 வரை தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கியவர் .உளவியல் நுட்பங்களை எழுதும் ஆற்றல் பெற்றவராக வாழ்ந்துள்ளார். இந்த நூலை வாசிக்கும் போது ஒரு ஆதர்ஸ பெண்மணியின் வாழ்வு சிந்தனை , கருத்தாக்கம் , மதிப்பீடுகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. 


அர்ப்பணமாக ஒரு வாழ்வு , மானுட மேன்மைகள் , உளவியல் நுட்பங்கள் , பெண்ணிலைப் பார்வை , நாவல்கள் குறுநாவல்கள் என்ற ஐந்து தலைப்புகளால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 


திருமணம் செய்து கொள்ளாமலேயே தனித்து வாழும் ஒரு பெண் அவரது குடும்ப உறவுகளுடன் கொண்ட அபரிதமான பிணைப்பு, அவர்களுக்குப்  பின் தன் எழுத்துப் பணியில் கடந்த பயணங்களின் செறிவு படிப்பவரை நெகிழ வைக்கிறது. சூடாமணியின் அத்தனை பரிமாணங்களும் அவரது தாய் தந்த சீதனமாகவே வெளிப்படுகிறது.


சாதரணமாக மற்றவர்கள் செய்யக் கூடிய எந்த வேலையுமே சூடாமணிக்கு மிகப் பெரிய சவாலாக இருந்துள்ளது. அந்த சவாலை அவர் ஏற்றுக் கொண்ட விதமும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து இயங்கியதும் எங்ஙனம் என்பதை விரிவாக விளக்குகிறது நூல். இத்தனைக்கும் ஆதாரம் அவரது தாய் கனகவல்லியாக இருந்துள்ளார். அம்மா கனகவல்லி பற்றி வாசிக்கும் போது நமக்கு இப்படி ஒரு தாய் அமையவில்லையே என ஏக்கம் வருகிறது. 


சூடாமணி முழு நேர எழுத்தாளராக அறியப்பட்டு கலைமகள் , சௌராஷ்டிரமணி , தீபம் , கல்கி , ஆனந்த விகிடன் ஆகிய பத்திரிகைகளில் அவரது சராசரியாக மாதம் ஒரு சிறுகதை பிரசுரமாகியுள்ளது அறியப்படுகிறது. இவை தவிர நாடகம் , நாவல் , குறுநாவல் என்ற பல முயற்சிகளும் வெற்றி அடைந்துள்ளன. 


1959 இல் மனத்துக்கினியவள் என்ற இவரது நாவலுக்கு கலைமகள் நாராயணசாமி ஐயர் பரிசு கிடைத்துள்ளது. ஆனந்த விகடன் நடத்திய நாடகப் போட்டியில் சூடாமணி எழுதிய இருவர் கண்டனர் நாடகம் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. ஆங்கிலத்திலும் இவரது  200 க்கும் மேற்பட்ட ஆங்கிலச் சிறுகதைகள் பிரசுரமாகியிருக்கின்றன.


சூடாமணியின் நண்பர்கள் மிகச் சிலரே எனத் தெரிய வருகிறது. ராஜம் கிருஷ்ணன் , மகரம் , அம்பை ஆகியோர் சிலர். 


தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களுக்கே உரிய தனிமைப் படுத்தப்பட்ட வாழ்வை (lonely life) சூடாமணி வாழவில்லை. Solitude என்று ஆங்கிலத்தில் சொல்லக் கூடிய மேன்மையான ஒரு தனிமை வாழ்வை சூடாமணி அம்மையார் தேர்வு செய்திருந்த வாழ்க்கையை நூல் அழகாக விவரிக்கிறது. 


எளிய தோற்றம் ,எளிய உடை ,எளிய உணவு ,எளிய வாழ்க்கை என்று வாழ்த்து , காந்தியச் சிந்தனையின் தாக்கத்தாலும் வாக்கு வேறு வாழ்க்கை வேறு என்று இல்லாத ஒரு மனுஷியாக அவர் வாழ்ந்திருக்கிறார் சூடாமணி. 


தன்னைத்தானே மேம்படுத்திக் கொண்டு முழுமை அடையும் குறிக்கோளுடன் இயங்கியவர் சூடாமணி , அதற்கான சுயமுயற்சியும் அவரது எழுத்து பிரதிபலிக்கிறது. தன்னையும் உயர்த்திக் கொண்டு வாசகர்களையும் உயர்த்திய அறம் சார்ந்த எழுத்து அவருடைய தாக இருந்து வருகிறது. 


சூடாமணியின் படைப்புலகம் குறித்து மானுட மேன்மைகள் என்று விரிவாக தொகுத்துள்ளார் நூலாசிரியர். மானுடத்தின் மேன்மைகள் எந்த தருணங்களிலெல்லாம் வெளிப்படக் கூடும் ? எப்போது எவ்விதம் வெளிப்பட்டால் அது சராசரிகளை விஞ்சி நிற்கும் ? இது போன்ற கேள்விகளுக்கு சூடாமணியின் சில கதைகளில் ஆழமான விளக்கங்கள் பொதிந்திருக்கின்றது என புத்தகம் குறிப்பிடுகிறது. மனித இயல்பின் மேன்மையை மட்டுமே மீட்டியெடுக்கும் வீணை போன்ற இலக்கியம் அவருடையது.


சுலபமாக அளந்துவிட முடியாத மனித மனத்தின் சில கூறுகளை தன்னால் முடிந்த அளவுக்கு அடையாளம் காட்டியிருக்கிறார் சூடாமணி .


தமிழ் இலக்கியத்தில் உளவியல் கதைகள் என்ற ஒரு பிரிவு இருக்குமேயானால்  சூடாமணியின் கதைகளை அந்தப் பிரிவில் அடக்கி விட முடியும் என்கிறார் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன்.


கூச்சலோ கூக்குரலோ இல்லாமல் எந்தவிதப் பிரகடனங்களும் இல்லாமல் மெல்ல தனக்காக இலக்கியத்தில் ஓர் இடத்தை ஏற்படுத்திக் கொண்டாள் சூடாமணி. பெண்கள்  குறித்தான தமது பார்வையில் இலக்கியம் படைப்புகள் குறித்து எழுதியதை பெண்ணிலப் பார்வையில் தொகுத்துள்ளார் பாரதி.பெண்களின் அக வுலகம் குறித்த சூடாமணியின் கதைகள் மிக அழுத்தமானவை என்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் .


இறுதிப் பகுதி இவரது நாவல்கள் குறுநாவல்கள் குறித்து பதிவு செய்கிறது. புன்னகைப் பூங்கொத்து (1964) , தீயினில் தூசு (1967) , தந்தை வடிவம் (1967) மானிட அம்சம் (1974) , கண்ணம்மா என்  சகோதரி (1980) ஆகியவை நாவல்கள் .குறு நாவல்கள் குறித்து விடிவை நோக்கி (1959) , உயர்வு உள்ளத்திலே (1967), வாழ்த்துவோம் (1971) , மங்கை பி.ஏ (1971)  , உள்ளடக்கம் (1972) முக்கோணம் ( 1978 ), களங்கமில்லை (1980) ஆகியவை பற்றி விவரிக்கப் பட்டுள்ளது .


இலக்கியம் குறித்து அறியப் பட வேண்டியவர்களில் முக்கியமான பெண்மணி குறித்த இப்புத்தகம் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும். 







.

மலையாளம்

5 ஆவது வாரம் 

போட்டிக்கான பதிவு 

சுயசரிதை / வாழ்க்கை வரலாறு 


புத்தகம் : என் கதை 

ஆசிரியர் : கமலா தாஸ் - மலையாளம் 

தமிழில் மொழிபெயர்ப்பு : நிர்மாலயா 

வெளியீடு : காலச் சுவடு பதிப்பகம் 

முதல் பதிப்பு : 2016

விலை: ரூபாய் 145


கமலா தாஸ் (1934 -2009)

மலையாளத்தில் புனைகதை எழுத்தாளர் மாதவிக்குட்டியாகவும் ஆங்கிலத்தில் கவிஞர் கமலா தாஸாகவும் அறியப்பட்டவர். எழுத்தாளர் , கவிஞர் ,பத்திரிக்கையாளர் என்று உலகப் புகழ் பெற்றவர் . இவரது எழுத்துகள் நாவல் , சிறுகதை , சுய சரிதை , பத்தி ஆகியவற்றின் நூல் வடிவங்களாக இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களாக  வெளியாகியுள்ளன. இவரது சிறுகதைகளை ஆதாரமாக வைத்து திரைப்பபங்களும்  கூட எடுக்கப்பட்டுள்ளன. 

ஆசிய கவிதைப் பரிசு, கென்ட் விருது , ஆசான் கவிதை விருது , கேரள சாகித்திய அகாதெமி விருது , மத்திய சாகித்திய அகாதெமி விருதுகள் , வயலார் விருது , எழுத்தச்சன் விருது ஆகியவற்றைப்  பெற்றவர்  இவர். இவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளார்.


நிர்மால்யா : சிற்றிதழ்களின் மூலம் மொழியாக்கப் பணியைத் தொடங்கியவர் .மலையாளத்திலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 2010 இல் மொழி பெயர்ப்புக்காக சாகித்ய அக்காதெமி விருதைப் பெற்றவர். இந்த நூலைப் பொருத்தவரை அழகானப் புரிதல் , கச்சிதமான தமிழ் நடையில் தமிழில் எழுதப்பட்ட உணர்வுடன் வாசிக்க முடிகிறது. 


என் கதை : 


புத்தகம் கமலா தாஸ் அவர்களின் அக வாழ்க்கையுடன் இணைத்து, அவரது  வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்கிறது. 


ஆரம்பமே ..

உங்களுடையது அல்லாத சுகங்கள் எனக்கு இல்லை

உங்களுக்குத் தெரியாத வேதனைகள் எனக்கு இல்லை 

நானும் 

'நான் ' என்ற பெயரால் அறியப்பாடுகிறேன் என கமலா தாஸ் கூறிய வாக்கியங்களுடன் ஆரம்பிக்கிறது. 


இருபத்தியேழு  உட் தலைப்புகளில் கமலா தாஸ் தனது வாழ்க்கையை , சந்தித்த நபர்களை , சங்கடங்களை , சந்தோஷங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வது நமக்கே ஆறுதலாக உள்ளது. , துயரங்கள் , வெற்றிகள் , நேசம் , காதல் , காமம் இப்படி எல்லாவற்றையும் வெகு சுவாரஸ்யமாகப் பதிவு செய்திருக்கிறார். அவர் மாதவிக் குட்டியாய் மலையாளத்தில் தந்த இந்தத் தொடர்களுடனான சுய சரிதை தன் வரலாற்றை கமலா தாஸாக ஆங்கிலத்திலும் செறிவாகத் தந்துள்ளார் என்பதற்கான தகவலும் அறிய முடிகிறது கையளவு சொற்கள் மூலமே தனது உலகை முழுவதுமாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை வாசிக்கும் போது உணர முடிகிறது. 


ஒவ்வொரு அத்யாயத்தை வாசிக்கும் போதும் இந்த 'என் கதை ' நமக்கு பலவற்றையும் கற்றுத் தருகிறது. அதோடு அவரவர் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கவும் செய்கிநது. ஒவ்வொரு பெண்ணும் தனக்கான வாழ்வின் எல்லைகளை  முகமூடிப் போட்டு வாழும் சமூகச் சூழலில் தன் ஆசைகள் , விருப்பங்கள் , உளம் சார்ந்த உடல் சார்ந்த ஏக்கங்கள் என எல்லாவற்றையும் வெளிப்படையாகப்  பேசி இருப்பது தான் இப்புத்தகத்தின் வெற்றி எனலாம் .


ஒழுக்க நெறி என்ற பெயரில் நம்மிடையே விவாதிக்கப்படுவதைப் புறக்கணிக்கவும் ஏற்க மறுக்கவும் தீர்மானிக்கும் உறுதியை கமலா தாஸ் வெளிப்படுத்துகிறார் . அழுகிப் போகும் உடலே அடித்தளமாக இருப்பதும் மனிதனின் மனமே உண்மையான ஒழுக்க நெறிக்கு ஆதாரமாக விளங்குவதும் பற்றி பேசுகிறார் .

அவர் பிறந்த வளர்ந்த ஊரின் சூழல்  , அங்கு வாழும் மனிதர்கள் , இவரது திருமண வாழ்வு , புத்தகப் பிரியங்கள் , எழுத்தாளர் பயணம் அனைத்தும் நம்மோடு பிரயாணம் செய்கின்றன. காந்திய வீட்டு சூழல் குறித்தும் பல இடங்களில் குறிப்பிடுகிறார். 

மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் , கமலா தாளன் ' என் கதை 'யைத் தவிர்த்து , ஒரு பெண்ணின் அக வாழ்க்கையை அதன் சோகத் தனிமையுடன் உண்மை அன்புக்கான அதன் தீராத வேட்கையுடனும் தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும் அதன் ஒழுங்கீனத்தின் நிறங்களுடனும் அதன் கொந்தளிக்கும் கவிதையுடனும் இந்த அளவு உண்மையுணர்வுடன் முழுமையாக வெளிப்படுத்திய ஒரு இந்திய சுயசரிதையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை என்கிறார். 





என் மாயாஜாலப் பள்ளி

என் மாயாஜாலப் பள்ளி


தன்னறம் நூல் வெளி குக்கூ காட்டுப் பள்ளி வெளியிட்டுள்ள மிகச் சிறிய புத்தகம் இது. ஆனால் மிகப் பெரிய அழியாத தத்துவத்தைக் கற்பிக்கிறது. இது ஒரு மொழி பெயர்ப்பு நூல். தமிழில் ராகுல் நகுலன் மொழி பெயர்த்துள்ளார்.


இப்புத்தகத்தை  எழுதியவர் அபய் பங். இவர் தலை சிறந்த இந்திய மருத்துவர். சமூக ஆர்வலராகவும் இயங்கி வருகிறார் . மஹாராஷ்டிர மாநிலத்தில் கட்சி ரேலி பகுதியைச் சேர்ந்த, பின்தங்கிய பூர்வீக மக்களுடன் இணைந்து பணியாற்றி, அங்கு  பழங்குடி மக்களுக்கான மருத்துவமனையை நிறுவியுள்ளார். இவரது மனைவி ராணி பங் , கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பிறந்தவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் செவிலித் தாய்கள் பணியை தம்பதியர் இருவரும் உருவாக்கியுள்ளனர். இவரது SEARCH மருத்துவ இயக்கம் 60க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது. 


இவர் தனது சிறு வயது பள்ளி அனுபவத்தைத் தான் இங்கு நமக்காக  எழுதியுள்ளார். சேவா கிராமத்தில் 1950 இல் பிறந்த இவர் தனது அம்மா முதல்வராகப்  பணியாற்றிய பள்ளியில் சில ஆண்டுகள் கல்வி பயின்றுள்ளார்  .அது  காந்தி அமைத்த நயிதாலிம் பள்ளியாகும். அங்கு தனது குழந்தைப் பருவத்தைப் பற்றிய நினைவுகளை அனுபவங்களைக் குறித்துப் பகிர்ந்துள்ள புத்தகம் தான்  இந்த என் மாயாஜாலப் பள்ளி .


நயிதாலிம் என்ற இந்தி சொல்லுக்கு புதிய கல்வி என்று பொருள் கொள்ளலாம். காந்தி தந்த புதிய கல்வி குறித்த புரிதலுக்கும் இன்றைய புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்த புரிதலுக்கும் உள்ள மிக நீண்ட இடைவெளியை இந்தப் புத்தகம் நமக்குத் தருகிறது .


ஒரு குழந்தையின் மனதை மேம்படுத்த , வாழ்வியல் கல்வியைக் கற்பிக்க இயற்கையோடு இணைந்த கல்வி குறித்த அனுபவங்களைத் தருவதே காந்தியின் கல்வியாக இருந்துள்ளதை இப்புத்தகம் வழியே அறிய முடிகிறது.


கல்வி என்பது நான்கு சுவர்களுக்குள் பயில்வதல்ல என்பதைத் திடமாக நாம் நம்ப ஏராளமான திறப்புகள் இப்புத்தகத்தில் உள்ளன. 


இந்தக் கல்வி முறையை நடைமுறைப் படுத்த நல்ல பாடத்திட்டத்தை அமைக்க காந்திஜிக்கு உதவ , ரபீந்திரநாத் தாகூர் இரு ஆசிரியர்களை சேவாகிரமத்திற்கு அனுப்பியிருந்தாராம். இலங்கையிலிருந்து திரு. அரிய நாயகம்  மற்றும் பெங்காலிலிருந்து திருமதி ஆஷாதேவி ஆகிய இருவரும் தான் தாகூர் காந்திக்கு உதவ அனுப்பியவர்கள். 


விலங்குகளின் அறிமுகம் , துறவிகளின் திருவிழா , தாவரவியல் கற்றவிதம் , வாழ்வில் பயன்படுத்தும் கணக்குப் பாடம் , சமையலின் வழி பயில்தல் , விவசாயப் பரிசோதனைகள் , வாழ்க்கைக்கான கல்வி  , புது வழிமுறைகள் , அந்தப் பள்ளி எங்கே போனது ? ஆகிய தலைப்புகளில்  பேசப்பட்டுள்ள புத்தகம் இது .


ஒவ்வொரு தலைப்புக்குள்ளும் அபய் பங்கின் அனுபவம் ஒரு ஆசிரியராக பெற்றோராக கல்வி செயல்பாட்டாளராக என்னை ஏங்க வைக்கிறது என்பது தான் உண்மை. எளிமையான இப்படிப்பட்ட கல்வி தானே இங்கும் அரை நூற்றாண்டு முன்பு வரை இருந்து வந்தது. இன்று ஏன் இப்படி பிரம்மாண்டத்தைப் புகுத்தி கல்வி என்பது வெறும் சான்றிதழ்க மாற்றி விட்டனர். இயற்கையுடன் ஓடியாடி உடலுழைப்புடன் கூடிய வாழ்வியலை அனுவித்து பெற்ற கல்வியை இன்று எட்டாக் கனியாக்கி அதையும் சுவைக்க முடியாததாக மாற்றி வெறுக்க வைத்த சோகம் என்ன ?


எங்கோ தடம் மாறினோம் ?எப்படி முகமூடிக் கல்விக்குள் உண்மை முகத்தைப் புதைத்துக் கொண்டோம் .ஏன் இங்கு நமது கண்களும் மனதும் மெய்யை உணர மறுத்துப் பிடிவாதம் பிடிக்கிறது என யோசிக்க வைக்கிறது. 

ரயில் பெட்டி வகுப்பறைகளைக் கொண்ட

டோடோசான் புத்தகத்தை வாசிக்கும் போதும் , குதிரைக் கொட்டகை வகுப்பறைகளை நடத்திய தூய்ஷேன் இடம்பெற்ற  முதல் ஆசிரியர் புத்தகத்தை வாசிக்கும் போதும் ஏற்பட்ட மனநிலையை விட கூடுதல் நிறைவைத் தருகிறது என்றால் மிகையாகாது. அதற்கான காரணம் நம்முடன் வாழும் சமகால மனிதர் அபய் பங் அவர்கள். ஆம் .. இத்தகு கனவுப் பள்ளியில் பயின்று மருத்துவத் துறையில் உலகளவில் சிறந்த சாதனை ஆளுமைகளில் ஒருவராக அறியப்படுகிற இவரின் பள்ளிக் காலம் இன்றைய பெற்றோருக்கு நல்ல வழிகாட்டி .

மாற்றுக் கல்வி சார்ந்த உரையாடல்களும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தருணத்தில் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் . 

எழுத்தும் ஒவியமும் நம்மை ஈர்த்து நம் மனதை உழுகிறது. இந்த மாயாஜாலப் பள்ளி அனுபவங்களை நாம் விதைத்தால் எதிர்காலம் உள்ளபடியே காந்திய சிந்தனையை அறுவடை செய்யும் பொற்காலமாக மாறும் என்பது திண்ணம் .


உமா 



.


நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள்

நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள் 


நாட்டுப்புறக் கதைகளில் முடிவெடுக்கும் பெண்கள் என்ற நூலின்  ஆசிரியர் திருமதி லைலா தேவி, இவர்  பள்ளியில் இடை விலகியவர் (டிராப் அவுட் )படிப்பை நிறுத்திய 20 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் முடிந்து பிள்ளைகள் வளர்ந்து கல்லூரிக்கு புறப்பட்டபோது,  திறந்தநிலை பல்கலைக்கழகம் அளித்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் படிப்பைத் தொடங்கி இருக்கிறார். பள்ளியின் இறுதித் தேர்வையே எழுதாதவர்  தமது  எம்ஏ எம்பில் பட்டங்களுடன் ஆய்வு நூலையும் வெளியிட்டது  பாராட்டுக்குரிய செயல் அல்லவா ? அந்த  ஆய்வு தான் இந்நூல்.


 வேடிக்கையான நாட்டுப்புறக் கதைகளின் வழியே பெண்களின் முடிவெடுக்கும் திறனை ஆய்கிறார் லைலா தேவி. நாட்டுப்புற கதைகளில் ததும்பும் சிரிப்புக்கும் பெண் சிறு தெய்வக் கதைகளில் பொங்கும் துயரத்துக்குமான  இடைவெளி குறித்து கேள்வி எழுப்புகிறார் , சங்க இலக்கியத்தின் மீது அளவற்ற ஈடுபாடு கொண்ட இவருக்கு தமது பேரப் பிள்ளைகள் மீது அலாதி பிரியம் எனக் குறிப்பிட்டுள்ளார். 


இந்த  ஆய்வு நூல்,  8 பகுதிகளைக் கொண்டுள்ளது. முன்னுரை, பெண்மைய கதைகள் , சந்தர்ப்பங்களும் முடிவுகளும், மனிதர்களும் உணர்வுகளும் ,சிறுதெய்வ கதைகளில் முடிவுகள், முடிவுரை இந்த ஆறு பகுதிகளில் இந்த தலைப்பை ஒட்டி முழுக்க ஆய்வு செய்கின்றார்.  கடைசி இரண்டு பகுதிகள் பின்னிணைப்பு மற்றும் துணைநூல் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.


நினைத்துப் பார்க்கிறேன் என்ற - நூலாசிரியர் லைலா தேவி குறிப்பிட்ட பகுதியில் அவருடைய பள்ளி இறுதி வகுப்பை முழுமையாகப் படித்து முடிக்காத  வாழ்க்கை குறித்தும் அதற்குப் பிறகு அவர் திருமணம் செய்து பல வருடங்கள் கழித்து   தொலைதூரக்கல்வியில் கல்வி கற்று 

எம் ஃபில் வரை படித்தது அதற்கப்புறம் ஆய்வு செய்த குறித்த செய்திகள்  விரிவாக கூறப்பட்டுள்ளன.


ஆய்வுக்களம் நம்முடைய தமிழக நாட்டுப்புறக் கதைகள் தான், நாட்டுப்புறக் கதைகளில் சிக்கலான நேரத்தில் பெண்கள் எடுக்கும்  முடிவுகள் குறித்து   நாம் பார்க்கும் பொழுது , பெண்ணைச் சுற்றி உலகம் இயங்குவதையும் பெண் தலைமைப் பாத்திரம் எடுப்பதையும் நாட்டுப்புறக் கதைகளில் மட்டுமே காணமுடிகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவின் எந்தப் பகுதி சார்ந்த கதையாக இருந்தாலும்  இதுபோன்ற ஒரு முடிவுக்குத்தான் வர இயலுகிறது என்கிறார்.பெண்ணின் அறிவாற்றலை நாட்டுப்புறக் கதைகளே உண்மையாகப்  பொருள்பட உணர்த்துகின்றன என்ற நோக்கத்தை முன்வைத்து இந்த நூலைத் தொடங்குகிறார் ஆசிரியர்.

 

இந்த நூலை வாசித்த பிறகு இனிமேல் வாசிக்கக் கூடிய நாவல்களை, வாசிக்க கூடிய புத்தகங்களை எவ்வாறு அணுகலாம் என்ற ஒரு சிந்தனை நமக்குள் தோன்றுகிறது.  எப்படி ஒரு நாம் கதையைப் பார்க்க வேண்டும் என்பதற்கான ஒரு விளக்கத்தையும் இந்த நூல் நமக்குத் தருகிறது. பெண்மையக் கதைகளாக , ஒரு பதினைந்து கதைகளை ஆய்வுக்காக  எடுத்துள்ளார்கள் .


அடிப்படையில் நாட்டுப்புறக் கதைகளை மூன்று வகையாக (புராணக்கதை, பழமரபுக் கதை நாட்டுப்புறக் கதை)  பிரிக்கலாம் என்றும் அதை பின்னர் , ஸ்டித் தாம்ஸன்  என்பவர் பன்னிரெண்டு வகையாகப் பிரித்துள்ளார் என்ற வகைப்பாடும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. போக்ஸ்  என்பவர் வீட்டு கதைகளை ஆண்கள் கதைகள் பெண்கள் கதை என்றுதான் அழைப்பாராம்,  கூடுதலாக ஆய்வறிஞர்கள் கொடுத்துள்ள விளக்கங்களையும் தந்துள்ளார்.


இதில் நாம் கவனிக்க வேண்டியது பெண் மையக் கதைகள் , இந்த நாட்டுப்புறக் கதைகளில் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ளன பெண்மையக் கதைகளுக்கும் பிற கதைகளுக்கும் உள்ள வேறுபாடுகளையும் தான். 


சாதாரணமாகக் கதைகள் பெண்களின் திருமணத்தோடு முடிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஆனால் பெண்மையக் கதைகள் திருமணத்தில் இருந்து தொடங்கும் என்ற கருத்து நமக்கு புதியதாக இருக்கிறது. பிராய்டின் உளவியல் அணுகுமுறையையும்  காட்டுகிறது என்று எடுத்துக் காட்டுகளுடன் குறிப்பிட்டுள்ளார்.


 இந்த புத்தகம்  பல கோணங்களில் நமக்கு பல செய்திகளை கொடுக்கிறது .விருதுநகர் மாவட்ட நாட்டுப்புறக் கதைகள் 15 தான் இவ்வாய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டி

ருக்கின்றன . ஒவ்வொரு கதையும் வாசிக்கும் பொழுதும்  ரசனையுடன் நகைச்சுவையோடு பொருள் பொதிந்து ஆழமாக ஆனால் மிக எளிய முறையில் சிறு பக்கத்தில் முடியக்கூடிய குறுங்கதைகளாக  இருக்கின்றன. 


அண்டாப் பணமும் பணியாரமழையும்  என்ற கதையில் பணியார மழை என்பதெல்லாம் அது ஒரு புதிய உருவகமாக நமக்கு தோன்றுகிறது. திருடர்களை வெற்றி கண்டவள் கதையில் பெண்ணின் முடிவெடுத்தல் திறன் ,முதலையிடமிருந்து கணவனை காப்பாற்றியவள் கதையில் அவளது சாதுர்யம்  ,சுடுகாடு போய் மீண்டு வந்த ஒரு பெண்ணின் கதை எவ்வாறு அங்குள்ள திருடர்களை  எதிர்கொள்கிறாள் என்றும், பாம்புகளிடம் இருந்து கணவனை காப்பாற்றியவள்  என்ற கதை பெண்  எவ்வாறு மிகவும் ஜாக்கிரதையாக உணர்வுடன்  விழிப்புடன் இருக்கிறாள் என்பதை மையப்படுத்தியே குறிப்பிடப்பட்டுள்ளது.

 போலி சன்னியாசி கதையில் அவள் தன் குடும்பத்திற்காக பிரச்சினை வரும் பொழுது எவ்வாறு சமயோசிதமாகத் திட்டமிடுகிறாள் என்று ஒரு முடிவினை கொடுக்கிறது . 


உறவின் இயல்பு அறிந்தவள்  கதையில்  எல்லோர் வீட்டிலும் பிரச்சினை இருக்கிறது அதை எவ்வாறு நாம் கடந்து போக வேண்டும் என்று சொல்லப்படுவதாக அப்பெண் முடிவுக்கு வருவதும் , . வறுமையிலும் விருந்து படைத்தாள் என்ற கதையில் ஒரு மாமியார் , மருமகனுக்கு வறுமையைக் காரணம் காட்டாமல் விருந்தோம்பலை எவ்வாறு ஒரு திட்டமிடலுடன் சமயோசிதமாக யோசித்து விருந்து உபசாரம் செய்கிறாள் என்று அழகாக குறிப்பிடப்பட்டுள்ளது , 

காக்கா  இறைச்சியடி..

 கண்ணில் இடும்  வெண்ணையடி..

 ஊர்ப் புழுங்கலடி ..

உங்கம்மா கைத் திறமையடி ..

உண்டேன்டி ..உண்டேன் ..

.. என்று கணவன் அவனது மனைவியிடம் மாமியார் புராணம் பாடுவதாக சொல்லக் கூடிய இடங்கள் நகைச்சுவையோடு கூடிய நல்ல தருணங்களாகத்  தோன்றுகின்றன. சாமியாடி சமாளித்தல் என்ற கதையில் மாங்காய் , மீன் குழம்பு  உணவுக்காக , கணவனை  ஒரு பெண் எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பது விசித்திரம்.


சின்ன சின்ன விஷயத்துக்காக பெண்கள் எப்படி எல்லாம் திட்டமிடுகின்றனர் எப்படி பெண் மையப் பாத்திரமாக இருக்கிறாள் என்று தான் இந்த கதைகள் முழுவதும்  மீண்டும் மீண்டும் சொல்கின்றன. கணவனுக்கு அதேபோல வெற்றியை தேடித் தந்தவள் என்ற கதையில் குருவாக இருக்க கூடிய கணவன் எவ்வாறு பயந்து நடுங்குகிறான் , அதை மாற்ற   சாதுரியமாக  முடிவு எடுக்கக் கூடிய பெண்ணின் கதாபாத்திரத்தை கொண்டுவருகிறார்கள். அதேபோல கவனம் சிதறாத மணமகனைத் தேர்வு செய்த அவள் பேச்சில் கெட்டிக்காரி ...இந்தக் கதைகளும் நமக்கு பெண்கள் எப்படி கூர்ந்து அறிவாற்றலுடன் முடிவெடுக்கும் திறன் பெற்றுள்ளவர்களாக இருக்கின்றனர் 

என்று நம்மை எண்ண வைக்கிறது.

 புத்திசாலி மாப்பிள்ளையைக் கண்டுபிடித்த ஒரு புத்திசாலிப் பெண் நம்மை வியக்க வைக்கிறார். 


 தான் ஆண்ட உலக்கையும்

 தங்கப் பூஞ்சரமும் தலை மருமகளுக்குன்னு சொன்ன கதையால்ல இருக்கு…. என்பது சொலவடை. இந்த சொலவடைப் பிறந்தது என்பதற்கான தப்பு செய்து தப்பித்தவள் கதை..  யதார்த்தம் அறிந்தவள் என்ற கதையில்  வீட்டின் யதார்த்தம் இப்படித்தான் என்று அறிந்து கொள்ளும் பெண்ணின்  கதை ..


இப்படி எல்லாக் கதைகளிலும் பெண் எடுக்கும் வடிவங்கள் …. மகளாக , மனைவியாக, தாயாக ,மாமியாராக என்ற நான்கு நிலைகளில் மையப் பாத்திரமாக அது குறித்து ஒரு ஆய்வை இந்த நூல் நமக்கு தருகிறது.


 இவற்றில் மனைவியாக வரும் கதைகளே மிகுதியாக இருக்கின்றது பெண்மையக் கதைகளில் மனைவியே முக்கிய கதாபாத்திரம் என்று கூறலாம் திருமணத்துக்குப் பின் நடக்கும் கதைகள் என பெண்மையக் கதைகளுக்கு ராமானுஜம் இலக்கணம் வகுத்த வழியில் இங்கு சுட்டிக் காட்டி நூலாசிரியர் நமக்கு விளக்கம் தருகிறார். 


அடுத்ததாக சந்தர்ப்பங்களும் முடிவுகளும் என்ற பகுதியில் முடிவெடுத்தல் குறித்து ஆழமாக விவாதம் நடைபெறுகிறது . ஒவ்வொரு கதையின் முடிவும் அடிப்படை சாதுரியமாக இருக்கிறது உடல்சார்ந்த ஆற்றலை விட சாதுரியம் ஆபத்தில் உதவக்கூடிய தன்மை பெற்றது . திறமை முக்கியமானது ஆனால் சாதுரியம் அவசியமானதே என்கிறார் கதையாசிரியர் .


இறுதியாக மனிதர்களும் உணர்வுகளும் என்ற தலைப்பில் ஆய்வுசெய்து கதையில் உள்ள சிக்கல்களை சந்திக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் மனிதர்களையும் மனிதர்களுக்கு ஏற்றபடி பெண்களிடம் உருவாகும்   உணர்வுகளையும் இந்த இயலில் ஆய்கிறார் .எதிர் கொள்ளும் மனிதர்கள் வீட்டுக்கு வெளியே , வீட்டுக்கு உள்ளே இருக்கக்கூடிய மனிதர்கள் தான்.  தாய் , மகன், மாமியார், உடன்பிறப்புகள் ,மனைவி, கணவன் இப்படிப்பட்ட உறவுகள் தான் குடும்பத்தை சுற்றி சுற்றி மருமகள் மாமியார் என உறவுகள் எதிர்நிலை பாத்திரமாக இந்தப் பகுதியில் ஆய்வு செய்கிறார். குடும்ப உறவுகளில் கணவனோடு வரும் பகை தீரும் பகையாகும் மாமியாரோடு வரும்பகை தீராப்பகையாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். கணவன் கதைகள் இடம் பெற்றுள்ள சமரசப் போக்கு ஆணாதிக்க சிந்தனையின் ஊடுருவல் என்பதையும் இந்த இயல் நமக்கு உணர்த்துகிறது.


அடுத்த பகுதியில் , சிறுதெய்வ கதைகளின் முடிவுகளாக மூன்று கதைகளை விவரித்துள்ளார். கதைகளில் பெண்கள் எடுக்கும் முடிவு குறித்து ஆழமாக விவாதிக்கும்  நோக்கில் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக அறியப்பட்ட 3பென் சிறு தெய்வங்களின் கதைகள் கூறப்பட்டுள்ளன .சிறு தெய்வங்கள் அனைவரது கதைகளிலும் அவர்களுடைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பெண்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் அதற்கு ஒரு கதை சொல்லப்படும் அது உண்மையாகவும் இருக்கும். ஆண்கள் முடிவெடுக்கையில் அது கொலையாகும் போக்கும் பெண்கள் முடிவெடுக்கும் போது அது  தற்கொலையாகும் போக்கும் யதார்த்தமாவதை ஆய்வு விளக்குகிறது. 


சமுதாயத்தில் பண்பாடு என்ற பெயரில் பெண்ணுக்கு எதிராக நிலவும் அனைத்து விதமான அடக்குமுறையையே இந்து வரலாறுகள் விளக்குகின்றன என்ற கருத்தை முன்னெடுத்து இந்தப் பகுதியில்  அவர் மூன்று பெண் தெய்வங்களாக நல்லதங்காள் கதை, அதேபோல சீனி அம்மன் கதை, சர்க்கரை அம்மாள் கதை என்ற மூன்று கதையை ஆய்வு செய்கிறார். 


 பெண்கள்  இரண்டில் தற்கொலை செய்துகொள்வதும் ஒரு கதையில் கொல்லப்படுவதும் அதற்கான காரணங்கள் கொடிய வறுமையும்  சாதிப் பிரிவினையும்  என்பதாக இடம்பெறுகின்றன . வாய்ப்புள்ள நிலையிலும் வாழ்க்கையும் பெண்ணிற்கு முடிவுகள் குறித்து இந்த பகுதி ஆய்வு செய்கிறது நல்லதங்காளும் சர்க்கரையம்மாளும்  வறுமையின் காரணமாக மாண்டுபோவதும் சீனியம்மாள் சாதி பாகுபாட்டிற்கு பலியாவதும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. 


சீனியம்மாளது  முடிவில் குடும்ப வன்முறை இருப்பதையும் இந்த ஆய்வு நமக்கு சொல்கிறது யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் உள்ள இடைவெளிகளில் இரண்டு பேரும் முடிவுகளும் புலப்படுத்துகின்றன பெண் அனுபவிக்கும் துயரங்களையும்  சிறு தெய்வக் கதைகளிலும் பெண்ணுக்கு கிடைக்கக்கூடிய வெற்றியின் சாத்தியத்தை நாட்டுப்புறக் கதைகளும் நமக்குக் காட்டுகின்றதன்  யதார்த்தம் இரண்டுமே பெண்ணின் ஆளுமைக் கூறுகள் தான். இரண்டுமே உண்மைகள் ஆனால் தனித் தனிப் பகுதிகள் என்று நூலாசிரியர் நமக்கு வழிகாட்டுகிறார்.


இந்த நூல் அனைவரும் வாசிக்க வேண்டிய அழகான ஆய்வு நூல் . நூலாசிரியரை சுமார் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சந்தித்த போது நேரில் வழங்கினார் . ஆனால் தற்போது தான் என் வாசிப்புக்குள் வந்தது. இதை பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுடன் உரையாட நல்லதொரு பொருண்மையாகக் கொள்ளலாம். 


உமா 







கண்டத சொல்றேன்

கண்டத சொல்றேன் 


ஆசிரியர்  கிருஷ்ணவேல்


நமது குழுவின் பரிசுப் புத்தகமாக அனுப்பப்பட்டது. நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல விடயங்கள் , ஆனால் அது குறித்து ஆழமான உற்று நோக்கலோ தகவல் அறியப்படாமலோ இருக்கும். அவை குறித்த விழிப்புணர்வாக இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. 

உதாரணம் , எல்லோருமே வங்கிக் கடன் வாங்கி மாதத் தவணை கட்டி வருவோம். ஆனால் சிபில் ஸ்கோர் குறித்து நமக்கு நல்ல புரிதல் இருக்குமா என்றால் சந்தேகமே. அது பற்றி பேசுகிறது புத்தகம் . 


ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும் போதும் உலகின் ஏதோ ஒரு மூலையை இணைத்து தரவுகளுடன் கட்டுரைகளைத் தந்துள்ளார். 


ஆல்கஹால் பற்றிய பதிவு விளையாட்டாக அதன் விபரீதத்தை விளக்குவதாக, அவற்றின் கோரப் பிடியிலிருந்து மீண்டு வரும் யதார்த்த நடைமுறைகள் பற்றிப் பேசுகிறது.


பசங்க 2 திரைப்படத்தை ஒரு புறம் எல்லோரும் கொண்டாடிய தருணங்களை அக்குவேராக அலசுகிறார் ஆசிரியர் . அவற்றிலிருந்து குழந்தைகளின் வளர்ப்பு முறை , இன்றைய கல்வி முறை என அனைத்தையும் தொடர்புபடுத்திய விதம் சிறப்பு.


பாலியோமரி என்ற வித்யாசமான  இவரது பதிவு  நமக்கும் புதியதாகவும் 

பைத்தியக்காரத்தனமாகவும் தான் தோன்றுகிறது .அதென்ன பரஸ்பர ஒப்புதல் நேர்மை மற்றும் பொறுப்புணர்ச்சியுடன் கூடிய பலருடன் கூட்டுறவு கொள்வது ? படித்துப் பார்த்தால் தான் புரியும். 


மாங்காடு கோவில் சிற்பங்கள் , லிங்க வழிபாட்டின் ஆதியும் மூலமும் , நீங்களும் ஆகலாம் ஒரு இல்லுமினாட்டி, ஏசுவுக்கும் சூப்பர் மேனுக்கும் என்ன தொடர்பு , தேவமைந்தனின் பிறந்த நாள்  என மதம் , சமய வழிபாடு இப்படி விலாவாரியாக சில பதிவுகள் . எதையும் விட்டு வைப்பதாக இல்லை. 


வைரத்தின் வரலாறும் அது ஏன் திரும்ப விற்க முடியாத பொருளாகவும் இருக்கிறது என்று ஒரு பக்கம் அலசியிருக்கிறார். 


இது மட்டுமா , திருநெல்வேலி என்ற சாதியக் கட்டமைப்பைக் காலம் காலமாக பிடித்துக் கொண்டிருக்கும்  நகரின் வரலாறு தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என ஏன் சொல்லப்பட்டது என்பதற்கான விரிவான பதிவும் இப்புத்தகத்தில் தரப்பட்டுள்ளது. 


இந்திய சூப்பர்ஸ்டார்களையும் விட்டு வைக்கவில்லை , இந்திரா காந்தியின் குடும்ப அரசியல் வரலாற்றையும் சொல்லாமலில்லை. ஹீலர்கள் , தடுப்பூசி , இயற்கை உணவுகள் என இவற்றையும் தொட்டுச் சென்றுள்ளார்.

சிட்டுகளின் மெட்டுகள்


சிறுவர் இலக்கியம் - பாடல் நூல். 

பதிப்பகம் : ஆரோ பதிப்பகம் 

விலை : ரூ 200 

முதல் பதிப்பு 2019 .


எழுதியவர் : இ.குழந்தைசாமி -


ஆசிரியர் குறிப்பு : நூலாசிரியர் குழந்தைசாமி தஞ்சாவூரின் அரசு உதவி பெறும் பள்ளியான தூய அந்தோணியர் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கல்விப் பணி , சமூகப் பணி , தொல்லியல் ஆய்வு , நாணய சேகரிப்புப் பணி என பல்திறன்களில் வல்லவரான இவர் , எழுத்தாளராகவும் திகழ்கிறார். கவிதை , சிறு கதைகளுக்கான நூல்களை ஏற்கனவே எழுதியுள்ளார். தற்போது பள்ளிக் குழந்தைகளுக்கான சிட்டுகளின் மெட்டுகள் என்ற பாடல் புத்தகத்தை எழுதியுள்ளார். 


குழந்தை இலக்கியங்கள் கடந்த 30 ஆண்டுகளாகப் பெரிய அளவில் உருவாகவில்லை என்பது தான் யதார்த்தம். குழந்தைகளுக்கான நூல்கள் குறித்து  சமீப ஆண்டுகளாக  தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறார்க் கதைப் புத்தகங்கள்,சிறாருக்கான  மாத இதழ்கள் என தொடர் படைப்புகள் குழந்தைகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் குழந்தைகள் பாடல்களுக்காக அழ .வள்ளியப்பாவைத் தான் எப்போதும் நினைவு கொள்கிறோம். அந்த வரிசையில் ஒரு புதிய நம்பிக்கையாக இந்து  நூலைப் படைத்துள்ள இ. குழந்தைசாமி  நம்மை மகிழ வைக்கிறார் .


நூலைப் பற்றி ….


சிறுவர் பாடல்கள் இயற்றுதல் என்பது பஞ்சு மிட்டாய் சாப்பிடுவது போல அவ்வளவு எளிதானதல்ல , அது சவ்வு மிட்டாய் சாப்பிடுவது போல சற்று கடினமானது என்று உணர்கிறேன் என்கிறார் நூலாசிரியர் .


புத்தகத்தில் 130 பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இன்று பள்ளியில் கூட பாடநூல்களில் , குழந்தைகளுக்கு மனப்பாடப் பாடல்களாக செய்யுள் பாட்டுகள் , திருக்குறள் இவை போன்ற பகுதிகள் மட்டுமே தரப்படுகின்றன . பொதுவான கருத்துகள் உள்ள குழந்தைப் பாடல்களுக்கு வறட்சிதான் என்றால் அது மிகையாகாது. ஆனால் இங்கு குழந்தைகளுக்கான உலகமாக எல்லாப் பாடல்களும் அவர்கள் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன என்பது தான் சிறப்பு. 


பறவைகள் , விலங்குகள் , மரங்கள் , குளங்கள் , வானவில் , மழைக் காலப் பாதுகாப்பு , சாலைப் பாதுகாப்பு , விவசாயம் , கடல் , நிலவு , கோள்கள் , காந்திஜி , நேரு , அன்னை , அப்பா என மிக அழகாகத் தலைப்புகளை சேகரித்துள்ளது சிறப்பு .


மொழி வளமும் , அறிவியல் , வரலாறு என எல்லாத் துறைகளுக்கும்  இணைப்புப் பாலமாக புத்தகத்தை வடிவமைத்துள்ளது பாராட்டுதலுக்குரியது. 


உணவை வீணாக்கலாமா ? என்ற தலைப்பில் குழந்தைகளை உண்ணும் உணவு குறித்து சிந்திக்க வைக்கிறார்.


 பாடல்களின் கருத்துகள் குழந்தைகளுக்குப் புரியும் விதத்தில் எதுகை , மோனை இலக்கண நயங்கள் அமைந்து சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. 


உதாரணம் :


தொடர்வண்டி - 43 வது பாடல் 


அட்டை போல ஊர்ந்து போகும் 

அழகான தொடர்வண்டி

அனகோண்டா பாம்பு போல

அசைந்து போகும் தொடர்வண்டி 


ஊரு விட்டு ஊரு போகும் 

ஊதா நிற தொடர்வண்டி

ஊதல் ஒலி எழுப்பிப் போகும் 

உற்சாகமாய் விரைந்து போகும் 


சிக்கு புக்கு என்று போகும்

சிவப்பு நிற தொடர்வண்டி

சீக்கிரமா வந்து ஏறு

சீமைக்குத்தான் போய் வரலாம் .


பாடல்களுக்குள்ளேயே கதைகள் அமைவது போலவும் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. 


உதாரணம் : 113


காகம் ஒன்று தாகம் கொண்டு

தண்ணீர் தேடி வந்ததாம் 

தேகம் வருந்த தேடி அலைந்து 

திரும்பி கூடு சென்றதாம் …


சோகம் கொண்டு கூட்டில் அன்று 

சோர்வாய் அது நின்றதாம் 

மேகம் ஒன்று அங்கு வந்து மென்மையாகக் கேட்டதாம் 


காகம் சொன்ன கதையைக் கேட்டு 

கண்ணீர் விட்டு அழுததாம் 

மேகம் தந்த நீரில் காகம் 

தாகம் தீர்த்து கொண்டதாம் ….


இப்படியான பாடல்களால் நிரம்பியுள்ள இப்புத்தகம் உடனடியாக நம் குழந்தைகளின் கைகளை சென்றடைந்தால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவர். அது மட்டுமல்ல , அவர்களது சிந்திக்கும் ஆற்றல் கூடும்  ,

சொற்களஞ்சியம் பெருகும்  என்பதில் ஐயமில்லை. இந்தப் பாடல்களைப் படித்துப் பொருளுணரும் போது நடத்தை மாற்றங்களும் நிகழும் என்பது கண்கூடு. இயற்கையை , பூமியை , சமூகத்தை நேசிக்க ஆரம்பிப்பர். 


ஆகவே பெற்றோர்கள் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும் , ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கும்  உடனடியாக இப்புத்தகத்தை வாங்கித் தர வேண்டுமென குழந்தைகள் தினமான இன்று உங்களுடன் வேண்டுகோள் வைக்கிறேன். 


உமா 


காப்புரிமை கொத்தவால்

மொழிபெயர்ப்பு : பிரளயன்

நாடகச் செயல்பாடுகளில் சிறந்த நடைமுறைகளுக்கான கையேடு என்ற இந்த நூலை இந்தியா தியேட்டர் ஃபாரம் வெளியிட்டுள்ளது. இது ஒரு மொழிபெயர்ப்பு நூல்.


இப்புத்தகத்தைத் திறந்த உடன் வழக்கமாகப் பொறிக்கப்படும் © காப்புரிமை இலச்சினைக்குப் பதிலாக திருப்பிப் போடப்பட்ட இலச்சினைக் குறியீடு இருக்கின்றது. இதற்கு  உரிமைகள் காக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு பதிலாக உரிமைகள் விட்டுத் தரப்படுகின்றது என்பதையேப் பொருளாகக்  கொள்ளலாம். 


 காப்புரிமையால்  தடுக்கப்பட்டதல்ல , விநியோகிக்க , பிரதியெடுக்க , மொழிபெயர்க்க , நீங்கள் அனுமதிக்கப்படுகிறீர்கள்  என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன .


அதே போல இந் நூல் இலவசமாக அளிக்கப்பட்டது. மற்றவருக்கும் இலவசமாக அளிக்கக் கூறப்பட்டுள்ளது. விலையிட்டு விற்பனை செய்ய முடியாது. அப்படிச் செய்பவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க இயலும் என்றும் இவ்வித நிபந்தனைகளோடே தனது உரிமைகளை விட்டுத் தந்திருக்கிறது என்பதையும் பிரளயன் தனது மொழிபெயர்ப்பு குறிப்புப்  பகுதியில்  வெளிப்படுத்தியுள்ளார். 


காப்புரிமை தொடர்பாக நாடகக்காரர்கள்  சந்திக்க நேரும் சிக்கல்களை விளக்கிடும் காப்பிரைட் கோட் வால் எனும் ஆங்கிலப் பிரசுரத்தின் தமிழ் மொழி பெயர்ப்புதான் இந்நூல். 


இந்தியாவின் புகழ் மிக்க நாடகங்களில் ஒன்றான விஜய் டெண்டுல்கரின் , 'காசிராம் கோத்வால் ' எனும் மராத்திய நாடகத்திலிருந்து பெறப்பட்டது தான் இத்தலைப்பு என்று மொழி பெயர்ப்பாளர் குறிப்பில் தரப்பட்டுள்ளது. இந்தியில் புழக்கத்திலுள்ள கோத்வால் எனும் இச்சொல் பாரசீக மொழியிலிருந்து பெறப்பட்டது என்று விக்கிபீடியா சொல்கிறது.

இந்த நூலின் மொழிபெயர்ப்பு குறித்து மிகவும் சவாலாக அமைந்தது என்கிறார் பிரளயன் .ஏனெனில் இதன் மூல நூலில் மூன்று விதமான மொழிநடைகள் பின்பற்றப்பட்டுள்ளன . சட்ட விவரங்களை விளக்குவதற்கு நடுநிலையான தேர்ந்த மொழியும் மற்றும் இரண்டு விதமான கொச்சையான பேச்சு மொழிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன .


இந்த நூல் முழுக்க முழுக்க காப்புரிமை தொடர்பான விழிப்புணர்வைத்  தருவதற்காக எழுதப்பட்டுள்ளது .இன்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் உங்கள் எழுத்தோ , உங்கள் நாடகமோ , நாடக நிகழ்வோ , குறும்படமோ, உங்களையறியாமல் இணையத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு இன்னொருவரது காப்புரிமை வளையத்திற்குள் சிக்கிக் கொண்டு விடலாம் .எனவே இவை குறித்த விழிப்பும் கவனமும் நமக்கு வேண்டியிருக்கிறது .அவ்வகையில் இந்த நூல் படைப்பாளர்களுக்கு உதவும். 


ஏழு அத்யாயங்களாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது  .

உதாரணமாக ,

எதற்கெல்லாம் காப்புரிமை பெற முடியும் ? ஒரு படைப்பின் ஆசிரியர் என்பதாலே அவர் காப்புரிமை பெற்றவராகி விட முடியுமா ? தலைப்பைக் காப்பிரைட் பண்ண முடியுமா ? என பல்வேறு தலைப்புகளுக்கு சட்ட விதிகளின் படி கோட்டுப் படங்களுடன் எல்லா அத்யாயங்களும் எழுதப்பட்டுள்ளது.


அத்யாயம் - தலைப்பு -ஒவ்வொன்றிலும் சூழல் , வினாக்களுக்கு சட்ட விளக்கம் , உரையாடல் , இப்போ நாடகத்திற்கு வருவோம் , சிறந்த நடைமுறை எது ? அல்லது சட்டென்று சொல்லுங்கள் பிரச்சினைகளைத் தவிர்ப்பது எப்படி ?

இவற்றின் வரிசையில் எழுதப்பட்டுள்ளன .


ஏழு அத்யாயம் முடிந்த பிறகு காப்புரிமைச் சட்டத் திருத்த மசோதா - 2012 குறித்த ஆய்வில் நிறைய செய்திகள் பகிரப்பட்டுள்ளன . கலைப்படைப்புகள் , திரைப்படங்கள் மற்றும் ஒலிப்பதிவுகள் தொடர்பானது.சட்ட ரீதியான உரிமங்கள் , கட்டாய உரிமம் ,வரையறைகள் , நாடகாசிரியர்கள் , மொழிபெயர்ப்பாளர்கள்  , தழுவி எழுதுவோர் ஆகியோ ளுக்கான வழிகாட்டுதல்கள் போன்றவை இணைப்பு பகுதிகளாக செய்திகளாக விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அதோடு காப்புரிமை = சொல்லகராதி இறுதியில் 20 பக்கங்களுக்கு இணைக்கப்பட்டுள்ளன. 

|காப்புரிமை கொத்தவால் மிக முக்கியமான ஒரு கையேடு புத்தகம் . சிறு படைப்பாளிகள்  முதல் மிகப் பெரிய படைப்பாளர்கள் எழுத்து - சினிமா - கிளைத் துறைகள் என அனைவருக்கும்  உதவும் ஒரு அற்புதமான நூல். 




தசாவதாரம்

அறிஞர் அண்ணா எழுதிய எளிய  தமிழ் நாவலான இந்த  தசாவதாரம் என்ற நூலை ,கிண்டில் பதிப்பில் வாசித்தேன். கமலின் தசாவதாரம் திரைப்படம் குறித்து எல்லோரும் அறிவோம் . 

ஆனால் இது அறிஞர் அண்ணா எழுதிய நாவல் . ஒரு பகுதி திரில்லர் மாதிரியும் ஒரு பகுதி குடும்ப நாவல் போலவும் தோன்றுகிறது. பத்திரிகை துறை , காவல் துறை , வழக்கறிஞர் , திருடர்கள் , கோயில் நகை திருட்டு எனக் கலவையான நாவல். காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் தன் தங்கை விரும்பி மணந்தவனை கோயில்  நகை திருட்டு எனப் பழி வருமாறு திட்டமிடும் பெரிய மனிதர் போர்வை . முற்போக்கு சிந்தனையுள்ள இளைஞன் இதை செய்திருக்க மாட்டான் என நம்பிக்கை இருந்தாலும் சாட்சியங்களால் ஆதாரங்களுடன் கைது செய்யும் காவல் துறை . இந்த குற்றத்தில் இருந்து சூடாமணியின் காதல் கணவர் தேவர் எப்படி விடுபடுகிறார் என்பதே தசாவதாரம். 

எழுத்து நடை தனித் தமிழ் உரையாடலாக 60 வருடங்கள் முன்பு வந்த திரைப்பட வசனங்கள் போல நீள்கின்றன. இந்த நாவலை அப்படியே திரைக் கதை ஆக்கலாம் . கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சமூக யதார்த்தம் , பெரிய மனிதர் போர்வையில் செய்யும் சில கள்ள செயல்கள் , காவல் துறையில் இருக்கும் சின்ன சறுக்கல் இப்படி நாவல் அனைத்தையும் உள்ளடக்கி பத்து அவதாரங்களை முக்கியமாக பேச வைத்துள்ளது.

கல்வியும் சுகாதாரமும்

கல்வியும் சுகாதாரமும் 

கொள்கைகள் , பிரச்சனைகள் , தீர்வுகள் 


இது ஒரு மொழிபெயர்ப்பு நூல். 


2 Chapters from UNCERTAIN GLORY by Jean Dreze,Amartya Sen என்ற நூலின் தமிழாக்கத்தை பேரா. பொன்னுராஜ் செய்துள்ளார் .


ஜீன் ட்ரீஸ் (1959) : புகழ் பெற்ற லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் பேராசிரியர். 1979 முதல் இன்று வரை  இந்தியாவில் வாழும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் . அலகாபாத் பல்கலைக் கழகத்தின் வருகை தரு பேராசிரியர் .இந்த நூலைத் தவிர அமர்தியா சென்னோடு இணைந்தும் தனியாகவும் பல நூல்களும் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 


அமர்தியா சென் (1933 )


ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் , தத்துவம் படிப்பிக்கும் நோபல் பரிசு பெற்ற இந்தியர். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் தலைவராகவும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் சிறப்புப் பேராசிரியராகவும்  பணியாற்றியுள்ளார். மேம்பாடு விடுதலையின் வழி (Development as freedom) , நீதி எனும் கருத்தாக்கம்  (The Idea of Justice) சர்ச்சை மிகு இந்தியர்கள் (Agrementation Ludans) உள்ளிட்ட ஏராளமான நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளவர். 'பாரத ரத்னா ' பட்டம் பெற்றவர். 


பேராசிரியர் பொன்ராஜ் -

 ( மொழி பெயர்ப்பு )

நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியின் வேதியியல் துறைப் பேராசிரியராகவும் , முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். மூட்டா நிர்வாகிகளில் ஒருவராக பல ஆண்டு காலம் தொழிற்சங்கப் பணியாற்றியவர். பத்திரிகைகளில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தொடர்ந்து மொழி பெயர்ப்பு செய்து வருபவர்.


கல்வியும் சுகாதாரமும் 


இந்தியாவின் இரண்டு மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களான அமர்தியா சென்னும் ஜீன் டிரீஸ் - ம் , நிச்சயமற்ற பெருமை என்ற இந்த நூலில் நம் நாட்டின் சமூக நிலை பின் தங்கி இருப்பதற்கான காரணங்களை விளக்கி அதற்கான தீர்வுகளையும் முன் வைக்கின்றனர். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பவை கல்வியும் சுகாதாரமும் தான். ஆனால் அந்த இரண்டும் இங்கு எவ்வாறு அரசியல்படுத்தப்படுகிறது என்பதை மூலை முடுக்கெல்லாம் ஆராய்ந்து உண்மைத் தரவுகளின் வழியாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர் . இந்தியா ஏழை நாடல்ல , ஆனால் மக்கள் பொருளாதார நிலையைக் கணக்கில் கொண்டால் மக்கள் பெரும்பான்மையினர் ஏழைகள் என அடையாளப்படுத்தப்படுகிறது,   இந்த சூழலில் எப்படிப்பட்ட வளர்ச்சி வேண்டும் என்றும்   மேம்பாட்டுத் திட்டங்கள் எவ்வழிகளில் உருவாக வேண்டும் என அம்  வழிகாட்டும் வேலையையும் செய்துள்ளது இந்நூல். தி ஹிந்து , தி எக்னாமிஸ்ட் , கார்டியன் ,தி நியூயார்க் டைம்ஸ்  , ராமச்சந்திரகுஹா , ஃபினான்ஷியல் டைம்ஸ் என அனைத்தும் மிக முக்கியமான நூலாக இதை அறிமுகம் செய்கின்றன.


இந்தியாவின் கல்வி , அதன் மேம்பாடு , ஏன் இந்தியா பின்தங்கி விட்டது என ஆசிய நாடுகளின் வளர்ச்சியுடன் ஒப்பீட்டு அட்டவணையுடன் விளக்கப்பட்டுள்ளது. முன் பருவக் கல்வி முதல் உயர்கல்வி வரை இந்தியா முழுமைக்குமான சவால்களை நம் கண் முன்னே கொண்டு வருகின்றனர். ஒப்பீட்டளவில் இந்தியாவின் கல்விச் சூழல் ஏராளமான பிரச்சனைகளைக் கொண்டுள்ளது. இந்த இடத்தில் நம் தமிழகத்தின் கல்விச் சூழல் சற்றே மூச்சு விடும்படி உள்ளது என்பதையும் உணருகிறேன். இந்த நூல் ஒட்டு மொத்த இந்தியாவின் கல்வியைப் பேசுவதைப் பார்க்கையில் புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 தயாரிப்பதற்கு முன் தயாரிப்புக் குழு இப்புத்தகத்தின் செய்திகளுக்கு கவனம் கொடுத்திருந்தால் நல்லது எனத் தோன்றுகிறது.


பள்ளிக் கல்வியின்  சாதனைகளையும் குறைபாடுகளையும் மாநில வாரியாக விளக்குகிறது .உலகின் பிற பகுதிகளிலும் நம் நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் கற்பித்தல் பணி உற்சாகமாக நடைபெற்ற போது , வட இந்திய மாநிலங்களில் பாதி பள்ளிகளில் கற்பித்தல் பணி நடைபெறவில்லை என்பது தொடக்கக் கல்வி பெறும் உரிமையை இளம் மாணவர்களுக்கு மறுக்கிற செயல் என்று  ஆணித் தரமாகக் குறிப்பிடுகின்றனர். 

கல்வியின் தரம் குறித்தும் அதன் மீதான நமது பார்வை எப்படி மாற வேண்டும் என தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது புத்தகம் .


இங்குள்ள வேறுபட்ட கல்வி முறையை  இரட்டைக் கல்வி முறை எனவும் இவற்றை மாற்ற செய்ய வேண்டியன குறித்தும் விவாதிக்கும் போது தமிழகக் கல்வி முறையில் பல பிரிவுகள் இருப்பதால் இரட்டைக் கல்வி முறையை விடக் கொடிய பல முகக் கல்வி முறை என நாம் பதிவு செய்ய வேண்டியுள்ளது. 


எவையெல்லாம் பிரச்சனை ? ஊதியமா ? தனியார் பள்ளிக் கல்வியா ? ஒப்பந்த முறையா ? என அனைத்தும் அலசப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி குறித்து பரந்த நோக்கில் பேசுவதோடு  மதிப்பீட்டின் இடைவெளியை மிக அழகாக சுட்டிக் காட்டும்  இந்தப் புத்தகம் மிகச் சிறந்த வழிகாட்டி .


சுகாதாரம் குறித்தும் ஐந்தாண்டுத் திட்டங்களில் ஆரம்பித்து தடுப்பூசி விகிதம் , மருத்துவத்திற்கான செலவினம் என அனைத்தையும் ஆய்வு செய்துள்ளது. GDP இல் கல்வி குறித்து தான் பொதுவாகப் பேசுகிறோம். ஆனால் மருத்துவத்தில் GDP இன் பங்கு உலக நாடுகளை ஒப்பிட்டு விளக்கம்பட்டுள்ளது. மிகக் குறைந்த 1.2 % மட்டுமே இந்தியாவில் மருத்துவத்திற்கான GDP ஒதுக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியங்கள் 8.1 % ஒதுக்குவதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க  வேண்டும். 


ஊட்டச்சத்துக் குறைபாடு , அங்கன்வாடி திறப்பு , தனியார் மருத்துவக் காப்பீடு , குழந்தை வளர்ப்பு குறித்தும் பல்வேறுபட்ட தரவுகளின் அடிப்படையில் பிரச்சனைகளையும் தீர்வுகளையும் அலசியுள்ளனர் இப்புத்தகத்தில். 


இந்தியாவின் சமீப கால சாதைகளை எளிதில்புறந்தள்ளி விட முடியாது. கடந்த 20 ஆண்டுகளாக உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இன்று உலகில் வேகமாக  வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும் அதிகமாகப் பேசப்படும் இந்தப் பெருமை நிலையற்றது என்பது தான் இப்புத்தகத்தின் சாரம். 


இன்றைய இந்தியாவின் சாதனைகளையும் தோல்விகளையும் ஆய்வு செய்வது அவசியமானது மட்டுமல்ல .அவசரமானதும் கூட என்று உணர்த்துகின்றனர்  இப்புத்தகம் . 


கல்விப் பிரிவில் 39 வகை ஆய்வு , ஆவணம் மற்றும் நூல்களைத் திரட்டி உண்மையை நமக்குக் கூறியுள்ளனர். அதே போல சுகாதாரப் பிரிவில் 53 வகையான திரட்டுகள் . கல்வி மற்றும் சுகாதரம் ஆகிய இரண்டிலும் நமது நாட்டு யதார்த்த நிலையை அறிந்து கொள்ள வேண்டும் எனில் , மாறுதல்கள் செய்யத் தேவைப்படும் அறிவிற்கான  புரிதலுக்கான ஒரு நூலாக இதைப் பார்க்கலாம் .


விலை : ரூ 70

பாரதி புத்தகாலயம் 



காந்திமதியின் கணவன்

காந்திமதியின் கணவன் 


எழுதியவர் : கலைமாமணி விக்கிரமன்

யாழினி Uதிப்பகம் 

விலை ரூ 90

பக்கம் : 144

முதல் பதிப்பு : 2013


இது ஒரு சமூக நாவல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது  . ஒரு 40 வருட காலம் முன்னாடி இருந்த சமூகச் சூழல் தான் நாவல் முழுவதும் பயணம் செய்கிறது. பழைய திரைப்படம் பார்ப்பது போல ஒரு உணர்வு. காந்திமதியும் சீதாவும் பள்ளித் தோழிகள். சீதா பெரும் பணக்காரர் வீட்டுப் பெண் , காந்திமதி வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் வறிய குடும்பத்துப் பெண். ரகு என்ற அவளது அண்ணன் பராமரிப்பில் வாழும் காந்திமதி இயல்பிலேயே அழகும் எளிமையும் நிறைந்தவள். வீணை வாசிப்பு பாடும் திறன் இரண்டும் அவளது வாழ்க்கைப் பாதையில் பல மாற்றங்களை உண்டாக்கியதை நாவலின் ஆரம்பம் முதல் இறுதி வரைக் காணமுடிகிறது. தனது தோழியைப் பெண் பார்க்க வரும் கந்தநாதன் , எவ்வாறு காந்திமதியை மனைவியாக அடைகிறான் . திருமணத்திற்குப் பிறகு அவனது உடல் குறைபாட்டால்  அந்தக் குடும்பத்தில் உருவாகும் விளைவுகள் , காந்திமதி பிறந்த வீட்டுக்குச் சென்று விட்ட பிறகு அவளது தோழி சீதாவின் கணவனால் ஏற்படும் தொல்லைகள் என கதை நகர்கிறது . உடல் குறைபாட்டை  சரிப்படுத்த  ஜப்பான் சென்று விட்ட கந்த நாதன் திரும்பிய விமானம் விபத்துக்குள்ளாகி மகனை இழந்த பெற்றோராகி விடும் காந்திமதியின் புக்ககத்தார் . தனது அண்ணனையும் இழந்த காந்திமதி தனது பாடும் திறமையால் ஆசிரியராகி வாழ்க்கையை செலுத்த,  இறுதியில் எப்படி அவளது வாழ்க்கை மாறுகிறது என்பது தான் கதை. 


பெண்கள் தனித்து வாழ முடியாத சமூக அவலம் , குடும்ப அமைப்புக்குள் பெண்கள் எவற்றை எல்லாம் சரி கட்டிப் போக வேண்டி இருக்கிறது , பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்  மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் , ஆண் - பெண் இடையே அவர்கள் திருமணத்திற்குப் பிறகான ஏற்படும் அன்பு - காதல் - காமம் இவற்றின் தேவை என நாவல் ஒரு சராசரியான சமூகத்தைப் பிரதிபலிக்கிறது. இறுதியில் கந்த நாதன் மகான் உருவத்திலே திரும்பி வருவதும் காந்திமதியைக் காண்பது இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது வரை நன்றாகவே பயணிக்கிறது. இறுதியில் ஏனோ இருவரையும் கொன்று சமூகத்தின் கரை படியாத மனிதர்களாக நாவலை முடித்திருக்கிறார் ஆசிரியர் . நான் ஏற்கனவே கூறியது போல அறுபதுகளில் வந்த திரைப்படங்களின் சாயலை நாவல் நம்மை சிந்திக்க வைக்கிறது. 


டார்வினின் கடற்பயணக் குறிப்புகள்



இது கிண்டிலில் வாசிக்கப்பட்டப் புத்தகம் உயிரியல் வல்லுனர் சார்லஸ் டார்வின் மேற்கொண்ட கடற் பயணம்  மனிதனின் தோற்றம் மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி விதிகளில் ஏற்படுத்திய முக்கியத்துவம் பற்றிய சிறிய நூல் இது.


இங்கிலாந்து அரசு , தென் அமெரிக்காவின் கடற்கரைப் பகுதி , நீரோட்டங்களின்  ஆய்வுக்காக, கடற்பயண வரைபடம் தயாரிக்க  ஒரு குழுவை HMS பீகில் கப்பலில் பயணம் செய்ய அனுப்பியது. இங்கிலாந்தின் உயிரியல் மற்றும் புவியியல் அறிஞரான டார்வினும் அந்தக் குழுவில் ஒருவராகப் பிரயாணம் செய்கிறார். குழுவில் உள்ளவர்கள்  கடலில் பிரயாணம் செய்தால் இவர் நிலப்பகுதிகளை ஆய்வு செய்கிறார். பறவைகளின் அலகுகள், தொல்லியல் படிமங்கள் போன்ற எல்லாவற்றையும் திரட்டி வந்து ஆய்வு செய்து கொண்டே இருந்துள்ளார். எரிமலைகளின் பால் ஈர்ப்பு வந்த டார்வின்   அதை ஆய்வு செய்யவே டார்வின் , ஈக்வடார் தீவான கேலபகோஸ் தீவு செல்கின்றார். ஆனால் அத்தீவில் வாழ்ந்த வேறுபட்ட உயிர் ,இராட்சத உயிரினங்கள், அங்கு கண்ட குருவிகள் , இன்னும் பிற அனைத்தும் தான் அவரை பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை வெளியிட வைக்கிறது. அந்த பயணம் குறித்து இப்புத்தகம் பேசுகிறது. 



காட்டாறு

காட்டாறு 

இது ஒரு சிறுகதைத் தொகுப்பு , நூலாசிரியர் ஜே.ஷாஜஹான் .


வெளியீடு : வம்சி புக்ஸ்

விலை : ரூ 80


அட்டைப்படமே நம்மை ஊன்றி கவனிக்க வைக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பதிப்பு 2005 லும் இரண்டாம் பதிப்பு 2016 ஆம் ஆண்டும்  வெளிவந்துள்ளது. 


செம்மலர் , சுபமங்களா , புதிய பார்வை , புதுவிசை , ஆனந்த விகடன் முதலான பல்வேறு இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளைத் தொகுத்து காட்டாறு உருவாகியுள்ளது.


செதுக்கிய சொற்களாக ஆழமான முன்னுரை தந்துள்ளார்  ச.தமிழ்ச்செல்வன் .. அந்த நான்கு பக்கங்களைப் படிக்கும் போதே இந்தப் புத்தகத்தின் அடர்த்தி புரிந்து விடுகிறது. 


நீர் நிறைந்த குளத்தில்

மேற்பகுதியிலுள்ள நீர் தூய்மையாக  சுவையுடனும் இருந்தாலும் ,  இரு கைகளாலும் தண்ணீரைத் தள்ளி விட்டு , கீழுள்ள நீரை மொண்டு மொண்டு குடிப்பது .போல , முன்னுரையை நகர்த்திய பிறகு நம்மைத் தாகத்தோடு அருந்த வைக்கும் நீர் நிலையாக இருக்கின்றது காட்டாறு .


மிகவும் உருக்கமான கதைகள் , உண்மை நிகழ்வுகள் போலவே பக்கத்திற்குப் பக்கம் நகர்கிறது . 

வாசிக்கும் போது நமது நெருக்கமான உணர்வுகளுடன் ஒன்று கலந்து மனதைப் பிசையும் கதாபாத்திரங்கள் , கதைகள் என மொத்தப் புத்தகமும் தொகுக்கப்பட்டுள்ளது. 


மொத்தம் 11 சிறுகதைகள் , 103 பக்கங்கள் , கடைசி சிறுகதையின் பெயரான காட்டாறு என்பது  தான் புத்தகத்திற்குத் தலைப்பாக  வழங்கப்பட்டுள்ளது.


பாரதிராஜா படங்களில் வரும் அடித்தட்டு மக்களின்  வாழ்க்கையும் , பெண் பாத்திரங்களின் உணர்வுகளையும் பல கதைகளில் காண முடிகிறது. சாதி குறித்த கருவும் ஆங்காங்கே இழையோடுகிறது.  ஒவ்வொரு கதையை வாசித்து முடித்த பிறகும் நம்மை அறியாமல் பெருமூச்சு விடுகிறோம். மிகவும் சாதாரணமாக எந்த அழுத்தமும் அலங்காரமுமில்லாமல் கதை எழுதப்பட்டுள்ளது. ஆனால் மொத்தமாக சமூகத்தின் அழுத்தங்கள் தான் ஆழமாகப் பேசப்படுகிறது. எழுத்து நடை நம்மை அப்படியே கட்டிப் போடுகிறது. பக்கத்து வீடு , பக்கத்து தெரு , பார்க்கும் மனிதர்கள் குறித்த கதைகள் தான் . மனசும் கண்களும் ஒரு சேரக் கலங்கும் கதைகளாகவே அனைத்தும் உள்ளன. 


இப்படியான மனிதர்களின் வாழ்க்கை இன்னும் இருக்கிறதா என்றால் நிறைய இருக்கின்றன என்றே எனது அனுபவத்தில் கூற முடிகிறது. 


கருவேல மரங்கள் என்ற கதை ஊரின் வறட்சி , மக்களின் வறுமை , மனிதர்களின் சோகம் இவற்றுடன் ஒரு குடும்பத்தில் மனைவி எப்படி இவற்றை எல்லாம் சகித்துக் கொண்டு காலம் தள்ளுகிறாள் என்பதைப் பதிவு செய்கிறது. வெளியூருக்கு வேலைக்குச் செல்லும் குடும்பங்களின் பிரிவின் வலி வறுமையின் முன்பு கானல் நீராய்ப் போய்விடுகிறது என்ற எதார்த்தத்தைப் பதிவு செய்கிறார் ஷாஜஹான் .

கண்ணில் தெரிகிற வானம் என்ற கதை சாதாரணமாக , பெண்களின் காதல் - கல்யாண வாழ்க்கையின்  கையறு நிலையைப் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது. பெண்களே சிலுவையைத் தாங்கும் யேசுக்களாகக் காட்சி தருகின்றனர். 


ஈன்ற பொழுது என்ற கதையைப் போல ஊருக்கு 4 குடும்பங்களை நாம் அன்றாடம் கடந்திருப்போம் . கணவனின் குடி,அடியால் தனது 2 குழந்தைகளையும் விட்டு விட்டு , வேறொருவருடன் மண வாழ்க்கையைத் தேடிக் கொள்ளும் தாய். அவள்  மீது இருக்கும் நியாயத்தைப் புரிந்து கொள்ளும் பெண்குழந்தை 

என கதையின் தன்மை நம்மைத் தேம்ப வைக்கிறது. 


இதே போல கடந்த காற்று , ஊமைக் காயம் , ஆகாயப்பந்தல் , வெவ்வேறு கோணங்களில் , காகிதத் தீவுகள் , செக்குப் பாதைகள் , மானாவரி , காட்டாறு என வரிசையாகக் கதைகள் நமக்குத் திரும்பத் திரும்ப நம் சமூக எதார்த்தத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.


காகிதத் தீவுகள் கதையின் களம் இறுதியில் நம் கண்களில் நீர் வரவழைக்கும் அளவிற்கு எழுதப்பட்டுள்ளது. வறுமையால் வீட்டுக் குழந்தையை வெளியூருக்கு ஹோட்டல் வேலைக்கு அனுப்புவதும் அந்த சிறுவனுக்கு அங்கு கிடைக்கும் ஏமாற்றமும் கொடுமையானது. பசி என்ற ஒற்றை உணர்வால் மனிதர்கள் படும் துன்பம் அது. 


காட்டாறு என்ற  தலைப்புக்கு ஏற்ப இந்த சமூகத்தில் எப்போதும் மாறாத சாதிப்பற்று தான் கதையின் கரு . குழந்தைகளுக்குள் எதுவுமே தெரியாத போதும் பெரியவர்களால் சாதி என்னும்  விஷ விதைகள் ஊன்றப்படுவதையே

இக்கதை விவரிக்கிறது. 


இப்படி ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக சமூகத்தின் லட்சக்கணக்கானக்  கதைகளில் 11 கதைகளை நமக்குத் தந்திருக்கும் எழுத்தாளர் ஷாஜஹானின் காட்டாறு அனைவரும் வாசிக்கத் தகுந்த புத்தகம் . 

டாம் மாமாவின் குடிசை

#நாவல்



பாரதி புத்தகாலயம் 

விலை : ரூ 60


மலையாளத்தில் : பி.ஏ. வாரியார் 

தமிழில் : அம்பிகா நடராஜன் 


உலகப் புகழ் பெற்ற நாவலின் சுருக்கமான வடிவம் 


ஹாரியட் டீச்சர் ஸ்டோவ் எழுதிய அங்கிள் டாம்ஸ் கேபின் என்ற நாவல் , கறுப்பு இன அடிமைகள் பற்றி முதன் முதலில் எழுதப்பட்ட நாவல் புகழ்பெற்ற இந்த நாவல் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. வெளியாகி ஓராண்டில் 3 லட்சம் பிரதிகள் விற்பனையானது , அதற்குப் பிறகு தான் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியுள்ளது. அதுவரை வலுவாக பேசப்படாமல் இருந்த கறுப்பு இன அடிமைகள் மீதான ஒடுக்குமுறை பற்றி பேசிய அந்த நாவல் , உலகின் பல மொழிகளில் மொழி

பெயர்க்கப்பட்டிருக்கிறது. 


டாம் மாமாவின் குடிசை என்ற இந்தப் படைப்பு அங்கிள் டாம்ஸ் கேபினின் சுருக்கப் பட்ட வடிவம் . விடுதலைக்கான போராட்டம் பற்றிய இந்தக் கதை சுவராஸ்யம் சற்றும் குறையாமல் பிரச்சனையை ஆழமாக உணர்த்தும் வகையில் சுருக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர். 


2011 இல் முதல் பதிப்பும் 2017 இல் மூன்றாம் பதிப்பும் வெளிவந்துள்ளது. ஆதி வள்ளியப்பன் அவர்கள் முன்னுரை வழங்கியுள்ளார்.ஒவ்வொரு மனிதனுடைய மனதின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் விடுதலை உணர்வு ஒரு நாள் விழித்தெழும் , அதற்கான முதல் பொறி வரும் வரை அந்த உணர்வு அடக்கமாகவே இருக்கும் , ஒரு நாள் அது காட்டுத் தீ போல வளரும். 


உலகில் தோன்றிய அனைத்து உயிர்களும் சமம் என்ற நிலை இந்த பூவுலகில் கட்டாயம் உருவாகும் , அந்த புது உலகம் கட்டமைக்கப்படுவதற்கான உத்வேகத்தை டாம் மாமாவின் குடிசை போன்ற நூல்கள் நமக்குத் தரும் என்கிறார் ஆதி வள்ளியப்பன். 


கதாபாத்திரங்களான அடிமை வியாபாரி ஹேலி,  ஷெல்பி , குழந்தை ஹாரி , ஹாரியின் தாய் எலிசா , எலிசாவின் கணவன் அடிமை வேலைக்காரன் ஜார்ஜ் ஹாரிஸ் ஆகியோர் 12 அத்யாயங்களில் நம் மனதில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கிக் காட்டுகின்றனர் .ஆங்காங்கே படங்களும் ஓவியங்களாக இணைக்கப்பட்டுள்ளன  . நவீன காலத்தில் நிலவிய அடிமைத்தனம் குறித்த ஒரு வலுவான பதிவு மட்டுமல்ல இந்த டாம் மாமாவின் குடிசை .சாதாரண மக்கள் எப்படி அடிமைகளாக்கப்பட்டனர் என்பதையும் பதிவு செய்கிறது. மலையாமை வழியாகத் தமிழுக்கு வந்த படைப்பு.


அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் .