Friday 5 November 2021

ஜெய் பீம் :

ஜெய் பீம் :

திரைப்படமாக நினைக்க முடியாமல் நகரும் உண்மைச் சம்பவம். பாராட்டுவதாக ஆரம்பித்தால் .... சின்னச் சின்ன பாத்திரத்தில் வரும் நடிகர்கள் முதல் திரைக்கதை , இயக்குநர் , துணை இயக்குநர்கள் இப்படி யாரையும் விட்டு விடாமல் பாராட்ட வேண்டும் . வழக்கறிஞராக தன்னைப் பொருத்திக் கொண்டு  படம் முழுவதும்  இயங்கும் சந்துரு இப்படத்தின் மிகப் பெரிய பலம் என்றால் மற்றொரு பலம் செங்கனி .  திரைப்படத்தைப் பார்த்து விட்டு எவராலும் குறைந்தது இரண்டு நாட்களாவது அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாதுதான். 

திரைக்கதையில் மிகையே இல்லாமல் உண்மைச் சம்பவங்களைக் கோர்த்து மிக அழகியலாகத் தந்திருக்கும் இயக்குநர் Gnana Vel  தா.செ. ஞானவேல் ,தனது  #அருஞ்சொல் பேட்டியில் இப்படம் உருவான வரலாற்றைக் குறித்துப் பதிவு செய்துள்ளார். மூன்று வருட உழைப்பால் உருவான இத்திரைப்படத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக. அம்மக்களுடன்  , தான் பெற்றிருந்த கள  அனுபவத்தையும் சேர்த்து தான் பார்க்கவேண்டும் என்கிறார்.  திரைப்படத்தை ஆழமாக கவனித்தால் இது நமக்கு நன்கு புலப்படும். 

காவல் நிலையத்தில் பயங்கர சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்ட ராஜாக் கண்ணுவின் கண்ணுக்குள் மிளகாய்ப் பொடித் தூவிப் பார்த்து உயிர் இருக்கிறதா ? இல்லை இறந்து விட்டாரா எனப் பார்க்கும் காவல் துறை நண்பர்களது செயல்  காட்சியாக இடம் பெற்றிருக்கும் . படம் பார்ப்பவர்கள் இது திரைப்படத்திற்கான புனைவாக இருக்கலாம் என்று எண்ணக் கூடும். ஆனால் உண்மையாகவே பத்து பைசாவுக்கு மிளகாய்ப் பொடி வாங்கி வந்து கண்ணில் விட்டுப் பார்த்த காவலர்கள் பற்றி நீதியரசர் சந்துரு தனது அருஞ்சொல் நேர்காணலில் கூறியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

இச்சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட  இனமான இருளர் மக்கள் , வீடு வாசல் , பட்டா , ஓட்டு , சாதிச் சான்றிதழ் எதுவும் இல்லாததால் , கேட்பதற்கு நாதியற்று இருப்பவர் என்ற ஒரே காரணத்திற்காக அதிகார பலமிக்க பதவியில் இருக்கும் ஒரு பிரிவினரால் நடத்தப்படும் வன்கொடுமைகளை இதைவிடக் காட்சிப் பதிவு செய்திட முடியாது தான். ஆனாலும் இது ஒரு சின்ன மாதிரி (Sample) தான். இதைப் போல ஆயிரம் மடங்கு கொடுமைகள் காவல் நிலையங்களில் அதிகார மையங்களில் நடக்கின்றன , நமது கவனத்திற்கு வருவதில்லை என்கிறார் நீதியரசர் சந்துரு .

எந்த வித கதாநாயக  பிம்பமும் இல்லாமல் நியாயத்தின் பக்கம் நின்று இறுதி வரைப் போராடும் சூர்யாவின் மீதான மதிப்பு கூடுகிறது. மற்றொரு கோணத்தில் இத்தகு சமூகப் பிரச்சனையைக் கதையாக அவரிடம் இயக்குநர் பகிர்ந்த போது தயாரிப்புக்காகத் தான் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் வழக்கறிஞராக  வரும் சந்துரு ரோலை நானே செய்கிறேன் என முன் வந்திருப்பதும் அவரது நடிப்பு அனுபவத்தில் ஒரு மைல்கல் ..நாயகியும் காதல் காட்சிகளும் இல்லாமலேயே படம் இத்தனை அளவுக்கு மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறது என்றால் படத்தின் மொத்தக் கதையும், களமும் உண்மையைப் பிரதிபலிப்பது தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. 

திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்து சிலாகித்து , நெகிழ்வது மட்டும் தானா ?
உண்மையாகவே படத்தின் வெற்றி என்பது குறித்தும் பேசுகிறார் இயக்குநர். திரைப்படத்தைப்  பார்க்கும் ஒவ்வொருவரும் குற்ற உணர்வை உணர்வது  என்கிறார். 

இதோடு சேர்ந்து நாம் உணர்வது , குற்ற உணர்வு தோன்றுவது மட்டுமல்ல எங்கெல்லாம் இப்படியான அநீதிகள் நிகழ்கிறதோ அங்கு குரல் எழுப்பவும் , அந்த மக்களுக்காகத் துணை நிற்கும் தைரியமும் தான் பொதுச் சமூகத்திற்கு வர வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறது சந்துரு பாத்திரம். 

லட்சக்கணக்கில் பணம் தந்து சமரசம் பேச வரும் அதிகாரியை துட்சமாகப் புறந்தள்ளி நீதி வேண்டும் என்கிற செங்கனியின் பாத்திரத்தை உள் வாங்கி மனப்பான்மையில் மாற்றம் வர தங்களைத் தயார்படுத்திக் கொள்வது இன்றைய நமது சமூகத்தின் பிரஜைகளுக்கு  மிக அவசியமான பாடமாகிறது. 

இப்படியான பெயரளவில் இயங்கும்  ஜனநாயக சமூக அமைப்பில் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டாலும் காவல்துறையினரது மூளையிலிருந்து அதைத் துடைத்து எறிதல் இயலாத காரியமாக இருக்கிறது என்கிறார் நீதியரசர் .  ஆகவே தான் எந்தக் குற்றங்கள் நடந்தாலும் இவர்களைக் குறி வைக்கிறது அராஜக அதிகாரம் . 

விளிம்பு நிலை மக்கள் , அடித்தட்டு மக்கள் என்று நாம் அடிக்கடி நாம் பேசுகிறோம். ஆனால் அவர்களைக் கடந்து திக்கற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பிரிவினரும் இருக்கின்றனர் என்பதை பொதுச் சமூகத்திற்கு இடித்துரைக்கும் திரைப்படமாக ஜெய் பீம் ❤️❤️

இந்த  நிகழ்கால வரலாற்று ஆவணத்தில் பணிபுரிந்துள்ள அத்தனை பேருக்கும் பாராட்டுகளை நாம் தெரிவித்துக் கொள்வதோடு தம்பி செந்தில் ஜெகநாதனுக்கு  Senthil Jagannathan  .... திரையில் உனது பெயரைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி கண்ணு❤️. .

பிரபா கல்விமணி ஐயாவின் களப்பணியும் இங்கு  இணையாக நாம் பார்க்க வேண்டியுள்ளது. 

கீழே த.செ. ஞானவேல் , நீதியரசர் சந்துரு இருவரும்  அருஞ்சொல் இணையத்தில் இப்படம் குறித்து அளித்துள்ள நேர்காணல்களை இணைக்கிறேன். அவசியம் பாருங்கள் . அவை இப்படத்தை வேறொரு வகையில் புரிந்து கொள்ள உதவும்.

(கூடுதலாக ....
இருளர்கள் மட்டுமல்ல , தாழ்த்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து தரப்பிலும் சாதிச் சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கும் மக்களையும் இங்கு நாம் பதிவு செய்கிறோம். பள்ளிக் குழந்தைகள் வழியாக அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களுக்காக சேவை செய்ய வந்தவர்கள் என்ற நினைப்பை ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு உணர்த்த வேண்டும் )

உமா❤️

https://www.arunchol.com/director-gnanavel-interview-04-11-2021-arunchol-jaibhim

அநீதிக்கு எதிராக மக்கள் விழித்தெழ வேண்டும்: சந்துரு பேட்டி https://www.arunchol.com/justice-chandru-interview-on-suriya-jai-bhim-arunchol


Monday 11 October 2021

இடைவெளியில் உடையும் பூ

 இடைவெளியில் உடையும் பூ 

 கவிதைப் புத்தகம் 
ஆசிரியர் :அன்புத்தோழி ஜெயஸ்ரீ 
வெளியீடு : இடையன் இடைச்சி நூலகம் 
பக்கங்கள்: 112
விலை : ரூ 150

 புத்தகத்தின் அட்டைப் படத்தைப் பார்க்கும் பொழுது ஒரு பூ உடைந்து கீழே சிதறுவது போல  தோன்றுகிறது. .  

 ஜெயஸ்ரீ:  இவர் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோவையில் வசித்து வருகிறார் அவருடைய வானொலி நிகழ்ச்சித்  தொகுப்பின் பெயர்தான் அன்புத்தோழி . ஆகவே தன்னை "அன்புத்தோழி ஜெயஸ்ரீ " என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார் அடையாளம் மட்டுமல்ல அவர் உண்மையாகவே அன்புத் தோழியாக திகழ்கிறார் என்பது தான் இந்த கவிதைகளிலிருந்து  புரிந்து கொள்ளக் கூடிய ஒரு கருத்தாகும் . .

 வலியைக் கலை செய்யும் வார்த்தைகள் என்று தலைப்பிட்ட ஒரு வாழ்த்துரையை அல்லது அணிந்துரையை கவிஞர் வைரமுத்து அளித்துள்ளார் .மௌனத்தை திறக்கும் கவிதைகள் என்று மற்றொரு  கவிஞர் அம்சப்ரியா என்பவர் பாராட்டியுள்ளார் .

அதனைத் தொடர்ந்து பூக்களைத் திருடிய சிறுமியின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற தலைப்பில் மிக அழகாக தன்னுரை தந்துள்ளார் எழுத்தாளர் .

 அவர் சொல்வதில் மிகவும் குறிப்பிடத்தக்கது, என்னோடு நீங்கள் பயணிக்க வேண்டுமாயின் இயந்திரங்களோடு அல்லாது இதயங்களோடு பழகி இருத்தல் அவசியம் ஏனெனில் இவள் ஒரு இலக்கியவாதி என்பதைவிட இலக்கு உள்ள வியாதி என்பதே சரி என்று குறிப்பிடுகின்றார் அதாவது அவருடைய  கவிதை மொழியானது முழுக்க முழுக்க அன்பைத் தோய்த்து தொடர்ந்து வெவ்வேறு பரிமாணங்களில் கவிதை வரிகளாக நமக்கு கொடுக்கின்றது. 

நம் அன்றாடக் காட்சிகளிலிருந்து ஒரு கவிதையாக இதைப் பார்க்கிறேன். 

 தோளில் ஒரு பையோடு 
கைபேசியில் கண்வைத்து
 குதிகால் செருப்பு பட்டென இடறித் தடுமாறி 
விழப் போகும் எவளையுமினி அலைபேசிப் பைத்தியமான தீர்ப்பிட்டு சபித்து விடாதீர்கள் ......

தனிமையை கட்டிக் கொண்ட காதல் காரியின் கடைசி தேடலின் வழிகளை வார்த்தைகள் உரைக்கவியலாது வேண்டுமெனும்  போதெல்லாம் 
உடனே கையை பிடித்துக் கொள்ளும் அத்தனிமை  போன்றதொரு 
சிறந்த துணை வேறொன்றும் இல்லை என்று 
வேண்டுமானால் சொல்லிப் போங்கள்......

 வேருக்கு நீர் ஊற்ற நேரமில்லை எங்களுக்கே தாகம் தீர்த்த நீர் போதவில்லை முற்றியதே கலி .... 

அவளுக்கு அஞ்சலி என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதையின் வரிகள் இதோ

ஆண்மகன் உனக்கவள் பண்டமாகப்  பிறந்தவள் 
மறைமுகப் பாடஞ் சொன்ன 
சமூக அவலங்களைக் கொளுத்துங்கள் 
பால்விழைவு வெறியாகியினியும் வேட்டைகள் தொடராமல் இருக்க வெட்டியே போடுங்கள் 

  வன்கொடுமை செய்தால் வாலிப முருக்கை 
முடங்கிப் போகச் செய்தல் வேண்டும் செய்வீர்களா ?
தீர்ப்பு இலகுவானால்  தீக்காமம் இன்னும் இரையாக்கி 
எத்தனை சிதைகளை மூட்டுமோ .....

என்று சமூகத்தின் பால் இருக்கும் கோபத்தைக் கக்குவது சில இடங்களில் தெரிகிறது .

இன்னும் சில வரிகள் .....

 நண்பா
 தேவதை என்றழைக்கும் வரையே தேவதைகள் தேவதைகள் 

பறவை மொழி .....என்ற தலைப்பில் ஒரு கவிதை ...

மனிதர்களின் அளவுகோல் கொண்டு இப்பறவைகளை அளக்காதீர்கள் அவற்றின் மொழி உங்களுக்கு
அறவே  தெரிவதில்லை 

எப்போதும் அப்பறவையின் காதல் பழங்களின் மீது அல்ல
 வேர்களில் இருப்பதினாலே
 விதைத்துப் போகிறது
தன் எச்சத்தால் 
பல்லாயிரம் பழமரம்

 ஒரு பறவையின் இருப்பானது 
பறத்தலன்றி பலவும் உண்டு 

பிஞ்சு நடையின்னும் பயிலா 
கொஞ்சு மழலையின் அரையாடையென அநியாய விலையோடு அடித் தொடையில் 
படுகின்ற சிவந்த கோடுகளைப் பதித்த நாப்கின் எனும் நவீனம் 
தாய்மை தொலைந்த புது யுகத்தைக் காணும்  
எம் கண்கள் வலிக்கையில்.....

 காலமெல்லாம் புதைந்து காத்திருக்கும் சிறு குளங்கள் உடையோடு ஒட்டி உறவாடி வைரமாக வைராக்கியம் கொண்டு ....என்று தொடங்கும் ஒரு கவிதை இறுதியில் ..... இப்படி முடிகிறது 

எந்த இலக்கும் இன்றி வந்து கலக்கும் ஒரு  வான்துளியில்
வாழ்வின் நீளம் உணர்கிறது 
தன் ஆழ்கடல் இலக்கின் 
எல்லைகள் வெளிச்சம் பெற இத்துனையும் கடந்தாகத்தான் வேண்டுமென 
கனத்த மனதோடு விடைபெற்று விரைந்தோடி 
அவ்வோடை நதியாகி நகர்கின்றது ...

  ஹைக்கூ கவிதை போல ஏராளமான கவிதைகளை தொடர்ந்து பல பக்கங்களில்  தருகிறார் ....

 இல்லப்  பா சொல்லு  டா 
ஓரெழுத்து கவியில் தான் 
வழுக்கி விழுகிறோம்.....

 உன் பெயர் சொல்லி 
நான் வளர்த்த ரோஜா செடி 
உன்னை போலவேதான் சிரிக்கின்றது ஒவ்வொரு பூக்களிலும் 
உனக்கு முட்கள் தவிர 
வேறொன்றும் தெரிவதில்லை.....

ஓர் ஈர நாளில்
தின்னக் கிடைத்த
சுடு சோளத்திடம்
எங்கே விளைந்தாய்
உன்னைச் சுட்டது யார்
என்றெல்லாம் நான் 
கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன் 
நீங்கள் ?

நம்மை அறியாமல் உதடுகளைப் பிரித்து 
ரசித்து சிரிக்க வைத்த வரிகள் ....

கவிஞர் தன் மனதில் உள்ளன யாவற்றையும் கவிதை வரிகளாக வெளிக் கொண்டு வர முயற்சித்து வெற்றியும் பெற்றுள்ளார்.தமிழின் மீது ஆர்வமும் சொற்களின் மீது காதலும் கொண்ட கவிஞராகத் தெரிகிறார். இயல்பான உணர்வுகளை அவை வெளிப்படும் போதே  கவிதைகளாகப் படைத்து விட்டு நகர்கிறார். பறவைகள் , மாமரம் , பெண்கள் , ஆண்கள் , அன்பு , ஏக்கம் , காதல் , காமம் , அலைபேசி என இவரது கவிதைகளின் கருப் பொருட்கள் அன்றாடங்களின் பேசு பொருளாகவே இருப்பதால் நம்மால் லயித்து வாசிக்க முடிகிறது . இன்னும் வரும் காலங்களில்  கூடுதல் மெருகேறிய  கவிதைகளைப் படைக்க வாழ்த்துகள் அன்புத் தோழி ஜெயஸ்ரீ .


வாசிப்பை நேசிப்போம் குழுவிற்கு நன்றி 

இந்தப் புத்தகம் என்னை வந்தடைந்தது ஒரு சுவாரசியமான  அனுபவம் என்று சொல்லலாம் .இது என் கைகளில் கிடைத்து  மூன்று மாதங்கள் முடிவடைந்துவிட்டன. எப்போதுமே ஒரு புத்தகத்தை   நம் மீது அன்பு வைத்து அனுப்பினார்கள் என்றால் நான் உடனே வாசித்து அது குறித்து எழுதுவது வழக்கம் ஆனால் என்னுடைய சூழல் இந்த புத்தகத்தை நான் தொடர்ந்து வாசிக்க இயலாமல் காலம் தாழ்த்திக் கொண்டே போனேன் ஒரு காலகட்டத்தில் இந்த புத்தகத்தை நான் வேறு ஒரு ஊரில் விட்டு வந்து தொலைத்து விட்டதாக எண்ணி  திரும்பவும் தகவல் கிடைத்து   தபாலில் அனுப்பக்  கூறி அதன் பிறகு வாசித்தேன். 

எதற்காக சொல்கிறேன் என்றால் மிகவும் சுவாரசியமான அனுபவம் இந்த புத்தகத்தை நான் வாசித்து எழுதுவது என்பது .அவருடைய அன்பு கலந்த ஒரு பரிசாக இதை எனக்கு அவராகவே என்னை தேடி எனது விலாசம்  கேட்டு எனக்கு அனுப்பி வைத்தார்  ஜெயஸ்ரீ.
வாசிப்பை நேசிப்போம் குழுவில் என்னை அறிந்ததாகக் கூறி   முகவரி கேட்டாங்க ....ரொம்ப அழகான ஒரு கடிதமும் எனக்கு இதோடு வைத்து அனுப்பியிருந்தார்  


Sunday 10 October 2021

நூல் :கோபல்ல கிராமம் -

நூல் :கோபல்ல கிராமம் - 

ஆசிரியர் 
கி.ராஜநாராயணன்

 மக்களின் மொழியில் கரிசல் இலக்கியம் தந்தவர் என எல்லோராலும்  பாராட்டுக்குரியவராக இருப்பதை இந்த நூலை வாசிக்கும் போது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஒரு தரிசான காட்டு நிலம் ..... பசு மாடுகள் நிறைந்த , வளமான கிராமமாக 
மாறிய ஒரு கதையை பூட்டியின் வழியாக காட்சிகளைக் கண் முன் நிறுத்தும்  ஒரு சுவையான பகுதியைக் கடந்து ,  மக்கள் இந்த பூமியை தாங்கள் வாழக்கூடிய  ஒரு
வசிப்பிடமாக உருவாக்கிய வரலாற்றைத் தாங்கி படைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.   . 

ஒரு கிராமத்தின் தோற்றம் , அங்கு வாழும் மக்களின் இயல்பு , உயிரினங்களின் அசைவு , அவர்கள் செய்யும் தொழிலின் நேர்த்தி , குடும்ப வாழ்க்கை முறை என மிகவும் இயல்பாக வரிக்கு வரி அங்கே நம்மையே வசித்த அனுபவத்தைக் கொடுத்து நகர்ந்து செல்கிறது நாவல் 

கதைகளுக்குள் கதை என்று ஒரு பொது மையத்திலிருந்து அதைச் சுற்றிச் சுற்றி கதைகள் உருவாகியும் கதைகளுக்குள் எந்த நெருடலோ முரணோ இல்லாமல் இணைப்பும் கொடுத்து ஒரு நாவல் உருவாகி அதை அந்த மக்களின் மொழியிலேயே நமக்கு அளித்துள்ளார் கி.ரா. 

ஒரு பெண்ணைக் காப்பதற்காக தங்கள் இருப்பிடத்தை விட்டு கூட்டமாக வெளியேறி தப்பித்து வேறொரு நிலத்தில் தங்கள் வாழ்க்கையை உருவாக்கி பல தலைமுறைகளுக்குப் பிறகு செழிப்பான ஊரின் வரலாற்றைக் கதையாகச் சொல்லி ஆங்காங்கே சுவை கூட்ட கதை மாந்தர்களைப் புதிது புதிதாகப் படைத்து அவர்களது செயல்பாட்டின் வழியே பயணிக்க வைத்து கோபல்ல கிராமத்தை படைத்திருக்கும் நேர்த்தி நம் மனதில் ஆழமாக ஊடுருவுகிறது.

வரலாற்றில் இடம் பெற்றுள்ள ஆங்கிலேயரின் ஆட்சி , கும்பினிகளின் மேற்பார்வை இவர்களின் துன்பங்களிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளக் கையாளும் வழிவகைகள் இப்படி ஒன்றோடு ஒன்று பிணைந்து புனைவின் வடிவத்தில் அபுனைவு படைப்பாக அறிய வைத்தது .

உமா

என்னுயிர் நீயன்றோ

என்னுயிர் நீயன்றோ 

பதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம்
விலை : ரூ .150

கவிதை நூலின் ஆசிரியர் : 
 அன்புடன் ஆனந்தி. . Anbudan Ananthi 

தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க வாழ் கவிஞர் . இவரது தமிழ் ஆர்வம் அளப்பரியது என்பதை இவரது நூலுக்கு அணிந்துரை வழங்கிய அனைவரும்  வேறு வேறு கோணத்தில் பதிவு செய்துள்ளதிலிருந்து அறிந்து கொள்ளலாம். . தாய் நாட்டை விட்டு வெகுதூரத்தில் வாழ்ந்து வந்தாலும் தமிழ் மொழியை இவர் நேசிக்கும் பாங்கை இந்நூல் ஆழமாக உணர்த்துகிறது. இவர் வெளிநாடு வாழ் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியைக் கற்பித்து வரும் பணியை பல வருடங்களாக செய்து வருகிறார்.  உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் இணைந்து இலக்கியம் வளர்க்கும்  தமிழால் இணைவோம்  உலகத் தமிழ்க் களத்தின் அமெரிக்க  ஒருங்கிணைப்பாளராக  ஊக்கமுடன் செயல்பட்டு வரும் ஆனந்தி இயல் , இசை , நாடகம் என முத்தமிழையும் குழந்தைகளிடமும் பெரியோர்களிடமும் கொண்டு சேர்க்கும் தமிழ்ப் பணிகளை செய்து வருகிறார். சமீபமாக அந்தாதிகளை தன் முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். 
இணையம் முழுக்க இவரது எழுத்துகள் மெல்லிய  மழைத் தூறல் போல விடாமல் சாரலுடன் பரவிக் கிடக்கிறது .

கவிதை நூலான என்னுயிர் நீயன்றோ - இவரது முதல் தொகுப்பு , ஆனால் பதினைந்து ஆண்டுகளாக, தான் எழுதி வந்த கவிதைகளை மிக அழகாகக் கோர்த்து நூலாக மாற்றியுள்ளார். 100 கவிதைகளிலும் சொற்களின் திரட்சிகர்ஜனை செய்கிறது. நேசத்தை காணும் இடமெல்லாம்  விதைத்து அதன் மனத்தைப் பரப்புகிறார். காதலை எல்லா இடங்களிலும் கொண்டாடும் இவர் பெரும்பாலான இடங்களில்
இயற்கையின் மீது படர விட்டு பனித்துளிகளைச் சேகரிக்கும் புல்வெளியின் ஈரம்  போல  குளிரூட்டுகிறார். 

சர்வமும் நீ .... என்ற தலைப்பில் 

நெருஞ்சி முள்ளாய் 
நிறைத்த பாரம்
நீ நெருங்கிய நொடி
உடனே தீரும் .... என்று மிக அழகாகப் பாடியுள்ளார் .

பொங்கல் குறித்தான கவிதைகள் , பெற்றோர் , நட்பு , இயற்கை , உணர்வுகள் , மனிதப் பண்புகள், நாட்டுப் பற்று , பெண்ணியம் , மரபு ,  என ஒவ்வொரு கவிதையும் உருப் பெற்று உணர்வுகளைக் கிளறி அனுபவிக்க வைத்துள்ளார். வார்த்தைகளின் கிறக்கங்களில் சுகமான நினைவுகளைத் தருகிறார் .

தேன் உண்டு களிக்கக் கண்டேன்
திறம் கண்டு கிறங்கி நின்றேன் ...

மனிதர்கள் பல விதம் என்ற தலைப்பில் ....

ஊழியம் செய்தபடி
உரிமை இழந்த படி
உறவுக்காய் ஏங்கியபடி
உண்மையாய் இருப்பர் சில பேர் ....

இவை போன்ற வரிகள் எதார்த்தத்தைப் பிரதிபலிப்பதைப் பார்க்கலாம்.

மனதின் வலிகள் என்ற தலைப்பிலான கவிதையிலும் அதே எதார்த்தம் .... 
அவை ....

இருந்தும் இல்லாததும் 
புரிந்தும் புரியாததும்
அறிந்தும் அறியாததும் போல்
அமைதியாய் நகர்கிறேன் ...

மனிதர்கள் மீதான நேசத்தை மையப் படுத்தி இவர் படைத்துள்ள கவிதைகளை வாசிக்கும் போது , வேறொரு உலகிற்கு நம்மை அவை அழைத்துச் சென்று விடுகின்றன. ஆனால் அதே உலகிற்குள் சஞ்சரிக்க ஆசை கொண்டாலும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி மீள்கிறோம். ஆனால் ஆனந்தி எப்படி எல்லாக் கவிதைகளிலும் நேசத்தின் சாயலை மிச்சம் வைக்காமல் வெளிப்படுத்தி இருக்கிறார் என்ற வினா நமக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது தான் நிஜம். 

இவரது எல்லாக் கவிதைகளிலும் சொற்களின் தொடுத்தல் வரிசையில் ஒரு ஒழுங்கு இருப்பதையும் , சொற் களஞ்சியப் பெருக்கம் தாராளமாகப் பயன்படுத்தப்படுதலையும் கவனிக்க முடிகிறது. எதுகை , மோனை இல்லாத கவிதைகளே இல்லை எனலாம் .. ஒரு ஒழுங்கு வரிசை இலக்கண விதிகளுக்குட்பட்டு சொற்களை அடுக்கியிருப்பதையும் துல்லியமாக கவனிக்க இயலுகிறது. மிக முக்கியமாக  கவனிக்கும் மற்றொரு விடயம் , கவிதைகள் நேரடியான பொருளைத் தருவதால் புரிந்து கொள்வதில் கடினம் இல்லை. 

 அன்புடன் 
உமா

யாத்ரீகனின் பாதை

#பயணங்கள்

யாத்ரீகனின் பாதை 
ஒளிப்பட பயணக் கதைகள் 

பதிப்பு : முதல் பதிப்பு 2020
வெளியிடு : தன்னறம் நூல் வெளி
விலை: ரூ 500 

ஆசிரியர் : வினோத் பாலுச்சாமி 

இவர் மதுரை காரியாபட்டி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது திருவண்ணாமலையில் வசித்து வருகிறார். தனது கல்வியை முடித்து பலவிதமான நகரங்கள் வேறுபட்ட நிறுவனங்களில் பணி புரிந்துள்ளார். தற்போது " யா" என்ற ஸ்டூடியோ வைத்து குழந்தைகளுக்கான ஊசித் துளை கேமிரா பயில் முகாம்களை நடத்தி வருகிறார். ஒரு புகைப்படக் கலைஞராக பயணியாக வாழ்கிறார். 

யாத்ரீகனின் பாதை 

ஒவ்வொரு புத்தகமும் நம்முடன் ஒவ்வொரு விதமாக உரையாடும். ஆனால் இந்த புத்தகமோ நெடுந்தூரம் பயணிக்க வைத்து  நம் மெளனத்தை ஆழமாக்குகிறது. 

 தன்னை ஒரு  தேர்ந்த பயணியாக்கி சமூகத்தின்  தொலைவுகளை  ஒளிப்படங்களாக மாற்றி அப்பயணத்தை உயிரோட்டமாக சிறந்த தொகுப்பாக வழங்கி இருக்கிறார் நூலாசிரியர் .

இப்புத்தகம்  ஒரு மனிதரின் வாழ்க்கைப் பயணத்தையும் பயணத்தின் மைல்கல்களையும் எழுத்துகளாலும் ஒளிப்படங்களாலும் நிறைத்து நம் கைகளில் கிடைத்திருக்கிறது. நூலாசிரியர் தனது கனவுகளைப் பயணங்களின் வழியே சாத்தியமாக்கி நமக்கு பல பரிமாணங்களை தனது எழுத்தின் வழியே தந்துள்ளது சிறப்பான செயல். 

புத்தகத்தின் அட்டைப் படமும் வடிவமைப்பும்   மனதை நெகிழ வைக்கும் வண்ணங்களும் நம்மை மெதுவாகப் பக்கங்களைப் புரட்ட வைக்கின்றன.  ஒரு யாத்ரீகனாக இந்த சமூகத்தை அங்கு வாழும் எளிய மனிதர்களை அவர்களது வாழ்வியலை , அன்றாடம் அவர்கள் சந்திக்கும்  பிரச்சனைகளை நமக்கு அடையாளப்படுத்தியிருப்பது தான்  மிகச் சிறப்பாக  அமைந்துள்ளது எனலாம்.

தனது இளமைக் காலம் , படிப்பு , வேலைகள் என நினைவுபடுத்திய பிறகு தனது கனவுகளை நிஜமாக்க எவ்வாறு பயணித்தார் என்பதே இங்கு நாம் அறிந்து கொள்ளும் செய்தி ஒவ்வொரு சூழலையும் கடந்து தனது பயணத்தை எங்ஙனம் சுய தேடலுக்கான ஆதாரமாகத் தருவித்துக் கொண்டு பல்வேறு அனுபவங்களைப் பெற்று அதை மிக அழகிய புத்தகமாக மாற்றியுள்ளார் என்பதை நாம் கூர்நோக்குதல் இன்றியமையாதது. 

நண்பன் திரைப் Uடத்தில் தனது பிடித்தமான பணி புகைப்படங்கள் எடுப்பது என ஸ்ரீகாந்த் தனது ஆசையை வெளிப்படுத்த நண்பன் விஜய் அது வளர்ந்து மலர்வதற்கு துணை நிற்பது பார்த்து இதெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம் என நாம் எண்ணும் போது , இல்லை இல்லை நிஜ வாழ்க்கையில் இப்படியான வெற்றியாளர்கள் உள்ளனர் என்பதை  வினோத் அவர்களை புகைப்படங்கள் எடுக்க ஊக்கப்படுத்திய நண்பர்கள் , சூழல்களை அறிமுகப்படுத்துகின்றது சில பக்கங்களில் இப்புத்தகம் . 

கடல்களில் கரையோரம் ஒதுங்கும் ஆமைகளின் வாழ்க்கை முதல் 
மலைவாழ் மக்களின் பிரச்சனைகள் வாழ்க்கை முறை வரை பயணித்து அவற்றை ஒளிப்படமாக்கி , எல்லாவற்றையும் தொகுத்து புத்தகமாக்கியிருப்பது வரவேற்கத் தக்கது. 

பயணங்களால், தான் பெற்ற நல் மனிதர்கள் , நட்புகள் , உடல் நலக் குறைபாடுகள் மீட்டெடுத்த உறவுகள் என ஒரு மனிதரின் வாழ்க்கைச் சுழற்சியையும் பயணமாக , படங்களாக , அற்புதமான நினைவுகளாகப் பகிர்ந்துள்ளார் வினோத் .

அவரது பாதை விரிந்து பயணம் மலை உச்சியை அடைவது போல மிகப் பெரிய புகைப்படக் கண்காட்சியில் கலந்து கொண்ட அனுபவங்கள் , அங்கு வாழ்நாள் நண்பர்களாக மாறிப் போன சக படைப்பாளர்கள் என நிறைய பயண அனுபவங்களைச் சித்தரிக்கிறது புத்தகம் . இப்படியான வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை . வினோத் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. என்றால் அது அவரது பேறு .இறுதிப் பகுதியில் நமது கதை சொல்லி குமார் ஷாவும் வருகிறார் .இவரது வாழ்வும் இப்படித் தான் ... பேறு பெற்றவர்கள். 

நீலாங்கரை கடற்கரை இரவுகளையும் ஒரிசா கடற்கரை இரவுகளையும் ஆமைகளுடனான பயணத்தில் ஒளிப்படமாக்கி நம்மை ரசிக்க வைக்கிறார். ரயில் பயணத்தில் மனிதர்களைப் படம் பிடிப்பதோடு அவர்களது மனதையும் படித்து படமாக்கி எழுத்தாக்கியிருப்பது என நம்மை புத்தகம் முழுக்க நெகிழ வைப்பது இங்கு சொல்லப் பட வேண்டிய ஒன்று. 

அதே போல ஒவ்வொரு அத்யாயங்களின் தலைப்புகளும் கூட நம்மை சற்று நிதானித்து நம்மை அறியாமல் புன்னகையுடன் முறுவலிக்கச் செய்த பிறகு தான் வாசிக்கவும் வைக்கின்றன. 

ஏழு வருடங்கள் இடைவெளியில் ஆதிவாசி மக்களை  இரு முறைகள் சந்திக்கச் சென்றது ,அப்போது அவர்களுக்கும் தனக்குமான நட்புறவு  எவ்வகையில் பரிணமித்தது என்று பயணமாக விளக்கி படங்களுடன் தந்திருப்பது என நாம் வாசிக்க வாசிக்க இனிக்கிறது. 

தாய்லாந்தின் அனுபவம் அங்கோர் வாட் புகைப்படப் பயிற்சிப் பட்டறையில் பெற்ற அனுபவங்கள் என ஆசிரியர் தனது பயண நூலை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் பொறுமையாகவும் பொருளுள்ளதாகவும் நமக்காக அளித்திருக்கிறார். 

ஒவ்வொரு சொல்லும் நம்முடன் கவனமாக உரையாடுகின்றன . புனைவுகளை விட உண்மைகளுக்கு ஒரு ஆற்றலும் பிரகாசமும் சற்று கூடுதலாக இருக்கும் என்பதை இப்புத்தகம் உண்மையாக்குகிறது. புத்தகத்தின் பயணக் கதையில் இடம் பெற்றுள்ள  ஒவ்வொரு புகைப்படமும் நம்மை ஏதோ செய்து விடுகிறது.  மீண்டும் சொல்கிறேன். எல்லோருக்கும் இப்படியான வாழ்க்கைக் கிடைத்து விடுவதில்லை. வாழ்க்கையின் சில அரிய சுவாரஸ்யங்களை நுகர விரும்பும் எல்லோரும்  கட்டாயமாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது. 

சுதந்திரப் பறவையாக வாழும் வினோத் தனது எதிர் வரும் பயணங்களையும் மற்றவர்க்கு தரும் படியும் ஆவணங்களாக மாற்றிட அன்பு வாழ்த்துகள் 

உமா .

கடிதங்கள் பதிவுகள் சொற்சித்திரங்கள்

கடிதங்கள் பதிவுகள் சொற்சித்திரங்கள் 

ஆசிரியர் : சுந்தரபுத்தன் 
வெளியீடு : பரிதி பதிப்பகம் -
முதல் பதிப்பு : 2018
பக்கங்கள் : 474
விலை : ரூ 500

ஆசிரியர் குறிப்பு :
சுந்தரபுத்தன்  திருவாரூர் மாவட்டத்தில் கண்கொடுத்தவனிதம் என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது 24 ஆம் வயது வரை சொந்த ஊரில் வாழ்ந்த இவர் அதன் பிறகு சென்னையில் இடம் பெயர்ந்து ,   பத்திரிக்கைத் துறையில் 
தனக்கான ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் அரசி , புதிய பார்வை ,குமுதம் , விண் நாயகன், புதிய தலைமுறை கல்வி உள்ளிட்ட பல பத்திரிகைகளில்  பொறுப்பு வகித்துள்ளார். தற்போது Open Horizon இணைய இதழில் பணியாாற்றுகிறார். வண்ணங்களின் வாழ்க்கை , ஒரு கிராமமும் சில மனிதர்களும் , கிராமத்து  ஆட்டோகிராப் என பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். இவருக்கு பயணங்களில் தனியாத ஆர்வம் என்பதை இந்நூல் நமக்கு அறிவிக்கிறது.

கூடுதல் தகவல் ,இவரது தந்தை ஒளிச்செங்கோ என்ற நடராஜன் மாலைமுரசு இதழில்  பணியாற்றிய புகழ் பெற்ற நிருபர் . 

கடிதங்கள் பதிவுகள் சொற்சித்திரங்கள் 

 ஆசிரியர் வெவ்வேறு தருணங்களில் எழுதிய நான்கு புத்தகங்களின் தொகுப்பு தான் இது என பதிப்பாசிரியர் இளம்பரிதி குறிப்பிட்டுள்ளார். கற்பனை கடிதங்கள், மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு ,அழகின் வரைபடம், யானை பார்த்த சிறுவன் இவை நான்கும் இணைந்துதான் இந்த புதிய புத்தகம் உருவாகியுள்ளது.

 சுந்தரபுத்தன் தான் ரசித்ததை, பார்த்ததை , படித்ததை , உணர்ந்ததை கடிதங்களாக எழுதியுள்ளார். சொற் சித்திரங்களாக எழுதியுள்ளார் ,பதிவுகளாக குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் இணைந்து நம்மோடு ஒரு உயிர்ப்பான தருணங்களை பக்கம் தோறும் வழங்கி வருகின்றன . கடிதங்கள் என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள ஒவ்வொரு கடிதமும் மிகவும் மனதிற்கு நெருக்கமான உணர்வுகளை கொடுக்கின்றன .

எல்லோருக்கும் கடிதம் எழுதியுள்ளார் அவருடைய கிராமத்திற்கு நலந்தானா என்று கேட்டு கடிதம் எழுதியுள்ளார் நெல்சன் மண்டேலாவுக்கு எழுதியுள்ளார் அவருடைய பால்ய காலத்திற்கு எழுதியுள்ளார் அவருடைய ஆங்கில ஆசிரியருக்கு  , பில் கேட்சுக்கு , வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு , அம்மாவுக்கு ,அப்பாவுக்கு, உறவினருக்கு ,விவேகானந்தருக்கு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நிலவுக்குக் கூட ஒரு கடிதம் எழுதி இருக்கிறார், தைப் பொங்கல் கொண்டாடக் கூடிய தருணங்களுக்கு கூட கடிதம் எழுதி நமது பால்யகால உணர்வுகளை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நம்மைத் தூண்டி இருக்கிறார்.

மகாத்மா காந்தியடிகளுக்கும் ஜென்னி மார்க்ஸ் ,பெரியார், காமராசர் என்று இவரது கடிதம் பட்டியல்கள் ஏராளம் ஒவ்வொரு கடிதமும் இரண்டு பக்கங்கள் மட்டுமே கொண்டிருக்கின்றன .படிப்பதற்கு சுவாரஸ்யமாக மிகவும் ரசனையாக வெவ்வேறு தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் பாலுமகேந்திரா பாரதிராஜா என்று திரைத்துறைப் பிரபலங்களையும் இவர் விட்டு வைக்கவில்லை 

ஒவ்வொரு கடிதத்திலும் அவரது ஆழ்ந்த ஞானம் புறப்படுகிறது ஒவ்வொரு ஆளுமைகளையும் அவர் உள்வாங்கி முழுமையாக வாசித்துள்ளார் அவர் குறித்த செய்திகளை பல ஆண்டுகளாக சேகரித்து அதை சுருக்கமாக ரத்தினச் சுருக்கம் என்று சொல்வார்களே அதைப் போன்று நமக்கு ஓரிரு வார்த்தைகளில் செறிவாகக்  கொடுத்த செல்கின்றார். நாம் படிக்காத எத்தனையோ விஷயங்களை இந்த சிறுசிறு கடிதங்களின் வழியாக ஏராளமாக  சுந்தரபுத்தன் நமக்கு கொடுத்து இருப்பது  மிகவும் சிறப்பு .

அதேபோல கடிதங்களில் ஒவ்வொரு ஆளுமைகளிடமும் அவர்கள்  குறித்த விமர்சனங்களையும்  வைத்துள்ளார் மக்களின் பார்வையில் இயல்பாகவே இருக்கும் கேள்விகள் அவற்றையும் கடிதங்களில் சந்தேகம் கேட்பது போல் எழுதியவருக்கு வைத்துள்ளார்.

இயல்பாகவே இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் விளைவாக மறைந்து போயிருக்கும் கடிதம் எழுதுதல் என்ற தகவல் தொடர்பு பழக்கத்தையும் எழுதிக் கடத்திய  அந்த உணர்வுகளைம் படிப்போருக்கு ஏக்கமாகவே உருவாக்கக்கூடிய ஒரு அழகான கடிதத் தொகுப்பை இந்த நூல் நமக்கு அளிக்கின்றது.

அடுத்தபடியாக பதிவுகள் - இந்த தலைப்பில் மகிழம் பூக்கள் பூத்துக் கிடந்த வாசல் ,காட்டு மூங்கில் பாட்டுப் பாடும் புல்லாங்குழல் ஆச்சு, செக்கும் இல்லை செட்டியாரும் இல்லை இப்படி நிறைய பதிவுகளை நமக்காகக்  கொடுத்துள்ளார். இதில் ஷோபா என்றொரு தேவதை என்ற தலைப்பில் பாலுமகேந்திரா அவர்களுடனான எழுத்தை நமக்கு அப்படியே கொடுத்துள்ளார் .அதற்கான சந்திப்பு இருவருக்கும் ஏற்பட்ட உரையாடல்கள் சோபாவை குறித்து பாலு மகேந்திராவின் வெளிப்பாடு என்று எத்தனையோ சுவாரசியமான பதிவுகளாளைப்  பார்க்கலாம்  .

இவர் சந்தித்த நபர்கள், சென்ற பயணங்கள், அந்த இடங்கள் குறித்து இவருக்கு உண்டான அனுபவங்கள், பெரும்பாலும் பயணங்கள் குறித்து இந்த பதிவுகளில் வெளிப்படுகிறது. அதேபோல தன்னைச் சுற்றி இருக்கக்கூடிய மனிதர்கள், நண்பர்கள் , பத்திரிகை துறையில் திரைத்துறையில் இவரோடு பயணித்தவர்கள் இவரோடு ஒரே அறையில் சென்னை வந்த புதிதில் தங்கியவர்கள் என்று பல வாரியாக  இன்று வளர்ந்துள்ள  ஆளுமைகளை போகிற போக்கில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர்களில் பலரும் நமக்கு முகநூல் தளத்தில் அல்லது நேரடி தொடர்பில் பழக்கம் உடையவர்களாகக் கூட இருக்கிறார்கள். ரவி சுப்பிரமணியம் ,யுகபாரதி முத்துக்குமார் என்று அவர்களுடனான அந்த தருணங்கள்,  இவருக்கும் அவர்களுக்குமான நட்பு ,இவர் கடந்து வந்த பாதை, சென்னையில் சந்தித்த இடங்கள் ஒவ்வொரு பத்திரிகைத் துறையிலும் இவர் பயணிக்கும் பொழுது நடந்த அனுபவங்கள் என நீள்கின்றன 

 இவர் பயன்படுத்திய சைக்கிள் குறித்து கூட எழுதியுள்ளார். இவரது  கிராமம் சார்ந்த நிகழ்வுகள் சினிமா எப்படி இன்று நம் கைக்குள்ளாக  இருக்கிறது ஆனால் சினிமாவைத் தேடி மக்கள் சென்றார்கள் என்று அழகாகப் பதிவு செய்துள்ளார் .அதேபோல முதல் வாழ்த்து முதல் பூங்கொத்து என்று இவருடைய வாழ்க்கையில் , இவரை உயிர்ப்புடன் வைத்துள்ள அத்தனை நினைவுகளையும் பெரும்பாலும் நாம் வாசிக்கும் பொழுது நமக்கு அந்த உணர்வு ஏற்படும் வகையில் எழுதியது தான் நாம் ரசித்து வாசிப்பதற்குக் காரணம். 

உதாரணமாக ,இவர் கிராமம் குறித்து ப்ளஸ்ஸர் வந்த தேர்தல் காலம் என்று ஒரு கட்டுரையை குறிப்பிட்டுள்ளார் நாமும் நம்முடைய பழைய காலத்திற்கு சென்று விடுகிறோம் அல்லது இப்போது இருக்கக்கூடிய தேர்தல் நடவடிக்கைகள் குறித்து நமக்கு ஞாபகத்தில் வந்து போகிறது .இவ்வாறு  ஒவ்வொரு பதிவுகளை வாசிக்கும் பொழுதும் நம்முடன் தொடர்பில்  இருக்கக்கூடிய இந்த வாழ்க்கை முறையை ஒப்பிட்டு பார்க்கும் படி ஒரு சின்ன சந்தோஷம் உணர்ச்சி மகிழ்ச்சி நாமும் நமது நினைவலைகளில் சற்று நேரம் பின்னோக்கி செல்லுதல் இப்படியான உணர்வுகளை தொடர்ந்து இவருடைய பதிவுகள் தருகின்றன. 

 இறுதியாக சொற் சித்திரங்கள் இந்த தலைப்பில் இவர் உலகப் புகழ்பெற்ற பல படங்களைக் குறிப்பிட்டு அவற்றுக்கான செய்திகளையும் கொடுக்கின்றார். சில முக்கியமான படங்கள் உலக புகழ் பெற்ற படங்கள் இல்லை என்றாலும்  அவற்றைப் பதிவு செய்துள்ளார் .உதாரணமாக ,யூரோ –அமெரிக்காவின் ஹவாய் தீவில் இருக்கக்கூடிய இந்த கலைஞர் தண்ணீரிலிருந்து பெண்கள் எழுந்து வருவது போன்ற ஓவியங்களை வரைவதில் சகலகலா வல்லவர் என்று  அவர் பற்றிய குறிப்பும் அவர் வரைந்துள்ள ஓவியம் குறித்தும் தருகிறார் .

இப்படியான பதிவுகள் ஒரே ஒரு பக்கத்திலும் , மிகச் சில பதிவுகளே இரண்டு பக்கங்களையும் நிரப்புகின்றன.  மலாலா,  தலைவர்கள், புகைப்பட தினம், போர்ச்சுக்கல் படம் ,கடும் பஞ்சம் 1876 இல் இந்தியாவில் இருந்த பஞ்சத்தினால் மக்கள் எவ்வாறு பாதிப்படைந்து எலும்பும் தோலுமாக இருக்கக்கூடிய ஒரு படம் இவற்றையெல்லாம் நாம் காணும் பொழுது  நெகிழ்வாகவே உணர முடிகிறது. 

 முக்கியமான படங்கள் குறித்தும் அவற்றுக்கான செய்திகள் குறித்தும் வெறும் செய்தியாக இல்லாமல் அவை நமது மனதைத் தொடும் படி மிகவும் ரசித்து உள்வாங்கும்படி சொற் சித்திரங்கள் என்ற பகுதியில் தொகுத்துள்ளார் .தெருவென்று எதனைச் சொல்வீர் - என்ற ஒரு தலைப்பில் குழந்தைகளின் உலகமாக இருந்தது தெரு தான் , முதன்முதலில் உலகம் தெருவாகத்தான் குழந்தைகளுக்கு தெரிய வந்தது என்று ஒரு ஒரு பதிவு இருக்கின்றது. இப்படி மிகக் குறிப்பிட்ட ஒருசில படங்களுக்கான பதிவுகள் நம்மை சற்று நிதானித்து ஆழ வாசிக்க வைக்கின்றன. இதில் ஒரு இனம்புரியாத சுவாரசியத்தை தருகிறார் என்று சொல்லலாம். ஜோமல்லூரி குறித்து ஒரு பதிவு அவருடைய படத்துடன் அவருடனான நட்பு குறித்து எழுதி இருக்கின்றார் இப்படி ஒவ்வொரு சொற் சித்திரங்கள் தலைப்பிலும் வேறு வேறு தலைப்புகளில் பன்முகத்தன்மையான பதிவுகளை கொடுத்துள்ளார்.

 சமூக ஊடகங்களின் பெருக்கம் கண்டது கேட்டது பார்த்தது என அனைத்தையும் யாரும் எழுதும் வாய்ப்பை திறந்துவிட்டிருக்கிறது அதில் சிலர் எழுதுவதைத் தான் நம்மால் குறிப்பிட்டுச் சொல்ல முடிகிறது ரசிக்கவும் முடிகிறது இயற்கையை பற்றிய சமூக நிகழ்வுகளைப் பற்றிய அந்த நபரை பற்றிய எதுவாக இருந்தாலும் அதற்குள் அவர்கள் கரைந்து நம்மை அழைத்துச் சென்று விடுகிறார்கள் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சுந்தரபுத்தன் என்று  வ.மணிமாறன் ஊடகவியலாளர் தனது கருத்தை இங்கு பதிவு செய்கிறார். அதை நாமும் ஏற்போம் .

பல துறை வல்லுனர்களைக் குறித்து நிறைய செய்திகளை அவை   வெறும் செய்தியாக அல்லாமல் ஒரு  அற்புதமான உணர்வுடன் அறிந்து கொள்ளக்கூடிய ஒரு தொகுப்பாக இந்த கடிதங்கள் பதிவுகள் சொற் சித்திரங்கள் அமைந்திருக்கின்றது பாராட்டுக்கள் சுந்தரபுத்தன் அவர்களுக்கு .இனிவரும் காலங்களிலும் இதே போல அவருடைய ஆழ்மனதில் இருந்து உணர்வுகளுடன் கற்பனை வளத்துடன் , மனிதர்களை வாசிப்பதன் நோக்கத்துடன் கூடிய பதிவுகளை தொடர்ந்து தருமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம். சிறப்பான நூல். 

உமா

குழந்தைகளைக் கொண்டாடுவோம்

நூல் : குழந்தைகளைக் கொண்டாடுவோம்
ஆசிரியர் : ஷ. அமனஷ்வீலி
தமிழில் : டாக்டர் இரா . பாஸ்கரன்
பதிப்பகம் . பாரதி புத்தகாலயம் 
விலை : ரூ 120
பக்கங்கள்: 158

குழந்தைகளை கொண்டாடுவோம் கல்விச் சிந்தனைகளைத் தரக்கூடிய இந்த புத்தகம், ஆசிரியர்களுக்கான மிகச் சிறந்த ஒரு கையேடு என்று கூறலாம் . ஆசிரியர்கள், பெற்றோர்கள் ,கல்வியாளர்கள் . கல்வி அதிகாரிகள் என்று பலரும் வாசிக்கக் கூடிய ஒரு புத்தகம் . முக்கியமாக தலைமையாசிரியர்கள் இதனை வாசிக்க வேண்டும் .அப்போதுதான் அனைத்து ஆசிரியர்களையும் கற்பித்தலின் பரிமாணங்கள் குறித்து மிகச் சிறப்பாக வழிநடத்த இயலும் .

பகல் கனவு நூலை நாம் அனைவரும் வாசித்த்திருப்போம் அதே போன்று, ஆனால் அதைவிட சற்று கூடுதலான மேம்படுத்தலுடன்  எழுதப்பட்டிருக்கும் இந்த புத்தகம் ஒரு ஆசிரியரின் வகுப்பறை அனுபவங்களின் நாட்குறிப்பைப் போல மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது என்பேன். ஏனெனில் பகல் கனவு நூல் நான்காம் வகுப்பு குழந்தைகளை மையப்படுத்தியது , இதுவோ 6 வயது குழந்தைகளுக்குத் தரப்படும் கல்வி குறித்தானது. 

 ஆறுவயது குழந்தைகளுக்கு எவ்வாறெல்லாம் கற்பித்தலை எடுத்துச் செல்வது என்று ஷா .அமனஷ்வீலி என்ற சோவியத் நாட்டின் கல்வியியல் அறிஞர் நமக்கு அழகாகத் தொகுத்துக்  கொடுத்துள்ளார் . 6 வயது குழந்தைகளுக்கு , பள்ளிக்கு வரும்  முன்பே அல்லது பள்ளிக்குள் அவர்கள் வந்தபிறகு எவ்வாறெல்லாம் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பதுதான் இந்த புத்தகத்தின் சாராம்சம் .

இவர் குழந்தை வளர்ப்பு கல்வி இயலில் தனக்கான 15 ஆண்டுகள் கல்வி அனுபவப் பின்புலத்துடன் , ஓராண்டு காலத்தில் பதிவுசெய்து 800 பக்கங்கள் கொண்ட நாட்குறிப்பின் அடிப்படையில் முன் தயாரிப்பு வகுப்புகளைத் திட்டமிடுகிறார் .அவற்றில் 5 முக்கிய நாட்களில் அவர் செய்த  செயல்பாடுகளின் பதிவுகளை நம்மோடு  பகிர்ந்து கொள்வது தான் குழந்தைகளைக் கொண்டாடுவோம் புத்தகம் .

 முதல் நாள் , 20-ஆம் நாள் , 84 ஆம்  நாள் 122-வது நாள் கடைசியாக 170 ஆவது நாள் இப்படியான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை தொகுத்து இந்த புத்தகத்தில் நமக்கு கொடுத்துள்ளார் அமனஷ்வீலி. இந்த ஐந்து நாட்களின் அனுபவங்களே  நமக்கு ஓர் ஆண்டு காலக் கல்வியை , குழந்தைகள் பெறும் முறைகளைக்  கண்முன் கொண்டு வருகின்றது .

 ஆரம்பப்பள்ளியில் தயாரிப்பு வகுப்பில் உள்ள 6 வயது குழந்தைகளுடன் ஆசிரியர் எப்படிக் கலந்து பழக வேண்டும் என்பதற்கான  உதாரண நூல் தான் இது. நவீன வாழ்க்கை மற்றும் சமுதாய வளர்ச்சி ஆகியவற்றை கவனத்தில் கொண்டு ஆரம்பப்பள்ளியில் உள்ளடக்கத்தையும் முறையும் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கருத்து உருவாக வேண்டும் என்பதை இந்த நூலாசிரியர் முன்வைக்கிறார். 

 இந்த புத்தகத்தில் , ஆசிரியர்கள்
கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளமாக இருக்கின்றன , அதோடு அந்த செய்திகளைத் தங்கள் அனுபவங்களாக மாற்றியமைக்கக்கூடிய ஒரு முயற்சியும் தேவைப்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் .

இப்புத்தகத்தை  வாசிக்கும் போது 
 இன்றைய காலச் சூழலில்  ஒரு பெற்றோரோ அல்லது ஆசிரியரோ வியப்புக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ளக் கூடும் .ஏனென்றால் இந்த புத்தகத்தில் , இன்றைய தமிழகத்தில் இருக்கக்கூடிய பள்ளிச் சூழலும் கல்விச் சூழலும் ஒரு இடத்தில் கூட இடம் பெறவில்லை என்றால்  பார்த்துக் கொள்ளுங்களேன் .ஆமாம் இங்கு தான் ஆசிரியர் பணி அதிகாரிகளுக்கான ஆணைகளுக்கான பணியாக மாறிவிட்டதே. 

ஆசிரியர் பணி என்ன என்பதனை  அழகாக   ஆசிரியரியலாக மிகவும் அற்புதமாக கொடுக்கப்பட்டுள்ள ஒரு புத்தகம் .  நமக்குத் தெரியாத எந்த விஷயமும் இந்த புத்தகத்தில் இல்லை . நமக்குத் தெரிந்தவை என்றாலும் நாம் பின்பற்றாத வகுப்பறைகள்  குறித்து தான் இங்கு பேசப்பட்டுள்ளது.

 நம்முடைய வகுப்பறையை எப்படி இயல்பாகக் கட்டமைப்பது இயல்பாகத் திட்டமிடுவது, குழந்தைகளுக்கான வகுப்பறையாக எப்படி மாற்றுவது என்ற 
அழுத்தமான புரிதலை  ஆசிரியர்களுக்
குத் தருகிறது இந்நூல் .

ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான அணுகுமுறையும் உறவு முறையும் கற்பித்தல் முறையும்  இங்கு மனம் திறந்து  பேசப்படுகின்றன.
குழந்தைகள் தான் என் ஆசிரியர்கள் என்று கூறுகிறார் இந்த நூலாசிரியர், குழந்தைகளை முதல் நாள் பள்ளிக்கு வரும் பொழுது எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக சில இரவுகள் தூங்காமல் அவர் தயாரிக்கும் முன் தயாரிப்பு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது எல்லா குழந்தைகளுக்கும் கடிதம் எழுதி அனுப்புகிறார் . அந்த கடிதத்தைப் படிக்கக் கூடிய குழந்தைகள் இந்த ஆசிரியரைப்பற்றி மிகப்பெரிய கனவுகளுடன் இருக்கிறார்கள். முதல் நாள் பள்ளிக்கு வரும் பொழுது ஒவ்வொரு குழந்தையையும் 
( அவர்களது  படங்களை ஏற்கனவே சேகரித்து  வைத்திருந்ததனால்) பெயர் சொல்லி அழைக்கிறார் ஆசிரியர்.  ஒவ்வொரு குழந்தையும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள் .அதிசயக்கின்றனர் பெற்றோர்கள் , இப்படியான ஒரு ஆசிரியரா என்று. இவையெல்லாம் நடைமுறை யதார்த்தங்களைத் தாண்டி இருந்தாலும் இப்படி நடக்குமானால் அந்தக் கல்விமுறையில்  கற்றல் கற்பித்தல் வெகு சிறப்பாக இருக்கும் என்பதே இங்கு நமக்கு சொல்லும் செய்தியாக எடுத்துக் கொள்ளலாம்.

 குழந்தைகளிடையே , அவர்களது  உணர்வுபூர்வமான வாழ்க்கையில் மென்மை ,இரக்கம் ,கவனம் ,அனுதாபம் ,அன்பு, இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றை வளர்க்கக் கூடிய ஒரு மிகச் சிறந்த தளம் பள்ளியின் வகுப்பறைகளே , குறிப்பாக , தொடக்கப் பள்ளிகள் .  அச்செயலில் ஈடுபட்டு பணியாற்றும் மிக  முக்கியக்  கருவி ஆசிரியர் தான் என்பதை மையமாகக் கொண்டு  உரையாடுகிறார் இந்த நூலாசிரியர் பல்வேறு உதாரணங்களுடன் .

மதிப்பெண்கள் என்பவை  கால் உடைந்த போதனா முறையின் ஊன்றுகோல் ,ஆசிரியரின் அதிகாரத்தை நிலைநாட்டும் தடி., தடியையும் மதிப்பெண்களையும் விட்டுப் பிரிவது ஆசிரியர்களுக்கு எளிதல்ல ஏனெனில் எந்த ஒரு கல்வி போதனை மற்றும் குழந்தை வளர்ப்பு முறைக்கு ஆசிரியர் மிகவும் பழக்கப்பட்ட விட்டாரோ அந்தக் கல்வி முறையை மாற்றி அமைப்பது எளிதல்ல .ஆசிரியர் தன்னையும் தன் கண்ணோட்டங்களையும் கருத்துக்களையும் தன் அனுபவத்தையும்  மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் பொருள் . 

குடும்பத்திலும் பள்ளியிலும் குழந்தை வளர்ப்புத் தன்மைகள் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கக்கூடாது குழந்தை வளர்ப்பிலும் அவர்களுக்கு கல்வி போதிப்பதில் பள்ளிதான் மையமாக விளங்கவேண்டும் குடும்ப வளர்ப்பின் விஷயத்தில் குறிப்பிட்ட கோரிக்கைகளை பெற்றோர்கள் முன்வைக்க பள்ளிக்கு உரிமையுண்டு என்று பெற்றோர் கூட்டத்தில் வெளிப்படுத்துகிறார் அமனஷ்வீலி.

 கல்வி கற்பிப்பது என்பது எளிய நிகழ்ச்சிப் போக்கல்ல , குழந்தையின் சக்தியையும் திறனையும் வளர்க்கும் பொருட்டு கடினமாகத் தான் இருக்க வேண்டும், புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் உள்ள இடர்பாடுகளைக் கண்டு குழந்தை அஞ்சாவிட்டாலும் , பல காரணங்களினால் முக்கியமாக தனது கடமையைச் செய்யும்படி அக்குழந்தையை நிர்ப்பந்திப்பதன் காரணத்தினால்   அவர்களிடம் ஏற்படும் படிக்கும் ஆர்வம் மறைகிறது . குன்றாத கல்வி ஆர்வத்தை குழந்தையிடம் எப்படி ஊக்குவிப்பது எப்படி வளர்ப்பது சுய கல்வி பாதையில், அக்குழந்தை நடைபோட உதவ நாம் உதவலாம்  என்பதனை வரிக்குவரி மிக அழகாக இந்த நூலில் ஆசிரியர் விரிவாக ஆய்வை போல தொகுத்துக் கூறியுள்ளார்

 குழந்தையின் மீது மனிதாபிமான உறவைக் கொள்ள வேண்டுமெனில் ஒவ்வொரு குழந்தையின் எல்லையற்ற உள்ளாற்றலை நம்பவேண்டும். ஒரு ஆசிரியருக்கு உரித்தான பெரும் பொறுமை வேண்டும் குழந்தை மீது இரக்கம் காட்ட வேண்டும் குழந்தையின் மனதை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் இவற்றையெல்லாம் நாம் சிந்தித்தால்,  இன்றைய கல்வி முறையில் இவை இருக்கின்றதா என்பதை நாம் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றினால் அதுவே இப்புத்தகத்தின் சாதனையாகக் கூடும்.

 குழந்தைகளைக் கொண்டாடுவோம் என்ற இந்த நூலை எந்த ஒரு வரியையும் விட்டு விடாமல் மிகக் கவனமாக நாம் வாசிக்க வேண்டிய புத்தகமாகப் பார்க்க முடிகிறது .ஒவ்வொரு மனிதருக்கும் பைபிளை போல திருக்குர்ஆனை போல பகவத்கீதையை போல மிக முக்கியமாக ஆசிரியர்களின் வேத நூலாகக் கூட இதை கருதலாம் . ஏனென்றால்  ஆசிரியர் எவ்வாறு குழந்தைகளை அணுகுவது கற்பிப்பது அவர்களை சமூகத்தின் மிகச் சிறந்த மனிதர்களாக உருவாக்குவது என்று பண்பட்ட ஒரு கல்வி முறையை நமக்கு மிகவும் அற்புதமாக வழங்கியுள்ளது இந்த நூல் ஆகவேதான். இவ்வாறு நான் கூறுகிறேன் மிக முக்கியமான புத்தகம்

1982 ஆம் ஆண்டில் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தில்  தமிழ் மொழிபெயர்ப்பாக - குழந்தைகள் வாழ்க என்ற பெயரில் வெளிவந்த இந்த நூலை , இப்போது இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து பாரதி புத்தகாலயம் குழந்தைகளைக் கொண்டாடுவோம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது .

செயல்வழி கணிதம் வியக்கவைக்கும் -கதைகளும் செயல்பாடுகளும்

செயல்வழி கணிதம் வியக்கவைக்கும் -
கதைகளும் செயல்பாடுகளும் 

 நூலாசிரியர் :அரவிந்த் குப்தா  
வரைகலை :ரேஷ்மா பார்வா
தமிழில் : மோகனப்பிரியா 
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு : ஏப்ரல் 2021
பக்கங்கள் :58
விலை : ரூ 70

 இந்தப் புத்தகத்தைக் பார்க்கும் பொழுது உங்களுக்கு மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். கணிதம் என்று பார்த்த உடனேயே இது குழந்தைகளுக்கானது , பள்ளியுடன் மட்டும் சம்மந்தப்பட்டது  என்று நினைக்கத் தேவையில்லை .
அவற்றைத் தாண்டி பெரியவர்கள் வரை  தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள சிந்திக்க வைக்கக்கூடிய பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளன

 அரவிந்த் குப்தா: 1975 ஆம் ஆண்டு இந்திய தொழில்நுட்ப கழகம் கான்பூரில் மின் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். அறிவியல் செயல்பாடுகள் குறித்து இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் 150 புத்தகங்களை இந்தி மொழியில் மொழிபெயர்த்துள்ளார் மேலும் தூர்தர்ஷனில் அறிவியல் செயல்பாடுகள் பற்றி 125 குறும்படங்களை வழங்கியுள்ளார். இவரின் முதல் புத்தகமான மேட்ச் ஸ்டிக் மாடல்ஸ் அண்ட்  அதர் சயின்ஸ்  எக்ஸ்பெரிமெண்ட்ஸ்  என்ற புத்தகம் 12 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு 50 லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. இவர் இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையால் வழங்கப்பட்ட குழந்தைகளிடையே அறிவியலை பிரபலப்படுத்த தேசிய விருது 1988-ல் பெற்றுள்ளார் . இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் புகழ் பெற்ற மாணவர் விருது 2000 ஆண்டிலும் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது 2018 ஆண்டிலும் . பெற்றுள்ளார் இவர் தற்போது பூனாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான வானியல் வானியற்பியல் மையத்தில் பணிபுரிகிறார். பொம்மைகள் செய்வதிலும் அறிவியல் நூல்களை எழுதுவதிலும் ஈடுபாடு கொண்ட இவர் தனது படைப்புகளை  http:// arvindguptatoys.com
என்ற வலைத்தளத்தில் பதிவேற்றி வருகிறார்.

 ரேஷ்மா பார்வா: பூனாவிலுள்ள அபினவ் கலா மகாவித்யாலயா வில் வணிக கலை பயின்றவர் பகுதிநேர வரைகலை மற்றும் வடிவமைப்பாளரான இவர் குழந்தைகளுக்கான புத்தகங்கள் பலவற்றிற்கு விளக்கப் படங்களை வரைந்துள்ளார்

புத்தகத்தைக் குறித்து .....

 கார்ட்டூன் படங்களுடன் கூடிய கதைகளாகவும் புதிர்களாகவும் நடைமுறை வாழ்க்கையுடன் தொடர்புடைய  கணக்குப் புரிதல்களுடன் பல்வேறு செய்திகளையும் நமக்குத் தருகிறது இந்தப் புத்தகம். செயல்வழிக் கணிதம் என்று பெயருக்கு ஏற்பவே வாழ்க்கையில் செயல்களை அடிப்படையாகக் கொண்டு நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு நிகழ்விலும் கணக்கை சம்பந்தப்படுத்தி ஆங்கங்கே புதிர்களையும் கொடுத்து அதற்கான விடைகளும் கொடுத்திருக்கிறார்கள் புதிர்கள் என்பவை மிகச்சிலவே மற்றபடி காந்தியில்  ஆரம்பித்து ராமானுஜம் பாஸ்கரச்சாரியார், லீலாவதி என்று வரிசையாக கணக்கு சம்பந்தப்பட்ட மனிதர்களையும் அறிமுகப்படுத்தி வரலாறுகளையும் அறிமுகப்படுத்தி நிறைய செய்திகளை கொடுக்கின்றது இப்புத்தகத்தின் உள்ளடக்கம் .

 அரவிந்த் குப்தா ,பல்வேறு தலைப்புகளில் நம்மை பன்முக  சிந்தனைக்கு அழைத்துச் செல்கிறார்  , அவரது அறிவுக்கூர்மையும் குழந்தைகள் பால் இருக்கக்கூடிய அக்கறையும் கணக்கை எளிமையாக கற்றுக் கொடுக்க என்னவெல்லாம் ஆர்வமூட்ட செய்யலாம் என்ற சிந்தனையும் நாம் இங்கு எடுத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பொருளாக இருக்கின்றது.

ஏராளமான தலைப்புகளில் ஒவ்வொன்றையும் படங்களுடன் தந்துள்ளது வரவேற்கத்தக்கது . அட்டை வடிவமைப்பு மிகவும் பிரமாதமாக இருக்கிறது அந்த வண்ணங்களும் அட்டையில் போட்டு இருக்கக்கூடிய
வரைகலையும் நம்மை கணக்கின் பால் ஈர்க்கிறது. 

 உதாரணமாக , சதவீதம் என்று எழுதினால் அந்த தாவை  சதவீதக் குறியீடு வருவதுபோல் சிந்தித்துள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் பொழுது என்னுடைய ஆசிரியர் பயிற்சி தின நாட்கள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது அப்போது ஒப்படைப்புகள் தயார் செய்யும் பொழுது கணக்கு குறித்து நான் இவ்வாறு தான் செய்வேன் படங்களை கணக்குகளுடன் தொடர்புபடுத்தி கார்ட்டூன் படங்களை போல வரைதல் படைப்புகளின் அட்டைகளை  வடிவமைப்பு என  அவற்றை எனக்கு நினைவு படுத்துகின்றன.

 லீலாவதி செய்யுள் வடிவ கணிதம் குறித்து அறிமுகம் செய்கிறார்கள் அதேபோல கணிதமேதை ராமானுஜம் குறித்தும் .....6174 என்ற எண்  குறித்து நமக்கு செய்திகள் .... தமிழகத்தைச் சேர்ந்த கணிதத்தின் தூதுவராக பிகே ஸ்ரீனிவாசன் அவரை குறித்தான குறிப்புகள் இருக்கின்றன.

 காகித மடிப்புகளை குறித்து ஏராளமான பகுதிகள் இங்கு அறிமுகப்படுத்தப்
பட்டுள்ளன அவற்றை அடிப்படையாகக்கொண்டு கணக்கின் அடிப்படையில் செயல்பாடுகள் ,வடிவக் கணிதம் ,கோணங்கள் இவற்றை குறித்து குழந்தைகளுக்கும் அறிமுகம் செய்யலாம் பெரியவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் சிந்திக்கவும், புதியன படைக்கவும் செய்யக் கூடிய ஆற்றலை ஒரு நம்பிக்கையை கொடுக்கக்கூடிய புத்தகமாக பல்வேறு தலைப்புகளுடன் தரப்பட்டுள்ளது. 

 இவற்றை நாம் வெறும் புதிர்களாக கணக்குப் புதிர்கள் கொண்ட ஒரு புத்தகமாக பார்க்காமல் கணக்கை சிந்திக்க என்ன கணக்கின்பால் ஆர்வம் கொள்ள ,  கணக்கைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு புத்தகம் . முதலில் கணக்கு என்பது நம் வாழ்க்கையோடு இணைந்த ஒரு மொழியியல் . கூடுதல் சிறப்பு பக்கத்திற்கு பக்கம் படங்கள் தலைப்புக்கு ஏற்ற படங்கள் இணைத்து இருப்பதுதான் மிகவும் சுவாரசியமான ஒரு புத்தகம் . அத்தனை எளிமையாக இருக்கின்றது பக்கம் குறைவாக இருந்தாலும் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக இருக்கிறது இது ஒரு சின்ன சிக்கல் இன்னும் சற்று கூடுதலான அளவில் எழுத்துக்களை பெரிதாக கொடுத்திருக்கலாம் மற்றபடி ஒரு நல்ல புத்தகம் நன்றி

உமா

Tuesday 25 May 2021

சபாஷ் பார்வதி

சபாஷ் பார்வதி ....
ஆசிரியர் : எஸ்.வி.வி. 
கிண்டில் பதிப்பு .

ஆசிரியர் குறிப்பு : இணையத்திலிருந்து 

தமிழில் நல்ல நாவலாசிரியர் வரிசையில் எஸ்.வி.வி. இடம் பெற்றிருக்க வேண்டும் என க.நா.சுப்பிரமணியம் அவர்களும் , தமிழின் பழங்கால நகைச்சுவை எழுத்தாளர் என  ஜெயமோகன் அவர்களும் பாராட்டிய  எஸ்.வி.வி: இந்த நூற்றாண்டின் முதற்பாதியில் தமிழுக்கு அணி செய்த பல சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1934-க்கு முன்பு திருவண்ணாமலையில் வக்கீல் தொழில் செய்து கொண்டே ஆங்கிலத்தில் சிறந்த நகைச்சுவைக் கட்டுரைகளையும், ஹாஸ்ய சொற்சித்திரங்களையும் "ஹிந்து' பத்திரிகையில் எழுதி வந்தார். அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்த திரு. கல்கி, அதிபர் திரு. வாசன் ஓரிரவு திருவண்ணாமலைக்கே போய் எஸ்.வி.வி.யை சந்தித்து, தமிழிலும் விகடனுக் காக எழுதும்படி கேட்டுக்கொண்டார்கள். அது முதல் தமிழில் 1933-லிருந்து 1950 வரை எஸ்.வி.வி. மிக உயர்தரமான நகைச்சுவைக் கதைகள், ஹாஸ்ய சித்திரங்கள், நாவல்கள், நெடுங்கதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய நகைச்சுவை பல வகையானது. இலேசான புன்னகையை வரவழைக்கக் கூடியவை. Satire என்ற கேலிச்சித்திரங்கள், குபீரென்று வெடிக்கும் ஹாஸ்யம் இப்படி பலவகை. தமிழில் நகைச் சுவை நூல்கள் மிகவும் குறைவு. அந்தக் குறையை நிறைவு செய்ய அவருடைய நூல்கள் பெரிதும் உதவுகின்றன. எஸ்.வி.வி.யின் சிறுகதைகளையோ அல்லது நாவல்களையோ படிக்கையில், நாம் ஒரு கதை படிக்கிறோம் என்ற பிரக்ஞை மறந்து போய் ஒரு நெருங்கிய ஹாஸ்ய உணர்வு நிறைந்த பெரியவரிடம் பேசிக் கொண்டிருப்பதாகத் தோன்ற வைத்துவிடும். இந்த எழுத்து தற்கால வாசகர்கள் படித்து ரசிக்க வேண்டிய எழுத்து.

நூல் குறித்து 

இதில் 3 நீள் கதைகள் இருக்கின்றன. முதல் கதை தான் சபாஷ் பார்வதி , அடுத்து கைமேல் பலன் , இறுதியாக சரோஜா . 

ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன்பிருந்த சமூகச் சூழலில் பெண்களைத் திருமணம் செய்து தருவதில் உள்ள பொருளாதாரச் சிக்கலும் அதன் நீட்சியாக கணவன் வீட்டில் மாமியார் , நாத்தனார் இவர்களின் அதிகாரத் தொனி , வஞ்சகம்  , வீட்டை விட்டு விரட்டுதல் என கதை உள்ளதை உள்ளபடியே படம் பிடிக்கிறது. தங்க வளையல்களுக்காகவும் ஒட்டியானத்துக்காகவும் சாதாரண அரசு குமாஸ்தா வேலையிலிருக்கும் அப்பாவின் வீட்டிற்கு வந்த பார்வதி , தன் கணவன் வீட்டாரால் புறக்கணிக்கப்படுவதும் அதிலிருந்து மீண்டு மருமகளாக தனது உரிமையை நிலைநாட்டுவதும் தான் கதை. கணவனாக வரும் சபேசன் தன் அம்மாவின் நன்மதிப்பைப் பெறுவதன் பொருட்டு , கட்டிக் கொண்டு வந்தவளை வார்த்தைகளால் படுத்தும் பாடு இருக்கிறதே . மாமியாராக வரும் அவயாம்பாள் கணவனை இழந்து உறவுகள் யாரையும் குடும்பத்துடன் சேர்க்காது தனது மகளான அபிதத்தைத் தன்னுடனேயே வைத்து வாழ்ந்து வருபவர்.  ,தன் மானத்தை இழந்த பார்வதி எப்படி ரிவன்ஜ் எடுக்கிறாள் என்பது தான் கதை. வாசித்துப் பார்த்தால் சுவை புரியும். 

அதே போல சரோஜா கதையில் கட்டுப்பாடான தந்தையால் வளர்க்கப்படும்  குழந்தைகள் செய்யும் தவறுகள் , பணம் கடன் வாங்கிய கதை , நட்பின் போர்வையில் பணத்தைக் கடன் கொடுத்து விட்டவன் பொய்ப் புரோநோட் எழுதுதல் இறுதியில் விஷயம் வெளிவருவது ,தந்தையே அப்பிரச்சனையைத் தீர்ப்பது எனக்  கதை முடிகிறது. அம்மா தங்கம் , அப்பா சாரங்கபாணி , சகோதரன் பட்டண்ணா ,  நண்பர்களாக வரும் பூவராகவன் , கண்ணன் ஆகிய  அனைவரது சம்பாஷனைகளும் அந்தக் கால பேச்சு வழக்கில் வாசிக்க நன்றாக இருக்கிறது. 

கை மேல் பலன் , மாமனார் வீட்டில் தங்கி சிகிச்சைப் பெற்று வரும்  உடல் நலமில்லாத மனைவி பாமாவைப் பார்க்க போவதற்காக ராமரத்னம் அலுவலகத்தில்
விடுப்பு கேட்டு , டெப்டி கலெக்டர்  அனுமதி  தராததால் ஏற்படும் மன அழுத்தம் ,விடுப்பு தர மறுத்த அதிகாரியின் மனைவி படுக்கையில் விழ , திருப்பதி வெங்கடாஜலபதி வழியே எப்படித் தீர்கிறது என்பது தான் கதை. 

மூன்று கதைகளுமே சுவாரஸ்யமாக நகருகிறது. சபாஷ் பார்வதி மிகவும் நன்றாக இருக்கி Mது.

வாசித்துப் பாருங்கள்.

Monday 24 May 2021

பின்கட்டு

பின்கட்டு - சிறுகதைத் தொகுப்பு 

ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் 
பதிப்பகம் : க்ரியா (2021)
விலை : ரூ 90
பக்கங்கள் : 70

நூலாசிரியர் : 

கசடதபற - இலக்கிய இதழை நடத்தியவர்களில் ஒருவர் ராமகிருஷ்ணன். க்ரியா பதிப்பகத்தை 1974 இல் துவங்கி கடந்த 47 ஆண்டுகளில் பல துறைகளில் பல புத்தகங்களை நேர்த்தியான தயாரிப்புகளாக வெளியிட்டது. க்ரியா வெளியீடுகளில் குறிப்பிடத்தக்கது சமீபத்தில் மூன்றாவது பதிப்பாக வெளிவந்த க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி . மொழி - அமைப்பின் நிறுவனரான ராமகிருஷ்ணனின் கூத்துப்பட்டறைக்கான பங்களிப்பும் குறிப்பிடத் தகுந்தது.

நூல் பற்றி :

1968 ஆம் ஆண்டில் வெளியான கோணல்கள் தொகுப்பில் ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதைகளும் , நடை கசடதபற இதழ்களில் வெளியான அவரது சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதில் வெளியாகியுள்ள "அவளிடம் சொல்லப் போகிறான் ... " என்ற சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு The Tamil Story : Through the times through the tides என்ற தொகுப்பில் (2016) இடம் பெற்றுள்ளது. 
ஐந்து சிறுகதைகள் - அவளிடம் சொல்லப் போகிறான் , கோணல்கள் ,சங்கரராமின் நாட்குறிப்பு , பின்கட்டு , மழைக்காகக் காத்திருந்தவன் ஆகியன.

1968 இல் வெளிவந்த கோணல்கள் தொகுப்பின்  முன்னுரையில் ஐராவதம் ஆர். சுவாமிநாதன்  , இக்கதைகளைக் குறித்து பேசும் போது ,தமிழ்ப் பத்திரிகைகளின் தரம் அல்லது தரமின்மை என்ற பாதிப்புக்கு உள்ளாகாமல் எழுதப்பட்ட கதைகள் இவை எனக் குறிப்பிடுகிறார். 

இக்கதைகள் ஒவ்வொன்றையும் வாசிக்கும் போது , நாம் அறிந்த இந்த சமூகத்தில் பார்த்த பலரது கதைகளை நினைவுபடுத்துகிறது என்பது தான் உண்மை. பின் கட்டு என்ற கதையில் வரும்  படுக்கையில் பல வருடங்களாக நோய்வாய்ப் பட்டு கிடக்கும்  வயதான அம்மாவின் இறப்பு - அவருக்கு எல்லா சேவையும் செய்து வந்த இராஜம் , அவளது தனிமை இப்படியாக  நகரும் கதை 60 வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தாலும் இன்றும் இப்படியான மனிதர்களை நம்மால் சந்திக்க முடிகிறது. கோணல்கள் கதை மனிதர்களின் அறிவுக் கோணல்களை , மனக் கோணல்களை , சமூகத்தின் கற்பதக் கோணல்களைப் பதிவு செய்கிறது. 

இப்படியாக எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கதையிலும் புரிந்து கொள்ள முடியாத முடிச்சுகளையும் ஆசிரியர் வைத்துள்ளார். அவை வாசகர்களின் கற்பனைக்கானவை . மனிதர்களின் வாழ்க்கைச் சூழலில் ஏராளமான மாற்றங்கள் உருவாகியிருந்தாலும் அவர்களது அடிப்படை குணநலன்களிலான மதிப்பீடுகளைப் பற்றிப் பேசுவதால் பின்கட்டு தொகுப்பின் கதைகளை
இக்காலத்திற்கும் ஏற்றவையாகப் பார்க்க முடிகிறது.

Sunday 23 May 2021

எசப்பாட்டு

#எசப்பாட்டு  

ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன் 
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
வெளியீடு : 2018
விலை : ரூ 190

      ஆண்களோடு பேசுவோம் என்று அட்டையிலேயே வாசகம் எழுதப்பட்டி
ருக்கும் இப்புத்தகம் , சாதாரணமாகப் படித்து விட்டு கடந்து போகும் வெறும் புத்தகமாக எனக்குத் தெரியவில்லை , பல நூற்றாண்டுகளாக இந்த சமூகத்தில் வேர் விட்டு பரந்து வியாபித்திருக்கும்  ஆண் - பெண் குறித்த கற்பிதங்களை கோடாரியால் வெட்டி எறியத் தூண்டும் வலிமை மிகு ஆயுதமாகவே நாம் பார்க்கலாம் . 

  இந்த சமூகத்தின் உண்மைகள் பலமாக முகத்தில் அறைகின்றன. பக்கத்துக்குப் பக்கம் ,வரிக்கு வரி என் வீடும் , உங்கள் வீடும் பக்கத்து எதிர்த்த வீடுகளும் தான் இருக்கின்றன. நாம் பார்க்கும் சினிமாக்கள் , நாம் பணி புரியும் அலுவலகங்கள் , நாம் கொண்டாடும் விழாக்கள் , திருமணங்கள் , குடும்ப விழா என எல்லாமே தினசரி நாம் வாழும் சமூகத்தின் பகுதியாகவே இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.

 இவற்றுள் எவ்வளவு பிழையான உண்மைகள் மெருகேறிய பூச்சு பளபளப்புகளாக மக்களது மனதில் ஆணி போட்டு மாட்டப்பட்ட சான்றிதழ்களாக ஒட்டி பிய்க்க முடியாமல் இருக்கிறது என்பதை தமிழ்ச்செல்வன் கிழி கிழி என்று கிழித்து நம் முகங்களில் விசிறி அடிக்கிறார். 

அத்தனைக்கும் ஒட்டு மொத்த குறியீடாக அட்டைப் படம் , ஹிட்லரின் உருவம் போல , அதுவும் திரும்பி நின்று உங்கள்முகத்தையே பார்க்க மாட்டோம் என்று பிடிவாதமாக மறுக்கும் , எங்கு... உடல் தளர்ந்திருந்தால் சற்று நெகிழ்ந்து போய் திரும்பிப்பார்த்து காது கொடுத்திடுவோமோ என்றெண்ணி, கைகளை விரைப்பாய் பின்னாடி கட்டிக் கொண்டு சற்றும் மனம் திறக்கவோ முகம் காட்டவோ மறுக்கும் இயல்பை   சொல்லாமல் சொல்கிறது அந்த முன் அட்டைப்படம் .

நவம்பர் 2018 இல் வெளியிடப்பட்ட இந் நூல் இந்து தமிழ் திசையின் ஞாயிறு இணைப்பிதழான பெண் - இந்து வில் 52 வாரங்களாக எழுதப்பட்டு இன்று 
எசப்பாட்டு நூலாகி நம் கைகளைப் பிடித்துக் கொண்டு , வாருங்கள் ஆண்களையும் பெண்களையும் யோசிக்க உரையாடுவோம் என்று அழைக்கிறதாகத்  தோன்றுகிறது. 

முன்னுரை போன்ற ஒரு பகுதியில் தோழர் தமிழ்ச் செல்வன் தருவது தான் நம்மைத் தொடர்ந்து வாசிக்க வைக்கிறது . ஆண் மனதோடு நீண்ட உரையாடலை நாம் நடத்த வேண்டி இருக்கிறது என்பதோடு ஆண் மனங்களால்  இந்தியா ததும்பி நிற்கிறது என்கிறார் , அதற்கு நம் வீடுகளே சாட்சி , 

ஆண்களும் பெண்களுமாகச் சேர்ந்து தான் இந்த ஆண்களுக்குச் சாதகமான ஓர் உலகத்தை வரலாற்றின் போக்கில் உருவாக்கியிருக்கிறோம் , இதை ஒரு சமத்துவ உலகமாக , நீதியான உலகமாக மாற்ற இருவரும் சேர்ந்து தான் போராட வேண்டும். நீண்ட காலம் செளகரியமாக வாழ்ந்து அனுபவித்து விட்ட ஆணுக்கு இதில் கூடுதல் பொறுப்பிருக்கிறது என்ற நிலைபாட்டில் நின்று தான் இத்தொடரைக் கொண்டு செலுத்தியிருப்பதாகக் கூறுகிறார்,  அது தான் லகானின் நுனியாகப் பிடித்து இழுத்துக் கட்ட சரியான தொடக்கமாய்  இருக்கிறது நமக்கும்.

தொடர்ந்து அம்மா , அம்மாவின் அம்மா , அப்பாவின் அம்மா , தங்கை , இணையர் , பேத்தி என தனது வீட்டிலிருந்தே இந்த எழுத்துகளுக்கான களத்தைத் தொடங்கி ,தன் தோழமைகள் , அறிவியல் இயக்கப் பெண்கள் தான் களத்தை விரிவாக்கி தனது  இந்த அலசுகிற அறிவைத் தந்துள்ளதாகப் பதிவு செய்துள்ளார்.தனது 65 வயது காலத்தில் தன் மனதின் போராட்டமான மேன்மைகளை வளர்ப்பதும் கீழ்மைகளை அகற்றுவதுமான தகுதியின் மீது நின்றே இப்புத்தகத் தொடர்களைப் பேசியிருப்பதாய்க் கூறியிருக்கிறார்  நூலாசிரியர்.

52 அத்யாயங்களும் எசப்பாட்டை சத்தமாகப் பாடியிருக்கிறது , ஆம் எசப்பாட்டை நாம் எதிர்ப்பாட்டாகத் தானே புரிந்து கொள்கிறோம் , இங்கு ஆண் பெண் என்ற எதிர் பாலர் இருவருமே என்னென்ன வகையில் சிந்திக்க , அவரவர் புரிதலில் தங்களை மாற்றிக் கொள்ள ஏதுவான சூழலை நம் சமூகம் உருவாக்க வேண்டும் என்பது தான் நம் முன்வைக்கப்படும் கருத்துகள் .

ஆணுரிமை பேச மாட்டீர்களா ? என ஆரம்பிக்கிறது முதல் அத்யாயம் , இந்தியாவைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் பண்பாட்டு நடவடிக்கைகள் அதிகரித்துள்ள இந்த நாட்களில் ,
குடும்பக் கோட்டையை பத்திரமா பாத்துக்க பெண்களையே அடையாளப் படுத்தும் சமூகத்தில் குடும்பம்  அமைதியாகவே இருக்கணுமா என்கிறார் அடுத்த பகுதியில் , ஆமாம் இப்போது தான் பெண்கள் பேச ஆரம்பித்து இருக்கிறோம் .. குழப்பம் வரட்டும் அப்போது தான் சின்ன சிந்தனையாவது ஆண் மனதின் கதவைத் தட்டும். 

குற்றம் புரிந்தவன் .. வாழ்க்கையில் நிம்மதி கொள்கிறான்  , இந்த மூன்றாம் அத்யாயம் எப்போதும் ஆண் மனம் பெண்கள் விஷயத்தில் குற்ற உணர்வை உணர்வதே இல்லை?, என்பதை வலியுறுத்திச் சொல்கிறது. இப்படி ஒவ்வொரு அத்யாயமாகப் பார்ப்பதை விட மொத்த புத்தகம் பேசுவதை யோசித்தால் ...

பெண்கள் குடும்பங்களில் சமூகத்தில் பணிபுரியும் இடத்தில் பேச வேண்டும் , அதற்கு ஆண்கள் தடை போடக் கூடாது என்பதே அடிப்படை .

அறிவியல் துறையில், வரலாற்றின் பக்கங்களில் பெண்களின் உழைப்பு  எப்படி எப்படி எல்லாம் மறைக்கப்பட்டுள்ளது என்பதையும் உலக நாடுகளில் வாழும் எல்லாப் பெண்களுக்குமாகப் பேசுகிறது. 

ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பண்பாட்டு சட்டங்களால் எப்படி வெளியேறாமல் இருக்கிறோம் இந்திய நாட்டுப் பெண்கள் ஏன் வெளிவரத் தயங்குகிறோம் என்றும் பேசுகிறது .

ஆண் கண்கள் ஏன் பெண்களை உடலாகவேப் பார்க்கப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறது , அல்லது பழகியிருக்கிறது இது திரும்பத் திரும்ப பேசப்படும் உண்மை , அதை விடுத்து சக மனுஷியாகப் பெண்ணை ஏற்றுக் கொள்ளாத சமூகம் என்ன சமூகம் ?

மனம் அடுத்தடுத்த அத்யாயங்கள் படிக்கும் போது வெம்மை அடைகிறது .இவ்வளவு கற்பிதங்களில் உழன்று கொண்டா வாழ்கிறது நம் இனம் என்று ...

குழந்தைகள் உளவியல் பெண்கள்  உளவியல் எப்படி கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இரும்புக் கம்பிக்குள் அடைபட்டு இருக்கு எனவும்  ஆண்கள் உளவியல் எப்படி எல்லாம் கரெப்ட் ஆகி நம்மை சிதைத்து புதை குழிக்குள் தள்ளி உள்ளது எனவும் சிந்திக்க வைக்கிறது. 

பாரதி ,பெரியார் , லெனின், ஆகியோரெல்லாம்  பெண்கள்  விடுதலைப் பற்றி பேசியதையும் ஆனால் இதுவரை பேசப் படாத பெண்விடுதலைக்கான எதார்த்தங்களையும் பற்றி பேசுகிறது இப்புத்தகம் .

சமையலறையில் உள்ள ஒடுக்க அரசியலை நுணுக்கமாகப் பேசும் இப்புத்தகம் அவன் வரைந்த  ஓவியமாகத் தன்னை , அவள்  எவ்வாறு குறுக்கிக் கொண்டு வாழ்ந்து விட இந்த உலகம் நிர்ப்பந்திக்கிறது என்பது பற்றியும் பேசுகிறது .

நாட்டில் 98% பெண்கள் தனக்கான வாழ்க்கை விதிக்கப்பட்டதாக விதியாக வேறு வழியில்லாமல் அப்படியே தான் வாழ்ந்து வருகின்றனர். மீதியுள்ள 2% மட்டுமே இப்புத்தகத்தில் பேசப்பட்டுள்ளது போல் சிந்திக்க ஆரம்பித்து வாழவும் ஆரம்பித்துள்ளனர் இந்த 21 ஆம் நூற்றாண்டில் என்பது தான் உண்மை.

51 ஆவது அத்யாயத்தில் தொடர்ந்து வாசிப்பதற்கான பல புத்தகங்களைக் குறிப்பிட்டுள்ளார் , தமிழில் 56 தலைப்புக்குள்ள புத்தகங்களும் ஆங்கிலத்தில் 43 தலைப்பிலான புத்தகங்களும்  பெயர் பதிப்பகம் உள்ளிட்டு குறிப்பிட்டுள்ளது மிக அற்புதம். 

52 ஆவது அத்யாயம் மிக மிக சாரமாக முக்கியமாக உள்ளது. துணி என்பதை ஒரு குறியீடாகக்கொள்ள வைக்கிறது. பெண்களின் வாயை அடைக்க பல வழிகளிலும்  இந்தத் துணி இருப்பதாகக் கூறுவது நிதர்சனம்  .

பெண் விடுதலை பற்றி வெற்றுக் குரல்களால் கோர்க்கப்பட்ட சொற்களால் திரும்பத் திரும்ப படிக்கும் நமக்கு அப்படின்னா என்ன ? ஏன் தேவை ? எதெல்லாம் அதற்குள் அடங்கும் என எதார்த்தங்களின் உண்மைகள் வழியே கற்றுக் கொடுக்கிறது  இந்த புத்தகம் .இது சமூகத்தை மாற்றும் மிகச் சிறந்த ஆயுதமாக நமது கையில் கிடைத்துள்ளது. 

சரி ,அப்போ பெண்கள் எல்லோரும் அப்பாவிகளா ?ஆண்களும் தானே பல வீடுகளில் இதே போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்ற நினைப்பும் நமக்கு வரலாம். இருவரும் சக மனிதராய் நேசித்து வாழும் வாழ்வுக்கான இடமாக மாற்றவே இருபாலரும் இந்நூலை வாசிக்க வேண்டும்  எனக் கருதுகிறேன். மிகச் சில இடங்களில் சில செய்திகள் திரும்ப வருவது போல இருந்தது எனக்கு. 

மற்றபடி எசப் பாட்டு உறங்க அல்ல , நாம் போராடுவதற்கான உத்வேகப் பாட்டு எனக் கூறி , கிடைக்கும் சந்தர்ப்பங்களில்  இது பற்றிய விவாதத்தை எடுத்துச் செல்ல வேண்டும் .

அதே போன்று 216 பக்கங்களில் ரூ 190 விலையில் ஒரு ஆய்வு நூல் நம் கைகளில் கிடைத்துள்ளதை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என எனது சக ஆண் , பெண் தோழமைகளிடம் நான் கூற விரும்புகிறேன். 

தோழமையுடன்
உமா

Saturday 22 May 2021

வேள் பாரி : 1

வீரயுக நாயகன் வேள்பாரி - பாகம் - 1

2018 டிசம்பரில் முதல் பதிப்பாக வெளிவந்த வரலாற்று நாவல் இது.  2019 இல் நான்காம் பதிப்பு கண்டது வேள்பாரி. ஆனந்த விகடனில் நூறு தொடர்களுக்கும் அதிகமாக வெளிவந்தது பற்றி பலரும் அறிந்திருப்பர் . முதல் தொகுதி 51 அத்யாயங்களைக் கொண்டுள்ளது. 

கடையேழு வள்ளல்களில் ஒருவனாகவே முல்லைக்குத் தேர் கொடுத்த  பாரியைப் பற்றி அறிந்திருந்த எனக்கு இந்த வரலாற்று நாவலை வாசிக்க வாசிக்க பாரியின் மீதும் அவனது பறம்பு மலையின் அதிசயங்கள் மீதும் அளவில்லாக் காதல் தோன்றியது என்று மட்டுமே  வெளிப்படுத்த முடிகிறது. குறுநில மன்னன் பாரி , வேளிர் குலத் தலைவன் ஆனதால் வேள்பாரி ஆகிறான். பறம்பு மலையின் ஆச்சர்யங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் , பாரியின் புகழைக் கண்டு கேட்டு சீரணிக்க முடியாமல் 
மூவேந்தர்களான சேர , சோழ ,பாண்டியர்கள் பாரியை எதிர்த்து  வேறு வேறு காலகட்டங்களில் 
போர் தொடுத்து தோற்று விடுவது சங்கப் பாடல்கள் நமக்குச் சொல்லும் . மீண்டும் மூன்று பேரும் ஒன்றாகச் சேர்ந்து பாரியை சுற்றி வளைத்தும் பயனில்லை. இத்தகைய   பெருமை கொண்ட 
பாரியின் வானளாவிய   சிறப்புகளை , வரலாற்றைப் புனைவு கலந்து நீண்ட நாவலாக மாற்றியுள்ள நமது பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் அவர்களுக்கு நமது மனமார்ந்த பாராட்டுகள். 

 அவரது நேர்காணல் ஒன்றில் இதற்காக பல வருடங்கள் ஆய்வு செய்து எழுதியதாகக் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.  சங்க இலக்கியங்களை நாம் ஏன் படிக்க வேண்டும் என்பதற்கான பதிலையும்  இந்நாவல் நமக்குக் கற்பிக்கிறது. 

சங்க இலக்கியத்தின் வழியே  நாம் அறிந்த இரு  முக்கியமான  மனிதர்களை இணைத்து   தமிழ் மண்ணின் விழுமியங்கள் அழியா வண்ணம் பதிவு செய்திருப்பது தான் இன்றைய
 நாளின் வேள்பாரி என்ற நவீன  நாவல். 

 தமிழ்ச் சமூகத்தின்  மூத்த புலவர் கபிலர் என்பதைப் Uதிவு செய்யும்  சங்க இலக்கியங்களில் , பாரியோ கடையெழு வள்ளலாக வருவதாகவே நாம் அறிவோம். ஆனால் நூலாசிரியரோ முதல் வள்ளலே பாரிதான் என அழுத்தந் திருத்தமாகக் கூறுகிறார்.  அதன் அடிப்படையில் , கபிலர் எழுதிய கபிலம் என்ற நூல் நமக்குக் கிடைக்கவில்லையாதலால் அது பாரியைக் குறித்துதான் எழுதியிருக்க வேண்டும் என்றும் பின்னால் பல நூற்றாண்டுகளாக மூவேந்தர்கள் ஆட்சி செய்ததால் பேசப்படாமல் போக வாய்ப்பிருக்கலாம் என்கிறார். அதுவாகவே ..

நாவல் நம்மை நிகழ்காலத்தின்   சர்வ உலகத்தையும் மறந்து பறம்பு மலைக்குள்ளே வாழ வைத்து பாரியின் காலத்திற்கே அழைத்துச் செல்வது தான் முதல் வெற்றி . ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும் போதும் ஒவ்வொரு  இனத்தின் வரலாறு நம்மை பிரமிக்க வைக்கிறது. கபிலர் காட்டுக்குள்  பிரவேசித்து பறம்பு மலையை அடையும் பயணத்தில் தான் எத்தனை  செய்திகள் .அவரே அதிசயத் தக்க வகையில் அறிந்து கொள்கிறார். நீலனின் காடு குறித்த அறிவு அவரை ஆச்சர்யப்பட வைப்பது போல நம்மையும் ஆச்சர்யப்பட  வைக்கிறது . முருகன் - வள்ளி காதல் கதைகள் , பாரியும் கபிலரும் சந்தித்து உரையாடுதல் , கபிலருக்கு  பறம்பு நாட்டையும் அங்கு வியாபித்திருக்கும் பச்சை மலைத் தொடரின் ஆழமான உண்மைகளைக் கதைகளாகக் கூறுவதன் வழியே நாமும் எத்தனையோ சிறு சிறு வரலாறுகளை அறிய முடிகிறது. நம்மையும்  அறுபதாம் கோழியின் ஆசை  விட்ட பாடில்லை , மலைகளின் ஆச்சர்யங்கள்  உயர்ந்து கொண்டே போகின்றன. தேவ வாக்கு கூறும் கொற்றவை விழாப் பண்டிகையின் முக்கிய உயிரினங்களான  தேவாங்குகளை கடல் வாணிபத்திற்காகப் பயன்படுத்த பாண்டியர்களால் செய்யப்படும் சதியில் திரையர்களின் இனத்தைப் பயன்படுத்திய கதை தான் பிற்பகுதியின் சாரம். 

காட்டெருமையை அடக்கி வெற்றி இலையைப் பறித்து வரும் வீர மனிதர்கள் கதையை அறியும் போது வெற்றிலையைக் கண்டு பிடித்த ஆதி தமிழன் நம் சிந்தனையில் வருகிறான். ஒவ்வொரு தாவரத்தின் குணமும் மருந்தாக இருக்கிறது .அதைப் பறம்பு நாட்டில் மக்கள் எப்படிப் பயன்படுத்தி வாழும் முறையைப் பின்பற்றியிருக்கின்றனர் என்பதே பிரமிப்பாக உள்ளது. தேக்கன் கதாபாத்திரம் ஒரு பிரமிப்பு ... மாணவர்களைக் காட்டுக்குள் அழைத்துச் செல்ல அவர்களைப் பயிற்றுவிக்க வழி கொள்ளும் முறைகள் ஒவ்வொரு நகர்வும் நம்மை மிரள வைக்கிறது. திரைப்படம் பார்க்கும் போது நுனி சீட்டில் நகர்ந்து பதட்டத்துடன் பார்ப்பது போல ஒரு சில அத்யாயங்கள் நம்மைத் தூங்க விடவேயில்லை .காட்டில் வசிக்கும் மிருகங்கள் , அவற்றின் போர்க் குணங்கள் அத்தனையும் கண் முன்னே நிறுத்தி மீண்டும் மீண்டும் ஆதி தமிழரின் அரும் ஆற்றல்களை மனதில் நிறுத்துகிறது நாவல்.

முதல் பாகமான இதன் 608 பக்கங்களை எழுத்துக்களுக்கு இணையான ஓவியங்களும் நம்முடன்  ஒரு சேர இணைந்தே பயணிக்கின்றன.  சொற் சுவை , பொருட்சுவை , காட்சிச் சுவை என மொழியை அணு அணுவாக தமிழரின் வாழ்வியலுடன் இணைந்து ரசிக்க வைக்கும் நாவலாக நகர்கிறது .  கடல் வாணிகத்திற்கு  தேவாங்கை அனுப்பிய கப்பல்களிலிருந்து மீட்டக் காட்சிகள் தான் இறுதி அத்யாயமாக நம்முள் நிறைகிறது. 

இரண்டாம் பாகம் 
(தொடரும் )

உப்பு வேலி

உப்பு வேலி 

பதிப்பகம் : தன்னறம் நூல்வெளி 
முதல் பதிப்பு : 2020
விலை : ரூ 400
பக்கங்கள் : 240
தொடர்புக்கு : 9843870059

ஆசிரியர் : ராய் மாக்ஸம் 
தமிழில் : சிறில் அலெக்ஸ் 

ராய் மாக்ஸம் :

இவர் மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இங்கிலாந்து நாட்டுக்காரர் .1978 இல் தனது 39 ஆம் வயதில் கேம்பர்வெல் கலை மற்றும் கைவினைக் கல்லூரிக்குப் பணிக்குச் சென்றார். அங்கு நூலகம் மற்றும் காட்பகப் பாதுகாவலராகத் தகுதியுயர்வு அடைந்தார் .பின்னர் கேன்டர் பரி கேதீட்ரல் காப்பகங்களில் பாதுகாவலராக இருந்தார். . பிறகு லண்டன் பல்கலைக் கழகத்தின் செனட் ஹவுஸ் நூலகத்தின் மூத்த பாதுகாவலராக பொறுப்பு வகித்துள்ளார். இவர் எழுதிய ஏழு புத்தகங்களும் இந்தியாவைப் பற்றியே பேசுகின்றன. 

உப்பு வேலி ...

உலகின் மிகப் பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம் என அ.ட்டைப் படத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ள இப்புத்தகம் நமக்குச் சொல்லும் கதைகள் நடுங்க வைக்கின்றன. கவலையுறச் செய்கின்றன. கண்ணீரை சில இடங்களில் வர வைக்கின்றன. 

இந்தியாவின் வரலாற்றில் திட்டமிட்டோ எதேச்சையாகவோ மறைக்கப்பட்ட நமக்கு சொல்ல மறுக்கப்பட்ட நமது அரசால் கூட ஆவணம் செய்யாது மறக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைப் பேசும் புத்தகம் இது. இந்திய ஆட்சியில் , அரசுக்கோ துறை சார்ந்த வல்லுநர்க்கோ தோன்றாத எண்ணம் ..... வெளிநாட்டு மனிதர் ஒருவரைத் தட்டி எழுப்பி விடா முயற்சியுடன் மூன்று ஆண்டுகள் தேட வைத்து உலகின் மிகப் பெரிய உயிர் வேலியாகத் திகழும் உப்பு வேலியைக் கண்டடைந்து , தொடர்புடையவற்றையும் இணைத்து ஆவணப் படுத்திய அற்புத வரலாறு தான் உப்பு வேலி .

2300 மைல்கள் தொலைவு நீளமுள்ள ஒரு புதர் வேலியை உருவாக்கிய ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி , இந்தியாவையே இரண்டாகப் பிரித்து இமயமலையிலிருந்து ஒரிஸா வரைக்கும் உப்பு வேலியை உருவாக்கியது உலகெங்கிலும் எந்த வரலாற்றிலும் இல்லாத மாபெரும் உழைப்புக்கான செய்தியும் கூட .அதே வேளையில் உப்பு என்பதை மிகச் சாதாரணமாக எண்ணும் நம்மிடையே 1700 களிலிருந்து நம் இந்திய மக்களின் வாழ்க்கையில் உப்பைக் குறித்தான எவ்வகையான அரசியல் நடந்துள்ளது, எத்தனை ஆயிரம் மக்கள் உப்பிற்கு வரி கொடுக்க இயலாமல் மாண்டு போன கதைகள் , ஏழை எளிய மக்களின் ஆண்டு வருமானத்தில் சரி பாதிக்கும் மேல் உப்புக்கு வரியாக , விலையாகக் கொடுத்து துன்பமுறும் அவலம் என வரலாற்றின் பேசாத பேச்சை எடுத்துப் பதிவு செய்கிறார் ராய் மாக்ஸம். 

அதன் தொடர்ச்சியாக இந்தியா என்ற வளமான துணைக் கண்டத்தில் உப்புக் காய்ச்சும் வேலை எப்படி  மாபெரும் தொழிலாக நடந்தது , மக்கள் தங்கள் சொந்த நாட்டின் உப்பைத் தின்னக் கூலியுடன் வரி என்ற ஈ.ரெழுத்து அஸ்த்திரத்தால் படும் துன்பங்கள் , உப்பின் வரியால் அந்தக் காலத்திலேயே கோடி கோடியாக வருமானம் ஈட்டிய பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரிகளின் சொத்து சேர்ந்த விபரங்கள் என ஏராளமான விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

நாட்டு விடுதலைக்குக் காரணமாக அமைந்த உப்புச் சத்யாகிரகம் குறித்தும் , காந்தி ஏன் எளிய மக்களின் பார்வையில் நின்று உப்பை வைத்துப் போராடினார் என்ற நம் கேள்விகளின் விதையாக இந்தப் புத்தகம் நம்மிடம் பேசுகிறது .

எல்லாவற்றையும் கடந்து, ராய் மாக்ஸம்  , ஒரு நூற்றாண்டுக்குள் முற்றிலுமாக மக்கள் மறந்த அந்த வேலியைப் பற்றிய ஒட்டு மொத்த ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார் என்பதும் வரலாறு. 

1997 இல் தான் லண்டனில் ஒரு சிறிய புத்தகக் கடையில் வாங்கிய புத்தகத்தில் இருந்த சில வரி குறிப்பை மட்டும் ஆதாரமாக நம்பி இந்தியாவிற்கு வந்து இறுதி வரை நம்பிக்கை இழக்காது , அப்படி நம்பிக்கை இழக்கும் சூழலில் ஏதோ ஒரு ஆவலைப் பற்றிக் கொண்டு மூன்று வருடங்களாகத் தேடித் தேடி இறுதியில் அந்த உயிர்வேவியைக் கண்டடைகிறார் ராய் மாக்ஸம். 

அப்படி அவர் கண்டுபிடிக்கச் செல்லும் இடங்களுக்கு நம்மையும் பயணக் குறிப்புகளாக அழைத்துச் செல்வதும் சந்திக்கும் மனிதர்களிடம் உருவாகும் உரையாடலில் நாமும் உரையாடுவது போல ஒரு உணர்வைத் தருகிறது இப்புத்தகம் . 

ஒரு அற்புதமான திரைப்பபடத்தைப் பார்ப்பது போல ஒரு உணர்வு கூட உருவானது. நாயகன்  ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொலைந்து போன தனது நாயகியைத் தேடிக் கண்டடையப் படும் மனப் போராட்டங்கள் , நடைமுறைச் சிக்கல்கள் இவற்றைக் கடந்து வருவதும் இறுதியில் திரும்பிப் போய் விடலாம் என எத்தணிக்கையில் எங்கிருந்தோ ஒரு அறிகுறி தென்பட்டு , மீண்டும் அங்கிருந்து தேடத் தொடங்கி இறுதியில் கண்டடைவதின் உச்சம் தான் இறுதிக் கட்ட பக்கங்கள். ராய் போலவே நாமும் மனதால் நெகிழ்ந்து கண்ணீர் சிந்துகிறோம் உப்பு வேலி முழுமையாக மறைந்து போனதை எண்ணி . அற்புதமான உண்மை வரலாற்றின் அழுத்தம் நம்மை வெகுவாக பாதிக்கிறது. 

இதை வாசிக்க வாசிக்க பிரிட்டிஷ் ஆட்சிக் கால நிர்வாக முறை , சுரண்டல் , அதன் விளைவாக உருவான பஞ்சங்கள் இவையெல்லாம் நம் கண் முன்னே விரிகின்றன. சும்மாக் கிடைக்கவில்லை சுதந்திரம், நம் முன்னோர் அடைந்த துன்பங்களின் ஒரு சிறு அத்யாயம் நம்மை வேதனைப் பட வைக்கிறது.

புதர்வேலி ? , உப்பு வரி , வரைபடங்கள் , சுங்க எல்லை , ஆக்ரா , சுங்கப் புதர்வேலி
உப்பு ,நகைப்புக்குரிய வெறி , கலகம் , புளிய மரங்கள் , சம்பல் என இதன் ஒவ்வொரு அத்யாயமும் ஆழமாக நம்மை உணர வைத்து நகர்த்துகின்றன. 

இலண்டனிலுள்ள குயிண்டோ என்ற புத்தகக் கடையில் ,ஸ்லீமனின் புத்தகம் , "மதிப்புக்குரிய " _கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் கடைசி பத்தாண்டுகளில் செய்த பயணங்களின் தொகுப்பில் வந்த ஒரு கட்டுரையின் அடிக்குறிப்பு தான் இப்புத்தகம் உருவான வரலாற்றின் தோற்றுவாயாக உள்ளது.

இமாலயத்தில் துவங்கி ,சிந்து நதியைத் தொடர்ந்து இன்றைய பாகிஸ்தானுக்குள் சென்று , டெல்லியைச் சுற்றிச் சென்ற வேலி இது. ஆக்ரா , ஜான்சி , ஹோஷங்கபாத் , காண்ட்வா , சந்திராப்பூர் , ராய்ப்பூர் எனச் சுற்றி மகாநதி ஆற்றில் இன்றைய ஒரிசா மாநிலத்தில் முடிவடைந்த 2504 மைல் தொலைவுள்ள நீண்ட எல்லையை நிரப்பிய வேலி இது.

பயண நூலாகவும் ஒரு வரலாற்றுப் புத்தகமாகவும் பல ரகசியங்களைக் கண்டறியும் கருவியாகவும் அமைந்து மிக முக்கியப் பங்கு வகிக்கிறது .

வேலி உருவாக்கத்தில்  ஈடுபட்ட, இறந்து போன மனிதர்கள் , காவல் காத்த பதிமூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட சிப்பாய்கள் , வேலியைப் பராமரித்த பணியாளர்கள் , அதிகாரிகள் என ஒரு பிரம்மாண்ட விஷயத்தின் சுவடு கூட அறியாமலிருக்கும் இந்த தலைமுறை குறித்த சிந்தனைகளும் நம்மைத் தூங்க விடவில்லை என்பது தான் உண்மை. 

உப்பைப் போல சாதாரணமாக எண்ணி விட முடியவில்லை , உப்பு வேலி சொல்லும் வரலாற்றை .இதை வாசித்த பிறகு உப்பின் மீதான நமது பார்வை மாறக் கூடும் , வரலாற்றின் மீதான நம் பார்வை மாறக் கூடும் என்கிறார் இதனைத் தமிழில்  மொழி பெயர்த்த சிறில் அலெக்ஸ் . மொழிபெயர்ப்பு நூலாகவே கருத முடியாமல் மிக இயல்பாக ,எளிய தமிழில் அதே வேளையில்  மக்கள் வாழ்வியல் சார்ந்த இலக்கியத்தை நமக்காக மொழி பெயர்த்துள்ள சிறில் அலெக்ஸ் மிகவும் பாராட்டுக்குரியவர். 

இந்நூலை வெளியிடுவதில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே ஆரம்பப் புள்ளியாக இருந்துள்ளார். அவர்  ஆங்கிலத்தில் வாசித்த ராய் மாக்ஸம் அவர்களது 'இந்தியாவின் மிகப் பெரிய வேலி" என்ற நூல் தந்த தாக்கம் , அவர் அது குறித்து தனது இணையத்தில் எழுதியது இவற்றைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் லண்டன் நகரில் ராய் மாக்ஸமை நேரில் சந்தித்து மொழியாக்க உரிமை பெற்றது என தொடர் நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கன.

அனைவரும் வாசித்து நம் நாட்டின் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நிகழ்ந்த இந்த வரலாற்றை அறிய வேண்டியது மிக அவசியம் எனக் கருதுகிறேன். 

உமா

வெட்கமறியாத ஆசைகள்

வெட்கமறியாத ஆசைகள் 

ஆசிரியர் : சிவஷங்கர் ஜெகதீசன் 

பக்கம்.. 120
விலை ரூ 160
அட்டைப்பட வடிவமைப்பையும் நூலாசிரியரே செய்திருப்பது சிறப்பு. 

எல்லா சாதனைகளின் தொடக்கப் புள்ளியும் ஆசை என்ற நெப்போலியன் ஹில் வரிகளுடன் புத்தகம் ஆரம்பிக்கிறது. 
இது ஒரு சிறுகதைத் தொகுப்பு . மொத்தம் 11 சிறுகதைகள். 

மனிதர்களின் வாழ்க்கை ஆசைகளாலே கட்டமைக்கப்பட்டது என்பதை நன்கு அறிவோம் .அந்த ஒற்றைப் புள்ளியை வைத்து எதார்த்தமான சமூகத்தின் மனிதர்களது வாழ்க்கையில் நிகழும் அன்றாட நிகழ்வுகளை சிறு கதைகளாக மாற்றியுள்ளார் ஆசிரியர் . 

பெரும்பாலும் அனைத்து கதைகளுமே  சற்றேறக்குறைய ஒரு கருத்தை இறுதியில் சொல்வதாக அமைகிறது. அதாவது கதைக்கு ஒரு முடிவு தருவது போல , கதைகள் வாசிப்பவருக்கு ஒரு நீதியை மனதில் நிறுத்துவது போல  முயற்சித்திருக்கிறார். 

அனைத்து சிறுகதைகளும் இன்றைக்கு டிரென்ட் எனக் கூறுவோமே அங்கிருந்து ஆரம்பித்து எழுதப்பட்டுள்ளது. முகநூல் , வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் , டிவிட்டர் என அனைத்தும் பெரும் பங்கு வகிக்கின்றன. மொழியும் பேச்சு வழக்கில் தான் இருக்கிறது. ஆனால் ஆங்கில வார்த்தைகளின் கலப்பு சற்று அடர்த்தியாகவே  பயணிக்கிறது. மற்றபடி சில கதைகளுக்கு தரவுகளைத் தேடி தகவல்களாகக் கொடுக்க முயற்சித்துள்ளார். 

முதல் கதையின் தலைப்பு தான் புத்தகத் தலைப்பான வெட்கமறியாத ஆசைகள் .இதில் வரும் கதாபாத்திரமான ஸ்வேதாவின் ஆசைகள் அவளது வாழ்க்கையை அர்த்தமற்றதாக மாற்றி விடுகிறது. தற்கொலை செய்து கொள்கிறாள். இங்கு ஆசிரியருடன் முரண்படுகிறேன். பெண்களை போகப் பொருளாக சித்தரித்து அவளது ஆசை எதிர்மறை முடிவதைத் தருவதை இயல்பாகவே நான் வரவேற்கவில்லை. 

த்ரில் - இது பைக் ரேஸ் ,எளிய குடும்பத்து பையன் அதிக விலை கொடுத்து இரு சக்கர வாகனம் வாங்கி தனது விபரீத ஆசையால் உயிரிழப்பது. 

நூதனத் திருட்டு - நகரங்களின் பெட்ரோல் பங்குகளின் ஏமாற்று வேலை - இறுதியில் வேலையிழப்பது. 

ஜே.ஃஎப்.சி -KFC இன் சிறு மாற்று. உடல் நலத்திற்கு கேடான உணவுகளைத் தவிர்க்கச் சொல்வது. 

நேரக் கடத்தி : இதுவும் இணைய வழிக் கற்றல் – பெற்றோரை ஏமாற்றி வீடியோ கேம் விளையாடி  பணத்தை இழப்பது.

நிராசை :- தி கிரிக்கெட்டர் திரைப்படத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது. . ஆனால் கதையில் நாயகன் தற்கொலை செய்து கொள்கிறான். 

ஏளனம் : உழைப்பால் உயர்ந்து பேராசையால் பெரும்  தவறிழைத்து  வீதிக்கு வந்து விடும் நபரின்  கதை .

சிம்னி அன்ட் ஹாப் : இந்தக் கதை சற்று வித்யாசமாக நேர்மறை முடிவைத் தந்துள்ளது. ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் பொருளாதார அடிப்படை இறுதியில் கணவன் மனைவி விரும்பிய சிம்னியை வாங்கித் தந்து மனைவியின் ஆசை நிறைவேறுகிறது. 

விபரீத ராஜ யோகம் : இதிலும் ஒரு சோம்பேறி , குடித்து ஏமாற்றி வாழ்க்கையில் தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு இறுதியில் மரணத்தைத் தழுவுகிறான் .

ஸ்டைரீன் : கொரோனா செய்திகளால் ஏற்கனவே கடுப்பாகியிருக்கோம். இங்கும் அதே இறப்பு புள்ளி விபரங்கள். ஸ்கூப்பியை இறக்கச் செய்த கதை. 

உப்பரிகை : இதிலும் கொரோனா லாக் டவுன் , ஆனால் மகிழ்ச்சியான முடிவு . இளம் காதலர்கள் ..

மேற்சொன்ன பதினோரு கதைகளும் கடந்த சில மாதங்களில் ஊடகங்களில் செய்திகளாக வந்து  தொலைக் காட்சியில் விவாதங்களாக நிகழ்ந்த நேரடி அனுபவங்களாகப் பதிவாகி சிறுகதைகளாக மாறியிருக்கிறது. என எண்ணுகிறேன்.. ஏனெனில் இவற்றில் வரும் எல்லா கதைகளின் கதாபாத்திரங்களையும் நாம் ஒரு முறையாவது சந்தித்து இருப்போம் . மொத்தத்தில் மனிதர்கள் ஆசையே படக் கூடாதா என்ற சந்தேகத்தை உருவாக்கும் ஆசிரியர் , இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கதைகளைப் போல தரமற்ற ஆசைகளை விலக்க ஒரு விழிப்புணர்வு நூலாக இதைத் தந்துள்ளார் என எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி இனி வரும் காலங்களில் நேர்மறைக் கதைகளைப் படைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday 31 March 2021

தீக்கொன்றை மலரும் பருவம்


தீக்கொன்றை மலரும் பருவம் 
சர்வதேச இலக்கிய வரிசை நூல் 

பதிப்பகம் : எழுத்து 
விலை : ரூ 499
பக்கங்கள் : 404
 
எழுதியவர் : அபுபக்கர் ஆடம் இப்ராஹிம்.

இவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிக்கையாளரும் ஆவார். சிறந்த எழுத்துக்கான ஆப்பிரிக்க பிபிசி பரிசு பெற்றவர் இவர். சஹாரா துணைக் கண்ட பிரதேசங்களின் சமகாலத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார். உலக அளவில் வெளியிடப்பட்டுள்ள Season of Crimson Blossoms நாவலுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான நைஜீரியாவின் .NNLG இலக்கியத்துக்கான பரிசைப் பெற்றவர். 

தமிழில் மொழிபெயர்த்தவர் :
 லதா அ.ருணாச்சலம் ,

இவர் கவிதை , கட்டுரை , மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆங்கில முதுகலை மற்றும் ஆசிரியப் பட்டப் படிப்பை முடித்த இவர் , 14 வருடங்கள் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் வாழ்ந்தவர். சில காலம் அங்கு ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். கடந்த சில வருடங்களாக சென்னையிலும் நைஜீரியாவிலும் மாறி மாறி வாசம் செய்கிறார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு 'உடலாடும் நதி ° கடந்த வருடம் வெளியானது . தீக்கொன்றை மலரும் பருவம் இவரது முதல் மொழி பெயர்ப்பு நாவல். 

தீக்கொன்றை மலரும் பருவம் நூலைப் பற்றி ....

இந்த நூலின் தலைப்பும் அட்டைப் படமுமே நம்மை வெகுவாக ஆட்கொள்கின்றன. மொழிபெயர்ப்பு நூலாக எண்ணவே முடியாமல் இருக்கும் படி நமது தமிழ் மொழியில் எழுதப்பட்ட உணர்வுடன் ,நீண்ட நாவலாக நம்முடன் பயணிக்கிறது. நைஜீரியா நாட்டு நாவல் என்றோ உலகின் வேறொரு பகுதியின் மனிதர்கள் என்றோ இதைப் படிக்கும் போது உணர முடியவில்லை.  கதாபாத்திரங்களின் பெயர்கள் வேண்டுமானால் அந்நியமாக இருக்கலாம். ஆனால் கதைக்.களம் , கதைக்கரு , உணர்வுகள்  , கதை மாந்தர்கள் என அனைத்தும் நம்முடன் மிக நெருக்கமாக பயணிக்கின்ற வகையில் மொழிபெயர்த்துள்ளார் லதா அருணாச்சலம் .சுவாரஸ்யம் குறையாமல் ஆனால் மிக ஆழமாகப் பேசப்பட்டுள்ள கதை. மொழியாக்கம் செய்த உத்தி என இரண்டுமே நிறைவான அழகு எனலாம் .
மனிதர்களின் நிழல் வாழ்க்கையாக நாம் உருவகம் செய்யும் பல முடிச்சுகளைப் பிணைத்து புதினம் உருவாகியுள்ளது . போதை மருந்துகள் விற்பனை செய்யும் இளைஞர்களின் தலைவனாக வரும் ரெஸா நாவலின் இறுதி வரை நம்முடன் பயணிக்கிறான். பெண்களின் ஆழ்மனதின் புதையுண்ட விருப்பவெளிப்பாடாகக் காட்டப்பட்டுள்ள  காமம் , பேசப்படாத யாரும் வெளிப்படையாகப்  பேச விரும்பாத, முறையற்ற பாலின ஈர்ப்பு என்ற  பொருண்மை தான் நாவலின் அடிநாதமாக வீற்றிருக்கிறது . ஐம்பந்தைந்து வயது நிரம்பிய ஒரு பெண்ணுக்கும் அவளது மகன் வயதுள்ள இளைஞனுக்கும் இடையே உருவாகும் காதல் உணர்வு , மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதும்  அதன் நீட்சியாக நடக்கும் நிகழ்வுகளும் தான் இக்கதையின் போக்கு. அதே சமயத்தில் அந்த நாட்டின் சமூகத்தில் நிலவும் அரசியல் சூழல் , பொருளாதாரத்தில் நலிவுற்ற இனத்திற்கு கல்வி மறுக்கப்படும் சூழல், எளியோரைப் பயன்படுத்தி வலியோர் வாழுதல் என அனைத்தும் குறியீடுகளாக
நாவல் முழுவதும் அடையாளம்
காட்டப்படுகிறது. அவற்றைப் பார்க்கும் போது உலகெங்கிலும் நிகழும் குற்றங்களைப் பற்றிய பார்வையை நாம் ஆழமாக செலுத்த முடிகிறது. அதே போல எல்லா நாடுகளிலும் நிகழும் பிரச்சனைகள் , குற்றங்கள் இவற்றைப் பொதுமைப்படுத்தக் கூடியதாகத் தான் தோன்றுகிறது.  அதுவே யதார்த்தம். 
இரண்டு பாகங்களில் 32 அத்யாயங்களாக வளர்ந்துள்ளது கதை . வல்லாஹி ... கதை முழுவதும் பெண்களின் அக உலகத்தின் பயணம்  குறித்து பதிவு செய்வதாக லதா அவர்கள்
தனது முன்னுரையில் கூறியது தான் உண்மை. ஒரு பெண்ணின் நடத்தை மாற்றங்களுக்கான  
உளவியல் கூறுகளை  ஆய்வு செய்யும். பொருட்டும் இந்நூல் வழிகாட்டுகிறது.  சமூகத்தின் பார்வையை தைரியமாக உடைக்கும் விதமாக  ஹஜியா பிந்த்தா பைஜூரு என்ற , பிரதான பெண் பாத்திரத்தை உருவாக்கி வாழ வைத்துள்ள நூலாசிரியரைப் பாராட்டியே தீர வேண்டும்.  எல்லாவற்றைக் காட்டிலும் தமிழில் மிக அழகாக மொழிபெயர்ப்பு செய்த தோழி லதா அவர்களுக்கு ஒரு வாசகியாக அன்பு முத்தங்கள் . நிச்சயமாக வாழ்நாள் முழுக்க படிப்போரின் எண்ணங்களில் வாழும் இந்த தீக்கொன்றை மலரும் பருவம் .

இந்தப் புத்தகம் ,  கவிஞரும் எழுத்தாளருமான யூமா வாசுகி அவர்களது  தன்னறம் விருது விழாவில் நூலின்  மொழிபெயர்ப்பாளரான
தோழி லதா அருணாச்சலம் அவர்களது கரங்களாலேயே எனக்கு வழங்கப்பட்டது என்பதையும் மகிழ்வுடன் பதிவு செய்கிறேன். 

உமா

மகாத்மா காந்தியின் நினைவு மாலை

மகாத்மா காந்தியின் நினைவு மாலை

ஆசிரியர் : அம்புஜம்மாள்

ஆசிரியர் பற்றி:

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஸ்ரீனிவாச ஐயங்காரின் மகளான அம்புஜம்மாள் (1899-1993) அவர்கள் 1920 இல் தான் முதன்முதலாக காந்தியை சந்திக்கிறார், ஹரிஜன மக்களின் நலத்தை வேண்டி தனது வைர நகைகளை பட்டுத் துணிகளை நல நிதிக்காக தந்துவிடுகிறார். உப்புச்சத்தியாகிரத்தில் பங்கேற்று சிறை சென்றவர். பள்ளிக்கூட ஆசிரியராகவும், “சாரதா மகளிர் யூனியன்” “சுதேசிய பெண்கள் லீக்” போன்ற மகளிர் அமைப்புகளில் முக்கிய அங்கத்தினராகவும் இருந்தார். இந்தி பிரச்சார சபையின் நிர்வாகக் குழுவிலும் அங்கம் வகித்துள்ளார். நவம்பர் 1934-ஜனவரி1935 வரை வார்தா ஆசிரமத்தில் காந்தியடிகளுடன் தங்கியுள்ளார். பாலிய விவாகம், தேவதாசி முறை, பலதார மணம் பொன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நீங்கள் பாடுபட்டார். 1948 இல் ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தை தொடங்கி பெண்களின் முன்னேற்றத்திற்கு பல் முன்னெடுப்புகளை எடுத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் (1957-1962), மாநில சமூக நல வாரியத்தின் தலைவராகவும் (1957-1964) இருந்துள்ளார். வினோபா அவர்களின் பூதான இயக்கத்தின் போது தமிழக யாத்திரையில் பங்கேற்றவர்.

நூல் குறித்து 

இந்நூல், 1944-இல் தினமணி வெளியீடாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார். நூலாசிரியர், அம்புஜம்மாள் அவர்கள் காந்தியத்தால் தான்   பெற்ற அனுபவங்களைத் தொகுத்துக் கூறுவதாக இந்த நூல் அமைந்துள்ளது. மொத்தம் 13 கட்டுரைகள் கொண்ட இந்நூலில், ஒவ்வொன்றும் காந்தி மற்றும் கஸ்தூரிபா ஆகியோருடன் நூலாசிரியர் கழித்த நாட்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய நினைவுகள் குறித்து பேசுகிறார் .இறுதியில் காந்தியடிகள், கஸ்தூரிபா  நூலாசிரியருக்கு எழுதிய கடிதங்கள் சில இணைக்கப்பட்டுள்ளன.

1. முதல் சந்திப்பு  - இக்கட்டுரையில் அம்புஜம்மாள் முதன் முதலாக தனது வீட்டில் மகாத்மா, கஸ்தூரிபா இருவரையும் சந்தித்த அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார் . விசித்தரமான விருந்து என்று தனது வீட்டு விருந்தோோம்பல் நிகழ்வில் காந்தியடிகளுக்காகப் படைக்கப்பட்டிருந்தவற்றைப் பட்டியலிடுகிறார்.  வெந்த மணிலாக் கொட்டை, தேங்காய் வழுக்கை , ஆப்பிள், ஆரஞ்சு ,திராட்சை, பேரீச்சை, பாதாம் பருப்பு, நீர் மோர் ,இளநீர் ஆகியவை காந்தியின் உணவுகளாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன

  1893 இல் முதன் முதலில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிற்கு பாரிஸ்டராகவே போனார். இந்திய வியாபாரியின் தொழில்முறை ஆலோசனைக்காக அங்கு சென்றிருந்தார் .ஆனால் கூலி பாரிஸ்டர் ஆகத்தான் கருதப்பட்டார். இந்தியர்களை எல்லாம் கூலிகள் என்று கருதிய வெள்ளையர்கள் அங்கு இருந்ததை கண்டு மிகவும் வேதனைப்பட்டார். பிரிட்டோரியா வழி செல்லும் ரயிலில் இருந்து இறக்கப்பட்டார் முதல் வகுப்புப் பிரயாணம் செய்யகருப்பருக்கு உரிமை இல்லை என்ற நடைமுறை அங்கு இருந்தது அப்பொழுது காந்தியடிகளை ரயிலிலிருந்து கீழே இறக்கி விட்டது பற்றி நாம் வரலாற்றில் படித்திருப்போம். அதேபோல அங்கு ஜகன ஸ்பார்க் என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் இந்தியர்கள் தங்குவதற்கு இடம் கிடையாது என்று இவரை தங்க வைக்க மறுத்து விட்டனர் ,அது மட்டுமன்றி பிரிட்டோரியாவில் பேவ் மெண்ட் அதாவது நடைபாதையில் நடந்து போகவும் கூடாது கருப்பர்கள் என்ற கட்டுமானம் இருந்தது .காந்தி அதன் வழியாக நடந்து போனதற்கு ஒரு காவல்காரர் அவரை அடித்து இருக்கிறார். இவற்றையெல்லாம் அனுபவித்த காந்தி ,தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடினார் .காந்தி தம்பதியினர் சிறை சென்றது குறித்த வரலாறுகளை நாம் படித்திருப்போம். அவ்வாறு சிறை சென்று வந்த காந்தியடிகளை இந்திய மக்கள் வரவேற்றனர் தமிழக மக்கள் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கின்றனர் அப்பொழுது தமிழ்நாட்டில் சென்னையில் அம்புஜம்மாள் அவர்களின்   வீட்டில் , இந்த தம்பதிகளுக்காக விருந்து ஏற்பாடு செய்து இருந்தனர் அப்போது தான் இந்த விசித்திர உணவு குறித்து அம்புஜம்மாள் பதிவிட்டிருக்கிறார்.

 கஸ்தூரிபா காந்தி தூய வெள்ளைப் பாவாடையும் தாவணியும் அணிந்து மெலிந்த உருவத்துடன் உலக அனுபவத்தால் கனிந்த தாயன்பு கொண்ட முகத்துடனும் எளிமையின் வடிவமாக அந்த விருந்து சமயத்தில் தனது வீட்டில் பார்த்ததாக அம்புஜம்மாள் பதிவிடுகிறார். ஒரு ஜோடி இரும்புக் காப்பு மட்டும் அணிந்திருந்தார் .ஆனால் அம்புஜம்மாள் அந்தஸ்து அலங்காரம் படிப்பு இவைகளைப் பற்றிய பெருமிதம் இருந்த தனது பண்பினால் எளிமையைப் புரிந்துகொள்ள முடியவில்லை என குறிப்பிடுகிறார் .தன் உடல் முழுவதும் வைரம் அணிந்திருந்தது பார்த்து கஸ்தூரிபா புன்முறுவல் செய்ததாகவும் அதை எண்ணி அவற்றை எல்லாம் கழற்றி எறிய வேண்டும் எனவும் அப்போது எண்ணியதாக  அம்புஜம்மாள் குறிப்பிட்டுள்ளார் .

 சென்னை வந்திருந்த பொழுது காந்தியடிகள் ஒரு கூட்டத்தில் பேச அன்று மாலை செல்கிறார் .சென்ட்ரல் முதல் வி.பி. ஹால் வரை எள்ளுப் போட்டால் எள்ளு விழாத அளவிற்கு கூட்டமாக நிறைந்திருந்தது கஸ்தூரிபாய் அவர்களைக் கூட்டத்தில் சிக்க வைத்துவிட்டு காந்தியடிகள் தனியே சென்று உள்ளார். அதைப் பார்த்து அம்புஜம்மாள் மனதால் காந்தியை திட்டி உள்ளார் .தனியாக இப்படி விட்டு விட்டுப் போகிறார்  தனது மனைவியை என்று மிகவும் அவர் மீது கோபப் பட்டதாகவும் ஆனால் பின்னாட்களில் அது புரிய வந்தது ,பெண்கள் தனியாக ச சமாளிப்பதற்காக இவ்வாறு நடந்தது இவற்றையெல்லாம் எங்களுக்கான பயிற்சியாகவே காந்தியடிகள் அன்று செய்துள்ளார் என்று புரிந்து கொண்டதாக குறிப்பிடுகிறார் .1920 ஆம் ஆண்டு இது நிகழ்ந்தது. மற்றொரு சமயம் 1930 ஆம் ஆண்டு கஸ்தூரிபாய் சென்னையில் ஸ்திரீகளுக்கான  சுதேசி சங்கம் உருவாக்கிட அதில் தேச சேவைகள் ,சுதேச பிரச்சாரம் ,அன்னியத் துணி கடை மறியல் இவ்வாறெல்லாம் அம்புஜம்மாள் இறங்கி பணியாற்றி காவல்துறை முன்னிலையில் தைரியமாக பல போராட்டங்களிலும் கலந்து கொள்கின்றார் இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ,அன்று கஸ்தூரிபாவைத் தனியாகக் கூட்டத்தில் காந்தியடிகள் விட்டுச் சென்றதுதான் என்று பின்னால் புரிந்து கொண்டதாக பதிவுசெய்கிறார்.

 2. சென்ற மகா யுத்தத்திற்கு பிறகு என்ற இரண்டாவது கட்டுரையில், காந்தி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு தந்துள்ளார் ,அகிம்சாவாதி என்றாலும் போருக்கான ஆட்களையும் பணத்தையும் சேர்த்து உதவியுள்ளார் இதற்கு காரணம்  விரைவாக சுய ஆட்சி வரும் என்று எதிர்பார்த்து இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கமிட்டி ரவுலட் சட்டம் ஏற்படுத்தப்பட்டது பற்றி நாம் அறிவோம் வரலாற்றில் புரட்சிக்காரர்கள் என பல வாலிபர்களை சிறை வைத்தனர் சாத்வீக முறையில் காந்திஜி ரவுலட் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என முயற்சி செய்தார் ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவாக ஒத்துழையாமை இயக்கம் உருவானது அந்த காலகட்டத்தில் காந்தி குல்லாய் கதர் மையம் நாடுகளின் தகனம் இவ்வாறு பல நிகழ்வுகள் நடந்தேறின அந்த காலகட்டத்தில் காந்தி குல்லா மிகவும் அம்புஜம்மாள் குடும்பமும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்ததைப் பதிவு செய்துள்ளார் அம்புஜம். ஆகவே தாங்கள் அணிந்திருந்த வைரங்களை எல்லாம் இரும்புப் பெட்டியில் கழற்றி வைத்து விட்டனர், தங்கள் வீட்டில் டிராயிங்  அறையில் காந்தியடிகளின் பெரிய உருவப்படம் ஒன்று வைத்து வழிபடுகின்றனர், வெள்ளைக் கதர் ஆடை அணிந்து கையில் கீதையுடன் நின்றிருந்த அந்த உருவத்தைக் குறித்து அது எப்படியான ஒரு மாற்றத்தை பார்க்கும் மனிதர்களிடையே உருவாக்கி காந்தியத்தை உள்வாங்க வைத்தது, அமைதியான புரட்சிகரமான சிந்தனைகளை கொடுத்தது என்று மிகவும் நெகிழ்ந்து இந்த கட்டுரையில் அம்புஜம்மாள் பதிவு செய்துள்ளார்.

 3.வைக்கம் சென்றபோது என்ற மூன்றாவது கட்டுரை, 1925 இல் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் வைக்கம் என்ற இடம் இந்திய அளவில் பிரசித்தி பெற்றது ,ஹரிஜன மக்கள் கிருஷ்ணர் கோவிலைச் சுற்றிய ரஸ்தாவில்நடமாடக் கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று குறிப்பிட்டிருந்தனர், அவர்களும் ரஸ்தாவில் நடக்க வைக்கம் சத்தியாகிரகம் உருவான நிகழ்வுகளை பதிவு செய்கிறது. அப்பொழுது காந்தியடிகள் வைக்கம் செல்லும்போது சென்னையில் வந்து அம்புஜம்மாள் வீட்டில் தங்குகிறார்  அந்த அனுபவங்களைப் பதிவு செய்கிறது இந்த கட்டுரை. முதல் முறை தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தபொழுது சென்னை பல் இவர்கள் வீட்டிற்கு வந்தபோது ஒரு சமூக ஊழியராக தான் தெரிந்தார் காந்தியடிகள் .ஆனால் இந்த முறை அவர் வரும்பொழுது மக்களிடையே தேசபக்தி சமூகப்பற்று இவற்றை விதைத்து ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருந்தார் என்று அம்புஜம்மாள் பதிவு செய்கிறார். இதில் மீராபென் பற்றியும் குறிப்புகள் உள்ளன அப்பொழுது சென்னை நகர சபைத் தலைவராக இருந்த கான்சாஹிப் அவரது தலைமையில் மகாத்மாவிற்கு வரவேற்பு பத்திரம் ஒன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெறுகிறது அதை முடித்துக்கொண்டு அம்புஜம்மாள் வீட்டில் காந்தியடிகள் பார்ப்பதற்காக பொதுமக்கள் நிறையப்பேர் வந்திருந்தனர் அப்பொழுது ஒரு குழந்தையை மகாத்மா மடியில் வைத்துக் கொண்டுள்ள அந்த குழந்தை கைகளில் தங்க வளையல்கள் நிறைய போட்டு இருக்கின்றது அந்த குழந்தைக்கு ஆறு வயது அம்புஜம்மாள் தனது கழுத்தில் முத்தாரம்  போன்ற நகைகளை அணிந்துள்ளார். அந்தக் குழந்தையின் கைகளில் இருக்கக்கூடிய வளையல்களில் எனக்கும் ஒன்றை கொடுப்பாயா கொடுப்பாயா என்று காந்தியடிகள் கேட்டுக்கொண்டிருந்தார் சுற்றியிருப்பவர்கள் விளையாட்டிற்காக தான் கேட்கிறார் என்று நினைத்து  இருந்தனர் ஆனால் அவர் நிஜமாகவே கேட்டிருக்கிறார். குழந்தையின் தந்தை யார் குழந்தையை பார்த்து தாத்தாவிற்கு ஒன்றை கற்றுக் கொடுத்து விடு என்று கூற இதுதான் சாக்கு என்று காந்தியடிகள் வளையலை  இறுக்கமாக கையை பிடித்துக் கழட்ட அது வரவே மாட்டேன் என்கிறது அப்பொழுது கழட்ட முடியவில்லை என்றதும் கத்தரிக்கோலை எடுத்து வாருங்கள் என்று கூறி அதை கத்தரித்து எடுக்கிறார் இந்த நிகழ்வு ஒரு அரை மணி நேரம் நடக்கிறது. இதை பார்த்த நான் பயந்து போய் எனது கழுத்தில் இருந்த முத்து மாலையை வீட்டிற்குள் ஒரு பெட்டியில் வைத்து விட்டு வந்தேன். ஏனெனில் அப்போது  என்னிடம் இதைக் கேட்டு விடுவாரோ என்று நினைத்தேன். ஆனால் பின்னாட்களில் என்னால் உணர முடிந்தது இதுபோன்று கிடைத்த பொருட்களை எல்லாம் மக்களுக்காக மக்கள் நல நிதிக்காக தான் சேர்த்துகிறார் என .இந்தியப்  பெண்களிடையே இருந்த நகை பைத்தியம் ஓரளவாவது குறைந்து இருக்கிறது என்றார் காந்தியடிகள் இதுபோன்ற செய்திகளால் தான் என்று அம்புஜம்மாள் பதிவு செய்திருக்கிறார்.

 மிஸ் காதரின் மேயோ என்ற ஆங்கிலேயப் பெண்மணி தேசத்துரோகிகள் போற்றக்கூடிய இந்திய மாதா என்ற
ஒரு புத்தகத்தை எழுதி இருந்தார். இந்தியர்களின் குற்றம் குறைகளை நாடெங்கும் பரப்ப வெளியிட்ட புத்தகம் தான் அது. இந்தியர்கள் சுயராஜ்யத்திற்கு தகுதியற்றவர்கள் என்பதற்காக பிரச்சாரம் செய்வதற்காகவே அது எழுதப்பட்டிருந்தது. மகாத்மா காந்தியடிகள் அதனை சாக்கடை இன்ஸ்பெக்டரின் யாதல்து என்று ஒற்றை வரியில்  விமர்சித்திருந்தார் அப்போதைய காலகட்டத்தில் இந்தியா முழுக்க மக்களிடையே இந்த புத்தகத்தினால் பெரும் மனக் கசப்பும் வருத்தமும் வேதனையும் உருவாகியிருந்தது இந்தப் புத்தகத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அம்புஜம் காந்தியடிகளிடம் கேட்க நீ முழுவதும் படித்துவிட்டு வா என்று கூறுகிறார் உடனே படித்துவிட்டு வந்திருக்கிறார் அம்புஜம்மாள் அவரிடம் காந்தியடிகள் இந்திய ஸ்திரீகள் குறித்து இந்த புத்தகத்தில் இருந்து நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்கிறார் அதற்கு அம்புஜம்மாள் புத்தகம் முழுக்க நிறைய எதிர்மறையாக இருந்தாலும் சில பகுதிகள் உண்மையை கூறுகின்றனர் இந்திய பெண்களிடையே நாட்டின் மீது பற்றோ சமூகத்திற்காக வேலை செய்யும் நோக்கமும் இல்லாமல் எப்போதும் குடும்பத்திற்காக உழைக்கின்றனர் அவர்கள் படிப்பறிவு இல்லாமல் நிறைய சகோதரிகள் இருக்கின்றனரே என்று வருத்தப்படுகிறார் அதற்கு மகாத்மா சொல்லும் ஆலோசனைகள் நமக்காக நாம் எடுத்துக் கொள்ளலாம் இந்த மாதிரியான சூழலில் ஒரு புத்தகத்தை நாடெங்கும் எதிர்மறையாக பார்க்கும்பொழுது அதிலிருந்து நம்மால் என்ன நன்மைகள் செய்ய முடியும் என்று சிந்திக்க வைக்கிறார் மகாத்மாகாந்தி எனில் அம்புஜம்மாள் பார்த்து அப்போ சமூகம் மேம்பட சமூக சேவை செய்ய இந்த புத்தகம் ஒரு தூண்டுகோலாக அமைவது போல அவரை தூண்டுகிறார் மகாத்மாவின் கேள்விதான் அம்புஜம்மாள் இன்று நாம் ஒரு ரோல் மாடலாக பார்ப்பதற்கு விதையாக இருந்தது என்று கூறலாம் ஆம் அந்த புத்தகத்தில் இருப்பது போல பெண்கள் இந்தியாவில் குடும்பத்தை மட்டும் பார்த்துக்கொண்டு கல்வி கற்காமல் உம் நாட்டிற்காக சேவை செய்யாமல் இருப்பதை மாற்றுவதற்கு உன்னைப் போன்ற பெண்மணிகள் என்ன செய்யப் போகிறீர்கள் அவற்றை முன்னெடுத்துச் செல் என்று வழிகாட்டுகிறார் ஆகவே இந்த புத்தகத்தைத் தான் அம்புஜம்மாள் தனது பின்னாலேயே சமூகப் பணிக்கான முக்கிய ஆதாரமாக இங்கு பதிவு செய்கிறார் மகாத்மா காந்தி அந்த மூன்று தினங்கள் தங்கள் வீட்டில் தங்கியிருந்து போது நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வையும் இங்கு மிக அழகாக பதிவு செய்கிறார் அம்புஜம்மாள்.

 4 .அன்னையை  அறிந்துகொண்டது என்ற நான்காவது கட்டுரை :1927இல் மகாத்மா இலங்கைக்கு பயணமாக செல்லும்பொழுது சென்னை வருகிறார் அப்பொழுது அன்னை கஸ்தூரிபாய் உடன் வருகிறார், அம்புஜம்மாவிற்கு கஸ்தூரிபா அவர்களுடன் நெருங்கிப்
பழகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. அன்னை கஸ்தூரிபாய் உடன் இருந்த நாட்களை குறித்த அனுபவித்து பகிர்வாக இக்கட்டுரை அமைந்துள்ளது .
 அன்னையின் குணாதிசயங்கள் குறித்தும் அவரது காந்தியடிகளுக்காக எப்போதும் பணி செய்வது குறித்தும் இக் கட்டுரையில் குறிப்பிட்டு அவரை போன்ற தலைசிறந்த பெண்மணி பாரத நாட்டில் இல்லை என்ற பதிவை இங்கு தந்திருக்கிறார் அம்புஜம்மாள் அவர்கள்.கல்வியறிவு குறைவாக இருந்தாலும் ஆடம்பரமற்ற வாழ்க்கையின் வழியாக  இருதய பண்பாட்டினால் மிகச் சிறந்து விளங்கும் பெண்மணி  கஸ்தூரிபா என்று மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார் இக்கட்டுரையில்.

5.  தர்மசங்கடம் என்ற  கட்டுரையில் கல்கத்தாவில் நடந்த ஸ்பெஷல் காங்கிரஸில் அம்புஜம்மாளின் தந்தை விலகி விடுகிறார் அதோடு தேசிய வாழ்விலிருந்து விலகி எவ்வித பணிகளும்  செய்யாமல் இருக்கிறார்.
ஆனால் அப்பொழுது உப்புசத்தியாகிரகம் நாடெங்கும் மிகவும் அழுத்தமாக நடந்துகொண்டிருந்தது கஸ்தூரிபாய் அன்னியத் துணி கடைகளில் மறியல் செய்து சிறை சென்றார் இவற்றையெல்லாம் கண்ணுற்ற அம்புஜம்மாள் தானும் இயக்கத்தில் ஈடுபட விழைகிறார். அவரது தந்தையோ கதர் வேலை ஹரிஜன முன்னேற்றம் இவற்றால் சிவராசன் கிடைத்துவிடுமா இவை எல்லாம் நல்லது தான் நீ செய் ஆனால் சரியான அரசியல் திட்டத்தால் தான் சுயராஜ்யம் கிடைக்கும். அரசியலுக்கு அழுக்கு பிடித்து விளையாட்டு போல மோசமாக இருக்கின்றது. ஆகவே நீ இவற்றில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுரை வழங்குகிறார் இந்த சூழ்நிலையில் தர்மசங்கடமாக தான் நாட்டிற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து வருந்தி கட்டுரையை முடித்துள்ளார் அம்புஜம்மாள்.

 6.ஹரிஜன யாத்திரையில் - ஆறாவது கட்டுரையில் ஹரிஜன மக்களுக்காக நாடெங்கும் அவர்களது சமூக மத உரிமைகளுக்காகப் பிரச்சாரம் செய்துகொண்டு தேசம் முழுக்க வரும் பொழுது, மீண்டும் மகாத்மா சென்னைக்கு வருகை புரிகிறார். அப்போது கோடம்பாக்கம் ஹரிஜன கைத்தொழில் கல்விச் சாலையில் தங்கி இருக்கிறார் அவரை அம்புஜம்மாள் சந்தித்து தனது தகப்பனார் காங்கிரஸிலிருந்து விலகியது குறித்து இருவரும் மனம் விட்டுப் பேசுகின்றனர் அப்பொழுது காந்தியடிகள் உனது தகப்பனாரை ஏதாவது உன்னால் செய்ய முடியாதா என்று அம்புஜம்மாளை கேட்கிறார். அவரோ என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூற அப்போது நானே நேரில் வருகிறேன் என்று மகாத்மா அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்து உரையாற்றுகிறார் ஆனால் அம்புஜம்மாளின் தந்தையோ பிடிவாதமாக அரசியல் வேண்டாம் என்று கூறிவிட ,இந்த சூழ்நிலையில் காந்தியடிகள் அம்மாவிற்கு போனது தகப்பனாரின் பிடிவாதம் அரசியல் வேண்டாம் என்பதால் நீயும் அரசியலுக்குள் வர வேண்டாம் கதர் துண்டு ஹரிஜன சேவை செய்து வந்தால் போதும் என்று கூறிவிட்டு வருகிறார் அந்த அனுபவத்தை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார் அம்புஜம்மாள்.
 7. ..என் ஹிந்தி யாத்திரையில் என்ற ஏழாவது கட்டுரையில் 1934 ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி ஹிந்தி யாத்திரைக்காக டெல்லி டேராடூன் ஹரித்துவார் கான்பூர் அலகாபாத் ஆகிய இடங்களுக்கு அம்புஜம்மாள் தனது தோழிகளுடன் செல்கிறார் .அங்கே ஸ்ரீ சமன்லால் பஜன் பங்களாவில் தங்கி இருந்தார் காந்தியடிகளை அங்கு சந்தித்த பிறகு கல்கத்தா செல்ல இருந்தார் அம்புஜம்மாள் .மஹாதேவ தேசாய் மீரா பென்  பன்வாரிலால் பிரபாவதி அனைவரும் உடன்இருக்க ஒரு ரயிலில்  மகாத்மா காந்தியடிகளும்  பிரயாணம்  செய்திருக்க, அதே ரயிலில் அம்புஜம்மாள் அவர்களும் சென்றார். 

 காந்தி , இறங்க வேண்டிய ரயில் நிறுத்தம் இரவு ஒன்றரை மணிக்கு வரும் படி இருந்தது , அந்த ரயில் நிலையத்தில் இவரை எதிர்த்து சனாதனிகள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தனர்.  நள்ளிரவில் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் ரயிலை விட்டு குதித்து மறைகிறார் எவ்வளவு வீரமாக வேகமாக செயல்பட வேண்டும் என்பதை காந்தியின் வழி நின்று  இக்கட்டுரையில் மிகவும் தெளிவாக அம்புஜம்மாள் பதிவு செய்துள்ளார்.
பம்பாய் காங்கிரஸ் என்ற இந்த எட்டாவது கட்டுரையில் 1934ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு அம்புஜம்மாள் சென்றது குறித்து குறிப்பிட்டுள்ளார் தேச சேவைகளான ஜமால் பாஷ்யம் அய்யங்கார் என் கடைசி மகள் கோதைநாயகி அம்மாள் ஆகியோருடன் அம்புஜம்மாள் கலந்துகொண்டார் எவ்வளவு பெரிய மனிதர்கள் வந்திருந்தாலும் காந்தி காந்தியடிகளின் இருப்பு மிகவும் தேவையாக இருந்தது என்பதனை கட்டுரை முழுக்க தனது சொந்த அனுபவங்களுடன் ஆழமான கருத்துக்களுடன் பதிவு செய்துள்ளார் இக்கட்டுரையில்.

8. பம்பாய் காங்கிரஸ் என்ற இந்த எட்டாவது கட்டுரையில் 1934ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு அம்புஜம்மாள் சென்றது குறித்து குறிப்பிட்டுள்ளார் .தேச சேவகிகளான ஜானம்மாள் (பாஷ்யம் அய்யங்கார் என் கடைசி மகள் ) கோதைநாயகி அம்மாள் ஆகியோருடன் அம்புஜம்மாள் கலந்துகொண்டார் எவ்வளவு பெரிய மனிதர்கள் வந்திருந்தாலும் , மாநாட்டிற்கு காந்தியடிகளின் இருப்பு மிகவும் தேவையாக இருந்தது என்பதனை கட்டுரை முழுக்க தனது சொந்த அனுபவங்களுடன் ஆழமான கருத்துக்களுடன் பதிவு செய்துள்ளார் அம்புஜம்மாள்

9 .வர்தா ஆசிரம நினைவுகள் 

பம்பாய் காங்கிரசுக்கு சென்று வந்த பிறகு வீட்டில் முரண்டு பிடித்து வர்தா ஆசிரிமம்  செல்கிறார் அம்புஜம்மாள். . தந்தையே நேரில் வந்து காந்தியடிகளிடம் ஆசிரமத்தில் இவரை விட்டுச் செல்கின்றார். இவரது தந்தை அழுது இவரை ஆசிரமத்தில் விடும்பொழுது காந்தி, கவலை வேண்டாம் , எனது மகளைப் போல பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதே போல மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறார். சென்னை வீட்டின் வசதியையும் ஆசரம எளிமையும் ஒப்பிட்டு , ஆனால் உள்ளார்ந்த அன்புடன் ஆசிரமத்தில் வாழ்ந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அங்கு நிலவிய உணவு முறை ,வேலைப் பகிர்வு , பிரார்த்தனை ஏற்பாடு , நூல் நூற்பு , காந்தியின் அரசியல் பணிகள் , கடிதப்பணி , நடைப் பயற்சியிலேயே ஆசிரமத்திற்கு ரோடு போட கல் பொறுக்கியது என தொடர்ந்து பல அழகான அனுபவங்களைத் தொகுத்துள்ளார். 

10. மகாத்மாவின் துணைவி 

இந்தக் கட்டுரையை ஒற்றை வரியில் கூற வேண்டுமெனில் , மகாத்மா என்ற மாபெரும் மனிதர் குறித்து நாம் பேசும் போது கஸ்தூரிபா இல்லையெனில் மகாத்மா நாட்டின் அனைத்துப் பணியிலும் தன்னை ஈடுபடுத்தி வெற்றி கண்டிருக்க முடியுமா என சிந்திக்க வைக்கிறார். 

இதே போல காந்தி பக்தர்களைச் சந்தித்தது , சேவாக் கிரம நினைவுகள் , 74 வயதில் 21 நாள் பட்டினி என தொடர்ந்த அனைத்து கட்டுரைகளிலும் காந்தியுடனான தனது நிறைய அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார். 

இன்றைய கால கட்ட சமூகப் போக்கில் மாற்றங்களைத் தந்து பல நல்ல நெறிமுறைகளை இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்ல வேண்டுமெனில் காந்தியத்தை நாம் கையில் எடுக்க வேண்டும். அப்படியான புத்தகம் இது. அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கிய நூல். 

உமா 





Thursday 18 March 2021

தோழி நர்த்தகி நடராஜ்

இன்றைய குக்கூ உரையாடலில் 


தோழி நர்த்தகி நடராஜ் 


வார்த்தைகளற்ற நீண்ட மெளன உணர்வை உங்கள் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் கடத்திய தருணங்கள் ஒரு  புதிய அனுபவம் .


யாருக்கெல்லாம் சொல்ல வேண்டும் உங்கள் வாழ்க்கையை , நிச்சயமாக என் மாணவிர்கள் எல்லோருக்குள்ளும் ஒரு ஆழமான அனுபவத்தைத் தர பள்ளி திறப்பு நாளை எதிர்நோக்குகிறேன். 


கட்டற்ற கனவுகளால் காலத்தை வென்ற அழியா நிலையை அடைந்த உங்கள் அனுபவம் உங்கள் பகிர்வில் , தமிழ் மொழியின் அழகிய சொற்களால் குற்றமில்லா உச்சரிப்பால் ஒருங்கே மனத்தாலும் அறிவாலும் உணர வைத்த நிமிடங்கள் அற்புதம். 


ஒவ்வொரு நாளும் வீட்டின் கதவைத் திறக்கும் போதும் வசவுகள் , கேலிப் பேச்சுகள் , புறக்கணிப்புகள் என எல்லாவற்றுக்கும்  தான் தயாராக இருப்பேன், எதிர்பார்ப்பேன் என்ற இடத்திலிருந்து உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுகள் ஆரம்பிப்பதாக உணர்கிறேன். 


பின்புலமில்லாத , உண்மையான உழைப்பும் எண்ணங்களும் அவரவர்க்கான இடத்தைக் கொடுத்து  நடுவில் நிற்க வைத்து  ஆராதிக்கும் என்ற உங்கள் சொற்கள் தான் எத்தனை ஆழமான உண்மை.


ஆடும் போது பறக்கும் மனநிலையை உங்கள் பாதங்கள் தரைபடாத உயரத்தில் நர்த்தனமிடுவதிலிருந்து அறிந்து கொள்கிறோம். ... உங்கள் ஒவ்வொரு சொல்லும் எங்களுக்குள் ஆழமாக ஒரு ரசாவாதம் செய்தது என்னவோ உண்மை. 


கலைஞர்கள் உருவாக்கப்படுவதில்லை , உருவாக்க முடியாது, உள்ளிருந்து உருவாகி தங்களை நிரூபித்துக் கொள்வர்  என்பதற்கு குழந்தைகளுடனான சில உரையாடல் உதாரணங்கள் வழியே உணர்த்தியதை இங்குள்ள பெற்றோர்கள் உணர வேண்டும் .


இந்த சமூகத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி கையேந்தி நிற்பதைக் காட்டிலும் ஒரு சமூகத்தையே உருவாக்குவதான் சிறந்த  செயல் என்று உருவாக்கி வைத்திருக்கும் உங்கள் தேடல்களின் களம் வருங்கால இளைய தலைமுறைக்கு நீங்கள் காட்டும் சாட்சி. 


புலம் பெயர்ந்து வரும் மக்களைக் காக்க,  குழந்தைகள் உங்களைத் தேடுவதும்  , அவர்களுக்கு ..உங்களிடமுள்ள கலையைக் கற்றுத் தருவது போராடுவதை விட மேலானது என்ற உங்கள்  பதிவும் புரட்சியின் வேறு வடிவங்களாகப் பார்க்கிறேன். 


கனவுகள் காணுங்கள் , கடவுளின் வரமாகி எல்லாம் செயல் கூடும் என்பதையே எல்லோருக்குமான பகிர்வாக எடுத்துக் கொள்கிறேன். 


பத்மஸ்ரீ நர்த்தகி என்ற முகமூடியை நீங்கள் அணியாத காரணத்தால் தான் எங்களைப் போன்ற எளிய வெகு ஜனம் உங்களை நெருங்க முடிகிறது என்பதை நீங்கள் சொல்லாமலே புரிந்து கொண்டோம். 


இறுதியாக , தாய்மொழி குறித்து உங்கள் செய்தியாக அனைவருக்கும்  தந்தது மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன். தாய் மொழியைக் கண்டடையும் போது ஒவ்வொருவரும் அவரவரைக் கண்டடைவீர்கள் என்பது இன்றைய சமூக அமைப்பு பள்ளிக் கல்விக்கும்  நீங்கள் தந்த செய்தியாகப் பார்க்கிறேன். 


இன்றைய நாளை  உங்களுடன் சாத்தியப்படுத்திய தோழி பரமு, குக்கூ உறவுகள் அனைவருக்கும் பேரன்பு💚💚💚