வீரயுக நாயகன் வேள்பாரி - பாகம் - 1
2018 டிசம்பரில் முதல் பதிப்பாக வெளிவந்த வரலாற்று நாவல் இது. 2019 இல் நான்காம் பதிப்பு கண்டது வேள்பாரி. ஆனந்த விகடனில் நூறு தொடர்களுக்கும் அதிகமாக வெளிவந்தது பற்றி பலரும் அறிந்திருப்பர் . முதல் தொகுதி 51 அத்யாயங்களைக் கொண்டுள்ளது.
கடையேழு வள்ளல்களில் ஒருவனாகவே முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியைப் பற்றி அறிந்திருந்த எனக்கு இந்த வரலாற்று நாவலை வாசிக்க வாசிக்க பாரியின் மீதும் அவனது பறம்பு மலையின் அதிசயங்கள் மீதும் அளவில்லாக் காதல் தோன்றியது என்று மட்டுமே வெளிப்படுத்த முடிகிறது. குறுநில மன்னன் பாரி , வேளிர் குலத் தலைவன் ஆனதால் வேள்பாரி ஆகிறான். பறம்பு மலையின் ஆச்சர்யங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் , பாரியின் புகழைக் கண்டு கேட்டு சீரணிக்க முடியாமல்
மூவேந்தர்களான சேர , சோழ ,பாண்டியர்கள் பாரியை எதிர்த்து வேறு வேறு காலகட்டங்களில்
போர் தொடுத்து தோற்று விடுவது சங்கப் பாடல்கள் நமக்குச் சொல்லும் . மீண்டும் மூன்று பேரும் ஒன்றாகச் சேர்ந்து பாரியை சுற்றி வளைத்தும் பயனில்லை. இத்தகைய பெருமை கொண்ட
பாரியின் வானளாவிய சிறப்புகளை , வரலாற்றைப் புனைவு கலந்து நீண்ட நாவலாக மாற்றியுள்ள நமது பாராளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் அவர்களுக்கு நமது மனமார்ந்த பாராட்டுகள்.
அவரது நேர்காணல் ஒன்றில் இதற்காக பல வருடங்கள் ஆய்வு செய்து எழுதியதாகக் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. சங்க இலக்கியங்களை நாம் ஏன் படிக்க வேண்டும் என்பதற்கான பதிலையும் இந்நாவல் நமக்குக் கற்பிக்கிறது.
சங்க இலக்கியத்தின் வழியே நாம் அறிந்த இரு முக்கியமான மனிதர்களை இணைத்து தமிழ் மண்ணின் விழுமியங்கள் அழியா வண்ணம் பதிவு செய்திருப்பது தான் இன்றைய
நாளின் வேள்பாரி என்ற நவீன நாவல்.
தமிழ்ச் சமூகத்தின் மூத்த புலவர் கபிலர் என்பதைப் Uதிவு செய்யும் சங்க இலக்கியங்களில் , பாரியோ கடையெழு வள்ளலாக வருவதாகவே நாம் அறிவோம். ஆனால் நூலாசிரியரோ முதல் வள்ளலே பாரிதான் என அழுத்தந் திருத்தமாகக் கூறுகிறார். அதன் அடிப்படையில் , கபிலர் எழுதிய கபிலம் என்ற நூல் நமக்குக் கிடைக்கவில்லையாதலால் அது பாரியைக் குறித்துதான் எழுதியிருக்க வேண்டும் என்றும் பின்னால் பல நூற்றாண்டுகளாக மூவேந்தர்கள் ஆட்சி செய்ததால் பேசப்படாமல் போக வாய்ப்பிருக்கலாம் என்கிறார். அதுவாகவே ..
நாவல் நம்மை நிகழ்காலத்தின் சர்வ உலகத்தையும் மறந்து பறம்பு மலைக்குள்ளே வாழ வைத்து பாரியின் காலத்திற்கே அழைத்துச் செல்வது தான் முதல் வெற்றி . ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும் போதும் ஒவ்வொரு இனத்தின் வரலாறு நம்மை பிரமிக்க வைக்கிறது. கபிலர் காட்டுக்குள் பிரவேசித்து பறம்பு மலையை அடையும் பயணத்தில் தான் எத்தனை செய்திகள் .அவரே அதிசயத் தக்க வகையில் அறிந்து கொள்கிறார். நீலனின் காடு குறித்த அறிவு அவரை ஆச்சர்யப்பட வைப்பது போல நம்மையும் ஆச்சர்யப்பட வைக்கிறது . முருகன் - வள்ளி காதல் கதைகள் , பாரியும் கபிலரும் சந்தித்து உரையாடுதல் , கபிலருக்கு பறம்பு நாட்டையும் அங்கு வியாபித்திருக்கும் பச்சை மலைத் தொடரின் ஆழமான உண்மைகளைக் கதைகளாகக் கூறுவதன் வழியே நாமும் எத்தனையோ சிறு சிறு வரலாறுகளை அறிய முடிகிறது. நம்மையும் அறுபதாம் கோழியின் ஆசை விட்ட பாடில்லை , மலைகளின் ஆச்சர்யங்கள் உயர்ந்து கொண்டே போகின்றன. தேவ வாக்கு கூறும் கொற்றவை விழாப் பண்டிகையின் முக்கிய உயிரினங்களான தேவாங்குகளை கடல் வாணிபத்திற்காகப் பயன்படுத்த பாண்டியர்களால் செய்யப்படும் சதியில் திரையர்களின் இனத்தைப் பயன்படுத்திய கதை தான் பிற்பகுதியின் சாரம்.
காட்டெருமையை அடக்கி வெற்றி இலையைப் பறித்து வரும் வீர மனிதர்கள் கதையை அறியும் போது வெற்றிலையைக் கண்டு பிடித்த ஆதி தமிழன் நம் சிந்தனையில் வருகிறான். ஒவ்வொரு தாவரத்தின் குணமும் மருந்தாக இருக்கிறது .அதைப் பறம்பு நாட்டில் மக்கள் எப்படிப் பயன்படுத்தி வாழும் முறையைப் பின்பற்றியிருக்கின்றனர் என்பதே பிரமிப்பாக உள்ளது. தேக்கன் கதாபாத்திரம் ஒரு பிரமிப்பு ... மாணவர்களைக் காட்டுக்குள் அழைத்துச் செல்ல அவர்களைப் பயிற்றுவிக்க வழி கொள்ளும் முறைகள் ஒவ்வொரு நகர்வும் நம்மை மிரள வைக்கிறது. திரைப்படம் பார்க்கும் போது நுனி சீட்டில் நகர்ந்து பதட்டத்துடன் பார்ப்பது போல ஒரு சில அத்யாயங்கள் நம்மைத் தூங்க விடவேயில்லை .காட்டில் வசிக்கும் மிருகங்கள் , அவற்றின் போர்க் குணங்கள் அத்தனையும் கண் முன்னே நிறுத்தி மீண்டும் மீண்டும் ஆதி தமிழரின் அரும் ஆற்றல்களை மனதில் நிறுத்துகிறது நாவல்.
முதல் பாகமான இதன் 608 பக்கங்களை எழுத்துக்களுக்கு இணையான ஓவியங்களும் நம்முடன் ஒரு சேர இணைந்தே பயணிக்கின்றன. சொற் சுவை , பொருட்சுவை , காட்சிச் சுவை என மொழியை அணு அணுவாக தமிழரின் வாழ்வியலுடன் இணைந்து ரசிக்க வைக்கும் நாவலாக நகர்கிறது . கடல் வாணிகத்திற்கு தேவாங்கை அனுப்பிய கப்பல்களிலிருந்து மீட்டக் காட்சிகள் தான் இறுதி அத்யாயமாக நம்முள் நிறைகிறது.
இரண்டாம் பாகம்
(தொடரும் )
No comments:
Post a Comment