Saturday 22 May 2021

உப்பு வேலி

உப்பு வேலி 

பதிப்பகம் : தன்னறம் நூல்வெளி 
முதல் பதிப்பு : 2020
விலை : ரூ 400
பக்கங்கள் : 240
தொடர்புக்கு : 9843870059

ஆசிரியர் : ராய் மாக்ஸம் 
தமிழில் : சிறில் அலெக்ஸ் 

ராய் மாக்ஸம் :

இவர் மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இங்கிலாந்து நாட்டுக்காரர் .1978 இல் தனது 39 ஆம் வயதில் கேம்பர்வெல் கலை மற்றும் கைவினைக் கல்லூரிக்குப் பணிக்குச் சென்றார். அங்கு நூலகம் மற்றும் காட்பகப் பாதுகாவலராகத் தகுதியுயர்வு அடைந்தார் .பின்னர் கேன்டர் பரி கேதீட்ரல் காப்பகங்களில் பாதுகாவலராக இருந்தார். . பிறகு லண்டன் பல்கலைக் கழகத்தின் செனட் ஹவுஸ் நூலகத்தின் மூத்த பாதுகாவலராக பொறுப்பு வகித்துள்ளார். இவர் எழுதிய ஏழு புத்தகங்களும் இந்தியாவைப் பற்றியே பேசுகின்றன. 

உப்பு வேலி ...

உலகின் மிகப் பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம் என அ.ட்டைப் படத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ள இப்புத்தகம் நமக்குச் சொல்லும் கதைகள் நடுங்க வைக்கின்றன. கவலையுறச் செய்கின்றன. கண்ணீரை சில இடங்களில் வர வைக்கின்றன. 

இந்தியாவின் வரலாற்றில் திட்டமிட்டோ எதேச்சையாகவோ மறைக்கப்பட்ட நமக்கு சொல்ல மறுக்கப்பட்ட நமது அரசால் கூட ஆவணம் செய்யாது மறக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைப் பேசும் புத்தகம் இது. இந்திய ஆட்சியில் , அரசுக்கோ துறை சார்ந்த வல்லுநர்க்கோ தோன்றாத எண்ணம் ..... வெளிநாட்டு மனிதர் ஒருவரைத் தட்டி எழுப்பி விடா முயற்சியுடன் மூன்று ஆண்டுகள் தேட வைத்து உலகின் மிகப் பெரிய உயிர் வேலியாகத் திகழும் உப்பு வேலியைக் கண்டடைந்து , தொடர்புடையவற்றையும் இணைத்து ஆவணப் படுத்திய அற்புத வரலாறு தான் உப்பு வேலி .

2300 மைல்கள் தொலைவு நீளமுள்ள ஒரு புதர் வேலியை உருவாக்கிய ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி , இந்தியாவையே இரண்டாகப் பிரித்து இமயமலையிலிருந்து ஒரிஸா வரைக்கும் உப்பு வேலியை உருவாக்கியது உலகெங்கிலும் எந்த வரலாற்றிலும் இல்லாத மாபெரும் உழைப்புக்கான செய்தியும் கூட .அதே வேளையில் உப்பு என்பதை மிகச் சாதாரணமாக எண்ணும் நம்மிடையே 1700 களிலிருந்து நம் இந்திய மக்களின் வாழ்க்கையில் உப்பைக் குறித்தான எவ்வகையான அரசியல் நடந்துள்ளது, எத்தனை ஆயிரம் மக்கள் உப்பிற்கு வரி கொடுக்க இயலாமல் மாண்டு போன கதைகள் , ஏழை எளிய மக்களின் ஆண்டு வருமானத்தில் சரி பாதிக்கும் மேல் உப்புக்கு வரியாக , விலையாகக் கொடுத்து துன்பமுறும் அவலம் என வரலாற்றின் பேசாத பேச்சை எடுத்துப் பதிவு செய்கிறார் ராய் மாக்ஸம். 

அதன் தொடர்ச்சியாக இந்தியா என்ற வளமான துணைக் கண்டத்தில் உப்புக் காய்ச்சும் வேலை எப்படி  மாபெரும் தொழிலாக நடந்தது , மக்கள் தங்கள் சொந்த நாட்டின் உப்பைத் தின்னக் கூலியுடன் வரி என்ற ஈ.ரெழுத்து அஸ்த்திரத்தால் படும் துன்பங்கள் , உப்பின் வரியால் அந்தக் காலத்திலேயே கோடி கோடியாக வருமானம் ஈட்டிய பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரிகளின் சொத்து சேர்ந்த விபரங்கள் என ஏராளமான விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

நாட்டு விடுதலைக்குக் காரணமாக அமைந்த உப்புச் சத்யாகிரகம் குறித்தும் , காந்தி ஏன் எளிய மக்களின் பார்வையில் நின்று உப்பை வைத்துப் போராடினார் என்ற நம் கேள்விகளின் விதையாக இந்தப் புத்தகம் நம்மிடம் பேசுகிறது .

எல்லாவற்றையும் கடந்து, ராய் மாக்ஸம்  , ஒரு நூற்றாண்டுக்குள் முற்றிலுமாக மக்கள் மறந்த அந்த வேலியைப் பற்றிய ஒட்டு மொத்த ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார் என்பதும் வரலாறு. 

1997 இல் தான் லண்டனில் ஒரு சிறிய புத்தகக் கடையில் வாங்கிய புத்தகத்தில் இருந்த சில வரி குறிப்பை மட்டும் ஆதாரமாக நம்பி இந்தியாவிற்கு வந்து இறுதி வரை நம்பிக்கை இழக்காது , அப்படி நம்பிக்கை இழக்கும் சூழலில் ஏதோ ஒரு ஆவலைப் பற்றிக் கொண்டு மூன்று வருடங்களாகத் தேடித் தேடி இறுதியில் அந்த உயிர்வேவியைக் கண்டடைகிறார் ராய் மாக்ஸம். 

அப்படி அவர் கண்டுபிடிக்கச் செல்லும் இடங்களுக்கு நம்மையும் பயணக் குறிப்புகளாக அழைத்துச் செல்வதும் சந்திக்கும் மனிதர்களிடம் உருவாகும் உரையாடலில் நாமும் உரையாடுவது போல ஒரு உணர்வைத் தருகிறது இப்புத்தகம் . 

ஒரு அற்புதமான திரைப்பபடத்தைப் பார்ப்பது போல ஒரு உணர்வு கூட உருவானது. நாயகன்  ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொலைந்து போன தனது நாயகியைத் தேடிக் கண்டடையப் படும் மனப் போராட்டங்கள் , நடைமுறைச் சிக்கல்கள் இவற்றைக் கடந்து வருவதும் இறுதியில் திரும்பிப் போய் விடலாம் என எத்தணிக்கையில் எங்கிருந்தோ ஒரு அறிகுறி தென்பட்டு , மீண்டும் அங்கிருந்து தேடத் தொடங்கி இறுதியில் கண்டடைவதின் உச்சம் தான் இறுதிக் கட்ட பக்கங்கள். ராய் போலவே நாமும் மனதால் நெகிழ்ந்து கண்ணீர் சிந்துகிறோம் உப்பு வேலி முழுமையாக மறைந்து போனதை எண்ணி . அற்புதமான உண்மை வரலாற்றின் அழுத்தம் நம்மை வெகுவாக பாதிக்கிறது. 

இதை வாசிக்க வாசிக்க பிரிட்டிஷ் ஆட்சிக் கால நிர்வாக முறை , சுரண்டல் , அதன் விளைவாக உருவான பஞ்சங்கள் இவையெல்லாம் நம் கண் முன்னே விரிகின்றன. சும்மாக் கிடைக்கவில்லை சுதந்திரம், நம் முன்னோர் அடைந்த துன்பங்களின் ஒரு சிறு அத்யாயம் நம்மை வேதனைப் பட வைக்கிறது.

புதர்வேலி ? , உப்பு வரி , வரைபடங்கள் , சுங்க எல்லை , ஆக்ரா , சுங்கப் புதர்வேலி
உப்பு ,நகைப்புக்குரிய வெறி , கலகம் , புளிய மரங்கள் , சம்பல் என இதன் ஒவ்வொரு அத்யாயமும் ஆழமாக நம்மை உணர வைத்து நகர்த்துகின்றன. 

இலண்டனிலுள்ள குயிண்டோ என்ற புத்தகக் கடையில் ,ஸ்லீமனின் புத்தகம் , "மதிப்புக்குரிய " _கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் கடைசி பத்தாண்டுகளில் செய்த பயணங்களின் தொகுப்பில் வந்த ஒரு கட்டுரையின் அடிக்குறிப்பு தான் இப்புத்தகம் உருவான வரலாற்றின் தோற்றுவாயாக உள்ளது.

இமாலயத்தில் துவங்கி ,சிந்து நதியைத் தொடர்ந்து இன்றைய பாகிஸ்தானுக்குள் சென்று , டெல்லியைச் சுற்றிச் சென்ற வேலி இது. ஆக்ரா , ஜான்சி , ஹோஷங்கபாத் , காண்ட்வா , சந்திராப்பூர் , ராய்ப்பூர் எனச் சுற்றி மகாநதி ஆற்றில் இன்றைய ஒரிசா மாநிலத்தில் முடிவடைந்த 2504 மைல் தொலைவுள்ள நீண்ட எல்லையை நிரப்பிய வேலி இது.

பயண நூலாகவும் ஒரு வரலாற்றுப் புத்தகமாகவும் பல ரகசியங்களைக் கண்டறியும் கருவியாகவும் அமைந்து மிக முக்கியப் பங்கு வகிக்கிறது .

வேலி உருவாக்கத்தில்  ஈடுபட்ட, இறந்து போன மனிதர்கள் , காவல் காத்த பதிமூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட சிப்பாய்கள் , வேலியைப் பராமரித்த பணியாளர்கள் , அதிகாரிகள் என ஒரு பிரம்மாண்ட விஷயத்தின் சுவடு கூட அறியாமலிருக்கும் இந்த தலைமுறை குறித்த சிந்தனைகளும் நம்மைத் தூங்க விடவில்லை என்பது தான் உண்மை. 

உப்பைப் போல சாதாரணமாக எண்ணி விட முடியவில்லை , உப்பு வேலி சொல்லும் வரலாற்றை .இதை வாசித்த பிறகு உப்பின் மீதான நமது பார்வை மாறக் கூடும் , வரலாற்றின் மீதான நம் பார்வை மாறக் கூடும் என்கிறார் இதனைத் தமிழில்  மொழி பெயர்த்த சிறில் அலெக்ஸ் . மொழிபெயர்ப்பு நூலாகவே கருத முடியாமல் மிக இயல்பாக ,எளிய தமிழில் அதே வேளையில்  மக்கள் வாழ்வியல் சார்ந்த இலக்கியத்தை நமக்காக மொழி பெயர்த்துள்ள சிறில் அலெக்ஸ் மிகவும் பாராட்டுக்குரியவர். 

இந்நூலை வெளியிடுவதில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே ஆரம்பப் புள்ளியாக இருந்துள்ளார். அவர்  ஆங்கிலத்தில் வாசித்த ராய் மாக்ஸம் அவர்களது 'இந்தியாவின் மிகப் பெரிய வேலி" என்ற நூல் தந்த தாக்கம் , அவர் அது குறித்து தனது இணையத்தில் எழுதியது இவற்றைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் லண்டன் நகரில் ராய் மாக்ஸமை நேரில் சந்தித்து மொழியாக்க உரிமை பெற்றது என தொடர் நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கன.

அனைவரும் வாசித்து நம் நாட்டின் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நிகழ்ந்த இந்த வரலாற்றை அறிய வேண்டியது மிக அவசியம் எனக் கருதுகிறேன். 

உமா

No comments:

Post a Comment