Monday 11 October 2021

இடைவெளியில் உடையும் பூ

 இடைவெளியில் உடையும் பூ 

 கவிதைப் புத்தகம் 
ஆசிரியர் :அன்புத்தோழி ஜெயஸ்ரீ 
வெளியீடு : இடையன் இடைச்சி நூலகம் 
பக்கங்கள்: 112
விலை : ரூ 150

 புத்தகத்தின் அட்டைப் படத்தைப் பார்க்கும் பொழுது ஒரு பூ உடைந்து கீழே சிதறுவது போல  தோன்றுகிறது. .  

 ஜெயஸ்ரீ:  இவர் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோவையில் வசித்து வருகிறார் அவருடைய வானொலி நிகழ்ச்சித்  தொகுப்பின் பெயர்தான் அன்புத்தோழி . ஆகவே தன்னை "அன்புத்தோழி ஜெயஸ்ரீ " என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார் அடையாளம் மட்டுமல்ல அவர் உண்மையாகவே அன்புத் தோழியாக திகழ்கிறார் என்பது தான் இந்த கவிதைகளிலிருந்து  புரிந்து கொள்ளக் கூடிய ஒரு கருத்தாகும் . .

 வலியைக் கலை செய்யும் வார்த்தைகள் என்று தலைப்பிட்ட ஒரு வாழ்த்துரையை அல்லது அணிந்துரையை கவிஞர் வைரமுத்து அளித்துள்ளார் .மௌனத்தை திறக்கும் கவிதைகள் என்று மற்றொரு  கவிஞர் அம்சப்ரியா என்பவர் பாராட்டியுள்ளார் .

அதனைத் தொடர்ந்து பூக்களைத் திருடிய சிறுமியின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற தலைப்பில் மிக அழகாக தன்னுரை தந்துள்ளார் எழுத்தாளர் .

 அவர் சொல்வதில் மிகவும் குறிப்பிடத்தக்கது, என்னோடு நீங்கள் பயணிக்க வேண்டுமாயின் இயந்திரங்களோடு அல்லாது இதயங்களோடு பழகி இருத்தல் அவசியம் ஏனெனில் இவள் ஒரு இலக்கியவாதி என்பதைவிட இலக்கு உள்ள வியாதி என்பதே சரி என்று குறிப்பிடுகின்றார் அதாவது அவருடைய  கவிதை மொழியானது முழுக்க முழுக்க அன்பைத் தோய்த்து தொடர்ந்து வெவ்வேறு பரிமாணங்களில் கவிதை வரிகளாக நமக்கு கொடுக்கின்றது. 

நம் அன்றாடக் காட்சிகளிலிருந்து ஒரு கவிதையாக இதைப் பார்க்கிறேன். 

 தோளில் ஒரு பையோடு 
கைபேசியில் கண்வைத்து
 குதிகால் செருப்பு பட்டென இடறித் தடுமாறி 
விழப் போகும் எவளையுமினி அலைபேசிப் பைத்தியமான தீர்ப்பிட்டு சபித்து விடாதீர்கள் ......

தனிமையை கட்டிக் கொண்ட காதல் காரியின் கடைசி தேடலின் வழிகளை வார்த்தைகள் உரைக்கவியலாது வேண்டுமெனும்  போதெல்லாம் 
உடனே கையை பிடித்துக் கொள்ளும் அத்தனிமை  போன்றதொரு 
சிறந்த துணை வேறொன்றும் இல்லை என்று 
வேண்டுமானால் சொல்லிப் போங்கள்......

 வேருக்கு நீர் ஊற்ற நேரமில்லை எங்களுக்கே தாகம் தீர்த்த நீர் போதவில்லை முற்றியதே கலி .... 

அவளுக்கு அஞ்சலி என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதையின் வரிகள் இதோ

ஆண்மகன் உனக்கவள் பண்டமாகப்  பிறந்தவள் 
மறைமுகப் பாடஞ் சொன்ன 
சமூக அவலங்களைக் கொளுத்துங்கள் 
பால்விழைவு வெறியாகியினியும் வேட்டைகள் தொடராமல் இருக்க வெட்டியே போடுங்கள் 

  வன்கொடுமை செய்தால் வாலிப முருக்கை 
முடங்கிப் போகச் செய்தல் வேண்டும் செய்வீர்களா ?
தீர்ப்பு இலகுவானால்  தீக்காமம் இன்னும் இரையாக்கி 
எத்தனை சிதைகளை மூட்டுமோ .....

என்று சமூகத்தின் பால் இருக்கும் கோபத்தைக் கக்குவது சில இடங்களில் தெரிகிறது .

இன்னும் சில வரிகள் .....

 நண்பா
 தேவதை என்றழைக்கும் வரையே தேவதைகள் தேவதைகள் 

பறவை மொழி .....என்ற தலைப்பில் ஒரு கவிதை ...

மனிதர்களின் அளவுகோல் கொண்டு இப்பறவைகளை அளக்காதீர்கள் அவற்றின் மொழி உங்களுக்கு
அறவே  தெரிவதில்லை 

எப்போதும் அப்பறவையின் காதல் பழங்களின் மீது அல்ல
 வேர்களில் இருப்பதினாலே
 விதைத்துப் போகிறது
தன் எச்சத்தால் 
பல்லாயிரம் பழமரம்

 ஒரு பறவையின் இருப்பானது 
பறத்தலன்றி பலவும் உண்டு 

பிஞ்சு நடையின்னும் பயிலா 
கொஞ்சு மழலையின் அரையாடையென அநியாய விலையோடு அடித் தொடையில் 
படுகின்ற சிவந்த கோடுகளைப் பதித்த நாப்கின் எனும் நவீனம் 
தாய்மை தொலைந்த புது யுகத்தைக் காணும்  
எம் கண்கள் வலிக்கையில்.....

 காலமெல்லாம் புதைந்து காத்திருக்கும் சிறு குளங்கள் உடையோடு ஒட்டி உறவாடி வைரமாக வைராக்கியம் கொண்டு ....என்று தொடங்கும் ஒரு கவிதை இறுதியில் ..... இப்படி முடிகிறது 

எந்த இலக்கும் இன்றி வந்து கலக்கும் ஒரு  வான்துளியில்
வாழ்வின் நீளம் உணர்கிறது 
தன் ஆழ்கடல் இலக்கின் 
எல்லைகள் வெளிச்சம் பெற இத்துனையும் கடந்தாகத்தான் வேண்டுமென 
கனத்த மனதோடு விடைபெற்று விரைந்தோடி 
அவ்வோடை நதியாகி நகர்கின்றது ...

  ஹைக்கூ கவிதை போல ஏராளமான கவிதைகளை தொடர்ந்து பல பக்கங்களில்  தருகிறார் ....

 இல்லப்  பா சொல்லு  டா 
ஓரெழுத்து கவியில் தான் 
வழுக்கி விழுகிறோம்.....

 உன் பெயர் சொல்லி 
நான் வளர்த்த ரோஜா செடி 
உன்னை போலவேதான் சிரிக்கின்றது ஒவ்வொரு பூக்களிலும் 
உனக்கு முட்கள் தவிர 
வேறொன்றும் தெரிவதில்லை.....

ஓர் ஈர நாளில்
தின்னக் கிடைத்த
சுடு சோளத்திடம்
எங்கே விளைந்தாய்
உன்னைச் சுட்டது யார்
என்றெல்லாம் நான் 
கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன் 
நீங்கள் ?

நம்மை அறியாமல் உதடுகளைப் பிரித்து 
ரசித்து சிரிக்க வைத்த வரிகள் ....

கவிஞர் தன் மனதில் உள்ளன யாவற்றையும் கவிதை வரிகளாக வெளிக் கொண்டு வர முயற்சித்து வெற்றியும் பெற்றுள்ளார்.தமிழின் மீது ஆர்வமும் சொற்களின் மீது காதலும் கொண்ட கவிஞராகத் தெரிகிறார். இயல்பான உணர்வுகளை அவை வெளிப்படும் போதே  கவிதைகளாகப் படைத்து விட்டு நகர்கிறார். பறவைகள் , மாமரம் , பெண்கள் , ஆண்கள் , அன்பு , ஏக்கம் , காதல் , காமம் , அலைபேசி என இவரது கவிதைகளின் கருப் பொருட்கள் அன்றாடங்களின் பேசு பொருளாகவே இருப்பதால் நம்மால் லயித்து வாசிக்க முடிகிறது . இன்னும் வரும் காலங்களில்  கூடுதல் மெருகேறிய  கவிதைகளைப் படைக்க வாழ்த்துகள் அன்புத் தோழி ஜெயஸ்ரீ .


வாசிப்பை நேசிப்போம் குழுவிற்கு நன்றி 

இந்தப் புத்தகம் என்னை வந்தடைந்தது ஒரு சுவாரசியமான  அனுபவம் என்று சொல்லலாம் .இது என் கைகளில் கிடைத்து  மூன்று மாதங்கள் முடிவடைந்துவிட்டன. எப்போதுமே ஒரு புத்தகத்தை   நம் மீது அன்பு வைத்து அனுப்பினார்கள் என்றால் நான் உடனே வாசித்து அது குறித்து எழுதுவது வழக்கம் ஆனால் என்னுடைய சூழல் இந்த புத்தகத்தை நான் தொடர்ந்து வாசிக்க இயலாமல் காலம் தாழ்த்திக் கொண்டே போனேன் ஒரு காலகட்டத்தில் இந்த புத்தகத்தை நான் வேறு ஒரு ஊரில் விட்டு வந்து தொலைத்து விட்டதாக எண்ணி  திரும்பவும் தகவல் கிடைத்து   தபாலில் அனுப்பக்  கூறி அதன் பிறகு வாசித்தேன். 

எதற்காக சொல்கிறேன் என்றால் மிகவும் சுவாரசியமான அனுபவம் இந்த புத்தகத்தை நான் வாசித்து எழுதுவது என்பது .அவருடைய அன்பு கலந்த ஒரு பரிசாக இதை எனக்கு அவராகவே என்னை தேடி எனது விலாசம்  கேட்டு எனக்கு அனுப்பி வைத்தார்  ஜெயஸ்ரீ.
வாசிப்பை நேசிப்போம் குழுவில் என்னை அறிந்ததாகக் கூறி   முகவரி கேட்டாங்க ....ரொம்ப அழகான ஒரு கடிதமும் எனக்கு இதோடு வைத்து அனுப்பியிருந்தார்  


No comments:

Post a Comment