Sunday 10 October 2021

என்னுயிர் நீயன்றோ

என்னுயிர் நீயன்றோ 

பதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம்
விலை : ரூ .150

கவிதை நூலின் ஆசிரியர் : 
 அன்புடன் ஆனந்தி. . Anbudan Ananthi 

தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க வாழ் கவிஞர் . இவரது தமிழ் ஆர்வம் அளப்பரியது என்பதை இவரது நூலுக்கு அணிந்துரை வழங்கிய அனைவரும்  வேறு வேறு கோணத்தில் பதிவு செய்துள்ளதிலிருந்து அறிந்து கொள்ளலாம். . தாய் நாட்டை விட்டு வெகுதூரத்தில் வாழ்ந்து வந்தாலும் தமிழ் மொழியை இவர் நேசிக்கும் பாங்கை இந்நூல் ஆழமாக உணர்த்துகிறது. இவர் வெளிநாடு வாழ் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியைக் கற்பித்து வரும் பணியை பல வருடங்களாக செய்து வருகிறார்.  உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் இணைந்து இலக்கியம் வளர்க்கும்  தமிழால் இணைவோம்  உலகத் தமிழ்க் களத்தின் அமெரிக்க  ஒருங்கிணைப்பாளராக  ஊக்கமுடன் செயல்பட்டு வரும் ஆனந்தி இயல் , இசை , நாடகம் என முத்தமிழையும் குழந்தைகளிடமும் பெரியோர்களிடமும் கொண்டு சேர்க்கும் தமிழ்ப் பணிகளை செய்து வருகிறார். சமீபமாக அந்தாதிகளை தன் முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். 
இணையம் முழுக்க இவரது எழுத்துகள் மெல்லிய  மழைத் தூறல் போல விடாமல் சாரலுடன் பரவிக் கிடக்கிறது .

கவிதை நூலான என்னுயிர் நீயன்றோ - இவரது முதல் தொகுப்பு , ஆனால் பதினைந்து ஆண்டுகளாக, தான் எழுதி வந்த கவிதைகளை மிக அழகாகக் கோர்த்து நூலாக மாற்றியுள்ளார். 100 கவிதைகளிலும் சொற்களின் திரட்சிகர்ஜனை செய்கிறது. நேசத்தை காணும் இடமெல்லாம்  விதைத்து அதன் மனத்தைப் பரப்புகிறார். காதலை எல்லா இடங்களிலும் கொண்டாடும் இவர் பெரும்பாலான இடங்களில்
இயற்கையின் மீது படர விட்டு பனித்துளிகளைச் சேகரிக்கும் புல்வெளியின் ஈரம்  போல  குளிரூட்டுகிறார். 

சர்வமும் நீ .... என்ற தலைப்பில் 

நெருஞ்சி முள்ளாய் 
நிறைத்த பாரம்
நீ நெருங்கிய நொடி
உடனே தீரும் .... என்று மிக அழகாகப் பாடியுள்ளார் .

பொங்கல் குறித்தான கவிதைகள் , பெற்றோர் , நட்பு , இயற்கை , உணர்வுகள் , மனிதப் பண்புகள், நாட்டுப் பற்று , பெண்ணியம் , மரபு ,  என ஒவ்வொரு கவிதையும் உருப் பெற்று உணர்வுகளைக் கிளறி அனுபவிக்க வைத்துள்ளார். வார்த்தைகளின் கிறக்கங்களில் சுகமான நினைவுகளைத் தருகிறார் .

தேன் உண்டு களிக்கக் கண்டேன்
திறம் கண்டு கிறங்கி நின்றேன் ...

மனிதர்கள் பல விதம் என்ற தலைப்பில் ....

ஊழியம் செய்தபடி
உரிமை இழந்த படி
உறவுக்காய் ஏங்கியபடி
உண்மையாய் இருப்பர் சில பேர் ....

இவை போன்ற வரிகள் எதார்த்தத்தைப் பிரதிபலிப்பதைப் பார்க்கலாம்.

மனதின் வலிகள் என்ற தலைப்பிலான கவிதையிலும் அதே எதார்த்தம் .... 
அவை ....

இருந்தும் இல்லாததும் 
புரிந்தும் புரியாததும்
அறிந்தும் அறியாததும் போல்
அமைதியாய் நகர்கிறேன் ...

மனிதர்கள் மீதான நேசத்தை மையப் படுத்தி இவர் படைத்துள்ள கவிதைகளை வாசிக்கும் போது , வேறொரு உலகிற்கு நம்மை அவை அழைத்துச் சென்று விடுகின்றன. ஆனால் அதே உலகிற்குள் சஞ்சரிக்க ஆசை கொண்டாலும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி மீள்கிறோம். ஆனால் ஆனந்தி எப்படி எல்லாக் கவிதைகளிலும் நேசத்தின் சாயலை மிச்சம் வைக்காமல் வெளிப்படுத்தி இருக்கிறார் என்ற வினா நமக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது தான் நிஜம். 

இவரது எல்லாக் கவிதைகளிலும் சொற்களின் தொடுத்தல் வரிசையில் ஒரு ஒழுங்கு இருப்பதையும் , சொற் களஞ்சியப் பெருக்கம் தாராளமாகப் பயன்படுத்தப்படுதலையும் கவனிக்க முடிகிறது. எதுகை , மோனை இல்லாத கவிதைகளே இல்லை எனலாம் .. ஒரு ஒழுங்கு வரிசை இலக்கண விதிகளுக்குட்பட்டு சொற்களை அடுக்கியிருப்பதையும் துல்லியமாக கவனிக்க இயலுகிறது. மிக முக்கியமாக  கவனிக்கும் மற்றொரு விடயம் , கவிதைகள் நேரடியான பொருளைத் தருவதால் புரிந்து கொள்வதில் கடினம் இல்லை. 

 அன்புடன் 
உமா

No comments:

Post a Comment