Monday 24 May 2021

பின்கட்டு

பின்கட்டு - சிறுகதைத் தொகுப்பு 

ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் 
பதிப்பகம் : க்ரியா (2021)
விலை : ரூ 90
பக்கங்கள் : 70

நூலாசிரியர் : 

கசடதபற - இலக்கிய இதழை நடத்தியவர்களில் ஒருவர் ராமகிருஷ்ணன். க்ரியா பதிப்பகத்தை 1974 இல் துவங்கி கடந்த 47 ஆண்டுகளில் பல துறைகளில் பல புத்தகங்களை நேர்த்தியான தயாரிப்புகளாக வெளியிட்டது. க்ரியா வெளியீடுகளில் குறிப்பிடத்தக்கது சமீபத்தில் மூன்றாவது பதிப்பாக வெளிவந்த க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி . மொழி - அமைப்பின் நிறுவனரான ராமகிருஷ்ணனின் கூத்துப்பட்டறைக்கான பங்களிப்பும் குறிப்பிடத் தகுந்தது.

நூல் பற்றி :

1968 ஆம் ஆண்டில் வெளியான கோணல்கள் தொகுப்பில் ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதைகளும் , நடை கசடதபற இதழ்களில் வெளியான அவரது சிறுகதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதில் வெளியாகியுள்ள "அவளிடம் சொல்லப் போகிறான் ... " என்ற சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு The Tamil Story : Through the times through the tides என்ற தொகுப்பில் (2016) இடம் பெற்றுள்ளது. 
ஐந்து சிறுகதைகள் - அவளிடம் சொல்லப் போகிறான் , கோணல்கள் ,சங்கரராமின் நாட்குறிப்பு , பின்கட்டு , மழைக்காகக் காத்திருந்தவன் ஆகியன.

1968 இல் வெளிவந்த கோணல்கள் தொகுப்பின்  முன்னுரையில் ஐராவதம் ஆர். சுவாமிநாதன்  , இக்கதைகளைக் குறித்து பேசும் போது ,தமிழ்ப் பத்திரிகைகளின் தரம் அல்லது தரமின்மை என்ற பாதிப்புக்கு உள்ளாகாமல் எழுதப்பட்ட கதைகள் இவை எனக் குறிப்பிடுகிறார். 

இக்கதைகள் ஒவ்வொன்றையும் வாசிக்கும் போது , நாம் அறிந்த இந்த சமூகத்தில் பார்த்த பலரது கதைகளை நினைவுபடுத்துகிறது என்பது தான் உண்மை. பின் கட்டு என்ற கதையில் வரும்  படுக்கையில் பல வருடங்களாக நோய்வாய்ப் பட்டு கிடக்கும்  வயதான அம்மாவின் இறப்பு - அவருக்கு எல்லா சேவையும் செய்து வந்த இராஜம் , அவளது தனிமை இப்படியாக  நகரும் கதை 60 வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தாலும் இன்றும் இப்படியான மனிதர்களை நம்மால் சந்திக்க முடிகிறது. கோணல்கள் கதை மனிதர்களின் அறிவுக் கோணல்களை , மனக் கோணல்களை , சமூகத்தின் கற்பதக் கோணல்களைப் பதிவு செய்கிறது. 

இப்படியாக எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கதையிலும் புரிந்து கொள்ள முடியாத முடிச்சுகளையும் ஆசிரியர் வைத்துள்ளார். அவை வாசகர்களின் கற்பனைக்கானவை . மனிதர்களின் வாழ்க்கைச் சூழலில் ஏராளமான மாற்றங்கள் உருவாகியிருந்தாலும் அவர்களது அடிப்படை குணநலன்களிலான மதிப்பீடுகளைப் பற்றிப் பேசுவதால் பின்கட்டு தொகுப்பின் கதைகளை
இக்காலத்திற்கும் ஏற்றவையாகப் பார்க்க முடிகிறது.

No comments:

Post a Comment