Sunday 10 October 2021

நூல் :கோபல்ல கிராமம் -

நூல் :கோபல்ல கிராமம் - 

ஆசிரியர் 
கி.ராஜநாராயணன்

 மக்களின் மொழியில் கரிசல் இலக்கியம் தந்தவர் என எல்லோராலும்  பாராட்டுக்குரியவராக இருப்பதை இந்த நூலை வாசிக்கும் போது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஒரு தரிசான காட்டு நிலம் ..... பசு மாடுகள் நிறைந்த , வளமான கிராமமாக 
மாறிய ஒரு கதையை பூட்டியின் வழியாக காட்சிகளைக் கண் முன் நிறுத்தும்  ஒரு சுவையான பகுதியைக் கடந்து ,  மக்கள் இந்த பூமியை தாங்கள் வாழக்கூடிய  ஒரு
வசிப்பிடமாக உருவாக்கிய வரலாற்றைத் தாங்கி படைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.   . 

ஒரு கிராமத்தின் தோற்றம் , அங்கு வாழும் மக்களின் இயல்பு , உயிரினங்களின் அசைவு , அவர்கள் செய்யும் தொழிலின் நேர்த்தி , குடும்ப வாழ்க்கை முறை என மிகவும் இயல்பாக வரிக்கு வரி அங்கே நம்மையே வசித்த அனுபவத்தைக் கொடுத்து நகர்ந்து செல்கிறது நாவல் 

கதைகளுக்குள் கதை என்று ஒரு பொது மையத்திலிருந்து அதைச் சுற்றிச் சுற்றி கதைகள் உருவாகியும் கதைகளுக்குள் எந்த நெருடலோ முரணோ இல்லாமல் இணைப்பும் கொடுத்து ஒரு நாவல் உருவாகி அதை அந்த மக்களின் மொழியிலேயே நமக்கு அளித்துள்ளார் கி.ரா. 

ஒரு பெண்ணைக் காப்பதற்காக தங்கள் இருப்பிடத்தை விட்டு கூட்டமாக வெளியேறி தப்பித்து வேறொரு நிலத்தில் தங்கள் வாழ்க்கையை உருவாக்கி பல தலைமுறைகளுக்குப் பிறகு செழிப்பான ஊரின் வரலாற்றைக் கதையாகச் சொல்லி ஆங்காங்கே சுவை கூட்ட கதை மாந்தர்களைப் புதிது புதிதாகப் படைத்து அவர்களது செயல்பாட்டின் வழியே பயணிக்க வைத்து கோபல்ல கிராமத்தை படைத்திருக்கும் நேர்த்தி நம் மனதில் ஆழமாக ஊடுருவுகிறது.

வரலாற்றில் இடம் பெற்றுள்ள ஆங்கிலேயரின் ஆட்சி , கும்பினிகளின் மேற்பார்வை இவர்களின் துன்பங்களிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளக் கையாளும் வழிவகைகள் இப்படி ஒன்றோடு ஒன்று பிணைந்து புனைவின் வடிவத்தில் அபுனைவு படைப்பாக அறிய வைத்தது .

உமா

No comments:

Post a Comment