Sunday 10 October 2021

கடிதங்கள் பதிவுகள் சொற்சித்திரங்கள்

கடிதங்கள் பதிவுகள் சொற்சித்திரங்கள் 

ஆசிரியர் : சுந்தரபுத்தன் 
வெளியீடு : பரிதி பதிப்பகம் -
முதல் பதிப்பு : 2018
பக்கங்கள் : 474
விலை : ரூ 500

ஆசிரியர் குறிப்பு :
சுந்தரபுத்தன்  திருவாரூர் மாவட்டத்தில் கண்கொடுத்தவனிதம் என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது 24 ஆம் வயது வரை சொந்த ஊரில் வாழ்ந்த இவர் அதன் பிறகு சென்னையில் இடம் பெயர்ந்து ,   பத்திரிக்கைத் துறையில் 
தனக்கான ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் அரசி , புதிய பார்வை ,குமுதம் , விண் நாயகன், புதிய தலைமுறை கல்வி உள்ளிட்ட பல பத்திரிகைகளில்  பொறுப்பு வகித்துள்ளார். தற்போது Open Horizon இணைய இதழில் பணியாாற்றுகிறார். வண்ணங்களின் வாழ்க்கை , ஒரு கிராமமும் சில மனிதர்களும் , கிராமத்து  ஆட்டோகிராப் என பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். இவருக்கு பயணங்களில் தனியாத ஆர்வம் என்பதை இந்நூல் நமக்கு அறிவிக்கிறது.

கூடுதல் தகவல் ,இவரது தந்தை ஒளிச்செங்கோ என்ற நடராஜன் மாலைமுரசு இதழில்  பணியாற்றிய புகழ் பெற்ற நிருபர் . 

கடிதங்கள் பதிவுகள் சொற்சித்திரங்கள் 

 ஆசிரியர் வெவ்வேறு தருணங்களில் எழுதிய நான்கு புத்தகங்களின் தொகுப்பு தான் இது என பதிப்பாசிரியர் இளம்பரிதி குறிப்பிட்டுள்ளார். கற்பனை கடிதங்கள், மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு ,அழகின் வரைபடம், யானை பார்த்த சிறுவன் இவை நான்கும் இணைந்துதான் இந்த புதிய புத்தகம் உருவாகியுள்ளது.

 சுந்தரபுத்தன் தான் ரசித்ததை, பார்த்ததை , படித்ததை , உணர்ந்ததை கடிதங்களாக எழுதியுள்ளார். சொற் சித்திரங்களாக எழுதியுள்ளார் ,பதிவுகளாக குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் இணைந்து நம்மோடு ஒரு உயிர்ப்பான தருணங்களை பக்கம் தோறும் வழங்கி வருகின்றன . கடிதங்கள் என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள ஒவ்வொரு கடிதமும் மிகவும் மனதிற்கு நெருக்கமான உணர்வுகளை கொடுக்கின்றன .

எல்லோருக்கும் கடிதம் எழுதியுள்ளார் அவருடைய கிராமத்திற்கு நலந்தானா என்று கேட்டு கடிதம் எழுதியுள்ளார் நெல்சன் மண்டேலாவுக்கு எழுதியுள்ளார் அவருடைய பால்ய காலத்திற்கு எழுதியுள்ளார் அவருடைய ஆங்கில ஆசிரியருக்கு  , பில் கேட்சுக்கு , வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு , அம்மாவுக்கு ,அப்பாவுக்கு, உறவினருக்கு ,விவேகானந்தருக்கு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நிலவுக்குக் கூட ஒரு கடிதம் எழுதி இருக்கிறார், தைப் பொங்கல் கொண்டாடக் கூடிய தருணங்களுக்கு கூட கடிதம் எழுதி நமது பால்யகால உணர்வுகளை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நம்மைத் தூண்டி இருக்கிறார்.

மகாத்மா காந்தியடிகளுக்கும் ஜென்னி மார்க்ஸ் ,பெரியார், காமராசர் என்று இவரது கடிதம் பட்டியல்கள் ஏராளம் ஒவ்வொரு கடிதமும் இரண்டு பக்கங்கள் மட்டுமே கொண்டிருக்கின்றன .படிப்பதற்கு சுவாரஸ்யமாக மிகவும் ரசனையாக வெவ்வேறு தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் பாலுமகேந்திரா பாரதிராஜா என்று திரைத்துறைப் பிரபலங்களையும் இவர் விட்டு வைக்கவில்லை 

ஒவ்வொரு கடிதத்திலும் அவரது ஆழ்ந்த ஞானம் புறப்படுகிறது ஒவ்வொரு ஆளுமைகளையும் அவர் உள்வாங்கி முழுமையாக வாசித்துள்ளார் அவர் குறித்த செய்திகளை பல ஆண்டுகளாக சேகரித்து அதை சுருக்கமாக ரத்தினச் சுருக்கம் என்று சொல்வார்களே அதைப் போன்று நமக்கு ஓரிரு வார்த்தைகளில் செறிவாகக்  கொடுத்த செல்கின்றார். நாம் படிக்காத எத்தனையோ விஷயங்களை இந்த சிறுசிறு கடிதங்களின் வழியாக ஏராளமாக  சுந்தரபுத்தன் நமக்கு கொடுத்து இருப்பது  மிகவும் சிறப்பு .

அதேபோல கடிதங்களில் ஒவ்வொரு ஆளுமைகளிடமும் அவர்கள்  குறித்த விமர்சனங்களையும்  வைத்துள்ளார் மக்களின் பார்வையில் இயல்பாகவே இருக்கும் கேள்விகள் அவற்றையும் கடிதங்களில் சந்தேகம் கேட்பது போல் எழுதியவருக்கு வைத்துள்ளார்.

இயல்பாகவே இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் விளைவாக மறைந்து போயிருக்கும் கடிதம் எழுதுதல் என்ற தகவல் தொடர்பு பழக்கத்தையும் எழுதிக் கடத்திய  அந்த உணர்வுகளைம் படிப்போருக்கு ஏக்கமாகவே உருவாக்கக்கூடிய ஒரு அழகான கடிதத் தொகுப்பை இந்த நூல் நமக்கு அளிக்கின்றது.

அடுத்தபடியாக பதிவுகள் - இந்த தலைப்பில் மகிழம் பூக்கள் பூத்துக் கிடந்த வாசல் ,காட்டு மூங்கில் பாட்டுப் பாடும் புல்லாங்குழல் ஆச்சு, செக்கும் இல்லை செட்டியாரும் இல்லை இப்படி நிறைய பதிவுகளை நமக்காகக்  கொடுத்துள்ளார். இதில் ஷோபா என்றொரு தேவதை என்ற தலைப்பில் பாலுமகேந்திரா அவர்களுடனான எழுத்தை நமக்கு அப்படியே கொடுத்துள்ளார் .அதற்கான சந்திப்பு இருவருக்கும் ஏற்பட்ட உரையாடல்கள் சோபாவை குறித்து பாலு மகேந்திராவின் வெளிப்பாடு என்று எத்தனையோ சுவாரசியமான பதிவுகளாளைப்  பார்க்கலாம்  .

இவர் சந்தித்த நபர்கள், சென்ற பயணங்கள், அந்த இடங்கள் குறித்து இவருக்கு உண்டான அனுபவங்கள், பெரும்பாலும் பயணங்கள் குறித்து இந்த பதிவுகளில் வெளிப்படுகிறது. அதேபோல தன்னைச் சுற்றி இருக்கக்கூடிய மனிதர்கள், நண்பர்கள் , பத்திரிகை துறையில் திரைத்துறையில் இவரோடு பயணித்தவர்கள் இவரோடு ஒரே அறையில் சென்னை வந்த புதிதில் தங்கியவர்கள் என்று பல வாரியாக  இன்று வளர்ந்துள்ள  ஆளுமைகளை போகிற போக்கில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர்களில் பலரும் நமக்கு முகநூல் தளத்தில் அல்லது நேரடி தொடர்பில் பழக்கம் உடையவர்களாகக் கூட இருக்கிறார்கள். ரவி சுப்பிரமணியம் ,யுகபாரதி முத்துக்குமார் என்று அவர்களுடனான அந்த தருணங்கள்,  இவருக்கும் அவர்களுக்குமான நட்பு ,இவர் கடந்து வந்த பாதை, சென்னையில் சந்தித்த இடங்கள் ஒவ்வொரு பத்திரிகைத் துறையிலும் இவர் பயணிக்கும் பொழுது நடந்த அனுபவங்கள் என நீள்கின்றன 

 இவர் பயன்படுத்திய சைக்கிள் குறித்து கூட எழுதியுள்ளார். இவரது  கிராமம் சார்ந்த நிகழ்வுகள் சினிமா எப்படி இன்று நம் கைக்குள்ளாக  இருக்கிறது ஆனால் சினிமாவைத் தேடி மக்கள் சென்றார்கள் என்று அழகாகப் பதிவு செய்துள்ளார் .அதேபோல முதல் வாழ்த்து முதல் பூங்கொத்து என்று இவருடைய வாழ்க்கையில் , இவரை உயிர்ப்புடன் வைத்துள்ள அத்தனை நினைவுகளையும் பெரும்பாலும் நாம் வாசிக்கும் பொழுது நமக்கு அந்த உணர்வு ஏற்படும் வகையில் எழுதியது தான் நாம் ரசித்து வாசிப்பதற்குக் காரணம். 

உதாரணமாக ,இவர் கிராமம் குறித்து ப்ளஸ்ஸர் வந்த தேர்தல் காலம் என்று ஒரு கட்டுரையை குறிப்பிட்டுள்ளார் நாமும் நம்முடைய பழைய காலத்திற்கு சென்று விடுகிறோம் அல்லது இப்போது இருக்கக்கூடிய தேர்தல் நடவடிக்கைகள் குறித்து நமக்கு ஞாபகத்தில் வந்து போகிறது .இவ்வாறு  ஒவ்வொரு பதிவுகளை வாசிக்கும் பொழுதும் நம்முடன் தொடர்பில்  இருக்கக்கூடிய இந்த வாழ்க்கை முறையை ஒப்பிட்டு பார்க்கும் படி ஒரு சின்ன சந்தோஷம் உணர்ச்சி மகிழ்ச்சி நாமும் நமது நினைவலைகளில் சற்று நேரம் பின்னோக்கி செல்லுதல் இப்படியான உணர்வுகளை தொடர்ந்து இவருடைய பதிவுகள் தருகின்றன. 

 இறுதியாக சொற் சித்திரங்கள் இந்த தலைப்பில் இவர் உலகப் புகழ்பெற்ற பல படங்களைக் குறிப்பிட்டு அவற்றுக்கான செய்திகளையும் கொடுக்கின்றார். சில முக்கியமான படங்கள் உலக புகழ் பெற்ற படங்கள் இல்லை என்றாலும்  அவற்றைப் பதிவு செய்துள்ளார் .உதாரணமாக ,யூரோ –அமெரிக்காவின் ஹவாய் தீவில் இருக்கக்கூடிய இந்த கலைஞர் தண்ணீரிலிருந்து பெண்கள் எழுந்து வருவது போன்ற ஓவியங்களை வரைவதில் சகலகலா வல்லவர் என்று  அவர் பற்றிய குறிப்பும் அவர் வரைந்துள்ள ஓவியம் குறித்தும் தருகிறார் .

இப்படியான பதிவுகள் ஒரே ஒரு பக்கத்திலும் , மிகச் சில பதிவுகளே இரண்டு பக்கங்களையும் நிரப்புகின்றன.  மலாலா,  தலைவர்கள், புகைப்பட தினம், போர்ச்சுக்கல் படம் ,கடும் பஞ்சம் 1876 இல் இந்தியாவில் இருந்த பஞ்சத்தினால் மக்கள் எவ்வாறு பாதிப்படைந்து எலும்பும் தோலுமாக இருக்கக்கூடிய ஒரு படம் இவற்றையெல்லாம் நாம் காணும் பொழுது  நெகிழ்வாகவே உணர முடிகிறது. 

 முக்கியமான படங்கள் குறித்தும் அவற்றுக்கான செய்திகள் குறித்தும் வெறும் செய்தியாக இல்லாமல் அவை நமது மனதைத் தொடும் படி மிகவும் ரசித்து உள்வாங்கும்படி சொற் சித்திரங்கள் என்ற பகுதியில் தொகுத்துள்ளார் .தெருவென்று எதனைச் சொல்வீர் - என்ற ஒரு தலைப்பில் குழந்தைகளின் உலகமாக இருந்தது தெரு தான் , முதன்முதலில் உலகம் தெருவாகத்தான் குழந்தைகளுக்கு தெரிய வந்தது என்று ஒரு ஒரு பதிவு இருக்கின்றது. இப்படி மிகக் குறிப்பிட்ட ஒருசில படங்களுக்கான பதிவுகள் நம்மை சற்று நிதானித்து ஆழ வாசிக்க வைக்கின்றன. இதில் ஒரு இனம்புரியாத சுவாரசியத்தை தருகிறார் என்று சொல்லலாம். ஜோமல்லூரி குறித்து ஒரு பதிவு அவருடைய படத்துடன் அவருடனான நட்பு குறித்து எழுதி இருக்கின்றார் இப்படி ஒவ்வொரு சொற் சித்திரங்கள் தலைப்பிலும் வேறு வேறு தலைப்புகளில் பன்முகத்தன்மையான பதிவுகளை கொடுத்துள்ளார்.

 சமூக ஊடகங்களின் பெருக்கம் கண்டது கேட்டது பார்த்தது என அனைத்தையும் யாரும் எழுதும் வாய்ப்பை திறந்துவிட்டிருக்கிறது அதில் சிலர் எழுதுவதைத் தான் நம்மால் குறிப்பிட்டுச் சொல்ல முடிகிறது ரசிக்கவும் முடிகிறது இயற்கையை பற்றிய சமூக நிகழ்வுகளைப் பற்றிய அந்த நபரை பற்றிய எதுவாக இருந்தாலும் அதற்குள் அவர்கள் கரைந்து நம்மை அழைத்துச் சென்று விடுகிறார்கள் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சுந்தரபுத்தன் என்று  வ.மணிமாறன் ஊடகவியலாளர் தனது கருத்தை இங்கு பதிவு செய்கிறார். அதை நாமும் ஏற்போம் .

பல துறை வல்லுனர்களைக் குறித்து நிறைய செய்திகளை அவை   வெறும் செய்தியாக அல்லாமல் ஒரு  அற்புதமான உணர்வுடன் அறிந்து கொள்ளக்கூடிய ஒரு தொகுப்பாக இந்த கடிதங்கள் பதிவுகள் சொற் சித்திரங்கள் அமைந்திருக்கின்றது பாராட்டுக்கள் சுந்தரபுத்தன் அவர்களுக்கு .இனிவரும் காலங்களிலும் இதே போல அவருடைய ஆழ்மனதில் இருந்து உணர்வுகளுடன் கற்பனை வளத்துடன் , மனிதர்களை வாசிப்பதன் நோக்கத்துடன் கூடிய பதிவுகளை தொடர்ந்து தருமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம். சிறப்பான நூல். 

உமா

No comments:

Post a Comment