Tuesday 25 May 2021

சபாஷ் பார்வதி

சபாஷ் பார்வதி ....
ஆசிரியர் : எஸ்.வி.வி. 
கிண்டில் பதிப்பு .

ஆசிரியர் குறிப்பு : இணையத்திலிருந்து 

தமிழில் நல்ல நாவலாசிரியர் வரிசையில் எஸ்.வி.வி. இடம் பெற்றிருக்க வேண்டும் என க.நா.சுப்பிரமணியம் அவர்களும் , தமிழின் பழங்கால நகைச்சுவை எழுத்தாளர் என  ஜெயமோகன் அவர்களும் பாராட்டிய  எஸ்.வி.வி: இந்த நூற்றாண்டின் முதற்பாதியில் தமிழுக்கு அணி செய்த பல சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1934-க்கு முன்பு திருவண்ணாமலையில் வக்கீல் தொழில் செய்து கொண்டே ஆங்கிலத்தில் சிறந்த நகைச்சுவைக் கட்டுரைகளையும், ஹாஸ்ய சொற்சித்திரங்களையும் "ஹிந்து' பத்திரிகையில் எழுதி வந்தார். அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்த திரு. கல்கி, அதிபர் திரு. வாசன் ஓரிரவு திருவண்ணாமலைக்கே போய் எஸ்.வி.வி.யை சந்தித்து, தமிழிலும் விகடனுக் காக எழுதும்படி கேட்டுக்கொண்டார்கள். அது முதல் தமிழில் 1933-லிருந்து 1950 வரை எஸ்.வி.வி. மிக உயர்தரமான நகைச்சுவைக் கதைகள், ஹாஸ்ய சித்திரங்கள், நாவல்கள், நெடுங்கதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய நகைச்சுவை பல வகையானது. இலேசான புன்னகையை வரவழைக்கக் கூடியவை. Satire என்ற கேலிச்சித்திரங்கள், குபீரென்று வெடிக்கும் ஹாஸ்யம் இப்படி பலவகை. தமிழில் நகைச் சுவை நூல்கள் மிகவும் குறைவு. அந்தக் குறையை நிறைவு செய்ய அவருடைய நூல்கள் பெரிதும் உதவுகின்றன. எஸ்.வி.வி.யின் சிறுகதைகளையோ அல்லது நாவல்களையோ படிக்கையில், நாம் ஒரு கதை படிக்கிறோம் என்ற பிரக்ஞை மறந்து போய் ஒரு நெருங்கிய ஹாஸ்ய உணர்வு நிறைந்த பெரியவரிடம் பேசிக் கொண்டிருப்பதாகத் தோன்ற வைத்துவிடும். இந்த எழுத்து தற்கால வாசகர்கள் படித்து ரசிக்க வேண்டிய எழுத்து.

நூல் குறித்து 

இதில் 3 நீள் கதைகள் இருக்கின்றன. முதல் கதை தான் சபாஷ் பார்வதி , அடுத்து கைமேல் பலன் , இறுதியாக சரோஜா . 

ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன்பிருந்த சமூகச் சூழலில் பெண்களைத் திருமணம் செய்து தருவதில் உள்ள பொருளாதாரச் சிக்கலும் அதன் நீட்சியாக கணவன் வீட்டில் மாமியார் , நாத்தனார் இவர்களின் அதிகாரத் தொனி , வஞ்சகம்  , வீட்டை விட்டு விரட்டுதல் என கதை உள்ளதை உள்ளபடியே படம் பிடிக்கிறது. தங்க வளையல்களுக்காகவும் ஒட்டியானத்துக்காகவும் சாதாரண அரசு குமாஸ்தா வேலையிலிருக்கும் அப்பாவின் வீட்டிற்கு வந்த பார்வதி , தன் கணவன் வீட்டாரால் புறக்கணிக்கப்படுவதும் அதிலிருந்து மீண்டு மருமகளாக தனது உரிமையை நிலைநாட்டுவதும் தான் கதை. கணவனாக வரும் சபேசன் தன் அம்மாவின் நன்மதிப்பைப் பெறுவதன் பொருட்டு , கட்டிக் கொண்டு வந்தவளை வார்த்தைகளால் படுத்தும் பாடு இருக்கிறதே . மாமியாராக வரும் அவயாம்பாள் கணவனை இழந்து உறவுகள் யாரையும் குடும்பத்துடன் சேர்க்காது தனது மகளான அபிதத்தைத் தன்னுடனேயே வைத்து வாழ்ந்து வருபவர்.  ,தன் மானத்தை இழந்த பார்வதி எப்படி ரிவன்ஜ் எடுக்கிறாள் என்பது தான் கதை. வாசித்துப் பார்த்தால் சுவை புரியும். 

அதே போல சரோஜா கதையில் கட்டுப்பாடான தந்தையால் வளர்க்கப்படும்  குழந்தைகள் செய்யும் தவறுகள் , பணம் கடன் வாங்கிய கதை , நட்பின் போர்வையில் பணத்தைக் கடன் கொடுத்து விட்டவன் பொய்ப் புரோநோட் எழுதுதல் இறுதியில் விஷயம் வெளிவருவது ,தந்தையே அப்பிரச்சனையைத் தீர்ப்பது எனக்  கதை முடிகிறது. அம்மா தங்கம் , அப்பா சாரங்கபாணி , சகோதரன் பட்டண்ணா ,  நண்பர்களாக வரும் பூவராகவன் , கண்ணன் ஆகிய  அனைவரது சம்பாஷனைகளும் அந்தக் கால பேச்சு வழக்கில் வாசிக்க நன்றாக இருக்கிறது. 

கை மேல் பலன் , மாமனார் வீட்டில் தங்கி சிகிச்சைப் பெற்று வரும்  உடல் நலமில்லாத மனைவி பாமாவைப் பார்க்க போவதற்காக ராமரத்னம் அலுவலகத்தில்
விடுப்பு கேட்டு , டெப்டி கலெக்டர்  அனுமதி  தராததால் ஏற்படும் மன அழுத்தம் ,விடுப்பு தர மறுத்த அதிகாரியின் மனைவி படுக்கையில் விழ , திருப்பதி வெங்கடாஜலபதி வழியே எப்படித் தீர்கிறது என்பது தான் கதை. 

மூன்று கதைகளுமே சுவாரஸ்யமாக நகருகிறது. சபாஷ் பார்வதி மிகவும் நன்றாக இருக்கி Mது.

வாசித்துப் பாருங்கள்.

No comments:

Post a Comment