Saturday 22 May 2021

வெட்கமறியாத ஆசைகள்

வெட்கமறியாத ஆசைகள் 

ஆசிரியர் : சிவஷங்கர் ஜெகதீசன் 

பக்கம்.. 120
விலை ரூ 160
அட்டைப்பட வடிவமைப்பையும் நூலாசிரியரே செய்திருப்பது சிறப்பு. 

எல்லா சாதனைகளின் தொடக்கப் புள்ளியும் ஆசை என்ற நெப்போலியன் ஹில் வரிகளுடன் புத்தகம் ஆரம்பிக்கிறது. 
இது ஒரு சிறுகதைத் தொகுப்பு . மொத்தம் 11 சிறுகதைகள். 

மனிதர்களின் வாழ்க்கை ஆசைகளாலே கட்டமைக்கப்பட்டது என்பதை நன்கு அறிவோம் .அந்த ஒற்றைப் புள்ளியை வைத்து எதார்த்தமான சமூகத்தின் மனிதர்களது வாழ்க்கையில் நிகழும் அன்றாட நிகழ்வுகளை சிறு கதைகளாக மாற்றியுள்ளார் ஆசிரியர் . 

பெரும்பாலும் அனைத்து கதைகளுமே  சற்றேறக்குறைய ஒரு கருத்தை இறுதியில் சொல்வதாக அமைகிறது. அதாவது கதைக்கு ஒரு முடிவு தருவது போல , கதைகள் வாசிப்பவருக்கு ஒரு நீதியை மனதில் நிறுத்துவது போல  முயற்சித்திருக்கிறார். 

அனைத்து சிறுகதைகளும் இன்றைக்கு டிரென்ட் எனக் கூறுவோமே அங்கிருந்து ஆரம்பித்து எழுதப்பட்டுள்ளது. முகநூல் , வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் , டிவிட்டர் என அனைத்தும் பெரும் பங்கு வகிக்கின்றன. மொழியும் பேச்சு வழக்கில் தான் இருக்கிறது. ஆனால் ஆங்கில வார்த்தைகளின் கலப்பு சற்று அடர்த்தியாகவே  பயணிக்கிறது. மற்றபடி சில கதைகளுக்கு தரவுகளைத் தேடி தகவல்களாகக் கொடுக்க முயற்சித்துள்ளார். 

முதல் கதையின் தலைப்பு தான் புத்தகத் தலைப்பான வெட்கமறியாத ஆசைகள் .இதில் வரும் கதாபாத்திரமான ஸ்வேதாவின் ஆசைகள் அவளது வாழ்க்கையை அர்த்தமற்றதாக மாற்றி விடுகிறது. தற்கொலை செய்து கொள்கிறாள். இங்கு ஆசிரியருடன் முரண்படுகிறேன். பெண்களை போகப் பொருளாக சித்தரித்து அவளது ஆசை எதிர்மறை முடிவதைத் தருவதை இயல்பாகவே நான் வரவேற்கவில்லை. 

த்ரில் - இது பைக் ரேஸ் ,எளிய குடும்பத்து பையன் அதிக விலை கொடுத்து இரு சக்கர வாகனம் வாங்கி தனது விபரீத ஆசையால் உயிரிழப்பது. 

நூதனத் திருட்டு - நகரங்களின் பெட்ரோல் பங்குகளின் ஏமாற்று வேலை - இறுதியில் வேலையிழப்பது. 

ஜே.ஃஎப்.சி -KFC இன் சிறு மாற்று. உடல் நலத்திற்கு கேடான உணவுகளைத் தவிர்க்கச் சொல்வது. 

நேரக் கடத்தி : இதுவும் இணைய வழிக் கற்றல் – பெற்றோரை ஏமாற்றி வீடியோ கேம் விளையாடி  பணத்தை இழப்பது.

நிராசை :- தி கிரிக்கெட்டர் திரைப்படத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது. . ஆனால் கதையில் நாயகன் தற்கொலை செய்து கொள்கிறான். 

ஏளனம் : உழைப்பால் உயர்ந்து பேராசையால் பெரும்  தவறிழைத்து  வீதிக்கு வந்து விடும் நபரின்  கதை .

சிம்னி அன்ட் ஹாப் : இந்தக் கதை சற்று வித்யாசமாக நேர்மறை முடிவைத் தந்துள்ளது. ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் பொருளாதார அடிப்படை இறுதியில் கணவன் மனைவி விரும்பிய சிம்னியை வாங்கித் தந்து மனைவியின் ஆசை நிறைவேறுகிறது. 

விபரீத ராஜ யோகம் : இதிலும் ஒரு சோம்பேறி , குடித்து ஏமாற்றி வாழ்க்கையில் தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு இறுதியில் மரணத்தைத் தழுவுகிறான் .

ஸ்டைரீன் : கொரோனா செய்திகளால் ஏற்கனவே கடுப்பாகியிருக்கோம். இங்கும் அதே இறப்பு புள்ளி விபரங்கள். ஸ்கூப்பியை இறக்கச் செய்த கதை. 

உப்பரிகை : இதிலும் கொரோனா லாக் டவுன் , ஆனால் மகிழ்ச்சியான முடிவு . இளம் காதலர்கள் ..

மேற்சொன்ன பதினோரு கதைகளும் கடந்த சில மாதங்களில் ஊடகங்களில் செய்திகளாக வந்து  தொலைக் காட்சியில் விவாதங்களாக நிகழ்ந்த நேரடி அனுபவங்களாகப் பதிவாகி சிறுகதைகளாக மாறியிருக்கிறது. என எண்ணுகிறேன்.. ஏனெனில் இவற்றில் வரும் எல்லா கதைகளின் கதாபாத்திரங்களையும் நாம் ஒரு முறையாவது சந்தித்து இருப்போம் . மொத்தத்தில் மனிதர்கள் ஆசையே படக் கூடாதா என்ற சந்தேகத்தை உருவாக்கும் ஆசிரியர் , இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கதைகளைப் போல தரமற்ற ஆசைகளை விலக்க ஒரு விழிப்புணர்வு நூலாக இதைத் தந்துள்ளார் என எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி இனி வரும் காலங்களில் நேர்மறைக் கதைகளைப் படைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment