Sunday 10 October 2021

யாத்ரீகனின் பாதை

#பயணங்கள்

யாத்ரீகனின் பாதை 
ஒளிப்பட பயணக் கதைகள் 

பதிப்பு : முதல் பதிப்பு 2020
வெளியிடு : தன்னறம் நூல் வெளி
விலை: ரூ 500 

ஆசிரியர் : வினோத் பாலுச்சாமி 

இவர் மதுரை காரியாபட்டி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது திருவண்ணாமலையில் வசித்து வருகிறார். தனது கல்வியை முடித்து பலவிதமான நகரங்கள் வேறுபட்ட நிறுவனங்களில் பணி புரிந்துள்ளார். தற்போது " யா" என்ற ஸ்டூடியோ வைத்து குழந்தைகளுக்கான ஊசித் துளை கேமிரா பயில் முகாம்களை நடத்தி வருகிறார். ஒரு புகைப்படக் கலைஞராக பயணியாக வாழ்கிறார். 

யாத்ரீகனின் பாதை 

ஒவ்வொரு புத்தகமும் நம்முடன் ஒவ்வொரு விதமாக உரையாடும். ஆனால் இந்த புத்தகமோ நெடுந்தூரம் பயணிக்க வைத்து  நம் மெளனத்தை ஆழமாக்குகிறது. 

 தன்னை ஒரு  தேர்ந்த பயணியாக்கி சமூகத்தின்  தொலைவுகளை  ஒளிப்படங்களாக மாற்றி அப்பயணத்தை உயிரோட்டமாக சிறந்த தொகுப்பாக வழங்கி இருக்கிறார் நூலாசிரியர் .

இப்புத்தகம்  ஒரு மனிதரின் வாழ்க்கைப் பயணத்தையும் பயணத்தின் மைல்கல்களையும் எழுத்துகளாலும் ஒளிப்படங்களாலும் நிறைத்து நம் கைகளில் கிடைத்திருக்கிறது. நூலாசிரியர் தனது கனவுகளைப் பயணங்களின் வழியே சாத்தியமாக்கி நமக்கு பல பரிமாணங்களை தனது எழுத்தின் வழியே தந்துள்ளது சிறப்பான செயல். 

புத்தகத்தின் அட்டைப் படமும் வடிவமைப்பும்   மனதை நெகிழ வைக்கும் வண்ணங்களும் நம்மை மெதுவாகப் பக்கங்களைப் புரட்ட வைக்கின்றன.  ஒரு யாத்ரீகனாக இந்த சமூகத்தை அங்கு வாழும் எளிய மனிதர்களை அவர்களது வாழ்வியலை , அன்றாடம் அவர்கள் சந்திக்கும்  பிரச்சனைகளை நமக்கு அடையாளப்படுத்தியிருப்பது தான்  மிகச் சிறப்பாக  அமைந்துள்ளது எனலாம்.

தனது இளமைக் காலம் , படிப்பு , வேலைகள் என நினைவுபடுத்திய பிறகு தனது கனவுகளை நிஜமாக்க எவ்வாறு பயணித்தார் என்பதே இங்கு நாம் அறிந்து கொள்ளும் செய்தி ஒவ்வொரு சூழலையும் கடந்து தனது பயணத்தை எங்ஙனம் சுய தேடலுக்கான ஆதாரமாகத் தருவித்துக் கொண்டு பல்வேறு அனுபவங்களைப் பெற்று அதை மிக அழகிய புத்தகமாக மாற்றியுள்ளார் என்பதை நாம் கூர்நோக்குதல் இன்றியமையாதது. 

நண்பன் திரைப் Uடத்தில் தனது பிடித்தமான பணி புகைப்படங்கள் எடுப்பது என ஸ்ரீகாந்த் தனது ஆசையை வெளிப்படுத்த நண்பன் விஜய் அது வளர்ந்து மலர்வதற்கு துணை நிற்பது பார்த்து இதெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம் என நாம் எண்ணும் போது , இல்லை இல்லை நிஜ வாழ்க்கையில் இப்படியான வெற்றியாளர்கள் உள்ளனர் என்பதை  வினோத் அவர்களை புகைப்படங்கள் எடுக்க ஊக்கப்படுத்திய நண்பர்கள் , சூழல்களை அறிமுகப்படுத்துகின்றது சில பக்கங்களில் இப்புத்தகம் . 

கடல்களில் கரையோரம் ஒதுங்கும் ஆமைகளின் வாழ்க்கை முதல் 
மலைவாழ் மக்களின் பிரச்சனைகள் வாழ்க்கை முறை வரை பயணித்து அவற்றை ஒளிப்படமாக்கி , எல்லாவற்றையும் தொகுத்து புத்தகமாக்கியிருப்பது வரவேற்கத் தக்கது. 

பயணங்களால், தான் பெற்ற நல் மனிதர்கள் , நட்புகள் , உடல் நலக் குறைபாடுகள் மீட்டெடுத்த உறவுகள் என ஒரு மனிதரின் வாழ்க்கைச் சுழற்சியையும் பயணமாக , படங்களாக , அற்புதமான நினைவுகளாகப் பகிர்ந்துள்ளார் வினோத் .

அவரது பாதை விரிந்து பயணம் மலை உச்சியை அடைவது போல மிகப் பெரிய புகைப்படக் கண்காட்சியில் கலந்து கொண்ட அனுபவங்கள் , அங்கு வாழ்நாள் நண்பர்களாக மாறிப் போன சக படைப்பாளர்கள் என நிறைய பயண அனுபவங்களைச் சித்தரிக்கிறது புத்தகம் . இப்படியான வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை . வினோத் அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. என்றால் அது அவரது பேறு .இறுதிப் பகுதியில் நமது கதை சொல்லி குமார் ஷாவும் வருகிறார் .இவரது வாழ்வும் இப்படித் தான் ... பேறு பெற்றவர்கள். 

நீலாங்கரை கடற்கரை இரவுகளையும் ஒரிசா கடற்கரை இரவுகளையும் ஆமைகளுடனான பயணத்தில் ஒளிப்படமாக்கி நம்மை ரசிக்க வைக்கிறார். ரயில் பயணத்தில் மனிதர்களைப் படம் பிடிப்பதோடு அவர்களது மனதையும் படித்து படமாக்கி எழுத்தாக்கியிருப்பது என நம்மை புத்தகம் முழுக்க நெகிழ வைப்பது இங்கு சொல்லப் பட வேண்டிய ஒன்று. 

அதே போல ஒவ்வொரு அத்யாயங்களின் தலைப்புகளும் கூட நம்மை சற்று நிதானித்து நம்மை அறியாமல் புன்னகையுடன் முறுவலிக்கச் செய்த பிறகு தான் வாசிக்கவும் வைக்கின்றன. 

ஏழு வருடங்கள் இடைவெளியில் ஆதிவாசி மக்களை  இரு முறைகள் சந்திக்கச் சென்றது ,அப்போது அவர்களுக்கும் தனக்குமான நட்புறவு  எவ்வகையில் பரிணமித்தது என்று பயணமாக விளக்கி படங்களுடன் தந்திருப்பது என நாம் வாசிக்க வாசிக்க இனிக்கிறது. 

தாய்லாந்தின் அனுபவம் அங்கோர் வாட் புகைப்படப் பயிற்சிப் பட்டறையில் பெற்ற அனுபவங்கள் என ஆசிரியர் தனது பயண நூலை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் பொறுமையாகவும் பொருளுள்ளதாகவும் நமக்காக அளித்திருக்கிறார். 

ஒவ்வொரு சொல்லும் நம்முடன் கவனமாக உரையாடுகின்றன . புனைவுகளை விட உண்மைகளுக்கு ஒரு ஆற்றலும் பிரகாசமும் சற்று கூடுதலாக இருக்கும் என்பதை இப்புத்தகம் உண்மையாக்குகிறது. புத்தகத்தின் பயணக் கதையில் இடம் பெற்றுள்ள  ஒவ்வொரு புகைப்படமும் நம்மை ஏதோ செய்து விடுகிறது.  மீண்டும் சொல்கிறேன். எல்லோருக்கும் இப்படியான வாழ்க்கைக் கிடைத்து விடுவதில்லை. வாழ்க்கையின் சில அரிய சுவாரஸ்யங்களை நுகர விரும்பும் எல்லோரும்  கட்டாயமாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது. 

சுதந்திரப் பறவையாக வாழும் வினோத் தனது எதிர் வரும் பயணங்களையும் மற்றவர்க்கு தரும் படியும் ஆவணங்களாக மாற்றிட அன்பு வாழ்த்துகள் 

உமா .

No comments:

Post a Comment