Showing posts with label வாசிப்பு செயல்வழி கணிதம் வியக்கவைக்கும் -கதைகளும் செயல்பாடுகளும். Show all posts
Showing posts with label வாசிப்பு செயல்வழி கணிதம் வியக்கவைக்கும் -கதைகளும் செயல்பாடுகளும். Show all posts

Sunday, 10 October 2021

செயல்வழி கணிதம் வியக்கவைக்கும் -கதைகளும் செயல்பாடுகளும்

செயல்வழி கணிதம் வியக்கவைக்கும் -
கதைகளும் செயல்பாடுகளும் 

 நூலாசிரியர் :அரவிந்த் குப்தா  
வரைகலை :ரேஷ்மா பார்வா
தமிழில் : மோகனப்பிரியா 
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு : ஏப்ரல் 2021
பக்கங்கள் :58
விலை : ரூ 70

 இந்தப் புத்தகத்தைக் பார்க்கும் பொழுது உங்களுக்கு மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். கணிதம் என்று பார்த்த உடனேயே இது குழந்தைகளுக்கானது , பள்ளியுடன் மட்டும் சம்மந்தப்பட்டது  என்று நினைக்கத் தேவையில்லை .
அவற்றைத் தாண்டி பெரியவர்கள் வரை  தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள சிந்திக்க வைக்கக்கூடிய பல்வேறு விஷயங்கள் இடம் பெற்றுள்ளன

 அரவிந்த் குப்தா: 1975 ஆம் ஆண்டு இந்திய தொழில்நுட்ப கழகம் கான்பூரில் மின் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். அறிவியல் செயல்பாடுகள் குறித்து இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் 150 புத்தகங்களை இந்தி மொழியில் மொழிபெயர்த்துள்ளார் மேலும் தூர்தர்ஷனில் அறிவியல் செயல்பாடுகள் பற்றி 125 குறும்படங்களை வழங்கியுள்ளார். இவரின் முதல் புத்தகமான மேட்ச் ஸ்டிக் மாடல்ஸ் அண்ட்  அதர் சயின்ஸ்  எக்ஸ்பெரிமெண்ட்ஸ்  என்ற புத்தகம் 12 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு 50 லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. இவர் இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையால் வழங்கப்பட்ட குழந்தைகளிடையே அறிவியலை பிரபலப்படுத்த தேசிய விருது 1988-ல் பெற்றுள்ளார் . இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் புகழ் பெற்ற மாணவர் விருது 2000 ஆண்டிலும் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது 2018 ஆண்டிலும் . பெற்றுள்ளார் இவர் தற்போது பூனாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான வானியல் வானியற்பியல் மையத்தில் பணிபுரிகிறார். பொம்மைகள் செய்வதிலும் அறிவியல் நூல்களை எழுதுவதிலும் ஈடுபாடு கொண்ட இவர் தனது படைப்புகளை  http:// arvindguptatoys.com
என்ற வலைத்தளத்தில் பதிவேற்றி வருகிறார்.

 ரேஷ்மா பார்வா: பூனாவிலுள்ள அபினவ் கலா மகாவித்யாலயா வில் வணிக கலை பயின்றவர் பகுதிநேர வரைகலை மற்றும் வடிவமைப்பாளரான இவர் குழந்தைகளுக்கான புத்தகங்கள் பலவற்றிற்கு விளக்கப் படங்களை வரைந்துள்ளார்

புத்தகத்தைக் குறித்து .....

 கார்ட்டூன் படங்களுடன் கூடிய கதைகளாகவும் புதிர்களாகவும் நடைமுறை வாழ்க்கையுடன் தொடர்புடைய  கணக்குப் புரிதல்களுடன் பல்வேறு செய்திகளையும் நமக்குத் தருகிறது இந்தப் புத்தகம். செயல்வழிக் கணிதம் என்று பெயருக்கு ஏற்பவே வாழ்க்கையில் செயல்களை அடிப்படையாகக் கொண்டு நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு நிகழ்விலும் கணக்கை சம்பந்தப்படுத்தி ஆங்கங்கே புதிர்களையும் கொடுத்து அதற்கான விடைகளும் கொடுத்திருக்கிறார்கள் புதிர்கள் என்பவை மிகச்சிலவே மற்றபடி காந்தியில்  ஆரம்பித்து ராமானுஜம் பாஸ்கரச்சாரியார், லீலாவதி என்று வரிசையாக கணக்கு சம்பந்தப்பட்ட மனிதர்களையும் அறிமுகப்படுத்தி வரலாறுகளையும் அறிமுகப்படுத்தி நிறைய செய்திகளை கொடுக்கின்றது இப்புத்தகத்தின் உள்ளடக்கம் .

 அரவிந்த் குப்தா ,பல்வேறு தலைப்புகளில் நம்மை பன்முக  சிந்தனைக்கு அழைத்துச் செல்கிறார்  , அவரது அறிவுக்கூர்மையும் குழந்தைகள் பால் இருக்கக்கூடிய அக்கறையும் கணக்கை எளிமையாக கற்றுக் கொடுக்க என்னவெல்லாம் ஆர்வமூட்ட செய்யலாம் என்ற சிந்தனையும் நாம் இங்கு எடுத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பொருளாக இருக்கின்றது.

ஏராளமான தலைப்புகளில் ஒவ்வொன்றையும் படங்களுடன் தந்துள்ளது வரவேற்கத்தக்கது . அட்டை வடிவமைப்பு மிகவும் பிரமாதமாக இருக்கிறது அந்த வண்ணங்களும் அட்டையில் போட்டு இருக்கக்கூடிய
வரைகலையும் நம்மை கணக்கின் பால் ஈர்க்கிறது. 

 உதாரணமாக , சதவீதம் என்று எழுதினால் அந்த தாவை  சதவீதக் குறியீடு வருவதுபோல் சிந்தித்துள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் பொழுது என்னுடைய ஆசிரியர் பயிற்சி தின நாட்கள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது அப்போது ஒப்படைப்புகள் தயார் செய்யும் பொழுது கணக்கு குறித்து நான் இவ்வாறு தான் செய்வேன் படங்களை கணக்குகளுடன் தொடர்புபடுத்தி கார்ட்டூன் படங்களை போல வரைதல் படைப்புகளின் அட்டைகளை  வடிவமைப்பு என  அவற்றை எனக்கு நினைவு படுத்துகின்றன.

 லீலாவதி செய்யுள் வடிவ கணிதம் குறித்து அறிமுகம் செய்கிறார்கள் அதேபோல கணிதமேதை ராமானுஜம் குறித்தும் .....6174 என்ற எண்  குறித்து நமக்கு செய்திகள் .... தமிழகத்தைச் சேர்ந்த கணிதத்தின் தூதுவராக பிகே ஸ்ரீனிவாசன் அவரை குறித்தான குறிப்புகள் இருக்கின்றன.

 காகித மடிப்புகளை குறித்து ஏராளமான பகுதிகள் இங்கு அறிமுகப்படுத்தப்
பட்டுள்ளன அவற்றை அடிப்படையாகக்கொண்டு கணக்கின் அடிப்படையில் செயல்பாடுகள் ,வடிவக் கணிதம் ,கோணங்கள் இவற்றை குறித்து குழந்தைகளுக்கும் அறிமுகம் செய்யலாம் பெரியவர்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் சிந்திக்கவும், புதியன படைக்கவும் செய்யக் கூடிய ஆற்றலை ஒரு நம்பிக்கையை கொடுக்கக்கூடிய புத்தகமாக பல்வேறு தலைப்புகளுடன் தரப்பட்டுள்ளது. 

 இவற்றை நாம் வெறும் புதிர்களாக கணக்குப் புதிர்கள் கொண்ட ஒரு புத்தகமாக பார்க்காமல் கணக்கை சிந்திக்க என்ன கணக்கின்பால் ஆர்வம் கொள்ள ,  கணக்கைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு புத்தகம் . முதலில் கணக்கு என்பது நம் வாழ்க்கையோடு இணைந்த ஒரு மொழியியல் . கூடுதல் சிறப்பு பக்கத்திற்கு பக்கம் படங்கள் தலைப்புக்கு ஏற்ற படங்கள் இணைத்து இருப்பதுதான் மிகவும் சுவாரசியமான ஒரு புத்தகம் . அத்தனை எளிமையாக இருக்கின்றது பக்கம் குறைவாக இருந்தாலும் எழுத்துக்கள் மிகவும் சிறியதாக இருக்கிறது இது ஒரு சின்ன சிக்கல் இன்னும் சற்று கூடுதலான அளவில் எழுத்துக்களை பெரிதாக கொடுத்திருக்கலாம் மற்றபடி ஒரு நல்ல புத்தகம் நன்றி

உமா