Sunday 23 May 2021

எசப்பாட்டு

#எசப்பாட்டு  

ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன் 
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
வெளியீடு : 2018
விலை : ரூ 190

      ஆண்களோடு பேசுவோம் என்று அட்டையிலேயே வாசகம் எழுதப்பட்டி
ருக்கும் இப்புத்தகம் , சாதாரணமாகப் படித்து விட்டு கடந்து போகும் வெறும் புத்தகமாக எனக்குத் தெரியவில்லை , பல நூற்றாண்டுகளாக இந்த சமூகத்தில் வேர் விட்டு பரந்து வியாபித்திருக்கும்  ஆண் - பெண் குறித்த கற்பிதங்களை கோடாரியால் வெட்டி எறியத் தூண்டும் வலிமை மிகு ஆயுதமாகவே நாம் பார்க்கலாம் . 

  இந்த சமூகத்தின் உண்மைகள் பலமாக முகத்தில் அறைகின்றன. பக்கத்துக்குப் பக்கம் ,வரிக்கு வரி என் வீடும் , உங்கள் வீடும் பக்கத்து எதிர்த்த வீடுகளும் தான் இருக்கின்றன. நாம் பார்க்கும் சினிமாக்கள் , நாம் பணி புரியும் அலுவலகங்கள் , நாம் கொண்டாடும் விழாக்கள் , திருமணங்கள் , குடும்ப விழா என எல்லாமே தினசரி நாம் வாழும் சமூகத்தின் பகுதியாகவே இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.

 இவற்றுள் எவ்வளவு பிழையான உண்மைகள் மெருகேறிய பூச்சு பளபளப்புகளாக மக்களது மனதில் ஆணி போட்டு மாட்டப்பட்ட சான்றிதழ்களாக ஒட்டி பிய்க்க முடியாமல் இருக்கிறது என்பதை தமிழ்ச்செல்வன் கிழி கிழி என்று கிழித்து நம் முகங்களில் விசிறி அடிக்கிறார். 

அத்தனைக்கும் ஒட்டு மொத்த குறியீடாக அட்டைப் படம் , ஹிட்லரின் உருவம் போல , அதுவும் திரும்பி நின்று உங்கள்முகத்தையே பார்க்க மாட்டோம் என்று பிடிவாதமாக மறுக்கும் , எங்கு... உடல் தளர்ந்திருந்தால் சற்று நெகிழ்ந்து போய் திரும்பிப்பார்த்து காது கொடுத்திடுவோமோ என்றெண்ணி, கைகளை விரைப்பாய் பின்னாடி கட்டிக் கொண்டு சற்றும் மனம் திறக்கவோ முகம் காட்டவோ மறுக்கும் இயல்பை   சொல்லாமல் சொல்கிறது அந்த முன் அட்டைப்படம் .

நவம்பர் 2018 இல் வெளியிடப்பட்ட இந் நூல் இந்து தமிழ் திசையின் ஞாயிறு இணைப்பிதழான பெண் - இந்து வில் 52 வாரங்களாக எழுதப்பட்டு இன்று 
எசப்பாட்டு நூலாகி நம் கைகளைப் பிடித்துக் கொண்டு , வாருங்கள் ஆண்களையும் பெண்களையும் யோசிக்க உரையாடுவோம் என்று அழைக்கிறதாகத்  தோன்றுகிறது. 

முன்னுரை போன்ற ஒரு பகுதியில் தோழர் தமிழ்ச் செல்வன் தருவது தான் நம்மைத் தொடர்ந்து வாசிக்க வைக்கிறது . ஆண் மனதோடு நீண்ட உரையாடலை நாம் நடத்த வேண்டி இருக்கிறது என்பதோடு ஆண் மனங்களால்  இந்தியா ததும்பி நிற்கிறது என்கிறார் , அதற்கு நம் வீடுகளே சாட்சி , 

ஆண்களும் பெண்களுமாகச் சேர்ந்து தான் இந்த ஆண்களுக்குச் சாதகமான ஓர் உலகத்தை வரலாற்றின் போக்கில் உருவாக்கியிருக்கிறோம் , இதை ஒரு சமத்துவ உலகமாக , நீதியான உலகமாக மாற்ற இருவரும் சேர்ந்து தான் போராட வேண்டும். நீண்ட காலம் செளகரியமாக வாழ்ந்து அனுபவித்து விட்ட ஆணுக்கு இதில் கூடுதல் பொறுப்பிருக்கிறது என்ற நிலைபாட்டில் நின்று தான் இத்தொடரைக் கொண்டு செலுத்தியிருப்பதாகக் கூறுகிறார்,  அது தான் லகானின் நுனியாகப் பிடித்து இழுத்துக் கட்ட சரியான தொடக்கமாய்  இருக்கிறது நமக்கும்.

தொடர்ந்து அம்மா , அம்மாவின் அம்மா , அப்பாவின் அம்மா , தங்கை , இணையர் , பேத்தி என தனது வீட்டிலிருந்தே இந்த எழுத்துகளுக்கான களத்தைத் தொடங்கி ,தன் தோழமைகள் , அறிவியல் இயக்கப் பெண்கள் தான் களத்தை விரிவாக்கி தனது  இந்த அலசுகிற அறிவைத் தந்துள்ளதாகப் பதிவு செய்துள்ளார்.தனது 65 வயது காலத்தில் தன் மனதின் போராட்டமான மேன்மைகளை வளர்ப்பதும் கீழ்மைகளை அகற்றுவதுமான தகுதியின் மீது நின்றே இப்புத்தகத் தொடர்களைப் பேசியிருப்பதாய்க் கூறியிருக்கிறார்  நூலாசிரியர்.

52 அத்யாயங்களும் எசப்பாட்டை சத்தமாகப் பாடியிருக்கிறது , ஆம் எசப்பாட்டை நாம் எதிர்ப்பாட்டாகத் தானே புரிந்து கொள்கிறோம் , இங்கு ஆண் பெண் என்ற எதிர் பாலர் இருவருமே என்னென்ன வகையில் சிந்திக்க , அவரவர் புரிதலில் தங்களை மாற்றிக் கொள்ள ஏதுவான சூழலை நம் சமூகம் உருவாக்க வேண்டும் என்பது தான் நம் முன்வைக்கப்படும் கருத்துகள் .

ஆணுரிமை பேச மாட்டீர்களா ? என ஆரம்பிக்கிறது முதல் அத்யாயம் , இந்தியாவைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் பண்பாட்டு நடவடிக்கைகள் அதிகரித்துள்ள இந்த நாட்களில் ,
குடும்பக் கோட்டையை பத்திரமா பாத்துக்க பெண்களையே அடையாளப் படுத்தும் சமூகத்தில் குடும்பம்  அமைதியாகவே இருக்கணுமா என்கிறார் அடுத்த பகுதியில் , ஆமாம் இப்போது தான் பெண்கள் பேச ஆரம்பித்து இருக்கிறோம் .. குழப்பம் வரட்டும் அப்போது தான் சின்ன சிந்தனையாவது ஆண் மனதின் கதவைத் தட்டும். 

குற்றம் புரிந்தவன் .. வாழ்க்கையில் நிம்மதி கொள்கிறான்  , இந்த மூன்றாம் அத்யாயம் எப்போதும் ஆண் மனம் பெண்கள் விஷயத்தில் குற்ற உணர்வை உணர்வதே இல்லை?, என்பதை வலியுறுத்திச் சொல்கிறது. இப்படி ஒவ்வொரு அத்யாயமாகப் பார்ப்பதை விட மொத்த புத்தகம் பேசுவதை யோசித்தால் ...

பெண்கள் குடும்பங்களில் சமூகத்தில் பணிபுரியும் இடத்தில் பேச வேண்டும் , அதற்கு ஆண்கள் தடை போடக் கூடாது என்பதே அடிப்படை .

அறிவியல் துறையில், வரலாற்றின் பக்கங்களில் பெண்களின் உழைப்பு  எப்படி எப்படி எல்லாம் மறைக்கப்பட்டுள்ளது என்பதையும் உலக நாடுகளில் வாழும் எல்லாப் பெண்களுக்குமாகப் பேசுகிறது. 

ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பண்பாட்டு சட்டங்களால் எப்படி வெளியேறாமல் இருக்கிறோம் இந்திய நாட்டுப் பெண்கள் ஏன் வெளிவரத் தயங்குகிறோம் என்றும் பேசுகிறது .

ஆண் கண்கள் ஏன் பெண்களை உடலாகவேப் பார்க்கப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறது , அல்லது பழகியிருக்கிறது இது திரும்பத் திரும்ப பேசப்படும் உண்மை , அதை விடுத்து சக மனுஷியாகப் பெண்ணை ஏற்றுக் கொள்ளாத சமூகம் என்ன சமூகம் ?

மனம் அடுத்தடுத்த அத்யாயங்கள் படிக்கும் போது வெம்மை அடைகிறது .இவ்வளவு கற்பிதங்களில் உழன்று கொண்டா வாழ்கிறது நம் இனம் என்று ...

குழந்தைகள் உளவியல் பெண்கள்  உளவியல் எப்படி கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இரும்புக் கம்பிக்குள் அடைபட்டு இருக்கு எனவும்  ஆண்கள் உளவியல் எப்படி எல்லாம் கரெப்ட் ஆகி நம்மை சிதைத்து புதை குழிக்குள் தள்ளி உள்ளது எனவும் சிந்திக்க வைக்கிறது. 

பாரதி ,பெரியார் , லெனின், ஆகியோரெல்லாம்  பெண்கள்  விடுதலைப் பற்றி பேசியதையும் ஆனால் இதுவரை பேசப் படாத பெண்விடுதலைக்கான எதார்த்தங்களையும் பற்றி பேசுகிறது இப்புத்தகம் .

சமையலறையில் உள்ள ஒடுக்க அரசியலை நுணுக்கமாகப் பேசும் இப்புத்தகம் அவன் வரைந்த  ஓவியமாகத் தன்னை , அவள்  எவ்வாறு குறுக்கிக் கொண்டு வாழ்ந்து விட இந்த உலகம் நிர்ப்பந்திக்கிறது என்பது பற்றியும் பேசுகிறது .

நாட்டில் 98% பெண்கள் தனக்கான வாழ்க்கை விதிக்கப்பட்டதாக விதியாக வேறு வழியில்லாமல் அப்படியே தான் வாழ்ந்து வருகின்றனர். மீதியுள்ள 2% மட்டுமே இப்புத்தகத்தில் பேசப்பட்டுள்ளது போல் சிந்திக்க ஆரம்பித்து வாழவும் ஆரம்பித்துள்ளனர் இந்த 21 ஆம் நூற்றாண்டில் என்பது தான் உண்மை.

51 ஆவது அத்யாயத்தில் தொடர்ந்து வாசிப்பதற்கான பல புத்தகங்களைக் குறிப்பிட்டுள்ளார் , தமிழில் 56 தலைப்புக்குள்ள புத்தகங்களும் ஆங்கிலத்தில் 43 தலைப்பிலான புத்தகங்களும்  பெயர் பதிப்பகம் உள்ளிட்டு குறிப்பிட்டுள்ளது மிக அற்புதம். 

52 ஆவது அத்யாயம் மிக மிக சாரமாக முக்கியமாக உள்ளது. துணி என்பதை ஒரு குறியீடாகக்கொள்ள வைக்கிறது. பெண்களின் வாயை அடைக்க பல வழிகளிலும்  இந்தத் துணி இருப்பதாகக் கூறுவது நிதர்சனம்  .

பெண் விடுதலை பற்றி வெற்றுக் குரல்களால் கோர்க்கப்பட்ட சொற்களால் திரும்பத் திரும்ப படிக்கும் நமக்கு அப்படின்னா என்ன ? ஏன் தேவை ? எதெல்லாம் அதற்குள் அடங்கும் என எதார்த்தங்களின் உண்மைகள் வழியே கற்றுக் கொடுக்கிறது  இந்த புத்தகம் .இது சமூகத்தை மாற்றும் மிகச் சிறந்த ஆயுதமாக நமது கையில் கிடைத்துள்ளது. 

சரி ,அப்போ பெண்கள் எல்லோரும் அப்பாவிகளா ?ஆண்களும் தானே பல வீடுகளில் இதே போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்ற நினைப்பும் நமக்கு வரலாம். இருவரும் சக மனிதராய் நேசித்து வாழும் வாழ்வுக்கான இடமாக மாற்றவே இருபாலரும் இந்நூலை வாசிக்க வேண்டும்  எனக் கருதுகிறேன். மிகச் சில இடங்களில் சில செய்திகள் திரும்ப வருவது போல இருந்தது எனக்கு. 

மற்றபடி எசப் பாட்டு உறங்க அல்ல , நாம் போராடுவதற்கான உத்வேகப் பாட்டு எனக் கூறி , கிடைக்கும் சந்தர்ப்பங்களில்  இது பற்றிய விவாதத்தை எடுத்துச் செல்ல வேண்டும் .

அதே போன்று 216 பக்கங்களில் ரூ 190 விலையில் ஒரு ஆய்வு நூல் நம் கைகளில் கிடைத்துள்ளதை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என எனது சக ஆண் , பெண் தோழமைகளிடம் நான் கூற விரும்புகிறேன். 

தோழமையுடன்
உமா

No comments:

Post a Comment