Friday, 29 June 2018

திருக்குறள் - 3

எனக்குப் பிடித்த திருக்குறள் - 3
______________________________

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத்
                                                  தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை "

பொறையுடைமை என்ற அதிகாரத்தில் முதல் குறள் இது.

இதற்கானப் புரிதல் எனக்கு 20 வயதிலே தான் வந்தது. நம் வாழ்வின் அன்றாடப் பிரச்சனைகள் கோபத்தாலும் மற்றவர் உடனான கருத்து முரண்பாடுகளாலுமே அதகமாக ஆரம்பித்து பின் அது பகையாக மாறி சூழலை விரும்பத்தகாத ஒன்றாக மாற்றி நம் ஆற்றலை வடித்து விடுகிறது.

ஆகவே பொறுமை என்ற ஒரு பண்பு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை எனக்கு படிப்பினை செய்யும் குறளாக இதைப் பார்க்கிறேன் நான்.

இந்த பூமியானது தன்னை என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்கிறது. கடப்பாரையால்  பிளந்தாலும் , மம்முட்டியால் வெட்டித் தோண்டினாலும் , தன்னை அணு அணுவாகச் சித்ரவதை செய்தாலும்  தன்னை என்ன செய்தாலும் எந்த வித எதிர்வினைகளையும் காட்டாமல் பொறுத்துக் கொள்ளும் இயல்பைப் பெற்றிருப்பது சிறப்பு , அது போல் ....

சிறு வயது முதல் இன்று வரை எத்தனையோ மனிதர்களால் இகழ்ந்து பேசப்பட்டிருப்போம் , புறக்கணிக்கப்பட்டு இருப்போம் , கொடுஞ் சொற்களால் புண்படுத்தப்பட்டு இருப்போம் , மாறுபட்ட கோணங்களில் விமர்சிக்கப்பட்டிருப்போம். இப்படி எது நடந்தாலும் அந்த நேரத்தைக் கடப்பதற்கானப் பொறுமையும் , மனிதர்களை பொறுத்துக் கொள்ளவும் இயல்பையும் பண்பையும் நமக்குத் தந்திருப்பது குறிப்பாக எனக்குத் தந்திருக்கிறது இக்குறள் .

நேற்று இரவு வரை இந்தக் குறளின் பொருள் என்னை வழிநடத்தியுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் .

எப்போதும் வகுப்பறைக்குள் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு மாணவர் எதிர்வினையாற்றி சரியில்லாத  நிலைகளைத் தோற்றுவிக்கும் போதும் இக்குறளையே அவர்கள் முன் வைக்கின்றேன். ஆதலால் எல்லோரும் உடனே புரிந்து கொள்ளவில்லை என்றாலும் என்னைப் போல் 20 வயதிலாவது புரிந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்வார்கள் என்பது எனது மனநிலை .

வீட்டிலும் சமூகத்திலும் இதையே பின்பற்றுவதால் மனித உறவுகள் நம்மை ஏற்றுக் கொண்டு ஒரு கட்டத்தில் புரிந்து கொள்கிறார்கள் .

உறவுகள் வலுப்பட , மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ , சிக்கல்களைக் கடந்து வர, நல்ல சூழலை உருவாக்க .......

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத்
                                                  தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை "

..... பின்பற்றுவோம் .

அன்புடன்
உமா

ஓர் மழை நாளில்

ஓர் மழை நாளில் ...

உன் வாசனை நுகர
ஒரு நொடி' ம் ' போதும்
உன் ஒற்றைச் சொல்லில்
என் ஜீவன் வாழும் ...

கடலளவின் உன் அன்புணர
உன்னோடு கதைத்தலே போதுமென இந்த
உள்ளமது மகிழ்ந்திருக்க

உயிர் வரைத் தித்திக்கும்
உருவமிலா உன் அன்பில்
உடனுறைய  வழி காட்டும்
சிந்தனைகள் ஜீவனோடே 
பயணித்திருக்க ....

நீளும் வாழ்வு இதன் நீட்சி
நீயிருக்கும் நாள் வரை
நினைவுகளோடே அசை போட ....
நிழலாகத் தொடர் வாய் என் கண்ணே ...

உமா

Friday, 22 June 2018

நட்பு வட்டம் -1

நானும் காந்தாவும்
-----------------------------

ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 3 பள்ளிகளில் தொடக்கப் பள்ளி , உயர்நிலைப் பள்ளி , மேல்நிலைப் பள்ளி என அனைத்திலும் ஒன்றாகப் படித்தோம். சில வகுப்புகளில் பிரிவு மாறி வேறு வகுப்பறையில் இருப்போம். 1981 - 1993 வரை அநேகமாக பல வருடங்கள் ஒன்றாக இருந்தோம்.

அவள் பெயர் காந்த லட்சுமி , 5 ஆம் வகுப்பு வரை படித்த பள்ளியில் பின்புறம் ஒரு சறுக்கல் பாதை இருக்கும். அதன் வழியே ஏறி காந்தா வீட்டுக்குப் போய் விடலாம் .. தினமும் காலை மாலை இன்ட்ர வல் நேரம் அவங்க வீட்டுக்குத் தான் கழிவறை பயன்படுத்த செல்வேன். ( அரசுப் பள்ளியில் அப்போது இருந்தே திறந்த வெளிக் கழிப்பறை தான். )

நியூட்ரின் சாக்லேட் மட்டுமே தெரிந்திருந்த எனக்கு .....காந்தா தான்  5 ஸ்டார் சாக்லேட் அறிமுகம் செய்து வச்சா , அவங்க பெரியம்மா கோயம்புத்தூரில் அவினாசிலிங்கம் கல்லூரியில் பேராசிரியராக இருந்தாங்க. அவங்க வரும் போதெல்லாம் 5 Star சாக்லேட் கொண்டு வருவாங்க , அதை எடுத்துட்டு ஸ்கூலுக்கு வந்துடுவா , பக்கத்துல 2 பேருக்கு ஒன்னு ஒன்னு  தருவா , எனக்கு மட்டும்  2 ,3 தருவா.
(அவ்ளோ பாசம் )

ஒரு ப்ரெளன் ஒயர்ப்பை சின்னதா வச்சு இருப்பா அதில் ஒரே புத்தகம் , நோட்டு போட்டு ட்யூஷன் வருவா , காலை 5.45க்கு எல்லாம் அவங்க வீட்டுக் கதவைத் தட்டி எழுப்பி விடுவேன் பெரும்பாலான நாட்களில் நான் தான் அவளை எழுப்புவேன் தூக்கத்திலிருந்து .. 8ஆம் வகுப்பில் அவளோட சேர்ந்து வள்ளியம்மா டீச்சர் கிட்ட டியூசன் போவேன் ...6 மணிக்கு நாங்க முதல் ஆளா இருப்போம் .

ரொம்ப நல்லா படிப்பா , எனக்கு ஆங்கிலம் பெரும் பிரச்சனையா இருக்கும் , பொறுமையா தான் மனப்பாடம் பண்ணுவேன். ஆனா காந்தா சீக்கிரம் மனப்பாடம் செய்துடுவா , ஆனா Pair Study என்னோட தான் செய்வா , பொறுமையா Handle பண்ணுவா , எப்பவாச்சும் கோபம் வந்தா  உமா .....ன்னு ,......கத்துவா ....

ரொம்ப கேஷ்வலா படிப்பா , கஷ்டப்பட்டுக்கவே மாட்டா , சிரிச்சுட்டு தான் இருப்பா , அதனாலயே எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரே ஒரு விஷயம் எனக்குப் பிடிக்காதது .....அடிக்கடி நான் அவ பக்கத்துல பேசிட்டு , படிச்சுட்டு  இருக்கும் போது , சுத்தி இருக்கவங்க கிட்ட கன்னடத்துல பேசப் போயிடுவா ... நான் ...காந்து .... தமிழ்ல  பேசு ன்னு சொல்லித் திட்டுவேன்.

அவன் சட்டைப் பாக்கெட்டில் எப்பவும் பட்டாணி வச்சிருப்பா , அதப் பார்த்து நானும் 5 பைசாக்கு பட்டாணி வாங்கி சட்டை ஜோப்பில் போட்டுக்குவேன். அப்புறம் அது 20 பைசா வரைக்கும் 7 ,8 வருஷத்தில் விலை ஏறுச்சு. எங்க கூட மருதுன்னு ஒரு பையன் படிச்சான் , அவங்க அப்பா பொரி கடைல தான் வாங்குவேன்.

எங்க இரண்டு பேருக்குமே  சுருட்டை முடி .. அது கூட சில நேரம் ஃபிரண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க. அவ தமிழ் , இங்கிலீஷ் 2 கையெழுத்தும் அழகா எழுதுவா .

ஒல்லியா நெடுநெடுன்னு வளர்ந்து இருந்ததால பெரிய க்ளாஸ் போக போக என்னை விட்டு அடுத்தடுத்த பின்னாடி பெஞ்சுக்குத் தள்ளப்பட்டாள். .ஆனாலும் எப்பவுமே நாங்க ஃபிரண்ட்ஸ் தான். அவள மாதிரியே அவங்க அப்பா , அம்மா இரண்டு பேரும் என் மேல ரொம்ப பாசமா இருப்பாங்க ,

+2 முடிச்சுட்டு இரண்டு பேருமே கோயம்புத்தூர் ல தான் படிச்சோம் , ஆனா அவ அவினாசிலிங்கம் கல்லூரியிலும் நான் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும் படித்தோம் . விடியற்காலை ஜலகையிலிருந்து கிளம்பும் பழனி செல்லும் பேருந்தில் ஈரோடு வரை செல்லும் போது எப்போதாவது பார்த்துக் கொள்வோம். அதுவும் கொஞ்ச காலத்தில் நின்று விட்டது.

அவள் BSC படித்து முடித்த உடனேயே திருமணம் செய்து விட , கடைசியா அவள கல்யாண மேடையில் தான் பார்த்தது ... அது முடிஞ்சு சரியா 23 வருஷம் ஆச்சு , மனசு எப்போதும் ஜலகை போனா , கடவீதிப் பக்கம்  போனா  காந்தாவை நினைக்கும் , அது ஒரு கனாக் காலம். 

அந்த ஒரு நெகிழ்வான தோழி காந்தலட்சுமிய தான் நேத்து ஜலகையில் சந்திக்க ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.
லவ்யூ காந்து❤️..... அப்போதெல்லாம் இப்படிப் பேசத் தெரியாது. இந்த மகிழ்ச்சி இன்னும் பல வருஷம் என்னுடன் இருக்கும் .

தொடரும்
அன்புடன்
உமா

நட்பு வட்டம் - 2

டீச்சரும் டீச்சரும் ... நானும் பர்வதமும்
                 (1982 - 2018 வரை )

இரண்டாம் கிளாஸ்ல இருந்து ஒன்னாப் படிச்சு ஆசிரியர் பயிற்சி , இளங்கலைக் கணிதம் வரை கூடவே பிரயாணம் செய்த தோழி தான் பர்வதலட்சுமி ..

அவங்கம்மா ஆசிரியரா இருந்த தொடக்கப் பள்ளியில் தான் அவளும் படித்தாள் , நானும் படித்தேன் . நான் இரண்டாம் வகுப்பில் புதுக் கண்ணகி டீச்சர் கிட்ட படிச்சேன். 

வகுப்பில் ஒரு முறை அவங்க வராததால் அந்த டீச்சர் (Substitute) வகுப்புக்குப் போனோம் , என்னோடு அப்போ மது கூட இருந்தான். அன்று பர்வத லட்சுமி தான் லீடர் , அவங்கம்மா க்ளாஸ்ல , அவங்க .. கோபத்துல ஸ்கேல் வச்சு அடிப்பாங்க , எனக்கு பயமா இருக்கும். அப்போ பர்வதம் பேசறவங்கள சொல்லி வச்சுருவா ... அதனால் அவ கூடபேசவே மாட்டேன் , இன்னொன்னு அங்க படிச்சவங்க எல்லாம் பெரும்பாலும் உள்ளூர்க்காரர்கள்  , ஒரு பகுதியை ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் இனத்தைச் சேர்ந்தவங்க அல்லது உறவுக்காரங்க. ஆனா நான் யாருக்குமே அறிமுகமில்லா புதிய குடும்பத்திலிருந்து வருபவள்.
(இது போன்ற பிரிவினைகளையும் ஆசிரியர்களாகிய நாம் கவனத்தில் கொண்டு மாணவர்களை அணுக வேண்டும் என எனக்குக் கற்றுத் தந்தது இந்த அனுபவம் தான் )

அப்படி இருக்க 5 ஆம் வகுப்பு வரை பர்வதத்துடன் நான் நெருங்கியதே இல்லை.
ஆனால் ஆறாம் வகுப்பில் நெருக்கமான தோழிகளாக மாறிவிட்டோம். அப்போது புதிய பள்ளி , புதிய ஆசிரியர்கள் ( முக்கியமா அவங்க அம்மா டீச்சரா இல்லாத பள்ளி ) அங்கு இருவரும் ஒரே வகுப்பு தான் , அதன் பிறகு ஏறத்தாழ ஆசிரியர் பயிற்சி வரையும் தபால் வழி BSC கணக்கு Uடிக்கும் வரை இணைந்தே இருந்தோம்.

ஆறாம் வகுப்பில் கணக்கு டீச்சர் எங்க யாராலயும் மறக்கவே முடியாது. கணக்கு பாடத்தை எவ்வளவு கஷ்டமா நினைக்க முடியுமோ அவ்வளவு கஷ்டமாக்கிய பாக்கியசாலி அவர். நடத்தவே மாட்டார். விளைவு கணக்கு மிக நல்லா போடும் நான் அந்த ஆண்டு காலாண்டுத் தேர்வில் 35 வாங்குவதே பெறும் பாடு ஆனது. பர்வதத்துக்கும் அதே நிலை , மொத்த வகுப்பில் 4 பேர் தான் பாஸ் பண்ணினோம்.
நம்ம வீட்லயா மார்க் கம்மியான திட்டு வாங்க முடியாத அளவுக்கு ... எங்கே அடி விழுமோன்னு பயந்தேன் ,   5 ஆம் வகுப்பு வரை நல்லாப்  படிச்சுட்டு 6 ஆம் வகுப்பில் ரொம்பக் கம்மியா கணக்குல வாங்கினது பெரிய மன உளச்சலைத் தந்து அதோடு வீட்டுல இருந்த கெடுபிடி ... பர்வதத்திற்கும் வீட்டில் ஏதோ சூழல் ... ஒரு வெள்ளிக்கிழமை பள்ளி விட்ட பிறகு .... இரண்டு பேர் மட்டும் தனியா ஸ்கூல்ல உக்காந்து யோசிச்சு (?) முடிவெடுத்தோம். இரண்டு பேரும் செத்துப் போறதுன்னு .... அதனால் பள்ளிக்கூடத்தில் ஒரு மரம் , நிறைய கசப்புக் காய்கள் காற்றில் கொட்டும். அதை எடுத்து கல் வச்சு கொட்டி ... கொஞ்சம் மிட்டாய் கடிச்சு சாப்பிட்டுட்டு இருவரும் அழுது கொண்டு நாம வீட்டுக்குப் போய் செத்து விடுவோம் என்று கூறிக் கொண்டு வீடு போய் சேர்ந்தோம். ஆனால் இருவருமே திங்கள் காலை உயிருடன் பள்ளிக்கு வர ... ஒரே ஆச்சர்யம் ... (இன்று வரை ஏன் அது ஒன்றும் செய்யவில்லை எனத் தெரியல )இதுவரை இந்த ரகசியம் யாருக்குமே தெரியாது.

அதன் பிறகு எங்கள் பள்ளி வாழ்க்கை பயங்கர வேகமாக ... போட்டி முதல் , இரண்டாம் , மூன்றாம் ரேங்க் என ஓடியது.

பருவும் நானும் நிறைய போட்டி போடுவோம். அவருக்கு இங்கிலீஷ் நல்லா வரும். பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி இரண்டிலும் நாங்க கட்டாயம் முதல் வரிசையில் இருப்போம்.

பள்ளிக் கூடத்தில் அவளது செல்வாக்கு எப்போதும் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும். ஏன்னா அவங்க அப்பா விளையாட்டு ஆசிரியர் ... அம்மாவும் ஆசிரியர் . அதனால் ஒரு சில ஆசிரியர்கள் எப்போதும் ஒரு தலைப் பட்சமாக வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பர்.

அவள் மேல் எந்தத் தவறும் இல்லை. இந்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் தான் அப்படி... பள்ளியில் நிறைய மாணவிகளுக்கு இதில் அதிருப்தி. (குழந்தைகள் மனதில் எதுவும் இல்லை, ஆனால் ஆசிரியர்கள் இது போன்ற பிரிவினைகள் உண்டு பண்ணுகிறோம் என்று அறியாமலேயே தவறு செய்வது குழந்தை உளவியலை பாதிக்கும் என எவரும் உணர்வதில்லை )

ஒரு முறை 6 வது வகுப்பில்பர்வதமும் நானும் சிறிய சண்டை போட்டுக் கொண்டு ஒரு வாரம்பேசாமல் இருக்க , நான் திரும்பத் திரும்ப பேச முயற்சிக்க அவள் என்னிடம் பேச வே இல்லை. இதைப் பார்த்த மற்ற தோழிகள்  மதிய உணவு இடைவேளையில் எங்கள் இருவரையும் தூக்கிச் சென்று ஒருவர் மீது ஒருவரைப் போட்டு ரகளை செய்து சிரிக்க வைத்து , பேச வைத்த நிகழ்வு இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.

அப்புறம் ... விளையாட்டுப் போட்டிகளில் அங்கிருந்த துறை ஆசிரியை எவ்வளவு கேட்டாலும் ஆர்வத்துக்கு மதிப்பே தர மாட்டார். நான் நிறைய முறை ஏங்கி ஏங்கி அவர் முன் நிற்பேன் , பயிற்சியே தராமல் நிராகரிப்பர் , ஆனால் பருவிற்கு அங்கெல்லாம் வாய்ப்புகள் தானாக வரும் ஒரு வேளை அவள் அப்பா பிடி மாஸ்டர் என்பதாலோ என எண்ணிக் கொள்வேன். எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் பர்வதத்தை நான் வெறுத்ததோ அன்பு செலுத்த மறந்ததோ இல்லை.

பிறகு 8 , 9ஆம் வகுப்புகளில் கவனம் படிப்பும் , பேச்சு , கட்டுரைப் போட்டியுடன் மட்டும் எங்களுக்கு என்றானது. தொடர்ந்து 10 ஆம் வகுப்பில் முனியப்பன் ஆசிரியர் வீட்டிற்கு டியூஷன் வருவா , அவள ஒரு முறை பசங்க கிண்டல் பண்ணாங்கண்ணு பயந்து சொன்னப்போ கோபம் வந்து அந்தப் பையனை அடிக்கப் போயிட்டேன்.

10 ஆம் வகுப்பு நாங்க படிக்கும் போது புது சில பஸ் , இங்லீஷ் புத்தகத்தில் முதல் பாடம் Jackdow .. புது வார்த்தைகள் மீது நம்பர் (1,2...) தந்திருக்கும்.  அந்தந்த பக்கத்தின் கீழேயே meaning தந்து இருப்பாங்க , நாங்க 2 பேரும் போட்டி போட்டுக் கொண்டு படிச்சுட்டு வருவோம்... 10 ஆம் வகுப்பில் 2  பேருக்கும் பயங்கர போட்டியா இருக்கும். கடைசில அவ ஸ்கூல் ஃபர்ஸ்ட்  435 ம் நான் செகண்ட்  433 என இரண்டு மதிப்பெண் வித்யாசத்தில் பள்ளியில் முதல் இரண்டு இடத்தைப் பிடித்தோம்.

தேர்வு நடக்கும் காலங்களில் 9 , 10 ஆம் வகுப்புகளில் மதியம் எனில் அவங்க வீட்டுக்கு போய் விடுவேன். சில நாள் அவங்க அண்ணா இருப்பாங்க , கொஞ்சம் பயமா இருக்கும். அவர் ஒன்னும் சொல்ல மாட்டார் இருந்தாலும் .. இரண்டு பேரும் எப்போ பாரு புத்தகத்தோடு உள்ளே இருந்து கேள்வி கேட்டு நீயா நானா போட்டி போடுவோம்

நடந்து ரோடில் போகும் போது கூட ஸ்கூல் ரோட்டில் கேள்வி பதிலா பேசிட்டு போட்டியா இருக்கும் .

அவ கொண்டு வர முள்ளங்கி சாம்பார் இன்னும் எனக்கு வாசமடிக்குது. எங்க வீட்ல செஞ்சா சாப்பிடப் பிடிக்காது. பர்வதம் அவளே சமைச்சு எடுத்துட்டு வருவா , ரொம்ப புளி உறப்பா போட்டு ரொம்ப ருசியா இருக்கும். வீட்டுக்குப் போகும் போதெல்லாம் பயத்தம் மாவு உருண்ட வீட்ல செய்தது தருவா..

அடிக்கடி அண்ணா பத்தி சொல்லுவா  , சாமுராய் கதை கேட்டப் போ ,அட நமக்கு அண்ணா இல்லையேன்னு தோணும்

தொடர்ந்து ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  பயின்று 12 ஆம் வகுப்பு முடிக்க ... முன்பிருந்த நட்பில் சற்றே தொய்வு ஏற்பட்டது. ஏனோ தெரியவில்லை. அங்கும் நான் 12 ஆம் வகுப்பில்  பள்ளியில் இரண்டாமிடம் பெற்றேன். இந்தப் பள்ளியப் பொறுத்தவரை எந்த ஆசிரியரும் பிரிவினை பார்த்ததில்லை. என் விளையாட்டு ஆர்வத்துக்குக் கூட இங்கு நல்ல தளம் கிடைச்சது. ஆனா 12 ஆம்  வகுப்பு போனதால் அதில் ஆர்வம் காட்ட முடியல.

இருவருமே இராசிபுரம் சென்று என்ட்ரன்ஸ் கோச்சிங் போனோம் , காலை 6.1 0 க்கு பேருந்து ஏறிவிடுவோம். எப்போப்பாரு படிச்சுகிட்டே இருப்போம். ஆனா இரண்டு பேருமே பெற்றோரால் அறிவுறுத்தப்பட்டு , மெரிட்டில் கிடைத்த  ஆசிரியப் பயிற்சியில் கோவையில் ஒரே இடத்தில் சேர்ந்து படித்தோம். அப்போ அவங்க அக்கா வீட்டுக்கு (தமிழரசி Tamilarasi Subramaniam அக்கா ) ஈச்சனாரி கூட்டிட்டுப் போவா ....

ஆனா .. அங்கும் நான் வேறு குழு , அவள் வேறு குழு தோழிகளால் வேறு வேறு ஹாஸ்டலில் தங்கி இரு திசைகளில் பயணித்தோம். அதன் பிறகும் BSC கணக்கு இருவரும் ஒன்றாகவே இணைந்து படித்தோம் தபால் வழியில்

ஆனால்பல்வேறு கால கட்டங்களிலும் எனக்கு துணை இருப்பாள். பிறகு ... இருவருக்கும் திருமணம் ஒரு 2 வருட வித்யாசத்தில் நிகழ என் திருமணத்திற்கு என்னோடே வந்து தங்கி திரும்பினாள் , உடன் காயு , எழில் , விலாஸ் எல்லாம் வந்தாங்க .

முதலில் பர்வதத்திற்கே வேலை   கிடைத்தது. எட்டு மாதங்கள் சென்ற பிறகே எனக்கு ஆசிரியர் பணி கிடைத்தது. அதன் பிறகு அப்படியே சிறிது சிறிதாக நெருக்கம் குறைந்தது . ஆனாலும் முக்கியமான விஷேசத்துக்கு கலந்துக்குவோம். என் வீட்டு கிரகப் பிரவேஷத்துக்கு காயுவும் பர்வதமும் காஞ்சிக் கோவிலே வந்துட்டாங்க 2010 இல் ..

அப்புறம் சந்திப்பு முற்றிலும் நின்னு போச்சு. ஆனா எனக்கு பர்வதம் மேல் எப்போதும் தனிப் பிரியம் உண்டு. பிள்ள என்று தான் என்னை அதிகமாக் கூப்பிடுவா ... உம்ஸ்னும் டீச்சர் டிரெயினிங் படிக்கப் போன பிறகு கூப்பிட ஆரம்பிச்சா .

அவ 6 ஆம் வகுப்பில் வானத்து நீல நிறத்துல போட்ட மேக்ஸி , மஞ்சள் நிற மிடி இரண்டும் இன்னும் எனக்கு நினைவு இருக்கு, அப்புறம் டான்ஸ் நல்லா ஆடுவா , ஒஹோ மேகம் வந்ததோ பாட்டுக்கு ரேவதி மாதிரி குடை வச்சு 7 வது ல ஒரு டான்ஸ் இன்னும் ஞாபகம் இருக்கு. பர்வதம் எழுத்து ரொம்ப அழகா இருக்கும் ..ஏ... உனக்கு ஒன்னுமே தெரியல ... வெவரமே இல்ல புள்ள நீன்னு சில சமயம் சொல்லுவா.

நான் எப்பவும் அவள மிஸ் பண்ணக் கூடாதுன்னு நினைப்பேன். சின்ன வயசில் இருந்து நிறைய அவளோட வாழ்ந்து இருக்கேன். இப்போ அதே நாங்க படிச்ச பள்ளியில் கணக்கு பட்டதாரியா ஸ்ட்ரிக்ட் டீச்சரா இருக்கா.

எங்களுக்குள்ள எப்பவும் ஒரு பனிப்போர் இருக்கும். அது கூட இருந்த ஃபிரண்ட்ஸ் உணருவாங்க. ஆனாலும் எனக்கு அவளை ரொம்பப் பிடிக்கும்.

ரொம்ப அன்பா இருக்கும் கணவன் மனைவி அடிக்கடி சண்டை போடுவாங்கன்னு சொல்வாங்க .. அது மாதிரி எங்க அன்பு. ... ரொம்ப ஜாஸ்தி ..

லவ் யூ பர்வதம்❤️🎈

உமா

Monday, 11 June 2018

அன்பு செய் கண்மணியே

எனக்கும் உனக்குமான ...

அன்பெனப்படுவது யாதெனின் .....

விருப்ப எண்ணங்களால்  நிரம்பியிருத்தல் ..
சிந்தனைத் தெளிவால் கட்டுண்டு இருத்தல்...
உயிருணரும்  உணர்வால் மகிழ்ந்திருத்தல்...
நடைமுறைப் புரிதலால் விலகியிருத்தல்...
எனக்காக நீயும் உனக்காக நானும்...
என்ற எண்ணங்களால் இணைந்து ... தொலைவால் விலகி மனதால் நெருங்கி...
எதிர்பார்ப்பில்லாமல் வாழ்ந்திருத்தல்  ....
நினைவால் வாழ்ந்து நிழலாய் உணர்தல்..
பொருளோ பரிசோ தேவையில்லை...
உனக்கும் எனக்கு மான அன்புப் புரிதலில் ...
புகழ்ச்சி வார்த்தைகளோ பேரு வகையோ...
புடம் போடுவதில்லை  எந்நிலையிலும்...
நமக்கான அன்பு பாராட்டுதலில் ....
எதார்த்தங்களும் எளிய புரிதலுமே
எல்லாவற்றையும் அன்பின் அனைத்து எல்லைக்குள்ளும் கொண்டு வர....
ஆதலால் ....
அன்பு செய்வோம் எனது கண்மணியே ....

உமா

Thursday, 7 June 2018

என்னோடு நீ வா

இறுகியிருந்த பாறையை
என்ன செய்து இளக்கினாய் ??
வெப்பமான சூழலை
விலகிவிடத் தூண்டினாய்
பிரியங்களால் இணைத்துத் தான்
சிறு பிள்ளையாக்கினாய்
அன்பின் தாக்கம் கூட
சிறு  மழலையானதே ...
விலகிடாமல்
இணைந்து வா ..

Wednesday, 30 May 2018

சூதாடியும் தெய்வங்களும்

சூதாடியும் தெய்வங்களும் :
இப்புத்தகம் வாய்மொழிக்  கதைகளின் சேகரமாக தொகுக்கப்பட்டுள்ளது.  தமிழில் சா.தேவதாஸ் மொழிபெயர்த்துள்ளார். பன்முகம் வெளியிட்டு முதல் பதிப்பு 2015 செப்டம்பரில் வெளிவந்து 200 ரூபாய் விலையைத் தாங்கியுள்ளது.

நாம் வளர்ந்த நாட்களைப் பின்னோக்கிப் பார்த்தால், சிறு வயதில்  வாழ்வின் பெரும் பகுதி கதைகளால் நிரப்பப்பட்டிருக்கும்.  எல்லோருக்கும் பொதுவான நியதி இது. உலகம் முழுவதிலுமே வாய்மொழிக் கதைகளுக்கு இன்றும் வரவேற்பு உண்டு. எண்ணிய மாத்திரத்தில் நம் மனம் கதைகளை வடிவமைக்கும் , திட்டமிடும் , கதைக்களத்தை உருவாக்கி கதை மாந்தர்களை உருவகப்படுத்தி , நம்முள் பிரயாணிக்க வைக்கும் ஆற்றலும் இவற்றை நம் எதிரில் உள்ள நபருக்குக் கூறும் போது  அவர்களையும் அந்த உலகத்தினுள்ளே இன்பமாக பயணிக்க வைக்கும் திறனும் இந்த வாய்மொழிக் கதைகளுக்கு உண்டு என்பதை நம்மால் மறுக்க முடியாது.
வாய்மொழிக் கதைகள் எப்போதும் எழுத்து இலக்கியத்திற்கு நேரெதிரானவை என்பது போல் , எழுத்து இலக்கியம்  ஆணின் அதிகாரக் குரலைப் பதிவு செய்தால் , நாட்டார் இலக்கியம் பெண் குரலை ஒலிக்கச் செய்யும் , காவியங்களில் தர்மனோ அர்ச்சுனனோ அதிகாரம் செலுத்த வாய்மொழிக் கதைகள் பாஞ்சாலியை மையப் பாத்திரமாக்கும் எனவும் அதிகாரத்திற்கு எதிரான கலகக் குரல் வாய்மொழி இலக்கியத்தின் ஆதாரப் புள்ளி . தெய்வம் உள்ளிட்ட யாரும் இங்கே பரிகசிக்கப்படுவர் என்பதை இந்நூல் பதிவு செய்கிறது.

கதைகளை எழுத்துகளாகப் படைக்கும் படைப்பாளிகள்  எல்லா இடங்களிலும் இருந்தாலும் இலக்கிய மற்றும் அரசியல் சூழலுக்கு ஏற்ப வாய்மொழிக் கதைகளை மீட்டெடுப்பதும் அவர்களது இன்றியமையாத கடமையாகக் கருத வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறது  இந்நூல்.
இந்நூலில் , இந்தியக் கதைகள் , பர்மியக் கதைகள்  , இலங்கைக் கதைகள்  , சீனக் கதைகள் ,ஆப்பிரிக்கக் கதைகள் . ஐரோப்பியக் கதைகள் மற்றும் இத்தாலிக் கதைகள் என ஏழு நாடுகளைச் சேர்ந்த நாட்டுப்புறக் கதைகள் 33 எண்ணிக்கையில்  தொகுக்கப்பட்டுள்ளது.
வாய்மொழிக் கதைகளின் சேகரம் பற்றி ஒரு வரலாற்றையும் இதன் நூல் தொகுப்பாளர் தேவதாஸ் கொடுத்துள்ளார். காலனித்துவ ஆதிக்கக் காலத்திலிருந்த வாய்மொழிக் கதைகளின் தொகுப்புகள் பற்றியும் இன்று வரை உள்ள சேகரங்களையும் இங்கு பதிவு செய்துள்ளது சிறப்பு.
வாய்மொழிக் கதைகள் வெறும் கதைகளாக மட்டுமன்றி அவை சொல்லப்பட்ட காலகட்டங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை , கலாச்சாரம், நம்பிக்கைகள் இப்படி எல்லாவற்றையும் வருடிச் செல்லும் தென்றலாக அமைகிறது சிறப்பு.
சூதாடியும் தெய்வங்களும் என்ற இந்நூலின் பெயரில் தான் முதல் வாய்மொழிக் கதை ஆரம்பிக்கின்றது. இந்தியக் கதையான இதில் உஜ்ஜயினியின் சூதாடி ஒருவன் திந்தாகராலா எவ்வாறு செல்வந்தனாகி சாபம் பெற்ற மனைவியை , தனது புத்திசாலித்தனத்தால் விடுவிக்கிறான் என்பதே சுவாரஸ்யமான கதை , படிக்கப் படிக்க ஏழு மலைக்குள் ஏழு குகைக்குள் என்று சிறு வயதில் கேட்ட கதைகளே நினைவுக்கு வருகின்றது. இந்திர லோகம்  நடன இசை , கடவுள்களிடம் பேசுவது , வேஷம் தரித்து நாட்டு மன்னனை புதையல் காட்டி நம்ப வைப்பது என இந்தக் கதை விறுவிறுப்பாக செல்கிறது.
அடுத்தடுத்தக் கதைகளும் கிளி , புலி , நரி என சிறு பிள்ளைகள் சொல்லும் புனைகதைகளாக , இருக்கின்றது. கிளி சொன்ன எழுபது கதைகள் (சுக சப்ததி) என்ற தலைப்பில் வருபவை 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாரசீக மொழித் தழுவல்களாக உள்ளன. அரேபிய இரவுகளின் கதைகள் பாணியில் இருக்கின்றன. ஆனால் பாலியல் தன்மை கொண்டதாகவும் இக் கதைகள் அமைந்திருப்பது சற்றே முகம் சுளிக்க வைக்கின்றது. அவ்வளவு நல்ல கதைகளாக எனக்குத் தோன்றவில்லை.
ஆனால் இரு பூநாரைகள் என்ற கதை மிக வித்தியாசமான கருத்தோட்டம். இது இராஜஸ்தானின் வாய்மொழி மரபிலுள்ள கதை , பெண்களுக்கிடையிலான தன்பால் உறவு இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண்ணை ஆண் போலவே வீட்டில் வளர்த்தெடுக்க , அப்பெண்ணும் தன்னை ஆணாகவே எண்ணி இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்த நிலை , பிறகு எவ்வாறு இருவரும் இணைந்து வாழ்க்கை நடத்துகின்றனர் எனவும் அதோடு ஆவி , அரண்மனை  மாளிகை இப்படி சுவாரஸ்யம் இணைந்து ஆணாதிக்கமும் அதன் வன்மமும் கூட பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பூநாரைகள் உள்ளபடியே அரிய பதிவு. இதோடு இத்தொகுப்பின் இந்திய நாட்டு வாய்மொழிக் கதைகள் முடிவுக்கு வந்து விட இனி பர்மிய நாட்டுப்புறக் கதைகள் ஆரம்பமாகின்றன.
பர்மிய நாட்டுப்புறக் கதைகள் ..... இதில் சில வரலாற்றுக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. அதாவது கி.பி 10 44 வரை பர்மாவிற்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு இல்லை எனவும் அதன் பின்னரே பர்மிய  மொழியின் அகரவரிசை உருவாக்கப்பட்டுள்ளது. பெளத்த ஜாதகக் கதைகள் பரவல் நாட்டார் கதைகளை அஸ்தமிக்க வைத்து விட்டதாக இந்நூல் குறிப்பிடுகிறது.
மேலும் பர்மிய நாட்டுப்புறக் கதைகளில் அதிகமானவை  விலங்குகளின் பங்கே , நீதியை வற்புறுத்தும் விலக்குகளின் கதைகளாக உள்ளன. அதுவும் அதிகமாக ஆட்சி செலுத்துவது முயலே. கோழிகள்  மாய ஆற்றல் வாய்ந்ததாகவும் , ஒற்றைக்  கொம்பு குதிரை , நீர்யானை, பாம்பு - டிராகன் , மாயக் கழுகு , முதலை ,அன்னப் பெண் என கற்பித விலங்குகள் இடம்பெறும் கதைகளாகவே பர்மிய நாட்டுப் புறக் கதைகள் உள்ளன.
இந்த நூலில் ஐந்து பர்மியக் கதைகள் இடம்பெற்றுள்ளன. வானவில் , சந்திர கிரகணம் , மூன்று டிராகன் முட்டைகள் ,தேங்காயின் தோற்றம் மற்றும் டகாங்கின் காட்டுப் பன்றி என்பன அவை. ஐந்து கதைகளையும் படித்தால் கற்பனை எட்டாத  தூரத்தில் காட்சிகளை உருவாக்கி , நிஜமான பொருட்களோடு ஒப்புமைப் படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் காரணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பது போல் கதைகளை முடித்துள்ளனர்.
வானவில்லின் பக்கங்கள் ,இரவுகளில் ஆற்றின் நீரில் இளவரசனை வாயில் கவ்விச் செல்லும்  முதலையையும் , இன்னொரு முதலை மானுட ரூபமெடுத் தலையும் நம் கண் முன்னே கொண்டு வருகிறது. அதே போல சந்திர கிரகணத்  கதையில் குழவிக்கல்லால் ஒரு மனிதன் இளவரசனாவதும் அதன் சக்தியைக் கண்டு நிலவு திருடிச் செல்வதாகவும் அதை அந்த மனிதன் வளர்த்த நாய் துரத்திச் செல்வதாகவும் அதனால் தான் இன்றும் சந்திர கிரகணம் வருகையில் நாய் வாயில் கவ்வுவதாகவும் கிரகணம் முடிகையில்   நிலவு வெளித்தள்ளப்படுவதாகவும்  கதை சொல்லப்பட்டிருப்பது கற்பனையின் அளவை நமக்குக் காட்டுகிறது. அதே போல மூன்று டிராகன் முட்டைகள் என்ற கதை நம்மை நிறைய கற்பனைகளுக்கு அழைத்துச் செல்கிறது. தேங்காயின்  தோற்றம் அதே போல் விஷமியின் தலை மண்ணில் புதைக்கப்பட்டு அந்தக் கதையிலிருந்து வருகிறது , காட்டுப்பன்றியைத் துரத்தும் இளவரசன் எவ்வாறு துறவியாகிவிடுகிறான், பன்றி செல்லுமிடமெல்லாம் அந்த நாட்டின் இடங்களின் பெயர் எவ்வாறு உருவாகின்றது என வேறு வேறு திசைகளில் நம்மை கற்பனை செய்ய வைத்து சிறு வயது கதை நாட்களை மீட்டெடுக்கிறது பர்மிய நாட்டுக் கதைகள்.
இலங்கைக் கதைகள் 1910 இல் வெளிவந்த தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட 3 கதைகளை உள்ளடக்கி கற்பனைகளை விதைக்கும் ஹராந்தகன் என்னும் திருடன் கதை , நாடோடிக் கதைகளாக வரும் இரு சகோதரிகள் கதை , தேப்காவின்  கதை ஆகியவை உண்மையிலேயே இப்படி எல்லாம் கற்பனை செய்ய முடியுமா என நம்மை எண்ண வைக்கிறது. தேப்கா புலி கதை நகைச்சுவையாகவும் உள்ளது.
அடுத்து 10 கதைகளை உள்ளடக்கிய சீனத்துக் கதைகளின் வரிசை. இதில் டிராகன் பற்றிய நான்கு கதைகளும் அடக்கம். நல்ல மனைவி கதை புத்திசாலி மனைவி முட்டாளை மன்னனாக்குவாள் , சோம்பேறி மனைவி , துடிப்புள்ளவனை மந்தமாக்குவாள்  என சீனத்துப் பழமொழியை ஒரு இளவரசியின் வரலாற்றைக் கொண்டு விளக்குகிறது , உள்ளபடியே சுவாரஸ்யமாகவே சீனத்துக் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆவியை விற்றவன் கதை என்னவோ , படிக்கும் போது வேதாளத்தை சுமந்து செல்லும் ராஜகுமாரன் நமது அம்புலிமாமா கதைகளை நினைவு படுத்துகிறது.
டிராகன்  கதைகள் ஆங்கில திரைப்படங்களில் வரும் காட்சிகளை நினைவுக்குள் எடுத்து வருபவையாக உள்ளன. டிராகன் என்பது சீன கலாச்சாரத்தில் தனி இடம் வகிக்கும் அடையாளமாகவும் , அற்புதங்களும் ஆற்றல் நிரம்பிய உயிரியாகவும் , நினைத்த வடிவங்களை எடுக்கக் கூடியதாகவும் இருக்கின்றன. விலங்கு , பறவை , பாம்பு மற்றும் முதலை ஆகியவற்றாலான கலவை உருவமாகிய டிராகன் நெருப்பினை உமிழ்வதாக இருக்கிறது. டிராகன் என்றால் வளர்ப்புத் தாய் ,பெண்ணிணத்தின் பாதுகாவலன் என குறிப்பிடும் தகவல்கள் இந்நூலில் உள்ளன.

இதில் வரும் நான்கு டிராகன் பற்றிய கதைகளும் மிகச் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. டிராகன் முட்டைகளை விழுங்கி வருடக் கணக்கில் வயிற்றில் சுமக்கும் பெண் கடுகு விதைகளை விதைத்து மலை முகட்டிற்குச் சென்று வாழ்வதும் , எட்டு டிராகன்கள் அரண்மனைக் கூரையில் ஒன்பதாவது டிராகன் உயிர் பெற்று விடுவதும் , சீனத்தின் பெரு நதிகளாக நாம் படித்துள்ள ,மஞ்சள் நதி  , ஹெய்யோங்யாங் , யாங்ட்ஸி, மற்றும் ஜூஸியாங் நதிகள் மஞ்சள் டிராகான்  , கருப்பு டிராகன் , நீண்ட டிராகன் , முத்து டிராகான் என கதை அமைந்திருப்பதும் கற்பனையின் உண்மை நீட்சிகளாக உள்ளன. மேலும்  ஃபீனிக்ஸ் பறவையும் டிராகனும் இணைந்து கூழாங்கல்லை செதுக்கி முத்தாக மாற்றுவதும் , அதற்கு தனிப் பெரும் சக்தி கிடைத்து நாட்டின் அரசியால் திருடப்படுவதும் மீண்டும் அது டிராகன் , ஃபீனிக்ஸால் கண்டறியப்பட்டு பச்சை ஏரியாய் உருமாறி அதை விட்டுப் பிரிய மனமில்லா டிராகன் மலையும் , ஃபீனிக்ஸ் மலையும் ஏரியின் இரு பக்கங்களில்  தங்கிவிட புவியியல் பாடமே படிப்பது போல் நம்மை அழைத்துச் செல்கிறது.

அடுத்து வரும் ஒரே கதை ஆப்பிரிக்கக் கதை ... ஆமை எவ்வளவு சூதுவாது மிக்க விலங்காக காட்சிப்படுத்தப்பட்டு , பறவைகளை ஏமாற்றி வானத்தில் விருந்துண்ணுகிறது. கிளியால் எப்படி வஞ்சம் தீர்க்கப்பட்டு தனது ஓட்டை கீழே விழுந்து கரடு முரடாக வைத்துள்ளது என காரணக் கதையாக சொல்லப்பட்டிருக்கு இங்கே .

அடுத்து வரும் ஐரோப்பியக் கதைகள் நமது ஊரில் சொல்லப்படும்  தேவதைக் கதைகள் , 3கோடாரிகள் வரத்தை நினைவூட்டுகிறது. அதே போல இதே கருத்து வேறு வேறு தேசங்களில் வேறு வேறு மரபுகளில் வழங்கப்படுவதாகவும் , மூன்று ஆசைகள் என்ற ஐரோப்பியக் கதை இரண்டு மூன்று விதங்களில் சொல்லப்பட்டு வருவதாகவும் இந்நூலில் சில குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
தொடர்ந்து வரும் டென்மார்க்கின் தேவதை கதைகள் , அந்நாட்டு கிராமங்களில் பாட்டிகளால்  சொல்லப்பட்ட கதைகளாக தொகுக்கப்பட்டுள்ளன. நற்காரியங்களின் பலன் என்னவாக இருக்கும் என மனிதன் , பாம்பு , குதிரை , நரி , வாத்துகள் மற்றும் நாய் இவற்றை வைத்து கூறப்பட்ட கதை , உலகத்து உயிர்களின் இயல்பை நம் கண் முன்னே கொண்டு வருகின்றது. அதே போல உல்லாச மனைவியர் என்ற கதையில் மனிதர்களின் முட்டாள்தனத்தை நிரூபிக்க உயிரோடு இருப்பவர் இறந்ததாக ஊரே நம்புவது வியப்பாகவே உள்ளது. அதோடு .... ஆறு சகோதரர்களும் இளவரசியும் மாயாவியிடமிருந்து தப்பித்து நட்சத்திரக் கூட்டமாக்கப்பட்ட ஒரு கதை என நம்மை வேறு வேறு திசைகளில் பயணிக்க வைக்கிறது.
அற்புதங்கள் அள்ளித் தந்த தேவதை கதைத் தொகுப்பை படைத்த டென்மார்க் நாட்டின் எழுத்தாளர் ஆண்டர்சன் பற்றிய குறிப்புகளோடு ஆரம்பிக்கின்றது அடுத்தடுத்தப் பக்கங்கள். கனவு காணும் குழந்தைகள் நல்லவர்களாகவும்  கனவு காணாத குழந்தைகள் தீயவர்களாகவும் முட்டாள்களாகவும் வளருவார்கள் என்றும், அவ்வாறு கனவு காண அவர்களுக்கு தேவதைக் கதைகள் தேவையாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டு , தேவதைக் கதைத் தொகுப்பை படைத்துள்ளார்.
தேவதைக் கதைகள் அத்தனையும் வாய்மொழி மரபில் வந்தவை. எழுதப்படாத எழுத்துக்கள், எழுதியவர் என்ற ஒரு நபரின்றி காலந்தோறும் தலைமுறை தோறும் வளர்ச்சியும் மாற்றமும் கொண்டு வளர்ந்தவை என்கிறது இந்நூல். பூதம் ஒன்று மாயக் கண்ணாடி செய்த கதை , நைட்டிங்கேல்  கதை என எத்தனையோ கதைகளைக் கொண்ட தொகுப்பிலிருந்து ஆண்டர்சன் தந்த அருவருப்பான வாத்துக் குஞ்சு என்ற கதை வான்கோழியா , வாத்தா அல்லது அன்னமா என மாறி மாறிப் பயணிக்கிறது கதை , அது  இயற்கையோடு  இணைந்து பின்னப்பட்டு அழகான பறவைகள் , பூக்கள் , நீர் நிலைகள் , பசும் புல்வெளிகள் என அழகுபட விரிந்து இறுதியில் கம்பீரமான அன்னப் பறவையாக முடிவுக்கு வரும் கதை நம்மை மகிழ்விக்கின்றது.
புத்தகத் தொகுப்பின் இறுதியாக இடம் பெற்றிருப்பது இத்தாலி நாட்டுக் கதை. இத்தாலி தேசம் கிரேக்கத்தைப் போலவே நீண்ட காலமாக ஐரோப்பிய நாகரீகத்தின்  இல்லமாக இருந்து வந்துள்ளது. ஷேக்ஸ்பியரின் பல நாடகங்களும்  இத்தாலியப் பின்புலத்தைக் கொண்டவை என்பதை நாம் அறிவோம். அதன் நீட்சியாக இங்கு தரப்பட்டுள்ள கதை ,மரணத்தை வெல்ல முடியுமா என்ற வினாவை எழுப்பி சாத்தியமில்லை என்பதை நடைமுறையில் விளக்குகிறது.நமது நாட்டிலும் சாவித்திரி எமனிடமிருந்து சத்தியவான் உயிரை மீட்டு வந்ததாக வாய்மொழிக் கதை உண்டு .
இங்கு " ஒருவர் மடியா தேசம் " என்ற தலைப்பில் அழகாகப் பயணிக்கும் ஒரு கதை ,மரணமே இல்லாத வாழிடத்தைத் தேடி அலையும் ஒரு இளைஞன் எவ்வாறு மரணத்தின் பிடியில் சிக்குகிறான் என்பதை சிறு சிறு கட்டங்களாக நகருகிறது கதை .உள்ளபடியே சிறப்பான கதை .
இவ்வாறு 232 பக்கங்களும் முடித்த போது நம் குழந்தைப் பருவம் முதல் இன்று வரை ஒரு சுற்று சுற்றி வருவதோடு உலக வரைபடத்தின் எல்லா நாடுகளின் மக்களையும் தொட்டு வந்த நினைவலைகளாக மகிழ்கிறது மனம். அறிவியலும் தர்க்க ரீதியான புத்தகங்களும்  நம்மை வேறு விதமாக வழிநடத்தினாலும் , காரணங்களை ஆராயாமல் மகிழ்ச்சியும் குழந்தைத் தன்மையும் நம்முள் கொண்டு வர இப்புத்தகம் உதவுகிறது. சூதாடியும் தெய்வங்களும் பாஸ்போர்ட்  இல்லாமலே நாடுகளுக்குப் பயணிக்க வைத்த நல்ல தொகுப்பு நூல்.
அன்புடன்
உமா