ஒலிப்புத்தகம் :சுஹல்தேவ் புராணம்
ஆசிரியர் : அமீஷ் திரிபாதி
தமிழில் : கதிரவன் (நமது குழு அட்மின் )
குரல் : செங்கமலநாதன்
நேரம் : 12 மணி நேரம் 6 நிமிடம்
இது ஒரு வரலாற்றுப் புதினம் , உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் புனைவுகளாக எழுதப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் மீது படையெடுத்த கஜினி முகம்மது – துருக்கியர்களின் கொடூரங்கள். வட இந்தியாவில் நடத்திய அராஜகங்கள் பற்றி நாம் படித்திருப்போம் . போர் என்பது வரலாற்றின் போக்குக்கும் நாடுகளின் திசை மாறும் வரலாறுகளுக்கும் மிக முக்கியமானதாக இருக்கலாம். வெற்றி தோல்விகளாக மட்டும் பார்க்கப்படுகின்றன படையெடுப்புகள் . தற்போதைய உக்ரைன் போர் வரை இது தான் நடைமுறை ஆனால் சாதாரண மக்கள் , பெண்கள் , குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாகி துன்பம் அனுபவித்து மீளாத் துயரில் தோய்ந்து போகின்றனர் என்பது குறித்து வரலாறுகள் குறைவாகப் பேசுகின்றனவா முழுமையாகப் பேசுகின்றனவா அல்லது பேசுவதே இல்லையா என்பதெல்லாம் அவரவர் சிந்தனைக்கு விட்டு விடலாம்.
பொதுச் சொத்துகள் அழிக்கப்பட்டு சூரையாடப்படுவதை, வெறி கொண்டு தாக்கும் கும்பல்களின் அரக்கத்தனத்தை கண் முன் நிறுத்தும் இந்த படைப்பு ,
சுஹல்தேவ் என்ற நாயகன் ஒருவரை தாய் நாட்டைக் காக்கும் மன்னராக நம் முன் கொண்டு வந்து நிறுத்தி அவரது உணர்வு , உடன் நிற்கும் வீரர்கள் படை வலிமை என விஸ்தரிக்கிறது சம்பவங்களை.
எதிரிகளின் சாணக்கியத்தனம் சுஹல் தேவின் சாமர்த்தியம் என ஒன்றை ஒன்று விஞ்சுகிறது. மதம் சார்ந்து பிரிவினைகளை உருவாக்கும் போர்த் தந்திரங்கள் இன்றைய நிகழ்வுகளை நம்மிடையே ஒப்புமைப்படுத்திப் பார்க்கக் கற்றுத் தருகிறது. சோமநாதபுரம் கோவில் உள்ளே சூரையாடும் பகுதிகள் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தின் விவரிப்புகளை நினைவு படுத்துகிறது.
சுஹல்தேவ் –இதை மொழிபெயர்ப்பு நூல் போல உணர முடியவில்லை.
மிகச் சிறப்பாக மொழிபெயர்க்கப்
பட்டுள்ளது..வாழ்த்துகள் தம்பி கதிர் அவர்களுக்கு.
செங்கமலநாதனின் குரல் கூடுதல் கம்பீரம் இந்தப் படைப்பிற்கு.
No comments:
Post a Comment