Wednesday, 2 September 2020

நினைவுகள் அழிவதில்லை


நினைவுகள்_அழிவதில்லை
மொழிபெயர்ப்பு நூல்

மொழிபெயர்ப்பாளர்  :
    பி.ஆர். பரமேஸ்வரன்

இந்தப் புத்தகம் முதலில் கன்னடத்தில் எழுதப்பட்டு அங்கிருந்து மலையாளத்தில் மொழி பெயர்ப்பு செய்து அதிலிருந்து தமிழில் பிஆர் பரமேஸ்வரன் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார் . சிந்தன் புக்ஸ் பதிப்பகம்  இதை வெளியிட்டுள்ளது .
முதல் பதிப்பு 1977இல் வந்துள்ளது . என்னிடம் உள்ள நூல் பத்தாம் பதிப்பாக டிசம்பர் 2013ல் சமூக அறிவியல் கூட்டிணைவு ஏற்பாட்டுடன் வெளியிடப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
244 பக்கங்கள் ,விலை ரூபாய் 100.
அதற்குப் பிறகு ஒருவேளை பல பதிப்புகள் வந்திருக்கலாம்

வெளியீட்டின் போது ..
இந்த நூலின் முதல் தமிழ் பதிப்பு வெளியீட்டு விழாவில் விபி சிந்தன் அவர்கள் கலந்துகொண்டு "அழியாத  நினைவுகள்" என்ற தலைப்பே பொருத்தமாக இருக்கும் என்று குறிப்பிட்டாராம். 1975 முதல் 77 ஆம் ஆண்டு வரை பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் போடப்பட்டிருந்த அவசர காலத்தில் தலைமறைவாக  இருந்தபொழுது தான் , பரமேஸ்வரன்  இதை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூலை  ஒரு அரசியல் புதினமாக பார்ப்பதற்கான எல்லா கூறுகளும் உள்ளடங்கியுள்ளன.

#நாவலுக்கு_அடிப்படை

1940 இல் இந்தியாவில் விவசாயிகள், நிலப்பிரபுத்துவத்திற்கும்  ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக அணிதிரள தொடங்கிய காலம் .வடக்கில் உள்ள கையூர் என்ற கிராமத்தில் விவசாயிகள் சங்கம் அமைத்து (அந்த கிராமம் தற்போது கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது) 1956இல் மொழி வாரி மாநிலங்கள்  புனரமைப்பதற்கு முன்பு , விவசாயிகள் சங்க மாநாட்டு பிரச்சாரத்தை ஒட்டி நடைபெற்ற ஊர்வலத்தில் அத்துமீறி தலையிட்டு தொல்லை கொடுத்த ஒரு போலீஸ்காரருக்கும் மக்களுக்கும்  மோதல் ஏற்படுகிறது. மக்களிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குளித்த போலீஸ்காரர் உயிரிழக்கிறார் இதனைத் தொடர்ந்து கையூரிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும்  நடைபெற்ற மனித வேட்டையும்  அடக்குமுறையும் வரலாற்றில் மிகக் கொடுமையான நிகழ்வுகளில் ஒன்று.

அப்போது  தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களான  அப்பு, சிருகண்டன்,அபுபக்கர்,குஞ்ஞம்பு ஆகியோர் 1943 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  29 ஆம் தேதி கடலூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்படுகிறார்கள் . தூக்கு தண்டனை வழங்கப்பட்ட மற்றொருவர் சி.கே. நம்பியார் சிறுவனாக இருந்த காரணத்தினால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது.  இத்துடன் கையூர் சம்பவம் இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த ஒரு  அத்தியாயமாகி
விட்டிருக்கிறது .

அப்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் காரியதரிசி பி.ஸி. ஜோஷி, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட நாளின்  முதல் நாள்  தூக்கு மேடைக்கு அஞ்சாத கையூர்த் தோழர்களை சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு இவர்கள் 4 பேரும் தைரியம் சொல்லி அனுப்பியிருக்கின்றனர்.

#ஆசிரியரைப்_பற்றி :

இந்த நிகழ்வுகள் நடந்த காலத்தில் இந்த நூலின் ஆசிரியர் நிரஞ்சனா கையூருக்கு அருகே உள்ள நீலேசுவரத்தில் உள்ள  ராஜாவின் உயர்நிலைப்பள்ளியில் மாணவராக இருக்கிறார் .அப்போது அவரின் பெயர் குளுகுந்த  சிவராவ். போராட்டம் நடந்த #கையூர் என்ற இடம்
இவர் படித்து வந்த  ஊருக்கு 3 மைல் தொலைவில் இருந்துள்ளது , அப்போது அங்கு ஒரு பார்வையாளனாக இருந்திருக்கிறார். அதன்பிறகு மங்களூரில் அதன் வழக்குகள் நடந்தபோது பத்திரிகையாளனாக அதற்கான தரவுகளை சேகரித்து உள்ளார். இதன் பாதிப்பினாலேயே இந்த நாவலை எழுத முனைந்திருக்கிறார்.

இவர் 14வது வயதிலேயே எழுதத் தொடங்கியிருக்கிறார். அப்பொழுது மங்களூரில் இருந்த பிரபல எழுத்தாளர் சங்கரப்பட்_ஐ ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ராஷ்டிர பந்து என்னும் வாரப் பத்திரிகையில் இவரது கதைகள் வெளிவரத் தொடங்கி , தனது எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய கால கட்டத்தில் தேர்ச்சி  முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே அந்தப் பத்திரிகையின் உதவி ஆசிரியராகியிருக்கிறார்.

பிறகு கர்நாடக மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி ஆசிரியராகிறார் 1948 முதல் 1951 ஆண்டு காலத்தில்  தலைமறைவாக இருந்து பத்திரிகை ஆசிரியர் பொறுப்பை நிறைவேற்றி வைக்கிறார் அதன்பிறகு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து 1953 வெளியேறி இருக்கிறார். இவர் எழுதிய முதல் நாவல் 'விமோசன' 1953- இல்  வெளிவந்துள்ளது. இருபத்தி ஐந்து நாவல்களும் எட்டு சிறுகதைத் தொகுப்புகளும் மூன்று நாடகங்களும் இந்த காலகட்டத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

#நூலைப்_பற்றி …

இந்த நினைவுகள் அழிவதில்லை என்ற தலைப்பில் தமிழில் வெளிவந்துள்ள நூல் முதலில் 'சிரஸ் மரணா'  என்னும் பெயரில் 1955-இல்  ஆசிரியர் நிரஞ்சனாவால்  கன்னடத்தில் வெளியிடப்பட்டது. தமிழில்
இந்த நூல் வெளி வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் சிகரம் ஆசிரியர் திரு ஆழி செந்தில்நாதன், சென்னை புக் ஹவுஸ் பதிப்பாளர் திரு பாண்டியன் அவர்கள் என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலையாள மண்ணில் மலையாள மொழியில் நடந்த உண்மைக் கதை முதன்முதலாக மொழியைக் கடந்து கன்னட மொழியைப்  பற்றி #சிரஸ்மரணா என்ற அசுரனாக மாறுகிறது. பிறகு அங்கிருந்து #நினைவுகள்_அழிவதில்லை
என்ற பெயர் தாங்கி கடந்த 43 வருடங்களாகத் தமிழ் மக்களிடையே அழியாமல் வாழ்கிறது.

இது  இரு பாகங்களாக எழுதப்பட்டுள்ளது  .முதல் பாகத்தில் 15 அத்யாயங்களும் இரண்டாம் பாகத்தில் 10 அத்யாயங்களும் தரப்பட்டுள்ளன.

#கதா_பாத்திரங்கள் 

அப்பு ,சிரு கண்டன் , கண்ணன் , அபுபக்கர் , குஞ்ஞனன்  கோரன், மாஸ்டர், பண்டிட்  , நம்பூதிரி , நம்பியார் , சந்து , பிரபு , பயில்வான் , இராமுண்ணி , அப்புவின் தந்தை , சிருகண்டனின் தாய் கல்யாணி  , தந்தை, அப்புவின் மனைவி ஜானகி , கண்ணனின் மனைவி தேவகி மற்றும் விவசாயிகள் .

#நாவலின்_போக்கு ….

இது சாதாரண நாவலல்ல , ஒரு சமூகத்தின் விடுதலைக்கான துருப்புச் சீட்டு , ஏகாதிபத்தியம் எளிய மக்களை என்ன செய்யும் ? நிலப்பிரபுத்துவம் எப்படி ஏழை விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கித் தின்னும் ? அடிமைகள் தலையெடுத்தால் என்ன நடக்கும் ? ஒரு ஆசிரியர் (மாஸ்டர் ) நினைத்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் ? வாசிப்பும் சில வகுப்புகளும், இரவுப் பள்ளிகளும் இந்த  சாதாரண விவசாயக் கூலிகளையும் குடியானவர்களையும் கையூரின் தோழர்களாக உலக சரித்திரத்தில் இடம் பெற வைத்த ஒரு நீண்ட வரலாறு என்ன ? படிப்பறிவின் விவேகம் எப்படி விவசாயிகளை ஸ்தாபனம் உருவாக்க , உரிமையைக் கோர , நிலக்கிழார்களின் சுரண்டலை நிறுத்த உதவியது ? அதிகாரம் என்னவெல்லாம் செய்யும் ? அதிகாரத்தையே மாயமாக்கிய  மக்களின் எழுச்சி  அழிவதாகத் தோன்றினாலும்  நிலைத்து நிற்கும் என்ற பல விதமான  நம் கேள்விகளுக்கு  பதில் தருகிறது இந்தப் புதினம்.
அதிகாரமும் ஏகாத்தியபத்தியமும் நிலப்பிரபுவத்துவமும் இணைகிறது .
அதோடு நாட்டு நடப்பைக் கற்றுத் தரும் மாஸ்டருக்கு புரட்சிக்காரன் பட்டம் சுமத்துகிறது.  ஒன்றுமறியா  உழைக்கும் அப்பாவி விவசாயிகள் கடன் வாங்கும் வறுமைக்கு நிலத்தையே பிடுங்கிக் கொள்ளும் கொள்ளைகாரர்களாக நம்பூதிரி , நம்பியார் என்ற நிலக்கிழார்களின் வழியாகப் பிரயாணிக்கிறது நாவல். மாஸ்டரும் எவ்வளவோ பொறுத்திருந்து சமயம் வரக் காத்திருந்து ஒரே ஒரு ஒளிக்கீற்றை சிருகண்டன் , அப்பு என்ற சிறுவர்களின் வழியாக உருவாக்கிய தருணங்கள் தான் இறுதி அத்யாயத்திற்கான ஆதார நிமிடங்கள். பள்ளிக்கூட வாயிலில் மாலையில் விவசாயிகளை அழைத்து
பத்திரிகைப்  படித்து வந்ததற்கான முயற்சி நிலக்கிழாரின் அடுத்தடுத்த நரித்தனத்தால் நின்று போனதும் , விவசாயிகளின் பிள்ளைகள் உயர்நிலைப் பள்ளிக்கோ கல்லூரிக்கோ போய்விடக் கூடாது என்பதில் அவர் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதெல்லாம் ,  ஒட்டு மொத்த ஏகாதிபத்தியர்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறையாகத் தெரிகிறது. கிராமப் பஞ்சாயத்து வந்தால் கூட தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்பதெல்லாம் எத்தகைய ஆதிக்க மனப்போக்கு என்பதை நாவலின் ஒவ்வொரு வரிகளும் நமக்கு உணர்த்துகின்றன.

உறவுகள் யாருமற்ற கோரனின்  குடிசை  இரவுப் பள்ளியாக மாறிய நாளும் விவசாய சங்கம் உருவாகி ஒவ்வொரு படியாக கையூரில் இளைஞர்களால்  கட்டமைக்கப்ட்ட ஸ்தாபன செயல்பாடுகளும் வாசிக்க வாசிக்க நம்மையறியாமல் கண் கலங்க வைக்கின்றன. இவற்றைக் காணும் மாஸ்டரின் மனநிலை எப்படி இருக்கும் எனவும் புரிந்து கொள்வது , சமூக மாற்றத்தில் ஆசிரியரின் வழிகாட்டுதல்கள் என்ற இன்னொரு புரிதலை நமக்குத் தருகிறது. விவசாய சங்கத்தின் அடுத்தடுத்த சிந்தனைகளாக பாலர் சங்கம் , பெண்கள் சங்கம் என பரிமாணங்கள் விரிகின்றன . கூடவே பிரச்சனைகளும் வளருகின்றன. ஒரு கட்டத்தில் மாஸ்டர் ஊரை விட்டே துரத்தப்படுவது கூட நடக்கிறது.

எதிர்பாராத ஒரு தருணத்தில் இவர்களை  அடக்க வந்த போலீஸ்காரன் சுப்பைய்யா படும் பாடு , நதியோடு போய் உயிர் நீத்த விபத்து கையூரின் கால் தடங்களை  சொல்லவொணாத துன்பத்திற்கு உள்ளாக்கி , கையூர் தோழர்கள் படும் சித்ரவதைகள் , விவசாயிகளுக்கு அதிகார வர்க்கம் தொடுக்கும் ஆணவ தண்டனைகள், தலைமறைவு என கதை விரிகிறது. 60 பேர் சிறைபிடிக்கப் படுவதற்குள் நடக்கும் காட்சிகள் , நீதிமன்ற வழக்கு நிலவரங்கள் நாடே கையூர் தோழர்களுக்கு சப்போர்ட் செய்யும் நிகழ்வுகள் இப்படி புதினம் நிஜ சம்பவத்தின் மீது அழகாகக் கட்டப் பட்டுள்ளது.

சிறு கண்டனும் அப்புவும் தான் ஏழாவது அத்தியாயம் வரை இருக்கிறார்கள், எட்டாம் அத்தியாயத்தின்  இறுதியில்தான் கண்ணன் உள்ளே நுழைகிறான் . 14-ஆவது அத்தியாயத்தில் அபூபக்கர் இவர்களோடு இணைகிறான் .ஆரம்பத்திலிருந்து மாஸ்டர் கையூரின் பள்ளிக்கு ஆசிரியராகவும் சங்கத்தை உருவாக்க அஸ்திவாரம் போடக்கூடிய அருமையான மனிதராகவும்  நம்மோடு பயணம் செய்கிறார். நிலப்பிரபு நடத்துகின்ற சுரண்டலின் பாதுகாப்புக்குப் போலீஸ் உருவாக்கிய ஒரு சதியாலோசனையாக இந்த வழக்கு . ஒரு போலீஸ்காரனின் எதிர்பாராத மரணத்தின் மறைவில் இந்த மாநிலத்தின் விவசாயிகள் ஸ்தாபனத்தை அடியோடு ஒழிப்பதற்காகவே வழக்கு மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தூக்கு தண்டனை நிறைவேறுவது வரலாற்றில் அழியாத  முக்கியத்துவம் பெற்றுள்ளதை உணர முடிகிறது .

நாவல் முழுக்க நம்முடன் பயணம் செய்யும் மனிதர்கள் ஆழமான தாக்கத்தை உருவாக்கி , புரட்சி ஏன் உருவாகிறது ? ஏன் மாஸ்டர் தன்னை காந்தியவாதி இல்லை என ஒப்புக் கொள்கிறார் ? என்பதை எல்லாம் சிந்திக்க வைக்கிறது. படிக்கும் போது நம்மை அறியாமல் கீழ்வெண்மணி விவசாயிகள் பற்றியும் மனம்  பயணம் செய்கிறது.

முதல் ஆசிரியர் நூலில் குதிரைக் கொட்டகையில்  கல்வி தரும் தூய்ஷேன்  இங்கே வரும் மாஸ்டர் கதாபாத்திரத்தைப்  படிக்கும் போது நினைவுக்கு வருவதுடன் அமெரிக்க கருப்பின மக்களுக்கு கல்வியளித்த மேக்லியோட் பெத்யூனும் மாஸ்டருடன் போட்டி போடுகிறார் .இவர்கள் மட்டுமா ? தாய் நாவலில் படிப்பாளி புரட்சிப் பெண்ணாக மாறும் பெலகோவ்னா நினைவுக்கு வருகிறார்.

நாவலில் அப்புவிற்கும் சிருகண்டனுக்கும் இடையில் சிறு வயது முதலே இருக்கும் நட்பு , மாஸ்டருக்கும் சிறுவர்களுக்குமான உறவு , விதவைக்கு மறு வாழ்வு தரும் கண்ணன் பண்பு  ஒவ்வொருவரும்,  கணவன் மனைவி குடும்பமாக சமுதாயத்திற்கு பணி  செய்ய இவர்கள் எடுக்கும் முயற்சி , ஊர் மக்களது நம்பிக்கை , அனைவருடனான ஒற்றுமையுணர்வு என எல்லா வகையிலும் நம் மனதில் நிற்கிறது. மொழி பெயர்ப்பு நூலாக விலகியிருக்காமல் மொழி நடையும் நமக்கு நெருக்கமாக இருப்பது சிறப்பு.

இளைஞர்கள் ,ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் வாசித்து உள்வாங்க வேண்டிய காலத்தால் அழியாத மிகவும் நல்லதொரு புத்தகம் இது.

உமா

ஒற்றை வைக்கோல் புரட்சி 

மசானபு ஃபுகோகோ 

வெளியீடு :

.தன்னறம் - குக்கூ காட்டுப்பள்ளி 

இது ஒரு மொழி பெயர்ப்பு நூல் - தமிழில் பூவுலகின் நண்பர்கள் மொழிபெயர்த்துள்ளனர். அட்டை வடிவமைப்பு இரா. தியாகராஜன் மிக நேர்த்தியாக வடிவமைத்துள்ளார்  . புத்தகம் முழுக்க ஒளிப்படங்களை நமக்காகத் தந்திருப்பவர் க்ரகோரி ஹால் பர்ட் என்ற கனடா நாட்டு திரைப்படக் கலைஞர் .

இந்தப் புத்தகத்தின் மையத் தத்துவம்  இயற்கையை நம்புங்கள் என்பதே. இது வேளாண்மையைப் பற்றி மட்டும் பேசப்படும் புத்தகம் அல்ல. வாழ்க்கையின் தத்துவங்களாக வேளாண்மையை இயற்கையோடு இணைத்து எவ்வாறு நடைமுறைப்படுத்துவது எனப் பேசும் புத்தகமாகப் பார்க்கலாம் .

நூலாசிரியர் ஃபுகோகாவின் வாழ்வியல் தத்துவம் தான் இந்த நூல். 

இதில் திணை 1 , 2 , 3 , 4 , 5 என ஐந்து பகுதிகளின் கீழ் 39 தலைப்புகளில்  ஃபுகோகாவின் தத்துவங்கள் பகிரப்பட்டுள்ளன. 

இவரது நடைமுறைகளை இங்குள்ள நிலங்களுக்கு அப்படியே அமல்படுத்த முடியாது என்றாலும் பகிரப்பட்டுள்ள  செயல்முறைகளை அவரவர் நிலத்தில் பின்பற்றுவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் அடங்கியிருக்கின்றது.

திணை -1 இல் , தானியக் கதிர்கள் , மானுடம் எதையுமே அறிந்திருக்கவில்லை , கிராமத்திற்கு திரும்புதல், எதுவும் செய்யாமல் ஒரு வேளாண்மை , இயற்கைக்குத் திரும்புதல் இயற்கை வேளாண்மையின் பரவலின்மை , மனித இனத்திற்கு இயற்கையைத் தெரியாது என்ற ஏழு தலைப்புகளில் ஃபுகோகா அழுத்தமான தத்துவத்தைப் பதிவு செய்கிறார். 

ஆம்... நம் தன்முனைப்பை விட்டொழிப்பதே இயற்கையுடன் ஒன்றிணைவதற்கான மிகச் சிறந்த வழியாகப் பார்க்கப்படுகிறது. இவர் வேளாண்மை செய்யும் பூமியை 25 ஆண்டுகளாக உழப்படவேயில்லை என்பது தான் முதல் திணையின் அடிப்படை செய்தி. நவீன வேளாண்மை முறையுடன் இவரது இயற்கை வேளாண்மை முற்றிலும் முரண்பட்ட தத்துவத்தைக் கைக்கொள்கிறது.. நூறு விளக்கங்கள் அளிப்பதைக் காட்டிலும் தான் நம்பும் ஒன்றுமே செய்யத் தேவையற்ற வேளாண்மை என்ற தத்துவத்தை 1938 இல் நடைமுறைப் படுத்த ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். அறிவியல் குறித்தும் ஏராளமான தத்துவ உண்மைகளை புத்தகம் முழுவதும் முன் வைத்து நேரடி வாழ்க்கையுடன் தொடர்பு படுத்துகிறார். 

திணை - 2  இந்த இரண்டாவது பகுதியில் இயற்கை வேளாண்மையின் அடிப்படைகள் , களைகளின் ஊடே பயிர்கள் , வைக்கோலுடன் பயிர்கள் , நிலத்தில் நீர் தேக்காமல் நெற்பயிர். பழ மரங்கள் , பழம் விளையும் பூமி , காட்டுச் செடி போல காய்கரி வளர்ப்பு , வேதிப் பொருட்களை விலக்கிட விதிகள் , அறிவியலின் எல்லை என ஒன்பது தலைப்புகளில் வாழ்வியல் நடைமுறைகள் பகிரப்பட்டுள்ளன . 

எல்லாவகையான பயிர்களையும் பயிரிட உழுதல் புரட்டிக் கொடுத்தல் ஆகியவற்றை நிறுத்த வேண்டும் . இயந்திரங்களையும் மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப் பொருட்களையும் பயன்படுத்துவதை விடுத்து , வைக்கோலைப்  பரப்புதல் , தீவனப் பயிரை வளர்த்தல் ஆகிய முறைகளையேப் பின்பற்ற வேண்டும் என்ற தத்துவத்தை நிகழ்த்திக் காட்டுகிறார். களைகளைப் பிடுங்குவது குறித்து தான் நாம் நமது ஊர்களில் பார்த்திருப்போம். ஆனால் ஃபுகோகா களைகளை அப்படியே விட்டு வளர்க்கிறார். வைக்கோலை வயலில் பரப்புவது தான் மிக அடிப்படைப் பணியாகவே செய்கிறார்.

திசை ...3

ஒரு விவசாயிடமிருந்து , கடினமான பிரச்சனைக்குத் தீர்வு , கடின உழைப்பின் அறுவடை , .இயற்கை உணவின் விநியோகம் , வாணிபப் பயிர்கள் ஏமாற்றி விடும் , ஆய்வுகள் யாருடைய நன்மைக்காக, மனிதனுக்கான உணவு , பயிரின் கருணைக் கொலை , இயற்கையோடு இயைதல் , இயற்கை வேளாண்மை வழி முறைகள் என்ற பத்து தலைப்புகளில் பல உண்மைகளைப் புரிய வைக்கிறார் நூலாசிரியர்.

.நாம் இன்று பேசும் உணவு மாசு , வண்ண ேமற்றும் உணவுப் பொருட்கள் , பழங்கள் , காய்கள் பல நாட்கள் கெடாமல் இருப்பதற்காக செய்யப்படும் வேதியியல் செயல்கள் என நீண்ட செய்திகள் பேசப்படுகின்றன. அதற்கு மாறாக இயற்கை வேளாண்மையில் என்ன செய்யலாம் ,தான் என்ன செய்து வருகிறார் என்பதையும் நமக்கு விளக்கியுள்ளார். 

திணை - 4 ... உணவு பற்றிய குழப்பங்கள் , இயற்கை உணவுச் சக்கரம் , உணவுக் கலாச்சாரம் , வாழ்க்கையும் உணவும் , உணவுப் பழக்கங்கள் , உணவும் வேளாண்மையும் என்ற ஆறு தலைப்புகளில் முழுக்க முழுக்க உணவிற்கான தத்துவங்களைத் தருகிறார் ஃபுகோகா . கலாச்சாரம் என்பது எப்போதும் அன்றாட வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையது , மனிதனுக்கும் இயற்கைக்கும்  இடையே ஏற்படும் கூட்டிணைவில் உதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. உண்மையான கலாச்சாரம் இயற்கையினுள்ளிருந்து பிறக்கிறது. அது எளிமையானது , சாதாரணமானது அதிலிருந்து எத்தகைய உணவு உண்மையான கலாச்சாரத்தின் வெளிப்பாடாக அமைகிறது என்ற தத்துவங்களை இப்பகுதியில் ஃபுகோகா பதிவு செய்கிறார். 

இறுதிப் பகுதி  திணை 5 என்பதில்  ... அறிவின் மூடத்தனம்,  யார் அறிவிலி ? மனிதன் இன்னும் பிறக்காதவன் - இன்னும் இறக்காதவன் , அறிவியலின் மாயை , சார்புக் கொள்கை , போரும் அமைதியுமற்ற   ஒரு கிராமம் , ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற தலைப்புகளில் பல தத்துவ வாதங்களை உண்மையின் வடிவில் பதிவு செய்கிறார். 

ஒற்றை வைக்கோல் புரட்சியின் தத்துவத்தை நிரம்பத் தரும் பகுதிகளாக இத்தலைப்பிற்கான பகுதிகள் அமைந்துள்ளன. 

மொத்தத்தில் வேளாண்மை என்பது ஒரு தொழில் அல்ல , அது ஒரு வாழ்வியல் என்ற தத்துவத்தை தன் வாழ்வின் நிகழ்வு , அன்றாடப் பணிகள் வழியே நமக்கு அளிக்கிறார் ஃபுகோகா . காந்தியம் போல இது ஒரு வாழ்வியல் தத்துவம் , ஃபுகோகாவைப் பின்பற்றும் மாணவர்கள் அவருடனே தோட்டப் பகுதியில் தங்கி இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவது , பல நாடுகளில் இருந்து இவரது பண்ணைகளைப் பார்வையிட , ஆய்வு செய்ய வரும் ஆராய்ச்சி மாணவர்கள் , ஆசிரியர்கள் , கல்லூரிப் பேராசிரியர்கள் என பல அனுபவங்களை ஃபுகோகா நம்முடன் பகிர்கிறார்.  உழவு என்பதே விவசாயத்தின் அடிப்படை என எண்ணியிருக்கும் நாம் இந்த நூலை வாசித்து முடிக்கும் போது வைக்கோல் மட்டும் போதும் என்ற முடிவுக்கு வருகிறோம். மாடு கட்டி ஏறு பூட்டி உழவோட்டி என்ற காட்சிக்கே இடமின்றி வைக்கோலைப் பரப்பும் காட்சிகள் விழியில் நிறைகின்றன. ஒற்றை தானியம் , ஒற்றை வைக்கோல் இந்த பிரபஞ்சத்தின் அடி நாதமாக அமையும் தத்துவத்தை இந்நூல் நமக்குத் தருகிறது. நாமும் கூட இது போன்ற ஒன்றுமே செய்யாத இயற்கை வேளாண்மை வைக்கோல் புரட்சியைக் கையில் எடுத்தால் என்ன என்ற எண்ணத்தை விதைக்கிறது. 

சு.உமாமகேஸ்வரி 


மார்க்சியம் என்றால் என்ன ?

ஒரு தொடக்க நிலைக் கையேடு 

நூலாசிரியர் குறித்து :

 சு.பொ. அகத்தியலிங்கம் இந்நூலை எழுதியவர் , மூத்த ஊடகவியலாளர் , எழுத்தாளர் .சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள் , விடுதலைத் தழும்புகள் , புரட்சிப் பெரு நதி , சே குவேரா கனல் மணக்கும் வாழ்க்கை உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர் . தமிழக அரசு விருது உள்ளிட்ட பல வருதுகள் பெற்றவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். தீக்கதிர் பொறுப்பாசிரியராகவும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும் செயலாற்றியவர். 

நூல் குறித்து …

இந்தப் புத்தகத்தை வாசிக்க வாசிக்க மிக எளிமையாகப் புரிகிறது .தமிழ் இலக்கியப் பரப்பிலிருந்து ஏராளமான மேற்கோள்களை எடுத்து  இந்தப் புத்தகத்தில் பொருத்தமாக பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

மார்க்சியம்   என்ற தத்துவத்தைப் பற்றிய புரிதலை சிறு குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதைப் போல மிக மிக எளிய நடையில் இப்புத்தகம் தருகிறது. கருத்து முதல் வாதம் , பொருள் முதல் வாதம் என்ற தத்துவப் போர் உலகம் முழுக்க நடந்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் குறிப்பாக சமீப காலங்களில் முகநூலில் இந்தத் தத்துவங்கள் குறித்து கருத்து மோதல்களை வெகுவாகப் பார்க்கலாம். இவை குறித்த முரண்பாடுகளை மிக அழகாக விளக்கியுள்ளது நூல் .23 பாகங்களாக ஒவ்வொரு பக்கத்திலும் மார்க்சிய தத்துவம் என்றால் என்ன , மதங்கள் - ஆன்மிக சித்தாந்தம் - அறிவியல் கோட்பாடுகளுடனான பொருள் முதல் வாதம் எப்படி செயல் வடிவில்  இருக்கின்றது எனத் தெள்ளத் தெளிவாக நமக்குப் புரிய வைக்கிறது. வேதங்களின் வடிவில் கூறப்படும் சித்தாந்தங்கள் - கருத்து முதல் வாதத்தில் இருந்து விலகாத மனிதர்கள் - நிலையான பொருள் முதவாதக் கொள்கையுடையவர்கள் பற்றி வாழ்வியல் நடைமுறைகளுடன் விரிவாக்கம் தரப்பட்டுள்ளதை நமது வாழ்வியலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. 

தனி மனிதருக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவை எவரொருவர் மிகச் சரியாகப் புரிந்து கொள்கிறாரோ அவரே தனி மனித உறவைச் சரியாகப் புரிந்து கொள்வார் என்ற தத்துவத்தைப் புரிந்து கொள்ள பல பக்கங்கள் உதவுகின்றன. 

இறுதியாக நான் புரிந்து கொண்டது மார்க்சியம் என்பது இயங்கியல் பொருள் முதல் வாதம் தான். எனது வாழ்க்கை கூட இந்தப் புள்ளியில் தான் இயங்கிக் கொண்டுள்ளது என சுய பரிசோதனை செய்து முடிவுக்கு வர உதவியது நூல். அடிப்படையில் எளிமையாக ஆரம்ப நிலை புதிய வாசகரை மனதிற் கொண்டு எழுதப்பட்டுள்ளது என்றாலும் மற்றவருக்கு இந்தத் தத்துவத்தை புரிய வைக்க முயலும் ஒருவரும் வாசிக்க மிக முக்கியமான நூல்.