நூல் : ஒருமை கண்ட சரித்திர சீலர்கள்
நூலாசிரியர் : கே .எஸ் .லட்சுமணன்.
அழகு பதிப்பகம் , காரைக்குடி 1965இல் வெளியிட்டுள்ளது இதன் விலை ஒரு ரூபாய் 25 பைசா .
ஒருமைப்பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும் என்று கூறுவார்கள், வீட்டிலேயே மலரும் ஒருமை தான் நாட்டின் ஆரோக்கியத்திற்கும் , ஐக்கியத்திற்கும் அரணாக நிற்கின்றது. உள்ளதாலும் செயலாலும் உயிர்வாழும் ஒருமை கண்ட வரலாற்று வீரர்களையே அழகாக நம்முன் நிலை நிறுத்துகிறார் ஆசிரியர் திரு கே எஸ் லட்சுமணன்
. ஒருமைப்பாடு நூல்களை மாணவர்களுக்கு பரிசாக கொடுக்க வேண்டும் என்று பல அரசியல் தலைவர்கள் அந்நாட்களில் சொல்லி வந்திருக்கிறார்கள் அதற்குரிய முறையில் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் மாணவர் நூலாக இதை வெளியிடுவதாக அழகுப் பதிப்பகத்தார் கா.முத்து புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தின் நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டும் முறையையே வரலாறு என்கிறோம் .பன்னெடுங்காலமாகவே உலகில் ஒருமை நெறிக்காக உயர் தொண்டாற்றிய சரித்திர மனிதர்களை , அவர்களது வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு சுருக்கமாக ஆனால் அழகாக வரிசைப் படுத்தியுள்ளார் நூலாசிரியர். ஒற்றுமையால் விளைந்த நீதியைப் பல்வேறு சம்பவங்களின் மூலமாகப் பல விதங்களில் தந்துள்ளது சிறப்பு.
புத்தகத்தில் தரப்பட்டுள்ளவர்கள்
1. வீரத்திற்கு அலெக்சந்தர் : போர்க் காலத்தில் வெற்றி தோல்வி இயல்பு , ஆனால் வெற்றியடைந்து விடுவதாலோ அல்லது தோல்வி கண்டு விடுவதாலோ ஒரு வீரனின் மதிப்பு பாதிக்கப்படுவதில்லை , வீரர்களுக்குள் ஒருமை கண்டவர் மாவீரன் அலெக்சாந்தர் என போரஸீடன் அனுபவம் தரப்பட்டுள்ளது.
2. கருணைக்குப் புத்தர் : 2500 ஆண்டுகளுக்கு முன்பு நேபாள நாட்டின் கபிலவஸ்துவின் இளவரசன் சித்தார்த்தன் புத்தராக மாறியதற்குப் பின் நடந்த நிகழ்வுகளை சுருக்கமாகக் கொடுத்து தன்னுயிரைப் போல் மன்னுயிரையும் நேசி என்று ஒருமை உணர்வு கண்டவர் மகான் புத்தர் எனப் பகிர்ந்துள்ளார் ஆசிரியர்.
3 . அமைதிக்கு அசோகர் : இந்திய சரித்திரத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்த அரசர் , கலிங்கப் போருக்குப் பிறகான
தன் வாழ்வின் கொள்கைகளை மாற்றிக் கொண்டு , ஆன்மிக காரியங்களிலும் அரசாங்க நிர்வாகத்திலும் ஒருமையுணர்வு கண்ட விதத்தை சிறு கட்டுரையாக்கியிருக்கிறார் நூலாசிரியர்.
4. மன்னிப்புக்குப் பாபர் : இந்தியாவில் முகலாய சாம்ராச்சியத்தை உருவாக்கிய பேரரசரான பாபர் .மதம் வேறானாலும் மனம் ஒன்றியவராக இரண்டு நிகழ்வுகள் வழியாக அவாது ஒருமையுணர்வைப் பதிவு செய்கிறார் ஆசிரியர் மக்களுடைய உயிரைத் தன்னுயிராகப் பாவித்த முகலாயப் பேரரசர் பாபர் . வீரர்களிடையே ஒருமையுணர்வு கண்டு இராச புத்திர வீரனுக்கு உயரிய இடத்தை அளித்தவர் பாபர் என்பதைப் பதிவு செய்கிறது புத்தகம் .
இதே போன்று
5. சமயத்திற்கு அக்பர்
6. வீரத்திற்கு சிவாஜி
7 .இணைப்புக்கு சர்தார் படேல்
8. பொதுமைக்குக் கணியன் பூங்குன்றனார்
9 .சமத்துவத்துக்கு ஈஸ்வர சந்திர வித்தியாசாகரர்
10. சீர்திருத்தத்திற்கு இராஜ ராம் மோகன் ராய்
11. பண்புக்குப் பெண்டிங் பிரபு
12. ஆன்மிகத்திற்கு சர்வ சமய சாத்மீக ஞானி விவேகானந்தர்
13. கலையழகிற்கு ஒருமை கண்ட உலகக் கவிஞர் தாகூர்
14 .அவனியின் மக்கள் அன்னையின் மக்கள் என்று கூறிய எழுச்சி மிக்க பாரதியார்
போன்றவர்களின் ஒருமை குணத்தை அவர்களது வாழ்வியல் நிகழ்வுகளால் சிறு சிறு கட்டுரைகளாகப் பேசுகிறது நூல்.
உமா
No comments:
Post a Comment