Saturday 9 April 2022

பூப்பு -மாதவிடாய் சந்தேகங்களும் விளக்கங்களும்


 பூப்பு -மாதவிடாய் சந்தேகங்களும் விளக்கங்களும் 

பதிப்பகம் : வாலறிவன்
விலை = ரூ 50
பக்கங்கள் : 48
ஆசிரியர் : ரேணுகாதேவி 

இதை ஒரு  விழிப்புணர்வு நூலாகப் பார்க்க முடிகிறது . இந்த உலகம் சரிபாதி பெண்களால் ஆனது எல்லா பெண்களுமே எப்போதும் பலவழிகளில் ஒடுக்கப்படுகிறார்கள்.
தொடர்ந்து எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு பல கோணங்களிலிருந்து பிரச்சனைகள்    உருவாகிக்கொண்டே
இருப்பதனை நாம் காலம் காலமாக வரலாற்றைப் படித்தாலும்  அறிந்துகொள்ளலாம் . நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தை கவனித்தாலும் புரிந்து கொள்ளலாம். 

எல்லாவற்றிலிருந்தும் மீண்டு விடுபட்டு
மீண்டும் பாதிக்கப்பட்டு   விடுபட்டு
வளர்ந்து கொண்டே இருக்கின்றனர் பெண்கள் . .அப்படிப்பட்ட பெண்களுக்கு உடல் ரீதியாக இயற்கையாகவே அமையப் பெற்றது தான் இந்த மாதவிடாய் என்ற செயல். ஆனால் அது பெரும்பாலான பெண்களுக்கு வலியாகவும் வேதனையாகவும் சொல்ல முடியாத பிரச்சினைகளைத் தருவதாகவும்  தொடர்கிறது .அது போலான நேரங்களில் பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உடல் நலத்துடனும் தங்களை கவனித்து பாதுகாத்துக்   கொள்ள வேண்டும் என்று விரிவாகப் பேசுகிறது இந்த நூல் .

பதின்பருவ குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை பெண்கள் வாசித்து தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் உள்ளன. ஆண்களும் வாசித்து தங்கள் வீட்டுக்  குழந்தைகள் , சகோதரிகள் , இணையர் , தோழிகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் வழிகாட்டலாம். 

 பொதுவாகவே மாதவிடாய் சமயங்களில் பெண் குழந்தைகளை அவரவர்  வீடுகளிலேயே பல காரணங்களைச் சொல்லி அவர்களை ஒதுங்கி இருக்க வைத்தல் , தனிமைப்படுத்துதல்  போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன .அம்மாக்களுக்கும் குழந்தைகளிடம் இது போன்ற சமயங்களில் எவ்வாறு அவர்களை வழிகாட்டுவது என்று தெரிவதில்லை .அக்காக்கள் பக்கத்து வீடு என்று வயதில் பெரியவர்கள் அவர்களை விடக்  குறைந்த வயதில் இருப்பவர்களை வழிகாட்ட தேவைப்படும் அத்தனை செய்திகளும் இதில் அடங்கியுள்ளன.

 இந்த மாதவிடாய் என்பதை , நாம் ஒரு பெரிய விஷயமாகவே பார்க்காமல் அது குறித்து பேசவும் விவாதிக்கவும் உரையாடவும் தயங்குகிறோம். மிக முக்கியமான ஒன்று , ஆனால் அலட்சியப்படுத்துகிறோம் 
இப்படியான சூழலில் மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயல்பாகவே இயற்கையாக மாதம்தோறும் நடைபெறக் கூடிய செயல் தான் , ஏன் ஏற்படுகிறது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன, அதிலிருந்து நாம் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக நம் உடலையும் மனதையும் காத்துக் கொள்ளலாம், உடல் நலமும் மனநலமும் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது எப்படி அதற்கான உபகரணங்களை பயன்படுத்துவது இதற்கான விழிப்புணர்வை எங்கிருந்து எடுத்துச் செல்வது போன்ற பல செய்திகளை உள்ளடக்கிய நூல் தான் ரேணுகா தேவி அவர்கள் எழுதிய பூப்பூ என்ற இந்த மிகச் சிறிய புத்தகம்.

 ஒரு பெண் தனது வாழ்நாளில் சராசரியாக 16800 நாப்கின்களை பயன்படுத்த வேண்டியுள்ளது இதனால்தான் இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றன என்ற பொருளாதாரம் சார்ந்த விவரம் குறிப்பையும் தருகிறார் பருவ குழந்தைகள் குறிப்பாக பள்ளி குழந்தைகளிடம் சென்று சேர வேண்டிய அருமையான புத்தகம் .

யாரும் பேசத் தயங்கும் யாரும்  பேசாத விஷயங்களைப் பேசுகிறது ஒரு கோணத்தில் அறிவியல் கையேடு போல இருந்தாலும் பல விஷயங்கள் சொல்லப்பட்டு இருப்பதனால் இதனை ஒரு விழிப்புணர்வு புத்தகமாக எடுத்துக்கொள்ளலாம் பள்ளி ஆசிரியர்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் பயிலக்கூடிய பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெண் குழந்தைகளின் அம்மாக்கள்  என அனைவரும் புத்தகத்தை வாங்கி  வாசித்து புரிதலை ஏற்படுத்த வழிவகை செய்யலாம் தொடர்ந்து இது போன்ற குழந்தைகளுக்கான  அவசியமான புத்தகங்களை எழுத   ரேணுகா தேவி ஆசிரியருக்கு  வாழ்த்துக்கள் மா.

(நேற்று எனது மாணவிகள் 50 பேருக்கு முதல் முயற்சியாக பூப்பு புத்தகத்தை வாங்கி பரிசளித்துள்ளேன். )

உமா 

No comments:

Post a Comment