டுஜக்..
டுஜக்.. ஒரு அப்பாவின் டைரி
ஆசிரியர் : தேனி சுந்தர்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ 100
பக்கங்கள் : 112
அதென்ன தலைப்பு இப்படி இருக்கே என்று தான் யோசித்தேன் , பக்கம் 76 இல் தான் இந்த டுஜக். டுஜக் .... இருந்தது.
ஒரு தந்தை தனது குழந்தைகளின் உரையாடல்களை , அவர்களது மொழியிலேயே பதிவு செய்த ஒரு அழகான இலக்கியம் இது. பெரியவர்கள் வாசிக்க வேண்டிய மிகச் சிறந்த குழந்தை இலக்கியமும் இது. ஏன் பெரியவர்கள் வாசிக்க வேண்டும் எனக் கூறுகிறேன் என்றால் , குழந்தைகள் குழந்தமையுடையுடன் தங்களை உயிர்ப்பாக வைத்துக் கொண்டு தான் வாழ்கின்றனர். ஆனால் வளர்ந்த பெரியவர்களோ தங்களிடம் இருக்கும் குழந்தமையை இழந்து அல்லது மறந்து உலக இயல்புகளுடன் தங்கள் வாழ்க்கையைப் பொருத்திப் பார்ப்பவர்களாகி மாறி விடுகின்றனர். இறுகிப் போன வளர்ந்தவர்களின் மனதை, எண்ணங்களை ஆசுவாசப் படுத்தி மகிழ்விக்கிறது பாப்பாவின் உரையாடல்கள் . வாசிக்கும் போது நம்மை அறியாமல் குழந்தைகளாகவே மாறி விட முடிகிறது. வாய் விட்டு சிரித்து அனுபவித்து ரசித்து இந்த வரிகளில் மழலைகளின் மொழிக்குள் ஒரு உயிர்ப்பைக் கண்டடைய முடிகிறது.
நமக்கு நன்றாகவே புரிகிறது அடுத்தடுத்த வரிகள் இப்படித்தான் வரும் என ஆனாலும் ரசித்து வாசிக்க முடிந்தது. நான் வீட்டில் இதை வாசித்து ஒவ்வொரு பதிவின் முடிவின் போது என்னையறியாமல் சிரிக்க , எனது இணையர் , என்ன தனியாக சிரிக்கறே ..அப்படி என்னத்த படிச்ச எனக் கேட்க , திரும்ப ஒவ்வொன்றையும் வாய் விட்டு பாப்பா போலவே நான் வாசித்துக் காட்ட அங்கேயும் இதே ரசா வாதம் நிகழ்ந்து முகமலர்ச்சியுடன் சிரிப்பதைக் கண்டு இறுதியில் இருவரும் சேர்ந்து சேர்ந்து சிரித்து மகிழ்ந்து கிடந்தோம் .
இதெல்லாம்
என்னன்ன கலர்னு
பாப்பாவுக்கு
சொல்லவே தெரியாது ..
ம்ம்..
எனக்குத் தெரியும்.
எங்க சொல்லுங்க
பாக்கலாம் .
மஞ்சள் ..
யெல்லோ ..
ஒல்லோ ..
குல்லோ ..
புல்லோ ...
தல்லோ ..
அய் ..
சூப்பரு பாப்பா ..
இனத வாசிக்கும் போது நம்மால் ரசிக்காமல் சிரிக்காமல் இருக்க முடியுமா சொல்லுங்கள் ...
இந்தக் கொரானா உரையாடல் பாப்பாவையும் விட்டு வைக்க வில்லை.
அந்த தோட்டத்துக்குள்ள தான்
கொரானா ஒளிஞ்சிருக்கும் .
நம்ம வெளாடுறப்ப
அப்படியே வந்து
பைக்குன்னு
கடிச்சு வச்சுப்புடும் ...
இதை நாம் வெறுமனே வாசித்தால் அர்த்தப்படுமா ? அர்த்தங்களைத் தேடினால் டுஜக்.. டுஜக் சந்தோஷத்தைத் தராது. அர்த்தமற்ற பொக்கிஷம் இது.
போப்பா லூசுப் பா ...
நானு இன்னும்
பெரிய பிள்ளயே ஆகல ...
நானு பாப்பா ....
என்கிற போது வாய்விட்டு சிரிக்காமல் இருக்க முடியுமா ?
என்னய பாருப்பா ...
எப்புடி சிந்தாம
சாப்பிடுறேன் ..
என்னய பாருப்பா ...
எப்புடி
குளிக்குறேன்னு பாருப்பா ..
ம் ..
எப்புடி
தவ்வுறேன்னு பாருப்பா
எப்புடி
ஊஞ்சல் ஆடுறேன்னு பாருப்பா
போப்பா ...
பாக்கவே மாட்ற ....
பாக்குறேன்ல பாப்பா
பாத்துக்கிட்டே இருக்கணும் ....
சூரியனப் புடிச்சு
என்னா பாப்பா
செய்யப் போற ...
ம்ம் ...
தொட்டியில
படுக்கப் போட்டு
தூங்க வைக்கப் போறேன் ...
ஹா ஹா ஹா .....
என்னப்பா
ரெண்டு அடுப்புல
ரெண்டு பால்சட்டி
போப்பா ...
அந்தப் பக்கத்தான்
பழைய பாலு ...
இது புதுப் பாலு ...
நீ தப்புத் தப்பா சொல்லுற ...
ரெண்டு மலப்பாம்பு
வந்துச்சுப்பா ....
செடிக்கெல்லாம் எப்புடி
மாஸ்க் போடுவாங்கப்பா ?
குழந்தைகள் உலகம் கேள்விகளால் நிறைந்தது என்பதை நாம் எல்லோருமே அறிவோம் .ஆனால் உணர்கிறோமா என்பது தான் இந்தப் புத்தகம் நமக்கு தரும் செய்தி .
உங்கள் வீட்டிலும் எனது வீட்டிலும் நாம் இந்த மழலைகளின் உரையாடல்களைக் கடந்து தான் வந்திருப்போம். அந்தத் தருணங்களை மீட்டெடுக்கிறார் சுந்தர். அதற்காக அவரை நாம் பாராட்ட வேண்டும். ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பவுனு தான் போங்க.
அசை போட்டு அசை போட்டு சந்தோஷப்பட டுஜக் டுஜக் ... இல் ஏராளமான குட்டிக் குட்டிக் கதைகள் இருக்கின்றன .
நீங்களும் வாசித்துப் பாருங்கள் டுஜக்
டுஜக் .... குழந்தைகள் குறித்த ஒரு மழலை இலக்கியம் என்பது புரியும்.
இந்தப் புத்தகத்தின் கடைசி பக்கம் தான் மிகவும் கனமானது. ஆமாம் ...
நம்ம பாப்பா
ஸ்கூல்ல விட்ட பிறகும்
இதே மாரி ...
இம்புட்டு பேச்சு பேசுமாங்க ...?
அப்ப தான் தெரியும்
நம்ம பாப்பாவோட
ரியாலிட்டி ...
இல்ல இல்ல ..
அப்ப தெரியுறது
பள்ளிக்கூடங்களோட
ரியாலிட்டி ..
வரும் புத்தகத் திருவிழாவில் நிறைய பெரியவர்களைச் சென்றடைய வாழ்த்துகள்....
அன்புடன்
உமா
No comments:
Post a Comment